பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபூதிக்கலை

279

அனுபூதிக்கலை

கருமயோகம் என்பது பலன் கருதாமல் செய்யும் நிஷ்காமிய கருமமாகும். இவ்வாறு நடந்து மனிதன் தன்னுடைய தாழ்ந்த சுயநல ஆசையை அகற்றிவிடவேண்டும். இவ்வாறு செய்ய விரும்புவோர் அகங்காரமமகாரங்களை நீக்கிவிடுவர். எளிய வாழ்க்கையை மேற்கொள்வர்.

ஞானயோகம் என்பது மனத்தைப் புறத்தே சஞ்சரிக்கவிடாமல், ஆன்மாவையே தியானிக்கும்படி செய்வதாகும். இவ்வாறு மனத்தை வயப்படுத்துவதற்காகப் பிராணாயாம முறைகளைக் கையாள வேண்டும். இவ்வாறு மனத்தை அடக்கித் தியானம் செய்தால் ஆன்மா பிரகிருதியினின்றும், அதன் முக்குணங்களினின்றும் விடுதலைபெற்றுச் சாந்தி பெறும். இதையே கைவல்லியம் என்பர்.

இந்த இரண்டு யோகங்களையும் பயின்று சாந்தி பெற்ற ஆன்மா பக்தி யோகத்தால் பரிபூரண பிரமானுபவம் பெறும். இவ்வாறு அனுபவிக்கும்போது ஆன்மாவுக்கு வெளியுலகம் எதுவும் தெரியாது. சமாதி நிலையில் இருக்கும். அப்போது மூச்சு நின்று போகும். உடல் அசையாது நிற்கும். ஆன்மா கடவுளிடத்தில் ஆழ்ந்து ஆனந்த மயமாக ஆகிவிடும். ஆனால் இந்த ஆனந்தம் நிலைத்ததன்று; கணநேரமே நிற்பதாம். ஆயினும் பரலோகத்தில் நிரந்தரமாகப் பெறப்போகும் நித்தியானந்தத்தின் சுவையுடையதாம். முக்தி என்பது பாச பந்தத்தினின்று விடுதலை பெறுதல், பக்தி என்பது கடவுளை அனுபவித்து அறிதல். இறுதியில் பக்தியும் முக்தியும் ஒன்றேயாம்.

இத்தகைய அனுபூதிக்கலையை இந்துமத நூல்களான உபநிடதங்கள், பிரம சூத்திரங்கள், பகவத்கீதை மூன்றும் கூறுகின்றன. புராணங்களுள் பாகவத புராணம் இதை மிகத் தெளிவாக விளக்குகின்றது.

சீனா : சீனாவில் அனுபூதி மார்க்கத்தைத் தாவோக் கொள்கை (த.க.) என்று கூறுவர். தாவோ அனுபூதி மார்க்கமும் புலனடக்கம், ஞான ஒளி, ஐக்கியம் என்ற மூன்று நிலைகளையும் கூறுகின்றது.

கிரீஸ் : கிரீஸ் நாட்டில் வாழ்ந்த பிளேட்டோ (கி.மு. 426-347) என்பவரை ஐரோப்பியத் தத்துவ அனுபூதிக் கலையின் தந்தை என்று கூறுவர். அவருடைய குருவான சாக்கிரட்டீஸ் தத்துவ சாஸ்திரம் என்பது வெறும் தர்க்க ரீதியாக ஆராயும் நூல் அன்று என்றும், அனுபவத்தின் மூலம் ஞானம் தரும் நூல் என்றும் கூறினார். அவர் பல தடவைகளில் அனுபூதி அனுபவம் பெற்றதாகக் கூறுவர். ஆயினும் அனுபூதிக் கலையைக் கிரேக்கர்களிடை அதிகமாக விளக்கியவர் பிளாட்டினஸ் (கி.பி.204-270) என்பவரேயாவர். கடவுள் அறிவிற்கு அப்பாற்பட்டவராயினும் அனுபவ மூலம் அறியக்கூடியவர் என்று அவர் கூறினார். அவர் நான்கு முறை சமாதி நிலையில் இருந்தார் என்று கூறுவர். அவருடைய அனுபூதிக் கலையானது பாஸ்கரருடைய அனுபூதிக்கலையை ஒத்தது என்று அறிஞர் கருதுவர்.

கிறிஸ்தவம்: பொதுவாக யூத மதம் அனுபூதிக் கலை வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லாதிருப்பினும், விவிலியநூலின் பழைய ஏற்பாட்டில் 'சங்கீதங்கள்' (Psalms) என்னும் பகுதியில் ஆன்மா கடவுளைக் காதலிப்பதாக வருணித்திருப்பதைக் காணலாம். இயேசு கிறிஸ்து யூதராகப் பிறந்திருப்பினும் கடவுளிடத்தில் காதல் கொள்வதே உண்மையான மதம் என்று போதித்தார். அவருடைய சீடர்களுள் யோவான் அப்போஸ்தலர் பெரிய அனுபூதிமான். ஒரு தடவை அவர் நான்கு நாட்கள் சமாதியில் இருந்தார் என்று கூறுவர். பிற்காலத்தில்

