பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்க அமைப்பு

153

அரசாங்கம்

அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளாகிய நீதி, நிருவாகம், சட்டசபை ஆகிய மூன்றும் ஒன்றற்கு ஒன்று கொண்டுள்ள தொடர்பு என்பவை ஜனநாயக் அரசாங்க அமைப்புக்களில் காணப்படும் முக்கியமான அமிசங்கள். தவிர, சுதந்திரத்தோடு இயங்கும் அரசியற் கட்சிகள் ஜனநாயக அமைப்பில் உள்ள ஒரு முக்கிய அமிசம். இது பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசியல் அமைப்புக்களில் காணப்படுவது. பல கட்சிகளும் சுதந்திரத்தோடு இயங்காத நாடுகளில் பூரண ஜனநாயகம் இருப்பதாகக் கருதமுடியாது.

எழுதாச் சட்டம் என்று சொல்லக்கூடிய பொதுச் சட்டம் (Common Law) இங்கிலாந்தில் நடைமுறையிலிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் இம்முறையைப் பின்பற்றவேண்டிய பல விஷயங்களைப்பற்றி வெளிப்படையாக அரசியல் அமைப்பில் கூறவில்லை. சில அமிசங்கள் நிலைமைக்குத் தகுந்தபடி சம்பிரதாயங்கள் மூலமாக வளரவேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டத்தை அமைத்தவர்களுடைய கருத்து. ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாடுகளில்கூட நிருவாகச் சட்டம் என்று ஒருவகைச் சட்டம் ஏற்பட்டுள்ளது. இது நிருவாக சம்பந்தமான விஷயங்களில் ஏற்படக்கூடிய சில பிரச்சினைகளை ஆலோசித்து முடிவு செய்ய ஏற்பட்டுள்ள மன்றங்கள் வாயிலாக நடத்தப்படும்.

ஜனநாயக அரசியல் அமைப்பில் மந்திரிசபை மிகவும் முக்கியமான உறுப்பு. இம் மந்திரிசபை பெரும்பாலும் கீழ்ச்சபையின் பெரும்பான்மைக் கட்சியோர் கருத்துப்படியே அமையும். இல்லாவிடில் மந்திரிசபை அரசாங்கம் நடத்த முடியாது. மந்திரிசபைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு. ஒவ்வொரு மந்திரியின் செயலுக்கும் மந்திரிசபை முழுவதும் பொறுப்பேற்றுக் கொள்ளும். கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாத மந்திரிகள் ராஜிநாமா செய்துவிட வேண்டும். மந்திரிசபையால் கொண்டுவரப்படும் மசோதாக்களைப் பார்லிமென்டு பெரும்பாலும் நிராகரிப்பதில்லை. மந்திரிசபை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் அவர்களுக்குப் பார்லிமென்டின் நம்பிக்கை யிருக்கவேண்டும். ஆயினும் மந்திரிசபையைப் பார்லிமென்டிற்கு அடங்கிய ஓர் உறுப்பாகக் கருத முடியாது.

ஜனநாயக ஆட்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்குப்பு பொறுப்புள்ள எதிர்க்கட்சி இருப்பது நல்லது. இங்கிலாந்தில் இக்கொள்கை முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அன்றியும் அங்கு எதிர்க்கட்சித் தலைவருக்குச் சம்பளமும் உண்டு. பிரான்சிலும் பார்லிமென்டு ஆட்சியே நடைபெறுகிறதாயினும், இங்கிலாந்திலுள்ள சில சம்பிரதாயங்கள் அங்கில்லை. பிரான்சின் ஜனாதிபதிகள் ஏழாண்டு காலம் பதவி வகிப்பர். அவரை இரு சபை அங்கத்தினர்களும் ஒருங்கு சேர்ந்து தேர்ந்தெடுபர். பல கட்சி அங்கத்தினர்களும் சேர்ந்தே பிரான்சில் மந்திரி சபை அமைக்க முடியும். ஏனெனில், இங்கிலாந்திலிருப்பது போல இருபெருங் கட்சிகள் அங்கு இல்லை. அங்கு ஏறத்தாழச் சம பலமுள்ள பல கட்சிகள் இருக்கின்றன. ஆகவே, கூட்டு மந்திரி சபைகளே அமைகின்றன. சில கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் மந்திரி சபை கவிழ்ந்துவிடும். ஆயினும், அதை நல்ல ஜனநாயக முறை என்று கருதலாம். அடிக்கடி அரசாங்கம் மாறுவதால் பிரதம மந்திரிக்கு மந்திரிசபை மீதும், மந்திரிசபைக்குப் பார்லிமென்டுமீதும் மிகுந்த ஆதிக்கம் ஏற்பட்டுவிடாது. பார்லிமென்டே வலுமிகுந்த அரசியல் உறுப்பாக இருக்கும். நிலையான அரசாங்கம் நீடித்து இருக்க இயலாது என்று சிலர் காரணங்கண்டு, பிரெஞ்சு முறையை இழித்து உரைப்பர் உறுதியான ஒரு திட்டத்தை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்பதும் அதன் குறைபாடுகளில் ஒன்று என்பர். ஆயினும், மந்திரிசபை அடிக்கடி மாறுவதால், வெளிநாட்டு உள்நாட்டுக் கொள்கைகள் கூடவே மாறுகின்றன என்று கருத முடியாது. பிரெஞ்சு மக்கள் இம்மாறுதல்களால் பாதிக்கப்படுவதாகக் கருத இடமில்லை.1946-ல் இயற்றியமைக்கப்பட்ட புதுப் பிரெஞ்சு அரசியல் சட்டத்தில் நிலையான மந்திரிசபை அமைப்பதற்கும், சட்டசபை பொறுப்போடு தன் அலுவல்களைச் செய்ய இயலுமாறும் சில சிறப்பான ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பிரெஞ்சு அரசியல் சட்டப்படி. நிருவாகப் பகுதியால் கொண்டுவரப்படும் மசோதாக்கள் சட்டசபையால் நிராகரிக்கப்படினும், மந்திரிசபை ராஜிநாமா செய்யவேண்டியதில்லை. மந்திரிசபை அங்கத்தினர்களிடையே கூட்டுப் பொறுப்பு இல்லை. மந்திரிசபை அங்கத்தினர்களில் ஒருவர் மற்றொருவருடைய மசோதாக்களை எதிர்க்கலாம்.

