பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

129

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

ஜேக்கப் எப்ஸ்டைன் இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார். அவருடைய சிலைகள் ஆற்றல் வாய்ந்தன என்பர். மால்வினா ஹாப்மன் என்னும் பெண் சிற்பியின் தலையாய சிலை, சிக்காகோ பொருட்காட்சிச் சாலையிலுள்ள 'மனித இனங்கள்' என்பதாகும்.

அமெரிக்கத் தத்துவ சாஸ்திரம் : தத்துவசாஸ்திரமானது அமெரிக்காவில் சமூக, அரசியல் நிகழ்ச்சிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடன் வளர்ந்து வந்திருப்பதால், அமெரிக்க வரலாற்றுடன் சேர்த்துப்பாராவிடின், அதன் தொடக்க வளர்ச்சியை அறிந்து கொள்ளஇயலாது.

அமெரிக்கத் தத்துவ சாஸ்திரம் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூ இங்கிலாந்தில் பியூரிட்டன்கள் குடியேறியது முதலாகத் தொடங்குகிறது. அவர்களுள் அறிஞர்களாயிருந்தவர்கள் பெரும்பாலும் பிராட்டஸ் டென்ட் கிறிஸ்தவப் பாதிரியார்களா யிருந்தனர். அவர்கள் ஐரோப்பாவில் தோன்றிய கால்வினியக் கொள்கை (Calvinism)வயப்பட்டவராயினும் அக்கொள்கையை வேறுவிதமாகக் கையாண்டனர். ஐரோப்பியக் கால்வினியக் கொள்கை மனிதன் தன்னால் அறியமுடியாத கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கூறிற்று. ஆனால் கடவுளுடைய கருத்தை அறிய முடியும் என்றும், கிறிஸ்தவ பிளேட்டானிக் கொள்கையைப் பின்பற்றிக் கடவுள் மனிதனுடன் நியாயமான முறையிலேயே! நடந்துகொள்வார் என்றும் அமெரிக்கக் கால்வினியர் வற்புறுத்தினர்.

இந்த முரண்பாட்டை ஜான தன் எட்வர்ட்ஸ் (1703-58) என்பவரிடம் காணலாம். அவர் கடவுளை அரசன் என்னும் வைதிகக் கால்வின் கொள்கையையும், உளவாகும் தன்மையின் (Being) மேன்மையை அறிவிக்கும் அனுபூதி அனுபவத்திலும், கடவுள் பக்தியிலும் விசேஷ நம்பிக்கையையும் உடையவராயிருந்தார். சாமுவேல் ஜான்சன் (1696-1772) என்பவர் பல மாறுதல்களுடன் பார்க்ளேயின் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தார். காட்வலீடெர் கால்டென் {CadwaleaderColden 1688-1776) நியூட்டனுடைய பௌதிக இயலில் கருத்துடையவராயும், இயற்கையே ஆதாரச்செயல் தத்துவமாக உளது என்ற கருத்துடையவராயும் இருந்தபடியால், இயற்கையியலை வைத்தே இறையியலை விளக்கவேண்டும் என்ற கொள்கைக்கு அடிகோலினார்.

இறையியல் இவ்வாறு வளர்ந்து வந்தபோதிலும், அது சமூக, பொருளாதார விஷயங்களைப் புறக்கணிக்க முடியாத நிலைமை ஏற்படலாயிற்று. இதனால் - அமெரிக்கத் தத்துவ சாஸ்திரம், பெரும்பாலும் அற நூல் விஷயங்களிலேயே மிகுந்த கருத்தைச் செலுத்தத் தொடங்கிற்று. அவ்விஷயங்கள் சில வேளைகளில் இறையறிவையும், சில வேளைகளில் மனித அறிவையும் ஆதாரமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டன. நன்மை செய்வதே கடவுள் அறநெறி என்று காட்டன் மாதெர் (1663-1728) கூறினார். பெஞ்சமின் பிரான்கிளின் (1706-90) உலகில் இன்பமாக வாழ்வதற்கான அறநெறியை மட்டும் கவனித்தால் போதும் என்று கூறினார்.

