பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்த்வர்க்

143

அர்பன்

கம்” என்று நூல் தொடங்குதல், அது புது வழியில் இயற்றப்பட்டுள்ளதைக் குறிக்கின்றது. சோமதேவர், யசஸ்திலகம் என்ற சம்பு காவியமும் இயற்றியுள்ளார். அந்நூலினின்று அவர் கி. பி. 947-ல் தக்கோலம் (தெக்குளம், வட ஆர்க்காடு) என்ற இடத்து நிகழ்ந்த போரில் வெற்றிபெற்ற மூன்றாவது கிருஷ்ணராஜ (கன்னர) தேவன் என்ற ராஷ்டிரகூட அரசனுக்குத் துணைவனாயிருந்த பத்திகன் அல்லது பூதிகன் என்ற சாளுக்கிய அரசனால் ஆதரிக்கப் பெற்றவர் என்று தெரிகின்றது. அவர் காலத்து அரசியலைப் பற்றிய செய்திகள் சில நீதிவாக்கியாமிருதத்தால் அறியக் கிடக்கின்றன.

3. சுக்கிரநீதி அறத்தையும் பொருளையும் பற்றிய பல அரிய பொருள்களைக் கூறுவது. இந்நூல் சுக்கிராசாரியர் இயற்றிய புராதனப் பொருள் நூலின் சுருக்கம் என்றும், நாளடைவில் ஏற்பட்ட வேறுபாடுகளை உடையது என்றும் கூறுவர். இதனுள் 5 அத்தியாயங்களும் 2,500 சுலோகங்களும் உள்ளன. கௌடிலியரது அர்த்தசாஸ்திரத்திலும் பிற நூல்களிலும் சுக்கிராசாரியரைச் சார்ந்தனவாக வரும் கருத்துக்கள் இந்நூலில் காணப்படவில்லை. இங்குக் கூறப்படும் வெடி மருந்து செய்தல் போன்ற புதிய வழக்குக்கள் இடைச்செருகல் என்பர்.

4. பார்கஸ்பத்திய சூத்திரம்: இது ஓர் அறிவுரைத் திரட்டு. இது அத்துணைச் சிறப்புடையதன்று. சாஸ்திர நூல்கள் கூறும் பிருகஸ்பதியின் கொள்கைகளோடு எவ்வகைச் சார்பும் அற்றது. பிற்பட்ட காலங்களில் தென்னாட்டில் தோன்றிய வழக்குக்களைக் கூறுவது. இதனுள் 5 அத்தியாயங்களும் 430 சூத்திரங்களும் உள்ளன.

5. சாணக்கிய சூத்திரம் : இது கௌடிலியரது அர்த்தசாஸ்திரத்திலுள்ள சில நீதி மொழிகளையும், உலகவழக்கிலும் நூல்வழக்கிலும் பயின்று வந்த அறிவுரைகளையும் திரட்டி அமைக்கப் பெற்றது. இதனுள் 571 சூத்திரங்கள் உள்ளன.

பத்தாவது நூற்றாண்டுக்குப்பின் பொருளைப் பற்றித் தனியே கூறும் நூல் இயற்றப்படவில்லை. மனு முதலிய அற நூல்களிலுள்ள அரச தருமங்களைப் பெரும்பான்மையும் தழுவிய நீதி நூல்கள் சில தோன்றியுள்ளன. அவற்றுள் ஹேமசந்திரன் (1088-1172) இயற்றிய இலகு அருகந்தநீதியும், சண்டேசுவரன் (1370) இயற்றிய ராஜநீதி ரத்தினாகரமும் முக்கியமானவை. கோ. ஹ.

அர்த்வர்க் (Aardvark) டச்சு மொழியில் நிலப்பன்றி எனப் பொருள்படும். இதற்கு எறும்பு தின்னி என்றும் பெயர். தென்னாப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா வெளிகளில் மட்டும் இருப்பது. பார்ப்பதற்கு விசித்திரமாகவும் விகாரமாகவும் இருக்கும். உடம்பு பருத்துக் கனமாக இருக்கும். வால் உட்பட

