பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்லி

207

அல்லி

னால் நீருக்கு மேலேயே இலையும் பூவும் இருக்கும். நீர்மட்டம் தாழ்ந்தால் காம்பு அலகுடன் பொருந்தும் கோணம் மாறுபட்டு, இலை நீரின் மேலேயே மிதக்கும். 'நீரளவேயாகுமாம் நீராம்பல்,' 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்.' இந்தக் காம்புகளினுள்ளே காற்றுக் குழாய்களுண்டு. அந்தக் குழாய்களுக்குள்ளே அங்கங்கே நட்சத்திர வடிவமான உயிரணுக்களாலான மயிர்கள் இருக்கும். கால்சியம் ஆக்ஸலேட்டுப் படிகங்களும் அவற்றில் காணும். இந்தக் காம்புகளையே அல்லிக் கொடி என்று சொல்லுகிறோம். இலைகள் பெரும்பாலும் நீரின்மீது மிதப்பவை. நெருக்கமாக வளரும் இடங்களில் சில அங்குலம் நீர்மட்டத்துக்கு மேலும் நிற்பதுண்டு. அவை வட்டமாகவோ, அண்ட வடிவமாகவோ இருக்கும். அவற்றின் அடி ஆழமான பிளவுள்ள இருதய வடிவானது. இலைக்காம்போடு இலையலகு கேடகம்போலப் பொருந்தியிருக்கும். அலகு இரண்டு அங்குல முதல் இரண்டு அடிவரையில் அகலமுள்ளது. இந்த மிதக்கும் இலைகளிலே மேற்பக்கத்தில் தான் இலைத்தொளைகளும் கிராதியணு அடுக்கும் உண்டு. நீரோடு படிந்திருக்கும் கீழ்ப்புறத்தில் இலைத்தொளை இருப்பதில்லை. இந்தச் சாதாரண இலையன்றி நீருக்குள்ளேயே இருக்கும் இலை களும் இருக்கின்றன. அவை மிக மெல்லியவை; எளிதில் கிழிந்து போகக்கூடியவை. சில சமயங்களில் நீருக்கு மேலே வளர்ந்து நிற்கும் ஒருவகை இலையும் உண்டு. அதில் இலையின் கீழ்ப்புறத்திலும் விளிம்புக்கு அருகே சில இலைத்தொளைகள் காண்பதுண்டு. ஒரு செடியிலே ஒரு சமயத்தில் 10-15 இலைகள் இருக்கலாம்.

பூக்கள் இலைகளைப்போலவே கிழங்கிலிருந்து தனித்தனியாக எழுகின்றன. ஓரங்குல முதல் பன்னிரண்டு பதினான்கு அங்குலம் வரையில் விட்டமுள்ளவை. ஒரு பூவில் புறவிதழ் நான்கும், அகவிதழ்கள் பலவும், மகரந்த கேசரங்கள் மிகப்பலவும், சூலிலைகள் பலவும் உண்டு. பூத்தண்டின் நுனியிலே ஆதானமானது கிண்ணம்போல ஆகிச் சிறிதளவோ, பாதியளவோ, முழுவதுமோ சூலகத்தைச் சுற்றி அதனோடு ஒன்றாக ஒட்டி வளர்கின்றது. இதனால் இதழ்களும் மகரந்தக் கேசரங்களும் சூலகத்தின் புறச்சுவரிலிருந்து தோன்றுவதுபோலக் காண்கின்றன. இவற்றையெல்லாம் ஒடித்து எடுத்துவிட்டால் இவை திருகலான சுருள் முறையிலே ஆதானத்திலிருந்து உண்டாவது நன்றாகத் தெரியும். பல இனங்களிலே புறவிதழ்கள் படிப்படியாக அகவிதழ்களாக மாறுவதும், அகவிதழ்கள் படிப்படியாக மாறி மகரந்தக் கேசரங்களாவதும் காணலாம். இது பூவின் உறுப்புக்களெல்லாம் பிறவித்தானத்தில் ஒத்தவை (Homologous) என்பதைக் காட்டுகிறது. சூலகத்தில் பல அறைகளுண்டு. அறைகளின் உட்புற மெல்லாம் கேழ்வரகு அல்லது கடுகுபோன்ற நுண்மையான விதைகள் ஒட்டிக்கொண்டிருக்கும். பூவின் நடுவில் சூலகத்தின் உச்சி சற்றுக் குழிந்து கிண்ணம்போலத் தோன்றும். அதில் சூல்முடிகள் ஆரைகள் போலச் சுற்றாக அமைந்து கசகசாக் காய்போலக் காணும். கனி ஒரு மெதுவான சதைக்கனி. நீருக்குள் முதிரும். விதைகள் எண்ணிறந்தவை. விதையைச் சூழ்ந்து கொண்டு பத்திரி ஒரு பைபோல இருக்கும்.

