பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவொகாடோ

237

அழகியல்

கலைக் கழகத்திலேயே பேராசிரியராக இருந்தார். டால்டன் அணுக் கொள்கையை இவர் ஆராய்ந்து, ஒரே கன அளவுள்ள எல்லா வாயுக்களிலும் ஒரே அழுத்தத்திலும், வெப்பநிலையிலும் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை சமமானது என்ற முக்கியமான உண்மையைக் கண்டு பிடித்தார். இது அவொகாட்ரோவின் கருதுகோள் என வழங்குகிறது.

அவொகாடோ (Avocado) அயனமண்டல அமெரிக்காவில் வளரும் பெர்சியா கிராட்டிசிமா என்னும் மரத்தின் பழம். இந்தியா உட்பட மற்ற இடங்களிலும் இப்போது இது பயிராகிறது. இதில் பல வகைகளுண்டு. உருண்டையாகவும், முட்டை வடிவமாகவும், புட்டி வடிவமாகவும் இருக்கும். பசுமை முதல் சிவப்புக் கலந்த கறுப்பு வரையில் பல நிறமாக இருக்கும். பழம் 3-3 ராத்தல் நிறையிருக்கும். மேலே தோலும் உள்ளே வெண்ணெய் போன்றதும் மணமுள்ளதுமான மஞ்சள்-பச்சை நிறச் சதையும் நடுவில் ஒரு பெரிய கொட்டையும் இருக்கும். தோலை நீக்கித் தின்னத் தக்கது.

அழகர் மலை மதுரைக்கு வடகிழக்கே 12 மைலிலுள்ளது. இதனைத் திருமாலிருஞ்சோலைமலை என்பர். இங்குத் திருமால் நின்ற கோலத்துடனுள்ள கோவில் இருக்கிறது. வாயிலருகே பதினெட்டாம்படிக் கறுப்பன் கோவில் இருக்கிறது. அருகில் ஓடும் சிற்றாறு, சிலம்பாறு அல்லது நூபுரகங்கை யெனப்படும். இது திருமால் குன்றமெனச் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. இங்கு ஒரு பிலமும், புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று பொய்கைகளும் உண்டு என்றும் அந்நூலால் தெரிகிறது. திருமாலிருஞ்சோலைக்குப் பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியவர்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்கள். சுவாமி திருநாமம் : அழகர், மாலலங்காரர். தாயார் : சுந்தர வல்லி நாச்சியார். தீர்த்தம் : சிலம்பாறு. விருட்சம் : சந்தனம். மலயத்துவச பாண்டியனுக்கும் தருமதேவதைக்கும் சுவாமி காட்சியளித்திருப்பதாகக் கூறுவர்.

அழகசுந்தரம் (1773-1941)யாழ்ப்பாணத்தினர். சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களின் புதல்வர். அழகசுந்தரம் என்பது பெற்றோரிட்ட பெயர். பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி என்பது ஞானஸ்நானப் பெயர். கிறிஸ்தவப் பாதிரியராக இருந்தார். சென்னைப் பல்கலைக் கழகம் தொகுத்த லெக்சிகன் தொகுப்புக் குழுவிலே ஒருவராகவும், கொழும்புப் பல்கலைக் கழகத்திலே தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை, பாண்டவர் கதை, சந்திரகாசம் என்னும் நூல்களின் ஆசிரியர். ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்.

அழகிய சிற்றம்பலக் கவிராயர் பாண்டி நாட்டில் மிதிலைப்பட்டி என்னும் ஊரினர். தளவாய் இரகுநாத சேதுபதிமீது இனிய சுவை மிக்க கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் 'தளசிங்கமாலை' என்னும் நூலை யியற்றியவர். 17ஆம் நூற்றாண்டினர்.

அழகிய சொக்கநாதபிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்த தச்சநல்லூரிற் பிறந்தவர். நெல்லைக் காந்தியம்மை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி முதலியவை பாடியவர். தம்மை ஆதரித்த முத்துசாமிப் பிள்ளைமீது 'காதல்' என்னும் நூல் பாடியிருக்கிறார். சிலேடை பாடுவதில் வல்லவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்.

அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். திரிபதார்த்த தீபம் என்னும் நூலை இயற்றியவர். இவரால் சுவர்க்கபுர மடம் ஏற்படுத்தப்பட்டது என்பர். பதினேழாம் நூற்றாண்டினர்.

