பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவாராய்ச்சியியல்

266

அறிவாராய்ச்சியியல்

றும், பிறர் பொருட்டனுமானம் (பரார்த்த அனுமானம்) என்றும் இருவகையாகக் கூறும். முதல் அனுமானத்தைப் பிரகாச தர்க்கம் (கண்டுபிடித்தலைச் சார்ந்தது) என்றும், இரண்டாவது அனுமானத்தை நிரூபண தர்க்கம் (நிரூபித்தலைச் சார்ந்தது) என்றும் கூறுவதுண்டு. அறியாததைக் கண்டு பிடிப்பது பிரகாச தர்க்கம். அறிந்ததைப் பிறர்க்கு விளக்குவது நிரூபண தர்க்கம். நிரூபண தர்க்கமானது நாம் கூறும் சித்தாந்தம் உண்மை என விளக்குவது, பிறர் கூறும் சித்தாந்தத்தைப் பொய் எனத் தகர்ப்பது என்ற இரு பிரிவுகள் உடையது.

மேனாட்டு முறைக்கும் இந்திய நாட்டு முறைக்குமுள்ள வேறுபாடு வருமாறு: மேனாட்டுப் பகுப்புமுறை மூன்று உறுப்புக்களுடைய அனுமான மொழித் தொடருடையதாகும் (Syllogism).
உதாரணம்:
1. எல்லாத் தேவர்களும் சிரஞ்சீவிகள்.
2. இந்திரன் ஒரு தேவன்.
3. ஆதலால் இந்திரன் சிரஞ்சீவி.
இந்தியத் தர்க்க ரீதியான அனுமானமாகிய பஞ்சாவயவ வாக்கியமானது ஐந்து உறுப்புக்களுடையது.
உதாரணம்:
1. மலையில் நெருப்பு இருக்கிறது.
2. அதில் புகை தோன்றுவதால். 3. எங்குப் புகை தோன்றுகிறதோ அங்கு நெருப்புண்டு,அடுப்பில் இருப்பதுபோல். 4. இதுவும் அதுபோல். 5. ஆகையால் இதுவும் அதுவே.

மேனாட்டு முறையில் முதலில் காரணமும் பிறகு சித்தாந்தமும் காணப்படுகின்றன. இந்திய முறையில் முதலில் சிந்தாந்தமும் பிறகு காரணங்களும் காணப்படுகின்றன. இந்த முறையில் அடுப்பின் உதாரணத்தைக் கொண்டு, எங்குப் புகை தோன்றுகிறதோ அங்கு நெருப்பு இருக்கும் என்ற தொகுப்பு முறையும், மலையில் புகை தோன்றுவதால் அங்கு நெருப்பு இருக்கிறது என்று அந்நியதியின் காரணத்தால் ஊகித்த பகுப்பு முறையும் சேர்ந்திருப்பதைக் காணலாம்.

அனுமான வழுக்கள்: ஒழுக்கமும் உண்மையுமற்ற முடிபைத் தரும் அனுமானம் இழுக்குடையதாகும். இது அனுமான வழுவால் உண்டாகிறது. பொய்யான காரண வாக்கியங்கள், அனுமான விதிகளைத் தழுவாமை, மொழித் தவறுகள், பொருந்தாச் சித்தாந்தம் என்பன அனுமான வழுவுக்குக் காரணங்களாகும். உளறலாலும் பிடிவாதத்தாலும் வழு உண்டாகும். பொறிக் காட்சிக் கோளாறு, சோதனைத் தவறு, தப்பான ஒப்புமை, ஆதாரமின்றிப் பொதுவிதி ஊகித்தல் போன்றவை தொகுப்புமுறை அனுமானத்தில் வழுக்களை உண்டாக்கும். இவ்வழுக்கள் உண்டாகாதிருந்தால்தான் அனுமானம் உண்மையான கருத்துக்களைத்தர முடியும். ப. ச.

அறிவாராய்ச்சியியல் (Epistemology) : உண்மையான அறிவு ஏற்படுவது எப்படி? அதன் இயற்கை யாது? அறிவு உண்மை எனக் கருதப்படுவது எப்பொழுது? பொய்யெனக் கருதப்படுவது எப்பொழுது? அறிவை மெய் என்றோ பொய் என்றோ துணிவதற்கும் அளப்பதற்குமுள்ள உரைகல் எது? அறிவுக்கு வரம்புகள் உண்டா? இவ்வினாக்கள் அளவையியற் கொள்கையின் முக்கியமான கேள்விகளாம். மனித அறிவின் தத்துவங்களை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுவனவாம்.

