பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவயவச் சீரியல்

231

அவயவச் சீரியல்

மாகும். இடையில் நிறுத்தினால் அங்கவீனம் மீண்டும் வந்துவிடும். மூன்று வயதான குழந்தைகளிற் சிலருக்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருக்கும். பார்க்க : கோணல்பாதம்.

பிறந்தபின் ஏற்படும் ஊனங்கள் : இவை முன் கூட்டித் தடுக்கக்கூடியவை. இவையாவன :
1. இளம்பிள்ளை வாதத்தால் தசை சோர்ந்து அங்க மாறுதல் உண்டாகும்.
2. உணவில் இருக்கவேண்டிய சத்துக்கள் குறைந்தால், உதாரணமாக டீ வைட்டமின் குறைந்தால் கணை நோய் (Rickets), எலும்பு மிருதுவாதல் (Osteomalacia) உண்டாகும்.
3. கை யெலும்பில் அடி, தசை நரம்புகள் அறுதல்.
4. அடி காயத்தால் எலும்பு முறிதல், வளைதல், குறுகுதல், மூட்டுப்பிடிப்பு, உடைந்த எலும்பு சேராமை, சதை அற்று விரல் ஆட்ட முடியாமை, சதைக்கு உயிர் தரும் நரம்புகள் அவற்றால் உயிர்ச்சேதம் நேரும்.
5. பூட்டு விலகல்.
6. சுரத்துடன் வீக்கங்கண்டு சீழ் பிடித்தால் குழந்தைகளின் பூட்டின் மேலும், மற்றவர்களின் எலும்பிலும் சீழ் பிடிக்கும். வாத வகைகள் சிலவற்றில் பூட்டுக்களின் அசைவு குறைவுபடும்.
7. க்ஷயரோகத்தில் பூட்டுக்களில் ஏற்படும் மாறுதல்கள்.
8. எலும்பு வளருமிடத்துக்குக் கீழோ மேலோ இருக்கும் தட்டுக்களில் ஏற்படும் விபத்துக்கள்.
9. இடுப்பு, தோள் பட்டை, மேல்தோள் இவற்றில் நோவு ஏற்படுதல் முதலியன.

இளம்பிள்ளை வாதம் நிரம்ப நாள் நீடித்திருக்கக் கூடியது. வீட்டில் சிகிச்சை செய்வது நல்லது. இந் நோய் கண்டவுடன் படுக்கவைத்து ஓய்வு தரவேண்டும். மெல்லிய தலையணைகளைத் தலைக்கும் தோள்பட்டைக்கும் வைக்கவேண்டும். தோள் பூட்டு அசையாமல் 75° கோணத்தில் இருக்கவேண்டும். கால்கள் முழங்காலுடனும் விரல்களுடனும் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். முழங்கால்கள் இரண்டு அங்குலம் விலகி இருக்கவேண்டும். பாதங்கள் கால்களுக்குச் சரியாக நேர்க்கோணத்தில் இருக்கவேண்டும். நோய் கண்டவுடன் சிகிச்சை செய்தல் இன்றியமையாதது. தசைகள் வாடாமல் இருப்பதற்காகச் சுடுநீர் ஒற்றடம் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு காலைத் தூக்கும் நிலைமை வரும்வரை படுத்தேயிருக்கவேண்டும்; நடக்கக்கூடாது. இந்நோயின் வைரஸ் (Virus) பிறரையும் பாதிக்குமாதலால் மூன்று வாரகாலம் நோயாளியின் மலசலங்களைக் கொளுத்தி வரவேண்டும். பார்க்க : இளம் பிள்ளை வாதம்.

கணை நோய் : ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் உண்டாகிறது. சுண்ணாம்பும் பாஸ்பரஸும் குறைவதால் ஏற்படுகிறது. மண்ணீரலும் பருத்து விடும். பேதி உண்டாகலாம். எலும்புகள் வளையும். குழந்தை நடக்கவேண்டிய பருவத்தில் நடக்காமல் இருந்துவிடும். பல் முளையாது. உச்சிக்குழி மூடாமல் இருந்துவிடும். வலிப்பு ஏற்படலாம். நெஞ்சுக்கூடு முன்னுக்கு வந்திருக்கும். பால், முட்டை, வெண்ணெய், மீனெண்ணெய், சூரிய ஒளி, போதுமான அளவு தந்தால் நோய் வராது. எக்ஸ்கதிர்ப் படம் எடுத்தால் நோயின் தொடக்கத்தில் கண்டுகொள்ளலாம். அப்போது சத்துள்ள உணவு கொடுத்து, நடக்காமல் செய்தால் குணமாய்விடும். ஐந்து வயதில் ஏற்பட்டால் அங்க ஊனங்களை நீக்க ஆப்பரேஷன், முதுகுக்கட்டு முதலியன தேவையாகும். பார்க்க : கணை நோய்.