மலர்தல் : அல்லி சாதாரணமாக ஆண்டில் பெரும் பகுதியில் பூவிட்டுக் கொண்டிருக்கும். ஆயினும் மழைக்காலத்தில் மிகுதியாகப் பூக்கும். ஒவ்வொரு இனத்திற்கும் பூக்கள் மலர்வதற்கும் கூம்புவதற்கும் உரிய நேரம் உண்டு. பூப் போதவிழும் நேரம் சாதாரணமாக ஒழுங்காக இருக்கும். வெப்ப வலயத்தில் உள்ளவை குளிர் காலங்களில் சற்று மெல்ல அலரும். ஒவ்வொரு பூவும் ஒன்று அல்லது இரண்டு முதல் ஐந்து அல்லது ஏழு நாட்கள் வரையில் பகலிலோ இரவிலோ தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மலர்ந்தும் குவிந்தும் வரும். ஒருநாளுக்கு ஒருநாள் ஒரு மணி நேரம் பிந்தி. மலரும் ; முந்தி மூடிக்கொள்ளும். பிறகு பூவானது பூக்காம்பு சுருண்டு கொள்ளுவதனாலே நீருக்குள்ளே இழுத்துக்கொள்ளப்படும். இதழ் முதலியவை தாமரையில் உதிர்வது போல் உதிர்வதில்லை. நீருக்குள் விதைகள் முதிர் கின்றன. அவை முற்றிலும் முதிர ஆறு முதல் பத்து வாரமாகும். பிறகு காய் முதிர்ந்து உடைகிறது. விதைகள் நீரின்மேல் வந்து மிதக்கின்றன. விதைகளைச் சுற்றியிருக்கும் பத்திரி மிதவைபோல உதவுகிறது. இந்த நிலையில் விதைகள் பரவுகின்றன. சில மணி நேரத்தில் பத்திரி அழுகிப்போகும். அப்போது விதை நீருக்குள் அழுந்திச் சேற்றில் படியும்.

தென்னிந்தியாவிலுள்ள அல்லியினங்களில் நிம்பியா ஸ்டெல்லேட்டஸ் என்னும் நீலம் அல்லது நீலோற்பலம் என வழங்கும் கருநெய்தல் ஒன்று. இதை ஆம்பல் என்பதுமுண்டு. கருங்குவளை, பானல் என்பதுமிதுவே. இதன் இலைகள் மேலே பச்சையாகவும் கீழே நீலமான ஊதா நிறமாகவும் இருக்கும். பூ 3-7 அங்குல விட்டமுள்ளது. வெளிர் நீல நிறமானது. அருமையாகச் சிவப்புக் கலந்தும், வெண்மையாகவும்கூட இந்தப் பூ இருக்கும். பூ மூன்று நாட்கள் தொடர்ந்து பூக்கும். காலை 8 மணிக்கு மலர்ந்து பகல் 2 மணிக்குமேல் மாலை வருவதற்கு முன் மூடிக்கொள்ளும். பூவின் மொக்கு அண்டவடிவமாக இருக்கும். புறவிதழ்களிலே மிக நுண்ணிய கரும்புள்ளிகள் உண்டு. அகவிதழ்கள் 11-14; அடிப்பாகம் மங்கலான வெண்மையுள்ளது. கேசரம் 34-54 ; நீல முனையுள்ளது, கேசரத்தாளும் கேசரப்பைகளும் வெளிர்மஞ்சள் நிறம்.

வெள்ளல்லி, வெள்ளாம்பல் எனப்படும் நிம்பியா லோட்டஸ் என்னும் உட்சாதியைச் சார்ந்த நிம்பியா பியூபெசென்ஸ் மற்றொன்று. இது குமுதம் எனப்படுவது. இலை அண்டவடிவுள்ள ஊதா கலந்த பச்சை. கீழ்ப்புறத்தில் மயிர் செறிந்திருக்கும். பூ நடுத்தரமான அளவுள்ளது. வெண்மை நிறமுள்ளது. அகவிதழ்கள் அண்டவடிவமானவை. அகவிதழ்ச் சுற்றுக்கும், கேசரச் சுற்றுக்கும் நடுவே சிறிது இடைவெளியுண்டு. புறவிதழ் பச்சை நிறம் ; அகவிதழ் 19-20; வெண்மை ; சிலவற்றில் வெளியிதழ்களில் சற்று வெளிர் சிவப்பு நிறமும் தோன்றும். கேசரங்கள் சுமார் 100; மஞ்சள் நிறம். பூ இரவில் சுமார் 7-30 மணிக்குத் தளையவிழும். மறுநாள் காலையில் 11 மணி வரையில் அலர்ந்திருந்து மூடிக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு பூவும் நான்கு இரவு பூக்கும். பூ நீர்மட்டத்துக்கு மேலே சுமார் 3-12 அங்குலம் வந்திருக்கும்.

செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், செங்குவளை, காவி, அரக்காம்பல் என்றழைக்கப்படும் நிம்பியா ரூப்ரா மூன்றாவது இனம். இலை சிவப்புக் கலந்த பழுப்பு; முதலிற் செம்பு நிறமாக இருந்து பிறகு பச்சையாகும்; கீழ்ப்புறம் மயிருள்ளது ; 12-18 அங்குலம் குறுக்களவுள்ளது. பூ ஆழ்ந்த ஊதா கலந்த சிவப்பு என்னும் அரக்கு நிறமுள்ளது ; 6-10 அங்குல விட்டமுள்ளது. இரவு 8 மணிக்குப் போதவிழ்ந்து மறுநாள் காலை 11 மணிக்குக் குவியும். மூன்று அல்லது நான்கு நாள் இவ்வாறு தொடர்ந்து மலரும். புறவிதழ்கள் மங்கலான ஊதா கலந்த சிவப்பு. அகவிதழ்கள் 12-20; குறுகியிருக்கும் அண்டவடிவு; இதழ் நுனி வட்ட மானது. கேசரங்கள் சுமார் 55. அவையும் செந்நிற-