பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவையியற் கொள்கை

253

அறநிலையங்களும் நிபந்தங்களும்

முதலிய குற்றங்களுக்கு உள்ளாகின்றது. தத்துவங்களைப் பற்றிப் பலர் பலபடியாகக் கூறுகின்றனர். ஒரே பொருளைப் பற்றி முற்றிலும் முரணான கொள்கைகள் ஆதரிக்கப்படுகின்றன. அதனால் நமது அறிவின் திறனை எத்துணை நம்பலாம், அறிவுத்திறன் செய்யும் முடிவுகளின் பிராமாண்யம் எத்தகையது என்று கேட்க நேரிடுகிறது.

அளவையியற் கொள்கையார் அறிவு என்பதை அறிபவன், அறியப்படும் பொருள், இரண்டுக்குமுள்ள தொடர்பு என மூன்று பகுதிகளாகப் பிரிப்பர். ஆனால் இம்மூன்றையும் பற்றிப் பல்வேறு கொள்கைகள் வற்புறுத்தப்படுவதால் அறிவின் உற்பத்தி, பிராமாண்யம், உண்மை பொய்ம்மையை நிதானிக்கும் அளவுகோல் முதலியவை பற்றிக் கருத்து வேற்றுமை காணப்படுகிறது.

அறிவின் தோற்றத்தைப்பற்றிய கொள்கைகள்

1. புலன்வழிக் கொள்கை (Sensationalism) : இருட்டறைக்குள் சன்னல் வாயிலாக மட்டுமே வெளிச்சம் வருவதுபோல, அறிவின்றிக் கிடக்கும் உள்ளத்தினுள்ளே புலன்கள் வாயிலாக அறிவு புகுகின்றது. புலன்கள் வாயிலாகப் புகுந்து உள்ளத்தை அடைந்த உட்பதிவுகள் (Impressions) சிந்தனாசக்தியால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கருத்துக்கள் ஆகின்றன. ஆகவே அறிவானது அகத்தே தானாக உண்டாவதன்று. புறத்தேயிருந்து புலன்கள் வாயிலாகவே உண்டாவது. ஆதலால் இதைப் புலன் கொள்கை என்பது பொருந்தும். அறிவின்றிக் கிடக்கும் மனத்தில் அனுபவத்தின் மூலமாகவே அறிவு தோன்றி வளர்வதால் இதை நுகர்ச்சி வழிக் கொள்கை (Empiricism) என்றும் கூறுவதுண்டு. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நன்கு விளக்குவது இக்கொள்கையே என்று சிலர் புகழ்வர். பேக்கன், ஜேம்ஸ், டூயி ஆகியோர் பொதுவாக இக்கொள்கையை ஆதரித்த சிலராவர்.

2. அறிவுமுதற் கொள்கை (Rationalism) : அனுபவம் ஏற்படுவதற்கு முன்பே மனத்தில் அறிவு உண்டு. மனம் ஒருபோதும் அறிவில்லாமல் இருக்காது. மனத்தின் சிந்தனைத் திறத்தாலேயே அறிவு என்பது உண்டாகின்றது. இக்கொள்கையை மறுப்போர் இக்கொள்கையினரை அடவாதிகள் (Dogmatists) என்று இழிவாகப் பேசுவர். ஒரு சிலர், அறிவுக்குக் காரணம் புலன்களோ சிந்தனையோ மட்டுமல்ல, இரண்டும் சேர்ந்ததே என்பர்.

3. உள் உணர்வுக் கொள்கை (Intuitionism) புலன்கள், சிந்தனை என்பவை தவிர, உள் உணர்வு என்று ஒரு தெய்விகத் தன்மை உண்டு. அதன் மூலமாகவே நாம் கடவுள், தருமம், ஆன்மா போன்ற மனத்துக்கு எட்டாத சிறந்த உண்மைகளைச் சில சமயங்களில் நேரில் அறிகிறோம் என்பதாகும்.

அறிவை மதிப்பிடுவது பற்றிய கொள்கைகள்

1. சிலர் அறிவு என்பது உண்மையே என்று கூறுவர். 2. சிலர் அறிவு என்பது சந்தர்ப்பத்துக்கு ஏற்றதே என்பர். ஜைன மதத்தில் காணப்படும் சியாத்வாதம் இத்தகையதே. 3. சிலர் அறிவு மனத்தின் விகாரமே தவிர, புறத்தேயுள்ள பொருள்களைக் குறிப்பதில்லை என்பர். இது அகநிலைக்கொள்கை (Subjectivism) ஆகும். இதற்கு உதாரணமாக இந்திய நாட்டு 'விஞ்ஞான வாதிகளையும்', பார்க்ளே போன்ற மேனாட்டுத் தத்துவ ஞானிகளையும் கூறலாம். 4. மற்றுஞ் சிலர் அறிவைப் பற்றி எதுவும் திட்டமாகக் கூற இயலாது என்பர். இவர்கள் அறியொணாமைக் கொள்கையினர் (Agnostics) எனப்படுவர்.

