பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரக்கு

145

அரங்கநாத முதலியார்

னும் அதிக அளவில் அரக்குக் கசியும். உற்பத்தியாகும் அரக்கில் பெரும்பாகமும் பெண் பூச்சிகளின் உடல்களிலிருந்துதான் கிடைக்கிறது. இவ்வாறு உண்டாகும் அரக்குக் கூடுகள் நாளடைவில் ஒன்றோடொன்று இணைந்து, ஒரே பொருக்காகவோ, அநேக சிறு சிறு பொருக்குக்களாகவோ மாறுகின்றன. பெண் பூச்சிகள் பருவமடைந்ததும் தங்களைச் சுற்றியுள்ள அரக்குக் கூண்டிலிருந்து தங்கள் பின் பாகங்களை முன்னுக்குச் சுருக்கிக் கொண்டு, அவ்விடம் உண்டாகும் இடத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இந்தத் தருணத்தில் ஒவ்வொரு கூடும் பாதி மஞ்சள் நிறமாகவும் பாதி சிவப்பு நிறமாகவும் தோன்றும். இந்தச் சமயத்திலேதான் இக்கிளைகளை வெட்டி எடுத்து, மறுபடி பயிர் செய்வதற்கு விதையாகப் பயன்படுத்தவேண்டும். தாய்ப்பூச்சிகள் தங்கள் குஞ்சுகளெல்லாம் வெளியேறும் வரை உயிருடனிருந்து பின்னர் இறக்கின்றன.

அரக்குப் பயிர் : இந்தியாவில் பீகார், மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா, திருவிதாங்கூர், வங்காளம், பஞ்சாப், அஸ்ஸாம், மைசூர், சென்னை ஆகிய இடங்களில் அரக்குப் பயிராகிறது. உற்பத்தியில் சுமார் 60% பீகாரிலும், 15% மத்தியப் பிரதேசத்திலும் கிடைக்கிறது. பொதுவாக ஆண்டிற்கு இரண்டு விளைச்சல்களைப் பெறலாம். சென்னை, மைசூர் பகுதிகளில் மட்டும் 13 மாதங்களில் மூன்று விளைச்சல்களைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு வகை மரத்திலும் பயிராகும் பூச்சிக்குத் தனிப்பட்ட பண்புகள் உண்டு. மரத்திற்கேற்றவாறு அதில் பயிராகும் அரக்கின் பண்பும் வேறுபடும். இத்தகைய அரக்கு வகைகளில் பூவன்மர (Schleichera trijuga) அரக்கு உயர்ந்தரகமானது.

கொம்பரக்கு (Stick lac) : அரக்குச் சேகரிப்போர் மேல் விவரித்தபடி அரக்கு வளர்ந்திருக்கும் கிளைகளை வெட்டி எடுத்து, அரக்கைக் குச்சிகளிலிருந்து கையினால் ஓடித்தோ, கத்தியால் சீவியோ எடுப்பார்கள். இவ்விதம் கிடைக்கும் அரக்கிற்குக் கொம்பரக்கு என்பது பெயர்.

அரக்குச் சாயம்: கொம்பரக்கை ஒன்றிரண்டாய்ப் பொடித்துச் சலித்துத் தண்ணீரில் கழுவினால் அரக்குச் சாயம் நீரிற் கரைந்து பிரியும். இச்சாயம் பிராணிகளிடமுண்டாகும் பட்டு, கம்பளிபோன்ற இழைகளில் கெட்டியாக ஏறும் தன்மை வாய்ந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்வரை இதுவே முக்கியச் சாயப் பொருளாக விற்கப்பட்டு வந்தது. செயற்கைச் சாயங்கள் வழக்கத்திற்கு வந்தபின், அரக்குச் சாயத்திற்குக் கிராக்கி அநேகமாக அற்றே போய்விட்டது.

மணி அரக்கு (Seed lac) : கொம்பரக்கைத் தண்ணீரால் கழுவிச் சாயத்தை அகற்றிய பின், சுத்தி செய்து கிடைப்பது மணி அரக்கு. வெள்ளை அரக்குச் செய்வதற்காக இது அயல்நாடுகளுக்குச் சிறிதளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவல் அரக்கும் மணி அரக்கின் ஒருவகையே.

தகடரக்கு (Shellac) : மணி அரக்கை மேலும் தூய்மையாக்கி, 2 அங்குலம் அகலமும் 40 அடி வரை நீளமுமுள்ள துணிப்பைகளில் நிரப்பிப் பைகளைச் சூடாக்கி முறுக்கினால் அரக்கு இளகி வெளிவரும். இதையும், அரக்கு மெழுகையும் நன்றாகக் கலந்து, வெந்நீர் நிறைத்த ஜாடிகளின்மேல் கொட்டிப்பரப்பி, ஜாடிகளின் மேலிருந்து அரக்கை உரித்தெடுத்து, அதை மெல்லிய படலங்களாக இழுப்பார்கள். இப்படலங்கள் குளிர்ந்தபின், இவற்றைச் சிறு தகடுகளாகப் பொடிக்கலாம். இது தகடரக்கு எனப்படும். இது அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் வாணிபப் பொருளாகும்.

