பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகியல்

238

அழகியல்

லாறு தெரிவதாயினும், மனிதன் அழகுள்ளவற்றை நாடியதற்கும், அழகில்லாதவற்றைத் தள்ளியதற்கும் காரணம் தெளிவாகவில்லை. கலைகள் வளர்ந்த வரலாற்றை அறிவதனால், அழகின் தன்மையையோ, கலையின் தத்துவத்தையோ அறிந்துகொள்ள இயலாது.

2. அழகுள்ளவை என்று கருதும் பொருள்களில் காணும் பொதுக் குணங்களை அழகின் முக்கியத் தன்மையாகக் கருதுவது மற்றோர் ஆராய்ச்சி. ஆனால் இது அவ்வளவு எளிதன்று. மலருக்கும் மானுக்குமுள்ள பொதுக் குணங்கள் எவை? சிலைக்கும் பாட்டுக்கும் உள்ள பொதுத் தன்மை யாது? இரண்டும் அழகானவை தான். ஆனால் அவற்றின் அழகு எதனால் ஏற்படுவது?

கிரேக்க அறிஞர் பிளேட்டோ , அழகு என்பது ஒத்த தன்மை என்பதால் ஏற்படுவது என்பர். இணக்கத்தால் ஏற்படுவது என்று பிளாட்டினஸும், ஒற்றுமையால் ஏற்படுவது என்று வேறு சிலரும், வேற்றுமையிடை ஒற்றுமையால் ஏற்படுவது என்று மற்றும் சிலரும் கூறுவர். சிலர் ஒழுங்கே அழகு என்று சொல்வர்.

அழகுடையவைகளில் ஒத்த தன்மையும், இலக்கணமும், ஒருவித ஒழுங்கும் காணப்பட்டாலும், அவை காணப்படும் பொருள்கள் அனைத்திலும் அழகு இருப்பதாகச் சொல்ல முடியுமா? நீர்யானையின் உறுப்பு அமைப்பில் அளவுப் பொருத்தமும், ஒத்த தன்மையும், வேலைக்கேற்ற இணக்கமும் காணப்படுவதாகக் கூறலாம். ஆனால் அதை ஓர் அழகான பிராணி என்று சொல்வது எப்படி?

3. இயற்கை அழகையோ, செயற்கை அழகையோ நுகரும்பொழுது உள்ளத்தில் பொதுவாக எழும் உணர்ச்சிகளே அழகின் அடிப்படை என்பது வேறு ஓர் ஆராய்ச்சி. இந்த உணர்ச்சிகளைப் பலர் பலவிதமாகக் கூறுகின்றனர் :

அ. அழகை நுகரும்பொழுது உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சியே அழகு என்று சிலர் கூறுவர். ஆனால் அழகுள்ளவை மகிழ்ச்சியை அளிப்பது உண்மையே யாயினும், அவை சில சமயம் வருத்தத்தையும் உண்டு பண்ணுகின்றன. இதைக் கவிதையிலும் நாடகத்திலும் இசையிலும் காணலாம். சில அழகான பாடல்கள் உள்ளத்தை வருத்துகின்றன. சில நாடகங்களில் சில காட்சிகளைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பதுண்டு. ஆயினும் அவற்றை மறுபடியும் பார்க்க ஆவல் கொள்ளவே செய்கிறோம். இந்த மகிழ்ச்சி வேறு, சாதாரணமாய் அனுபவிக்கும் மகிழ்ச்சி வேறு. இது வருத்தமும் பயமும் வேதனையும் கலந்த ஒருவித மகிழ்ச்சியாகும். ஆதலால் அழகின் தன்மை மகிழ்ச்சியை அளிப்பதுதான் என்று கூறுவது சரியன்று.

ஆ. அழகை நுகரும்போது மனத்தில் முதலாவது தோன்றுவது கற்பனை. அதுவே அழகின் தன்மை என்று குரோச்சே (Croce) என்னும் இத்தாலிய அறிஞர் கூறுவர். இந்தக் கற்பனையைக் கலைஞன் அழகான பொருள்களில் அமைக்கின்றான். ஆனால் அப்படிக் கற்பனையை அமைப்பது அழகை அனுபவிக்க உதவியாயிருப்பினும், அது அழகுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது அன்று. கலைஞனுடைய வேலைக்கும் அது அவசியமென்பதில்லை. எப்பொழுது கலைஞனுடைய கற்பனை அவனுடைய உள்ளத்தில் உருவாகின்றதோ அப்பொழுதே அது வெளித்தோற்றம் அடைந்து விட்டதாகக் கருதலாம் என்றும், அதனால் அழகிய பொருளை உண்டாக்கிய கலைஞனுடைய கற்பனை அதைத் துய்ப்பவர் உள்ளத்திலும் உண்டாகும் என்றும், ஆகவே அழகின் தோற்றத்தை அனுபவிப்பவர் அழகின் கற்பனையையும் அறிந்தவரர்வர் என்றும் குரோச்சே கூறுகிறார்.

