பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கா

132

அமெரிக்கா

கள். அமெரிக்க இந்தியர்கள் கறுத்த நீண்ட மயிரும், கறுத்த கண்களும், பரந்த முகமும், தலையும், உடம்பில் குறைந்த மயிரும் உடைய மங்கொலாயிடு இனத்தவராக இருப்பது இக்கருத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

வட அமெரிக்க ஆதிக் குடிகளிடையே இருநூறு மொழிகளுக்குக் குறையாமல் காணப்படுகின்றன. இவை 54 மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவை என்று அறிஞர் கூறுகின்றனர்.

பண்பாட்டு வேறுபாட்டை வைத்து, வட அமெரிக்க இந்தியர்களை ஏழு பிரிவினராகப் பிரித்துளர். தென் கோடியிலிருந்தவர்கள் கரீப் மக்களும் ஆராவக் மக்களுமாவர். அதையடுத்து வடக்கே குவாட்டெமாலா, ஹாண்டுராஸ், யுக்கட்டான் ஆகிய பகுதிகளிலிருந்தவர்கள் மாயர்கள் (Mayans). மெக்சிகோவில் ஆஸ்டெக் மக்கள் வசித்தனர். இந்தப் பகுதியிலேயே ஆதி இந்திய மக்களுள் மிகுந்த நாகரிகம் படைத்த மக்கள் காணப்பட்டனர். இவர்கள் விவசாயம், பட்டணங்கள், உலோகத் தொழில், கோவில்கள், புரோகிதம், லிபி, வானவியல், கணிதவியல் ஆகியவற்றை உடையவர்களாயிருந்தார்கள்.

இதைவிடக் குறைந்த நாகரிகம் உடையவர்கள் தென் மேற்குப் பகுதியில் இருந்தார்கள். ஹொஹோக்காம் மக்கள் நீண்ட பாசனக் கால்வாய்கள் அமைத்திருந்தனர். பீடபூமியிலிருந்த புவெப்லோ இந்தியர்கள் கிராமங்கள் அமைத்தனர். அழகான சித்திரங்களுடையமட்கலங்கள் செய்தனர். உயரிய சமூக அமைப்பும் நிறுவினர்.

வட அமெரிக்க இந்திய மாதும் குழந்தையும்
உதவி : அ.ஐ. நா. செய்தி இலாகா, சென்னை.

மிசிசிப்பிக்குக் கிழக்கே நாசிஸ் என்னும் மக்கள், வகுப்புக்களையுடைய சமூக அமைப்பு உடையவராயிருந்தனர். வடமேற்கே இருந்த இரோகோயர் பல குழுவினரைச் சேர்த்து,இரோகோயி சங்கம் அமைத்துக்கொண்டிருந்தனர். இந்தச் சங்கத்தாரே பிரெஞ்சுக்காரர்களுடனும் பிரிட்டிஷாருடனும் தொடக்கத்தில் போர் புரிந்தவர்களுள் தலையாயவர்.

வடமேற்குக் கடற்கரையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்ந்தவர்கள் குவாக்கியூட்டல்,ஹெய்டா, டிலிங்கிட் என்போராவர். இவர்கள் மரத்தில் செதுக்குச் சித்திரம் செய்வதில் சிறந்தவர்கள். காலிபோர்னியா, நெவாடா, யூட்டா சமவெளிகள் ஆகியவற்றில் இருந்தவர்கள் வேடர்களாகவும் உணவு சேகரிப்போராகவுமிருந்தார்கள்.

வடகோடியில் ஆர்க்டிக் சமுத்திரக் கரையிலிருந்த எஸ்கிமோக்கள் தொழில் நுட்பமறிந்த வேடர்களாயிருந்தபடியால் கஷ்டமான சூழ்நிலையிலும் நிலைத்து நிற்பவர்களாயிருந்து வருகிறார்கள். ஜா. அ.

