பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவுடை நம்பி

267

அறிவுமுதற் கொள்கை

அறிவைப் பற்றி எதுவும் திட்டமாகக் கூற இயலாது என்பர். இவர்கள் அறியொணாமைக் கொள்கையினர் (Agnostics) எனப்படுவர்.

அறியப்படும் பொருள்பற்றிய கொள்கைகள் : 1. கருத்துக் கொள்கை (Idealism): அறியப்படும் பொருள், அறியும் கர்த்தாவைப்போல் சித்துப் பொருளாகவோ அல்லது சித்துப் பொருளை நாடி நிற்பதாகவோ உள்ளது. இக்கொள்கையினர் ஒரு பொருள் இருக்குமானால் அதை யாரேனும் ஒருவர் அறிந்திருக்கவே வேண்டும் என்று கூறுவர். ஆகவே இக்கொள்கையின்படி அனைத்தும் மனோமயம்.

2. புறப்பொருட் கொள்கை (Realism) : அறியும் கர்த்தாவுக்கு வேறாகப் புறத்தே பொருள்கள் இருப்பதாகவும், அவற்றின் அமைப்பு அறியும் கர்த்தாவின் வயப்பட்டதில்லை என்பதாகவும், அறிவும் பொருளும் பொருத்தமுற்றிருப்பது உண்மை, பொருத்தமற்றிருப்பது பொய் என்பதாகவும் இக் கொள்கையினர் கூறுவர். கி. ர. அ.

அறிவுடை நம்பி சங்க காலத்தவன். இவனைப் பாண்டியன் அறிவுடை நம்பி எனவும் கூறுவர். மக்கட்பேற்றின் பெருமையைப் பற்றிப் பாடியுளன் (புறம் 188). பிசிராந்தையரால் (புறம் 184) பாடப்பெற்றவன். இப்பாண்டியன் நெய்தலையும் குறிஞ்சியையும் பாடியுள்ளான். இவன் பாடல்கள் நான்கு: (நற்:15; குறுந் : 230; புறம் : 188;அகம்: 28).

அறிவுமுதற் கொள்கை (Rationalism) 1. அரசியல் : தனி மனிதன் வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் அறிவு ஒன்றையே கொண்டு வகுப்பது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளும் கொள்கை நீண்ட காலமாக உலகில் நிலவி வந்திருக்கிறது. மனிதனுக்கும் மற்றப் பிராணிகளுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குள்ள பகுத்தறிவுத் திறனேயாகும். அத்திறனைப் பயன்படுத்திக் கொள்வதால் அவன் மேன்மையடைகிறான். மனித வாழ்வில் இயல்பூக்கம் (Instinct) என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறதென்றாலும், முன்னேற்றமடைந்த சமூகங்களில் தன் இச்சையாகிய அறிவின் ஆதிக்கமே விரும்பத்தக்கது.

பண்டைய தத்துவஞானிகளான 'ஸ்டோயிக்குகள்' என்பவர்களும் ரோமானியர்களும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட விதிகள் மூலம் உலகப் பேரரசு விளங்கவேண்டும் என்னும் நோக்கமுடையவர்கள். அறிவினால் ஏற்படும் உள்ளத் தெளிவு எல்லோருக்கும் பொதுவான உடைமை. அதைச் சார்ந்த கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவை. சிசெரோ போன்றரோமானிய அறிஞர்கள் உலக வாழ்க்கைக்கே அவற்றை அடிப்படையாகக் கொண்டு, சர்வ வியாபகமாக ஏற்பாடுகளை அமைக்க முடியும் என்று எண்ணினார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிரான்சில் புகழ்பெற்றிருந்த அபிலார்டு (Abelard} என்பவருடைய அறிவுமுதற் கோட்பாடுகள் இத்துறையில் பிற்காலத்தில் உண்டான பல கருத்துக்களுக்கு வழிகோலின. மறுமலர்ச்சிச் சகாப்தத்தின்போது மறுபடியும் அறிவில் நம்பிக்கை தோன்றிற்று என்றாலும், பல வரலாற்று நிகழ்ச்சிகள் அறிவு என்னும் அளவுகோலால் அளக்க முடியாதவை என்னும் கருத்தும் ஓங்கி நின்றது.