அர்த்வர்க்

நான்கு ஐந்து அடி நீளம் உள்ளது. வால் நீண்டு தடித்திருக்கும். முதுகு வில்போல வளைந்திருக் அர்த்வர்க்கும். முகம் நீண்டுகுழாய் போல இருக்கும். காது கழுதைக் காது போல நீளமாக இருக்கும். அது மெல்லிய ஒலியையும் கேட்டு, ஆபத்தினின்றும் காப்பாற்றிக் கொள்ள உதவும். இப்பிராணகளில் வெப்பமான இடங்களிலுள்ளவற்றிற்கு மயிர் இருப்பதில்லை. குளிரான இடங்களில் உள்ளவற்றிற்கு முரடான பழுப்பு நிறமுள்ள மயிர் இருக்கும். இதற்கு முன் பற்கள் இல்லை. மற்றப் பற்கள் முளைபோலச் சாமானியமாக இருக்கும். இது ஆழமான குழி தோண்டும்; இடர் வந்தால் மிக விரைவாகத் தோண்டிப் புதைந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். அதற்கு ஏற்றபடி இதன் உகிர்கள் வலுத்திருக்கும். இது இருட்டுகிற வரையில் பதுங்கிக் கிடந்து, இரவில் வெளியே வந்து, புற்றுக்களைப் பறித்துத் தோண்டிக் கறையான், எறும்பு முதலிய பூச்சிகளைத் தின்னும். இவற்றைப் பற்றித் தின்பதற்கு ஏற்றவாறு இதன் நாக்கு நீண்டு பசையுள்ளதாக இருக்கும். இது வாழும் நாட்டு மக்கள் இதைக் குழியிலிருந்து தோண்டியெடுத்து உணவாகக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு இது மிகவும் விருப்பமான உணவு. இது குட்டி போட்டுப் பால் கொடுக்கும். சிங்கமும், காட்டுப் பன்றியும், மலைப்பாம்பும் இதைப் பிடித்துத் தின்னும். இது பாலூட்டி வகுப்பில் எறும்பு தின்னிக் குடும்பத்தில் ஆரிக்டிரோபஸ் (Orycteropus) சாதியைச் சேர்ந்தது. இதில் இரண்டு இனங்கள் உண்டு. தென்னிந்தியக் காடுகளில் காணப்படும் அழுங்கு (Manis) இதே வரிசைப் பிராணி; இதைப் போன்ற உடல் அமைப்பும் உள்ளது.

அர்த்வுல்ப் (Aardwolf) டச்சு மொழியில் நில ஓநாய் எனப் பொருள்படும். தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் வாழ்வது. பார்வைக்குக் கழுதைப்புலியைப் போலத் தோன்றும். மயிர் பழுப்பு நிறம். அதில் ஐந்தாறு குறுக்குப் பட்டைகள் இருபுறமும் உண்டு. வாலில் மயிரடர்ந்திருக்கும். கழுத்தின் மேலும் முதுகு நெடுகவும், பிடரி மயிர் இருப்பது நன்றாகத் தெரியும். முன் காலில் ஐந்து விரல்களும், பின் காலில் நான்கு விரல்களும் உண்டு. நில ஓநாயின் தாடை வலிமையில்லாதது. இதன் பல் சாமானியமாகப் புலால் உண்ணும் விலங்குகளுக்கு உள்ளதுபோல இல்லை. இதன் முக்கிய உணவு கறையான், வேறு பூச்சிகள், புழு, பழம் முதலியவை. இது குழி தோண்டி அதில் வசிக்கும். ஒரே குழியில் பல ஒன்றாக வாழும். சாதாரணமாகக் குழி தோண்டி வசிக்கும் விலங்குகள் கோழைத் தனமானவை. இதுவும் அத்தன்மையதே. இது இர வில்தான் இரை தேட வெளியில் வரும். இதன் இறைச்சி தின்ன நன்றாயிராது. இது கழுதைப்புலி, கீரி முதலியவற்றிற்கு நெருங்கிய உறவுள்ளது. இது பாலூட்டி வகுப்பில் புலாலுண் விலங்குக் (Carnivora) குடும்பத்தைச் சேர்ந்தது. புரொட்டிலிஸ் கிரிஸ் டேட்டஸ் (Proteles cristatus) என்பது இந்த இனத்தின் பெயர்.

அர்பன்: ரோமன் கத்தோலிக்கப் போப் ஆண்டவர்களில் எட்டுப் பேருக்கு இப்பெயருண்டு. அவர்களில் தலையானவர்கள் மூவருக்குத் தனிக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.

அர்பன் II பிரெஞ்சுக்காரர்; 1088 முதல் 1099 வரை போப்பாக இருந்தவர். சிலுவைப் போர்களை இவர் ஆதரித்தார்; ஆயினும் கிறிஸ்தவர்கள் எருசலேமைக் கைப்பற்றுவதைக் காணுமுன் இறந்து போனார்.

அர்பன் VI 1379 முதல் 1389 வரை போப்பாக இருந்தார். இவர் காலத்தில் போப்பின் இருப்பிடம் அலிக்னானிலிருந்து ரோமிற்கு மாற்றப்பட்டதை எதிர்த்துப் பிரெஞ்சு பிஷப்புக்கள் VII-ம் கிளெமன்ட் என்பவரை அலிக்னானில் போப்பாக நியமித்துக் கொண்டார்கள்.