பக்கக்கூன் (Scoliosis) : சில காரணங்களால் முதுகு எலும்பு ஒன்றிலிருந்து ஒன்று விலக்கம் கண்டு உருளத் தொடங்கிவிடும். அப்போது மார்புக் கூட்டில் மாறுதல் உண்டாகும் ; மூச்சுத் திணறும் ; எக்ஸ் கதிர்ப் படம் எடுத்து, எந்த எலும்பு எவ்வளவு உருள்கிறது என்று கண்டு, தொடக்கத்தில் சிகிச்சை செய்தால் ஒருவாறு குணமாகும். பலகைக் கட்டிலில் படுக்கவைக்க வேண்டும். பார்வையில் பிழையிருந்தால் கண்ணாடி போடவேண்டும். இரண்டாண்டுகள் சிகிச்சை செய்தால் குணமாகும். முற்றியபின் குணப்படுத்துவது சிரமம்.

குமரப்பருவக் கூனல் (Adolescent kyphosis): குனிந்து வேலை செய்வதாலும், உணவில் சத்துக்குறைவதாலும், மிகுந்த களைப்பு ஏற்படுவதாலும் முதுகு எலும்பு கோணிவிடும். ஆறுமாதம் படுக்கையில் இருந்து, சத்தான உணவு கொண்டால் இதை வராமல் தடுக்கலாம்.

சிலர்க்கு முதுகெலும்பில் நோய் ஏற்பட்டோ அல்லது பிட்டத்திலும் கீழ் உறுப்புத்தசைகளிலும் நோய் ஏற்பட்டோ , வயிறு முன் வந்து, முதுகில் இடுப்புப் பக்கத்தில் வளைவு ஏற்படுவதுண்டு.

தட்டைப் பாதம் (Flat foot) : இதை வலிமையற்ற கணுக்கால் என்று கூறுவர். சில குழந்தைகளுடைய பாதங்களில் உள்வளைவு இல்லாமல் உள்ளங்கால் தட்டையாயிருக்கும். இது கால் தசையின் வலிமைக் குறைவால் ஏற்படுகிறது. சோட்டின் குதியின் உட்பக்கம் காலங்குலம் உயரமாகத் தைத்துக் கொடுக்க வேண்டும். தொண்டைச்சதை வளர்ச்சி (Tonsilitis) இருந்தால் நீக்க வேண்டும். குழந்தையை நீரில் பாதத்தை வைத்து விளையாடுமாறு செய்தால் தசைகள் உறுதியடையும். இவ்வாறு செய்தால் 6 மாதத்தில் குணமடையும். கவனியாமல் இருந்துவிட்டால் பின்னால் அதிக தூரம் நடக்கமுடியாது. இம்மாதிரிக் குழந்தைகள் குறுகின இறுக்கமான பூட்சுகளை உபயோகித்தால் பல கெடுதல்கள் உண்டாகும். உள்ளங்காலில் விரலுக்கடியில் ஆணி முளைக்கும்.

எலும்பு முறிவுகள் : தாய் வயிற்றில் ஏற்படும் முறிவுகளைத் தடுக்கும் முறை இப்போது தெரியவில்லை. பிரசவ வேளையிலும் முறிவு ஏற்படலாம். பின்னால் பல விபத்துக்களாலும் முறிவுகள் உண்டாகலாம். எலும்பு நோய் கண்டால் விபத்து ஏற்படாமலே முறிவுகள் உண்டாகலாம். புற்றுநோய் கண்டவிடத்திலும் முறிவு உண்டாகும். பொதுவாக நிரம்ப நடந்து வழக்கமில்லாதவர் நெடுந்தூரம் நடந்தாலும் முறிவு ஏற்படுவதுண்டு.

மூடின எலும்பு முறிவுஎன்றும், திறந்த எலும்பு முறிவு என்றும் முறிவுகள் இருவகைப்படும். தோல் கிழியாமல் உள் காயமாக இருந்தால் மூடின முறிவு. தோல் கிழிந்து இரத்தக் காயமாக இருந்தால் திறந்த முறிவு. திறந்த முறிவே மிகுந்த அபாயமானது. கிருமிகள் புகுந்து, சன்னி, இழுப்புப்போன்ற அபாயங்களை உண்டாக்கலாம்.

மூடின முறிவு : அடிப்பட்ட இடத்தில் நோவு உண்டாகும். முறிந்த துண்டுகள் உராய்வது காதுக்குக் கேட்கும். கைக்குப் புலப்படும். களைப்பு உண்டாகும். இரத்த அழுத்தம் குறையும். அரை மணி நேரத்தில் வீக்கம் உண்டாகும். சுரம், தலைவலி முதலியன ஏற்படும். நடுக்கம் ஏற்படலாம். எத்தகைய முறிவு என்று காண எக்ஸ்கதிர்ப் படம் உதவி செய்யும்.

எலும்பு முறிவுடன் சில சிக்கல்களும் ஏற்படுவ துண்டு. முக்கியமானவை : 1. தமனியிலும் சிரையிலும் காயமோ வீக்கமோ ஏற்படலாம். ஊற்று நாடியில் வீக்கமும் அறுதலும் உராய்வும் உண்டாகலாம்.