17ஆம் நூற்றாண்டில் அறிவின் ஆதிக்கத்தில் நம்பிக்கை மீண்டும் தளிர்த்தது. 18ஆம் நூற்றாண்டில் “அதிகாரம் அறிவின் உறைவிடம்” என்பது போய்த் தனி மனிதனது சுதந்திரத்தை அறிவே தாங்கி நிற்கும் என்னும் கொள்கை பரவியது. 19ஆம் நூற்றாண்டில் ஹேகல் முதலிய தத்துவஞானிகள், வரலாற்றில் இத்தகைய கொள்கையை மாறாத உண்மையாகக்கொள்ளக் கூடாது என்றும், அறிவு என்பது வரலாற்றுப் போக்கில் அவ்வப்போது மாறுபட்டு விரிவடையும் சிந்தனையின் வழி என்றும் கருதினார்கள். ஹக்ஸ்லி முதலிய 19ஆம் நூற்றாண்டு அறிஞர்கள், 'அறியொணாமைக் கொள்கை'யைப் பற்றியும் இங்கு அறியவேண்டும்; கண்கூடு அல்லாதனவற்றை யறிய முடியாது என்பது அவர்கள் கொள்கை.

19ஆம் நூற்றாண்டில் வேறு ஒருவகை அறிவுமுதற் கோட்பாடும் பரவத் தொடங்கியது. மதம் முதலிய பண்டைத் தளைகளை நீக்கித் தனி மனிதன் சுய அறிவிற்குப் பூரண சுயேச்சையளிக்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் அடிப்படையான நோக்கம். அறிவு முதற் கொள்கை இயக்கத்தினரால் வெளியிடப்படும் கணக்கற்ற நூல்கள் நம் நாட்டிலும் ஓரளவுக்குப் பரவியிருக்கின்றன.

எல்லா மனிதர்களும் அறிவை யடிப்படையாகக் கொண்டுதான் செயல் புரிகின்றார்கள் என்னும் கொள்கை தற்காலத்தில் சில உளவியலாரால் மறுக்கப்படுகின்றது. பகுத்தறிவுக்குப் புறம்பான உணர்ச்சி வேகங்கள் மனிதனைப் பல செயல்களுக்கும் தூண்டுகின்றன என்று உளவியலார்கள் ஆராய்ச்சி வாயிலாகக் கண்டிருக்கின்றனர். ஸ்ரீ.தோ.

2. தத்துவம்: தத்துவ சாஸ்திரங்களெல்லாம் தொடக்கத்தில் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும், மேற்கொள்ளுகின்ற கையாளும் முறைகளைக் கொண்டும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அறிவுமுதற் கொள்கை என்பது அறிவையே உண்மையைக் கண்டு பிடிக்கும் அத்தாட்சிப் பிரமாணமாகவும், தத்துவ ஆராய்ச்சிக்கு முடிவான உற்பத்தி ஸ்தானமாகவும் கொள்ளுகிறது. அனுபவத்தையே பொறுத்திருப்பதான முறைக்கு மாறானது. அது சில முக்கியமான கருத்துக்களையாவது அல்லது காரணகாரிய முறைப்படி அமைந்துள்ள கொள்கைகளையாவது (A priori principles) அறிவுக்கு மூலாதாரமாகக் கொண்டுள்ளது. ஆதலால் இதன் போக்குக் கணித முறையாயும் ஒன்றைக்கொண்டு ஒன்றைத் தீர்மானிக்கிற பகுப்பு முறையாயும் (Deductive) இருக்கிறது.

இது ஐம்புலன் நுகர்ச்சியிலிருந்து உண்மையை அடையும் முறைக்கு மாறுபட்டதாகும். இதன் வரலாறு மேனாட்டில் கிரேக்க தேசத்து அயோனிய ஞானிகளிடமிருந்து தொடங்குகிறது. அவர்கள் அக்காலத்து வழங்கி வந்தவையும் மக்களால் விரும்பப்பட்டவையுமான புராணக் கருத்துக்களுக்கு மாறான சிந்தனைகளை எண்ணினார்கள். அவர்களுடைய கருத்துக்கள் எலியாட்டிக்ஸ், பைதாகரஸ், பார்மினைடிஸ், ஹெராகிளிடஸ் முதலியவர்களால் வளர்க்கப்பட்டு, பிளேட்டோவின் தத்துவசாஸ்திரத்தில் உச்சநிலையை அடைந்தது. மத்தியகாலத்தில் பகுத்தறிவுக்கும், சமய வைராக்கியத்திற்கும் அல்லது மதத் துணிபுக்கும் உள்ள மாறுபாடு அதி உச்சநிலையை அடைந்தது. வேத காலத்தைக் கடந்து உபநிடதத்தை ஆராய்ந்தபோதுதான் இந்தியத் தத்துவ சாஸ்திரத்தில் அறிவுமுதற் சிந்தனை (Rationalistic thinking) மிக்க முதன்மை பெற்றது. உபநிடதத்தின் அறிவுமுதல் தன்மை பிற்காலத்தில் வேதாந்திகளால் மிகுந்த வன்மையையும் தெளிவையும் அடைந்தது. புத்தியை ஆதாரமாகக் கொண்ட ஸ்வதப் பிராமாண்யம் அல்லது அகவழி உண்மைக்கொள்கை குமாரில்பட்டர், சங்கரர் ஆகிய இருவருடைய தத்துவத்திலும்