சில தீவிரமான மசோதாக்கள் சட்டமாகாமல் இருக்கச் சில காலம் ஒத்திப் போடுவதே மேல்சபைகளின் பொதுவான அலுவல். கூட்டாட்சி நாடுகளில் தனிப்பட்ட நிலையங்களுக்கும் ஆட்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு இவை வேண்டியிருக்கின்றன. கீழ்ச் சபைக்கும் மேல்சபைக்கும் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைத் தீர்க்க, ஏறத்தாழ எல்லா அரசியல் சட்டங்களிலும் முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் மூன்றாவது பகுதியான நீதி இலாகாவின் கடமைகள், சட்டசபை இயற்றும் சட்டங்களுக்கு விளக்கம் கூறுவதும், தங்கள் முன்வரும் வழக்குக்களுக்குச் சட்டப்படித் தீர்ப்புச் செய்வதுமேயாம். கூட்டாட்சி நாடுகளில் உள்ள உச்ச நீதிமன்றங்களுக்குக் கூட்டாட்சிக்குட்பட்ட உறுப்புராச்சியங்களுக்கிடையே ஏற்படும் விவகாரங்களைத் தீர்த்துவைக்கும் பொறுப்பும் உண்டு. இவ்வுயர்ந்த பொறுப்புக்களையுடைய நீதிப்பகுதி பூரண சுதந்திரமுடையதாக இருக்கவேண்டும். ஆகையால், நீதிபதிகள் நிருவாகப்பகுதியால் நியமிக்கப்படுபவர்களாயினும், நியமனம் ஆன பிறகு அவர்களை எளிதில் நீக்க முடியாதவாறு பல விதிகள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமைகளை நிருவாகப்பகுதி, சட்டசபை ஆகியவற்றின் ஆக்கிரமிப்பினின்றும் பாதுகாக்கும் பொறுப்பு நீதி இலாகாவைச் சேர்ந்தது. அ.ஐ. நாடுகளிலும் இந்தியாவிலும் சட்டசபைகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகாமல் இருக்கின்றனவா என்று தீர்மானிக்கும் பொறுப்பும் நீதிப் பகுதிக்கு உண்டு.

அரசாங்கத்தின் அமைப்பும் அதன் பகுதிகளும் அவற்றின் கடமைகளும் பொறுப்புகளும் உரிமைகளும் ஆட்சி முறையைப் பொறுத்து நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. வீ. வெ.

அரசாங்கம் : ஒரு சமூகத்தில் ஒருவனோ அல்லது ஒரு ஸ்தாபனமோ கட்டளையிட, அக்கட்டளைக்கு அடங்கி அச்சமூகத்தைச் சார்ந்த மற்றவர்கள் நடந்துவந்தால், அந்த மனிதனை அல்லது ஸ்தாபனத்தை அரசாங்கம் என்று சொல்வார்கள். அரசாங்கம் இல்லாத சமூகம் கிடையாது ; எந்தச் சமூகமும் அரசாங்கமில்லாமல் நிலைக்க முடியாது.

ஆதியிலே, வரலாற்றுக் காலத்துக்கு முன்னே, மக்கள் தனித்தும் தனிக் குடும்பங்களாகவும், சிற்சில குடும்பங்கள் ஒருங்கு சேர்ந்தும் வாழ்ந்துவந்தபோது