தட்டை அரக்கு (Button lac) மேல் விவரித்தபடி இளக்கிப் பிழிந்தெடுத்த அரக்கைப் படலங்களாக இழுக்காமல்,3" X¼" அளவுகொண்ட தகடுகளாகவும் தயாரிப்பதுண்டு. அதற்குத் தட்டை அரக்கு என்று பெயர். இவ்வுருவத்திலும் அரக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தகடரக்கு, தட்டை அரக்கு இவைகளில் அரக்குப் பிசினுடன் சுமார் 5% அரக்கு மெழுகும் கலந்திருக்கும்.

அரக்குத் தொழிலின் உடன்விளைபொருள்கள்: மணி அரக்கிலிருந்து கிடைக்கும் மொலம்மா (Molamma) என்ற அரக்குத்தூளையும், அரக்கைப் பிழிந்த பைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூளையும் மணி அரக்குடன் கலந்து, மட்டரகத் தகடரக்கைச் செய்யப் பயன்படுத்துகிறார்கள். பையிலிருந்து வெளிவராமல் தங்கிவிடும் பொருளை ஆல்கஹாலில் கரைத்துக் கல்லரக்கு (Garnet lac) என்ற பொருளைத் தயாரிக்கிறார்கள்.

அரக்கு உற்பத்தி: உலகில் ஓராண்டில் உற்பத்தியாகும் அரக்கின் அளவு,விலையையும் கிராக்கியையும் பொறுத்து 25,000 டன்னிலிருந்து 40,000 டன்வரை வேறுபடும். இதில் சுமார் 90% இந்தியாவிலேயே உற்பத்தியாகிறது. இந்தியாவைத் தவிர, பர்மாவிலும் சயாமிலும் அரக்கு உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு உற்பத்தியாகும் அரக்கில் பெரும்பகுதி இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, பண்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அரக்கின் தன்மைகளும் பயனும் : அரக்கு மிருதுவாகும் சூடு 65-70°; உருகும் சூடு 80-85°. தூய அரக்கு பழுப்பு மஞ்சள் நிறமானது. இது ஆல்கஹாலிலும் காரக்கரைவுகளிலும் கரையும்; நீரிலும், எண்ணெய்களிலும் கரைவதில்லை. இசைத் தட்டுக்கள் செய்வதில் இது மிக அதிகமாகப் பயனாகிறது; அடுத்தபடி முக்கியமாக மின்சாரக் கருவிகளில் பயன்படுகிறது. மரம், ரப்பர், தோல், உலோகத் தகடுகள் முதலானவற்றில் பூசுவதற்கேற்ற மெருகெண்ணெய் செய்ய இது பயன்படுகிறது. உலக உற்பத்தியில் சுமார் 10% தொப்பிகளுக்கு விறைப்புக் கொடுக்க உபயோகிக்கப்படுகிறது. இவை தவிர வார்ப்புச் சாமான்கள், ரப்பர்ச் சாமான்கள், வர்ணக் குச்சிகள் (Lacquering sticks), விளையாட்டுச் சாமான்கள், முத்திரை அரக்கு (Sealing wax), சாணைக்கல் முதலான அநேக சாமான்கள் செய்யவும் பயனாகிறது. கொம்பரக்கும் மணி அரக்கும் மருந்தாகப் பயனாகின்றன. யெ. ச.

நூல்கள் : P.M. Glover, Lae Cultivation in India; Lac in India (Bcoklet No. 9, Govt. of India).

அரக்கோணம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்திலுள்ள ஒரு பட்டணம்; முக்கியமான ரெயில்வே சந்திப்பு. இதன் அருகிலுள்ள தக்கோலத்தில் நடைபெற்ற போரில் ராஜாதித்திய சோழன் கி.பி. 949-ல் இறந்தான் என்று கூறுவர்.

அரங்கநாத முதலியார், பூண்டி(1844-1893) தொண்டை நாட்டில் திருவள்ளூரையடுத்த பூண்டியிற் பிறந்தவர். தந்தையார் சுப்பராய முதலியார்; சைவ வேளாளர். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியிலும் அரசினர் கல்லூரியிலும் கற்றுக் கணிதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்; மிகச் சிறந்த மேதையுள்ளவர்; வியக்கத்தக்க நினைவாற்றலுள்ளவர்; கும்பகோணம் கல்லூரியிலும் சென்னை அரசாங்கக் கல்லூரியிலும் பேராசிரியராக இருந்தார்; பல்கலை வல்லவர் எனப் பாராட்டப் பெற்றவர்; சிறந்த இனிய சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்; தொழுவூர் வேலாயுத