இவ்வாறு அற நூல் விஷயங்கள் வாதிக்கப்பட்ட போதிலும், அதே வேளையில் கடவுளின் தன்மை யாது? மனிதன் சுதந்திரமுடையவனா? அவன் இன்பம் அடைவதெப்படி? என்ற பொருள்கள் குறித்துத் தத்துவ விசாரணை நடைபெற்று வந்தது. தாமஸ் பெயின் (Thomas Paine 1737-1809) என்பவருடைய நூல்கள் உணர்வே பிரதானம் என்னும் கொள்கையைப் பரவச் செய்தன. நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்ட கடவுளுண்மைக் கொள்கையானது, அறிவு ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்ட கடவுளுண்மைக் கொள்கையாக மாறிவந்தது. பிரெஞ்சுப் புரட்சியானது உலோகாயதக் கொள்கைக்கு அடிகோலியது. அறிவை ஆதாரமாகக் கொண்டு எழுந்த இயக்கத்தினருடைய ஐரோப்பிய நூல்கள் மிகுதியாகப் படிக்கப்பட்டதால், புதிய அமெரிக்கக் குடியரசின் மக்களிடையே அரசியல் உணர்ச்சியும் எழுவதாயிற்று. ஜான் ஆடம்ஸ் (1735-1826), ஜேம்ஸ் மாடிசன் (1751-1836), தாமஸ் ஜெபர்சன் (1743-1826) ஆகியோர் பெரிய அமெரிக்க அரசியல் தத்துவ அறிஞர்கள். ஜெபர்சனுடைய கல்லறையில் அவர் அமெரிக்காவின் மூன்றாம் ஜனாதிபதியாக இருந்ததைக் குறிப்பிடாது, “அமெரிக்கச் சுதந்திர சாசன கர்த்தா, வர்ஜீனியாவின் சமய சுதந்திர சட்ட கர்த்தா, வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் தந்தை” என்று எழுதியிருப்பது அமெரிக்கச் சமூக, அரசியல், சமயக் கொள்கையின் போக்கைத் தெரிவிக்கும்.

இவ்வாறு கடவுள் விஷயமாகத் தாம் விசாரணை செய்வதை விட்டுவிட்டுச் சமூகத்தில் மக்கள் சேர்ந்து இன்பமாக வாழ்வது எப்படி என்ற விஷயமாக ஆராயத் தொடங்கினர். சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்ற பொருள்களே மிகுதியாகக் கவனத்தைக் கவர்ந்தன. ஆயினும் தத்துவ விசாரணை அறவே நின்று போய்விடவில்லை. உளவியல் பற்றிய விசாரணை மிகுதியாகச் செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் 19ஆம் நூற்முண்டின் இறுதியில் குறைந்து போயின.

இதற்கிடையில் ஜெர்மானியக் கருத்துக்கொள்கையும் (Idealism), கற்பனை நவிற்சிக் கொள்கையும் (Romanticism) அமெரிக்கத் தத்துவ விசாரணையில் இடம் பெறலாயின. தியோடர் பார்க்கர் (1810-60) ஜெர்மன் அறிஞர் கான்டினுடைய பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜெர்மானியத் தத்துவ அறிஞர் ஹேகலுடைய கொள்கை அமெரிக்காவில் வேரூன்றவும், தத்துவ விசாரணையை ஊக்கப்படுத்தவும் செய்தது. வில்லியம் டாலி ஹாகில் (1835-1909) என்பவருடைய தத்துவ விசாரணை இதற்கு முக்கிய காரணமாகும்.

19 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அறியொணாமைக் கொள்கை எழுந்தபோது, ஜான் பிஸ்க் (1842-1901), சார்ல்ஸ் சாண்டெர்ஸ் பர்ஸ் (1839-1914) போன்ற அறிஞர்கள் தத்துவ விசாரணை செய்து வந்தனர். ஜான் டூயி, ஜார்ஜ் ஹெர்பர்ட் மீடு போன்றவர்கள் சமூகத் தத்துவ விசாரணை செய்தனர்.

இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் வில்லியம் ஜேம்ஸ் (1842-1910) ஆதரவில் புறவழி உண்மைக் கொள்கை (Pragmatism) விரைவாக வளர்ந்து வந்தது. டூயியினுடைய கருவிக் கொள்கை (Instru- mentalism) உலக முழுவதிலும் கல்வித் துறையில் மிகுந்த பயன் தந்துவருகிறது. பொதுவாக அமெரிக்க மனப்பான்மை புறவழி உண்மைக்கொள்கையையே பெரிதும் ஏற்றுக்கொண்டதா யிருப்பினும், வேறு விதமான கொள்கைகளும் காணப்படவே செய்தன. ஆனால், உளவாகும் தன்மையைப் (Being) பற்றி மட்டும் தத்துவ விசாரணை செய்யும் மனப்பான்மையை அமெரிக்க மக்களிடம் காண்பது அரிது. ஆயினும் உலகில் வழங்கும் தத்துவ விசாரணை வகைகள் அனைத்தையும் அமெரிக்காவில் காணலாம்.

ஆதியில் இருந்ததைப்போல் அமெரிக்கத் தத்துவ விசாரணை இப்போது ஐரோப்பியக் கருத்துக்களால் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை. ஐரோப்பிய அறிஞர்களான -ஆல்பிரட் நார்த் ஒயிட்ஹெட் (1861-1947), ருடால்ப் பி. கார்னாப் (1891-) போன்றவர்களுக்கு