தென் அமெரிக்க இந்தியர் : இவர்களைப் பற்றி அறியக்கூடிய சாசனங்களுள் பெரும்பாலானவை ஸ்பானியர் 1532-ல் பெரு நாட்டைவென்ற காலத்தனவாகும். அப்போது கரிபியன் தீவுகள் உட்படத் தென் அமெரிக்கா முழுவதும் ஏறக்குறைய தொண்ணூறு இலட்சம் மக்களே இருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலோர் சிலி, பொலிவியா, பெரு, ஈக்வடார், கொலம்பியா ஆகியவற்றிலும் 'கரிபியன் தீவுகளிலுமே காணப்பட்டனர்; ஆமெசான் பள்ளத்தாக்குக் காடுகளிலும், தென் ஆர்ஜென்டீனாச் சமவெளியிலும் மிகவும் குறைவாக இருந்தார்கள். இப்போது பொலிவியா, பெரு, ஈக்வடார் ஆகிய ஆண்டீஸ் மலையிலுள்ள குடியரசு நாடுகளிலேயே இந்தியர் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆமெசான் நதி தீரத்தின் எளிதில் எட்டாத பகுதிகளில் தவிர, ஏனைய பகுதிகளிலெல்லாம் இந்தியர்கள் குறைவாகக் காண்பதால் அவர்கள் அருகியிருக்கவேண்டும்; அல்லது மற்ற இனங்களுடன் கலந்து போயிருக்கவேண்டும்.

தென் அமெரிக்காவில் மனிதன் நீண்ட காலத்துக்கு முன்பே இருந்தான் என்று கூறுவதற்குரிய தொல் பொருளியல் சான்று மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் பெரு நாட்டில் விவசாய நாகரிகம் இருந்ததாகத் தெரிந்தபோதிலும், இதுவரை கண்டுபிடித்துள்ள சான்றுகள் ஐயாயிரம் ஆண்டுத் தொன்மைக்கே ஆதாரமாக இருக்கின்றன. தென் அமெரிக்க ஆதிக்குடிகள் வடஅமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்பதே இப்போது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாகும். ஆயினும் வரலாற்றுக் காலத்துக்கு முன் மக்கள் ஓஷியானியாவிலிருந்து மேற்குத் தென் அமெரிக்காவுக்கு வந்திருக்கலாம் என்று கூறுவதற்குரிய சான்றுகள் பல அண்மையில் சேகரிக்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க இந்தியர்களிடையே எண்பது மொழிக் குழுக்களுக்கு மிகுதியாகக் காணப்படுகின்றன. அவர்களிடையே பூஜியர்கள் போன்ற வேடர்களின் பண்பாடுமுதல் இன்கா மக்கள் போன்ற விவசாயிகளின் பண்பாடுவரை பலதிறப்பட்ட பண்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் பொதுவாகப் பார்க்குமிடத்துத் தென்பகுதியில் நாடோடிகளும், ஆமெசான் வடிநிலத்தில் அரை நாடோடிகளும், ஆண்டீஸ் பகுதிகளிலும் கரிபியன் பகுதிகளிலும் ஊர்கள் அமைத்துக்கொண்டுள்ள விவசாயிகளும் வாழ்ந்து வருகிறார்கள்.

தென் அமெரிக்காவிலிருந்த ஆதிக்குடிகளின் நாகரிகங் களுள் சிறந்தது இன்கா நாகரிகமாகும். பார்க்க: இன்கா நாசரிகம். ஆ. ஆர். ஹோ.

அமெரிக்கக் கடற்கரைத் தீவுகள் : வட அமெரிக்க, தென் அமெரிக்கக் கடற்கரையோரங்களில் பல தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை இக்கண்டங்களின் கிழக்குக் கடற்கரையோரமுள்ள தீவுகள் என்றும், மேற்குக் கடற்கரைப் பக்கத்திலுள்ள தீவுகள் என்றும்