அன்றாட வாழ்க்கையிலும் விஞ்ஞானத் துறையிலும் நாம் பெறும் அறிவு பல தடவைகளில் தவறாக ஆகிவிடுகின்றது. ஐயப்பாடு,தெளிவின்மை, தவறாகப் பற்றுதல் முதலிய குற்றங்களுக்கு உள்ளாகின்றது. தத்துவங்களைப்பற்றிப் பலர் பலபடியாகக் கூறுகின்றனர். ஒரே பொருளைப்பற்றி முற்றிலும் முரணான கொள்கைகள் ஆதரிக்கப்படுகின்றன. அதனால், நமது அறிவின் திறனை எத்துணை நம்பலாம், அறிவுத்திறன் செய்யும் முடிவுகளின் பிராமாண்யம் எத்தகையது என்று கேட்க நேரிடுகிறது.

அளவையியற் கொள்கையார் அறிவு என்பதை அறிபவன், அறியப்படும் பொருள், இரண்டுக்குமுள்ள தொடர்பு என மூன்று பகுதிகளாகப் பிரிப்பர். ஆனால் இம்மூன்றையும் பற்றிப் பல்வேறு கொள்கைகள் வற்புறுத்தப்படுவதால் அறிவின் உற்பத்தி, பிராமாண்யம், உண்மை பொய்ம்மையை நிதானிக்கும் அளவுகோல் முதலியவை பற்றிக் கருத்து வேற்றுமை காணப்படுகிறது.

அறிவின் தோற்றத்தைப் பற்றிய கொள்கைகள்

1. புலன்வழிக் கொள்கை (Sensationalism) : இருட்டறைக்குள் சன்னல் வாயிலாக மட்டுமே வெளிச்சம் வருவதுபோல, அறிவின்றிக் கிடக்கும் உள்ளத்தினுள்ளே புலன்கள் வாயிலாக அறிவு புகுகின்றது. புலன்கள் வாயிலாகப் புகுந்து உள்ளத்தை அடைந்த உட்பதிவுகள் (Impressions) சிந்தனாசக்தியால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கருத்துக்கள் ஆகின்றன. ஆகவே அறிவானது அகத்தே தானாக உண்டாவதன்று, புறத்தேயிருந்து புலன்கள் வாயிலாகவே உண்டாவது. ஆதலால் இதைப் புலக்கொள்கை என்பது பொருந்தும். அறிவின்றிக் கிடக்கும் மனத்தில் அனுபவத்தின் மூலமாகவே அறிவு தோன்றி வளருவதால் இதை நுகர்ச்சிவழிக் கொள்கை (Empiricism) என்றும் கூறுவதுண்டு. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நன்கு விளக்குவது இக்கொள்கையே என்று சிலர் புகழ்வர். பேக்கன், ஜேம்ஸ், டூயி ஆகியோர் பொதுவாக இக்கொள்கையை ஆதரித்தவருள் சிலராவர்.

2. அறிவுமுதற் கொள்கை (Rationalism) : அனுபவம் ஏற்படுவதற்கு முன்பே மனத்தில் அறிவு உண்டு. மனம் ஒருபோதும் அறிவில்லாமல் இருக்காது. மனத்தின் சிந்தனைத் திறத்தாலேயே அறிவு என்பது உண்டாகின்றது என்னும் இக்கொள்கையை மறுப்போர் இக்கொள்கையினரை அடவாதிகள் (Dog- matists) என்று இழிவாகப் பேசுவர். ஒரு சிலர், அறிவுக்குக் காரணம் புலன்களோ சிந்தனையோ மட்டுமல்ல, இரண்டும் சேர்ந்ததே என்பர்.

3. உள்ளுணர்வுக் கொள்கை (Intuitionism) : புலன்கள், சிந்தனை என்பவை தவிர உள்ளுணர்வு என்று ஒரு தெய்விகத் தன்மை உண்டு. அதன் மூலமாகவே நாம் கடவுள், தருமம், ஆன்மா போன்ற மனத்துக்கு எட்டாத சிறந்த உண்மைகளைச் சில சமயங்களில் நேரில் அறிகிறோம்.

அறிவை மதிப்பிடுவது பற்றிய கொள்கைகள்:

1. சிலர் அறிவு என்பது உண்மையே என்று கூறுவர். 2. சிலர் அறிவு என்பது சந்தர்ப்பத்துக்கு ஏற்றதே என்பர். ஜைன மதத்தில் காணப்படும் சியாத்வாதம் என்பது இத்தகையதே. 3. சிலர் அறிவு மனத்தின் விகாரமே தவிர புறத்தேயுள்ள பொருள்களைக் குறிப்பதில்லை என்பர். இது அகநிலைக்கொள்கை (Subjectivism) ஆகும். இதற்கு உதாரணமாக இந்தியநாட்டு 'விஞ்ஞானவாதிகளையும்', பார்க்ளே போன்ற மேனாட்டுத் தத்துவ ஞானிகளையும் கூறலாம். 4. மற்றுஞ் சிலர்