அறியப்படும் பொருள்பற்றிய கொள்கைகள்

1. கருத்துக் கொள்கை (Idealism) : அறியப்படும் பொருள் அறியும் கர்த்தாவைப்போல் சித்துப் பொருளாகவோ அல்லது சித்துப் பொருளை நாடி நிற்பதாகவோ உள்ளது. இக்கொள்கையினர் ஒரு பொருள் இருக்குமானால் அதை யாரேனும் ஒருவர் அறிந்திருக்கவே வேண்டும் என்று கூறுவர். ஆகவே இக்கொள்கையின்படி அனைத்தும் மனோமயம்.

2. புறப் பொருட் கொள்கை (Realism) : அறியும் கர்த்தாவுக்கு வேறாகப் புறத்தே பொருள்கள் இருப்பதாகவும், அவற்றின் அமைப்பு அறியும் கர்த்தாவின் வயப்பட்டதில்லை என்பதாகவும், அறிவும் பொருளும் பொருத்தமுற்றிருப்பது உண்மை, பொருத்தமற்றிருப்பது பொய் என்பதாகவும் இக்கொள்கையினர் கூறுவர்.

அறந்தாங்கி : தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடித் தாலுகா. தாலுகாத் தலைநகரத்துக்கும் அதே பெயர். பட்டுச் சேலை நெசவு உள்ளது. சிதைந்த கோட்டையும் அதனுள் சில கோயில்களும் குளமும் வீடுகளும் உள. கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு கோயில் இராசேந்திர சோழன் 11ஆம் நூற்றாண்டில் கட்டியது. அறந்தாங்கியில் புகைவண்டி நிலையம் உண்டு.

அறநிலையங்களும் நிபந்தங்களும் : நிபந்தம் என்பது விடப்பட்டது அல்லது கொடுக்கப்பட்டது என்னும் பொருளுடையதாகும். மத ஸ்தாபனங்களுக்கோ, தரும ஸ்தாபனங்களுக்கோ, பணமோ, வரியோ, தாவர சொத்தோ, சங்கம சொத்தோ கொடுக்கப்படுவதை நிபந்தம் என்பர். கோயில், மடம், மசூதி ஆகியவற்றை நடத்துவதற்காகவோ, அவற்றில் ஏதேனும் ஒரு காரியம் செய்வதற்காகவோ கொடுக்கப்படுவது மத நிபந்தம் என்றும், ஏழைகட்கு அன்னதானம், வித்தியாதானம், வைத்திய உதவி அல்லது ஏதேனும் பொதுநல முன்னேற்றமான காரியம் ஆகிய வற்றிற்காகத் தரப்படுவது தரும நிபந்தம் என்றும் பெயர் பெறும்.

சத்திரங்கள், அன்னசாலைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் முதலியவை நடத்தவும், குளங்கள், கிணறுகள் முதலிய நீர்நிலைகளை அமைக்கவும், குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யவும் கொடுக்கப்படும் நிபந்தங்களைத் தரும நிபந்தங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

மத விஷயத்துக்கோ, தரும விஷயத்துக்கோ பொருள் கொடுத்துப் பாதுகாப்பது என்பதை இந்தியாவில் பண்டைக்கால முதல் சிறந்ததோர் அறப்பணியாகக் கருதி வந்திருக்கிறார்கள். கொடுப்பதால் சொர்க்கமும், பாதுகாப்பதால் அமரத்துவமும் பெறலாம் என்று பாண்டிய அரசர்களுடைய கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அந்தக் காரணத்தால் பண்டை அரசர்கள் குடிகளின் நலங்கருதிக் கோயில்கள், மசூதிகள் போன்ற பல தரும நிலையங்களை நிறுவி, அவை என்றும் அழியாமல் நிற்பதற்காக இறையிலி நிலங்கள் ஏராளமாகக் கொடுத்தார்கள். அரசர்கள் செய்ததுபோலவே பிறரும் செய்தனர். அவ்வாறு நிறுவப்பெற்ற பேர்போன கோயில்கள் சில சென்னை இராச்சியத்தில் காணப்படுகின்றன. இவற்றுள் தலையாயவை திருப்பதி, காஞ்சீபுரம், சிதம்பரம், தஞ்சை, திருவாரூர், மதுரை, இராமேசுவரம்,