அவர் கூறுவதை அப்படியே ஒப்புக்கொள்ள முடியாது. கலைஞனுடைய கற்பனையை அறிந்தால்தான் அவன் அமைக்கும் அழகு முழுவதையும் அனுபவிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கற்பனை எழுந்து உருவானவுடனேயே அது வெளித்தோற்றம் அடைந்துவிட்டதாகக் கூறுவது சரியன்று. கற்பனை மட்டும் உள்ளவன் ஓவியன் ஆகிவிடமாட்டான். அவனுக்கு நிறங்களைச் சேர்க்கும் பழக்கமும், ஓவியங்களைத் தீட்டும் பழக்கமும் உண்டாயிருக்கவேண்டும். அதனுடன் கலைஞனுடைய கற்பனை முழுவதும் அவன் அழகை அமைக்கும் முன்னரே உருவாகிவிடும் என்று கூறுவது சரியன்று. அவன் அழகைத் தோற்றுவிக்கும் பொழுதே அவனுடைய கற்பனையும் மாறிமாறி உருவாகி விடும். பாடும்பொழுதே புதுப்புதுக் கற்பனைகள் தோன்றுவதை இசை பயில்வோர் அறிவர். பாடி முடிக்கும் பாட்டு முதலில் பாடகன் தன் உள்ளத்தில் உருவாக்கிய வண்ணமேதான் இருக்கவேண்டும் என்பதில்லை.

இ. அழகுடைய பொருள்கள் மனத்தில் எழுப்பும் உணர்ச்சிகளை அவற்றிற்கே உரியனவாக எண்ணி மகிழ்வதே அழகின் தன்மை என்று சிலர் கூறுகின்றனர். இதை அவர்கள் ஒன்றுணர்ச்சி (Empathy) என்பர். கோபுரத்தைப் பார்க்கும்போது நாம் மெய்ம்மறந்து அதனுடன் ஒன்றாகி ஆகாயத்தை எட்டிப் பிடிக்கும் ஆற்றலும் துணிவும் பெறுகிறோம். நம்முடைய ஆற்றலையும் துணிவையும் அதற்கே உரியனவாக ஆக்கிவிடுகிறோம். இதுவே அதன் அழகில் ஈடுபடுவதன் காரணம் என்பது அவர்கள் கருத்து. இது ஒரு முக்கியமான தத்துவம். கலையில் ஈடுபட்டு மெய்ம்மறந்துவிடுவது யாவரும் அறிந்ததே. அந்த மனோபாவம் இல்லாதவர்கள் அழகை அனுபவிக்க முடியாது. ஆயினும் அழகுள்ள பொருளுடன் ஒன்றாய் விடுவதாகவும் நம் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளை அதற்கு அளித்துவிடுவதாகவும் சொல்வது மிகையாகும். இவ்வாறு சில அறிஞர் அழகை நுகரும்போது உண்டாகும் உணர்ச்சிகளைக் கொண்டு அழகின் தன்மையை நிருணயிக்க முயல்கின்றனர். ஆனால் உணர்ச்சிகளில் பொதுத் தன்மையை அறிய வேண்டுவது அவசியமாயினும், அவற்றால் ஏற்படும் மகிழ்ச்சியே அழகென்றோ, அல்லது மனத்தில் தோன்றும் கற்பனையே அழகின் இயல்பு என்றோ, அல்லது மனத்தில் தோன்றும் மனோ பாவங்களைப் பொருள்களுக்கு அளிப்பதே அழகை அனுபவிக்கும் விதம் என்றோ கூறுவது சரியன்று. இவை யெல்லாம் அழகை அனுபவிப்பவர் மனத்தில் தோன்றினாலும் இவையே அழகின் தன்மை என்று கூற முடியாது. அதை அறிவதற்கு அந்த அனுபவத்தைச் சிறிது தெளிவாக ஆராயவேண்டும்.

ஓர் ஓவியத்தைப் பார்த்து மகிழ்கிறோம். அதன் அழகில் மெய்ம்மறந்துவிடுகிறோம். உள்ளத்தில் சில எண்ணங்கள் எழுகின்றன. இவற்றை ஆராய்ந்தால் இந்த எண்ணங்கள் அழகான எப்பொருளை நுகரினும் உண்டாகும் என்பதும், அழகான பொருளை யார் நுகர்ந்தாலும் உண்டாகும் என்பதும், அழகை நுகரும்பொழுது மட்டுமே தோன்றும் என்பதும் புலனாகும். இவற்றிலிருந்து அழகின் தனிக் குணங்களை அறிந்து கொள்ளலாம்.

அழகின் தனிக் குணங்கள் : முதலாவதாக அழகான பொருளைப் பார்க்கும்பொழுது நம்மனத்தில் எழும் எண்ணம் அந்தப் பொருள் நமக்கு அழகாகத் தோன்றுகிறது என்னும் எண்ணமன்று, அழகை நுகரத்தக்க