அழகிய நம்பி குருபரம்பரை என்னும் வைணவ ஆசாரியர் வரலாற்றை விரிவாக இயற்றியவர் ; வைணவர் ; பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தவர்.

அழகிய மணவாளச்சீயர் : (சு. 12ஆம் நூ.) பெரியவாச்சான் பிள்ளையினுடைய மாணவர்; திருவாய் மொழிக்குப் 'பன்னீராயிரப்படி' என்னும் வியாக்கியானத்தைச் செய்தவர் ; துறவி; பரசமயகோளரியாக விளங்கினராதலின் வாதி கேசரி என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்து, 'வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர்' என்று அழைக்கப்படுகிறார்; திருவரங்கத்தில் வாழ்ந்தார். இவர் செய்த வேறு பல நூல்களும் உண்டு . பு. ரா. பு.

அழகிய மணவாளதாசர் : திருமாலுக்கு அழகிய மணவாளன் என்று பெயர். திருமாலுக்கு அடியவர் என்னும் பொருள்பட அழகிய மணவாளதாசர் எனப்பெற்றார். பார்க்க: பிள்ளைப்பெருமாளையங்கார்.

அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் (சு. 12ஆம் நூ.) வடக்குத் திருவீதிப் பிள்ளையினுடைய புதல்வர் ; பிள்ளைலோகாசாரியர்க்குத் தம்பியார் ; திருவரங்கத்தில் அவதரித்தவர்; பிரமசரிய நிலையிலிருந்தே துறவறம் பூண்டவர்; திருப்பாவை, திருவந்தாதி, கண்ணிநுண் சிறுத்தாம்பு இவற்றிற்கு வியாக்கியானம் செய்தவர்; ஆசார்ய ஹிருதயம் என்ற நூலை (த. க.) இயற்றி, அதனைத் திருவரங்கத்தில் இறைவன்முன் அரங்கேற்றினார். பு. ரா. பு.

அழகியல் (Aesthetics) : செடி கொடிகள், சூரிய சந்திரர், வானம் மேகம், மலைகள் நதிகள் எனப் பலவிதமான அழகுப் பொருள்களைக் கண்டு அனுபவிக்கிறோம். அவற்றில் காணும் அழகு இயற்கை அழகு. மனிதன் அதனுடன் நின்றுவிடவில்லை. தன் செயலைக் கொண்டும் அழகை உண்டு பண்ணுகிறான். இதன் விளைவாகத் தோன்றியவைகளே கலைகள். இவற்றில் காணும் அழகு செயற்கை அழகு. இயற்கை அழகு, செயற்கை அழகு இரண்டும் ஒன்றுதானா? இவற்றின் தொடர்பு யாது?

அழகு பற்றிய மேனாட்டு ஆராய்ச்சிகள் : அழகு என்பதைப் பற்றிய ஆராய்ச்சியை மேனாட்டார் பலவிதமாக நடத்தியுளர் :

1. கலைகள் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கொண்டு அழகின் தன்மையை அறியலாம் என்பர் ஒரு சாரார். அதாவது ஆதிமக்கள் நாடோறும் தம் வாழ்க்கையில் பயன்படுத்திய அடையாளங்களும் முறைகளுமே கலைகளாக மாறியுள்ளன என்பதாகும். காரியங்களை அறிவிப்பதற்காகக் கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் வரைந்தவை சித்திரக் கலையாகவும் சிற்பக் கலை யாகவும் ஆயின. போர்க்களத்தில் ஆடிய வெற்றி ஆட்டங்களும், முழங்கிய ஒலிகளும், நாட்டியமாகவும் பாட்டாகவும் உருவெடுத்தன. உழவர்கள் உழவு முதலிய வேலைகளைச் செய்யும்போது உற்சாகமாகப் பாடி வந்தனர். இப்பொழுது பாடல்கள் வேலைகளுக்கன்றித் தனிக் கலையாக மாறியிருக்கின்றன. இவ்வாறு ஆதி மனிதன் குடும்ப வாழ்விற்கும் சமுதாய வாழ்விற்குமாக ஏற்படுத்திக் கொண்டவைகள் நாளடைவில் கலைகளாக மாறின. இதிலிருந்து கலைகள் தோன்றி வளர்ந்த வர-