அகஸ்டின், கிரிகரி, பர்னார்டு ஆகியவர்களும் பெரிய அனுபூதிமான்களாக இருந்தார்கள். ஐரோப்பிய வரலாற்று மத்திய காலமே கிறிஸ்தவ அனுபூதிக் கலையின் பொற்காலமாம். அக்காலத்தில் தலைசிறந்த அனுபூதி மான்களாக இருந்தவர்கள் எக்கார்ட் (1260-1327) என்ற ஜெர்மானியரும் அவருடைய சீடர்களுமாவர். லத்தீன் அனுபூதிமான்களும் ஸ்பானிஷ அனுபூதிமான்களும் துறவு, கடவுள் ஐக்கியம், மனித சேவை ஆகிய மூன்றையும் வற்புறுத்தினார்கள். இவர்களுள் தலை சிறந்தவர் அசிசியைச் சேர்ந்த பிரான்சிஸ், தெரிசா அம்மையார், குருசு ஜான் (John of the cross) ஆகியவர்கள். இயேசு சங்கத்தை நிறுவிய இக்னேஷியஸ்லாயோலா என்பாரும் பக்தி மிக்க அனுபூதிமானாவர். தெரிசா (1491-1556) அம்மையார் இயேசுவை மணமகனாகக் கருதி, அவரிடம் ஆண்டாளுடைய காதல் போன்ற தூய காதல் கொண்டார். சிறந்த இத்தாலிய அனுபூதிமான்கள் புருனோ, கயான் அம்மையார், போமி ஆகியவர்கள். ஆங்கில நாட்டில் வாழ்ந்த ஹில்ட்டன், ஜூலியஸ், ஜார்ஜ் பாக்ஸ் (George Fox), ஜான்பனியன் முதலியவர்களும் அனுபூதிமான்களே.

இஸ்லாம் அனுபூதி மார்க்கம் என்பது சூபிக் கொள்கை (த.க.) எனப்படும். சூபிக் கொள்கையானது கடவுளுடன் ஐக்கியப்படுவதைக் கூறுவதற்கு மது, முத்தம், ஆலிங்கனம் ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. இக்கொள்கை ராபியா, ஆல்ஹல்லாஜ் என்பவர்களுடன் தொடங்கி அத்தர், ஜலாலுதின் ஆகியவர்களிடம் 13ஆம் நூற்றாண்டில் உச்சநிலை அடைகிறது. சூபிக் கொள்கையானது வைணவத்தை ஒத்ததாகும். அனுபூதி நிலை அடைவதற்கு இஸ்லாமிய வேதக் கட்டளைகளை நிறைவேற்றல், தியானம், ஞானம், ஐக்கியம் ஆகிய நான்கு நிலைகள் வகுக்கப்பட்டுள்ளன.

வட இந்தியா : இராமானுசர் உபதேசத்தில் ஈடுபட்ட இராமானந்தர் (1370-1440) பிரயாகையில் பிறந்தவர். அவரும் அவருடைய பன்னிரு சீடர்களும் பக்தி மார்க்கத்தை இந்துஸ்தானத்தில் பரவச் செய்தார்கள். அச் சீடர்களுள் தலையாயவர் ரவிதாசரும், கபீர் தாசருமாவர். ராஜபுதன இளவரசி மீராபாய் 1504-ல் பிறந்தவர். அவர் தமிழ்நாட்டு ஆண்டாள்போல் கிருஷ்ண பக்தியில் சிறந்தவர். துளசிதாசர் (1532-1623) பெரிய இராம பக்தர். அவருடைய இராமாயணத்தை வடநாட்டு மக்கள் பெரிதும் போற்றுகிறார்கள்.

வங்காளம்: வங்காளத்தில் அனுபூதி மார்க்கத்தின் தந்தை மாதவேந்திர பூரி கோஸ்வாமி. அவருடைய சீடர் ஈசுவரர். ஈசுவரருடைய சீடர் சைதன்னியர் (இ. 1523). அவர் தம்மை ராதையாகவும் கடவுளைக் கிருஷ்ணனாகவும் பாவித்து வழிபட்டார். அவர் தெற்கே இராமேசுவரம் வரையிலும் மேற்கே பிருந்தாவனம் வரையிலும் சென்றார். கடைசிப் பன்னிரண்டு ஆண்டுக்காலத்தின் பெரும்பாகம் சமாதி நிலையிலேயே கழிந்தது. கிருஷ்ண பக்தி உண்டாக வேண்டுமானால் கடவுளிடமும் வேதங்களிடமும் பக்தி, பக்தர் சகவாசம், மனத்தைத் தூயதாக்கும் பயிற்சி முதலியவை தேவையென்று கூறுகிறார். இவருடைய தலையாய சீடர்கள் அத்வைதரும் நித்தியானந்தருமாவர். வங்காளத்தில் பெரிய அனுபூதிமான்களாக இருந்தவர்கள் மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோராவர்.

ஆந்திர நாடு: இராமானுசர் காலத்துக்குப்பின் தோன்றிய நிம்பார்க்கர் என்பவர் யாதவப் பிரகாச