பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமம்

304

ஆகமம்

தல், கொடி பிடித்தல், முரசு அடித்தல், வாத்தியம் வாசித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்வோர் சிவகதி பெறுவர்.

ஆகமத்தில் கிரியாபாதம், சரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என நான்கு பிரிவுகள் உள. அவற்றுள் கிரியாபாதம் சிவாலயம் செல்லுதல், சிவ தரிசனம் செய்தல், சிவதீட்சை பெறுதல், மந்திர ஜபம் செய்தல், சிவசின்னம் அணிதல், சிவப்பிரசாதம் உண்ணல் முதலிய சிவதருமங்களைப்பற்றிக் கூறும். சரியா பாதம், பவித்திரோத்ஸவம், லிங்கபேதம், பூசைக்கு ஏற்றவை, பூசிக்கத்தகாத லிங்கம், சிவலிங்கப் பிரதிட்டை, நியாசம் முதலியவற்றைப் பற்றிக் கூறும். யோகபாதம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி என்னும் யோக உறுப்புக்கள் எட்டையும் பற்றிக் கூறும். இந்த நான்கு பாதங்களையும் உடைய சிவாகமங்கள் இருபத்தெட்டாகும். இவ் விருபத்தெட்டையும் திருமூலர் தமது திருமந்திரத்தில் வருணிக்கிறார்.

சிவாகமங்களின் உள்ளே சிவன் இருப்பதாக உபாசனை செய்வோரும் சிவ கதி பெறுவர். இவ்வாகமங்களில் பல இன்றும் அச்சேறாமல் இருக்கின்றன. காமிகாகமம், காரணாகமம், வாதுளாகமம், சுப்பிரபேதாகமம், புட்கராகமம் ஆகிய ஐந்தும் கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்டுள. இவைகளில் சிலவற்றிற்குத் தமிழ் மொழி பெயர்ப்புக்களும் உள. ஆகமங்களில் கூறப்பட்டுள்ள கும்பாபிஷேகம், நித்திய பூசை முதலிய நற்கருமங்களை விளக்குவதற்காகத் தனியாக நூல்களும் இயற்றப்பெற்றுள.

ஆலய சேவை : மனிதன் பசு, இறைவன் பதி, மாயை பாசம். சிவயோகத்தால் மனம் ஒருமைப்படுவதற்காகக் கிரியை சரியை முதலியவைகளை அனுஷ்டித்தால் சிவன் அருள் உண்டாகும். சிவன் அருளால் சிவஞானம் உண்டாகும். சிவ ஞானத்தால் பாசம் அகன்று பேரானந்தம் உண்டாகும். ஆகவே பேரானந்தம் பெற ஆலய சேவை முக்கியமான சாதனமாகும்.

ஆலய சேவை செய்ய விரும்புவோர் நற்குருவை அடைந்து, சிவதீட்சை பெற்றுப் பஞ்சாட்சர உபதேசம் பெறவேண்டும். அவர்கள் ஆத்ம சுத்தி, ஸ்நான சுத்தி, திரவிய சுத்தி, லிங்க சுத்தி, மந்திர சுத்தி என்னும் பஞ்ச சம்ஸ்காரத்துடன் ஆலயம் செல்லல் வேண்டும். நீராடி,மடி உடுத்தி, விபூதி, உருத்திராக்கம் அணிந்து, கனி மலர்களுடன் போய், அருச்சகர் ஆலயம் திறந்து விளக்கேற்றிய பின்னர் உள்ளே செல்லவேண்டும்.

கோபுரம் என்பது தூல லிங்கமாதலால் அதைக் கண்டவுடனே வணங்க வேண்டும். பின்னர்க் கொடிமரத்தின் அருகே ஐந்து வணக்கம் செய்து, நந்தியிடம் விடைபெற்று, முதலில் விநாயகர், சுப்பிரமணியர், அம்பிகை ஆகியவர்களை வழிபடல் வேண்டும். அதன்பின் சத்தியோஜாதம், தத்புருடம், வாமதேவம், அகோரம் என்னும் லிங்கத்தின் நான்கு முகங்களும் நான்கு திக்குகளிலும் இருப்பதாகத் தியானம் செய்ய வேண்டும். ஈசானம் என்னும் ஐந்தாவது முகம் மேல்நோக்கி இருப்பதாக நினைத்து, அதைத் தனக்கு அபிமுகமாக வரும்படி பிரார்த்திக்க வேண்டும்.

அதன்பின் சவ்யப் பிரதட்சிணம், அபசவ்யப் பிரதட்சிணம், சவ்ய அபசவ்யப் பிரதட்சிணம், சிம்மப் பிரதட்சிணம், சிருங்கலாப் பிரதட்சிணம், நாகவக்கிரப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் என்னும் ஒன்பது பிரதட்சிணங்களுள் ஒன்றை மும்முறை செய்து, சண்டிகேசரிடம் சிறிது கையைத் தட்டிச் சப்தம் செய்து, “சிவன் திருவடியில் மனத்தைப் பதிய வைத்த சண்டிகேசரே, சிவ சேவையின் பலத்தைக் கொடுத்தருளும்” என்று விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பின் வைரவரைத் தரிசித்துவிட்டுத் தட்சிணாமூர்த்தியின் திருமுன்னே அல்லது கொடி மரத்தின் அருகே அமர்ந்து சிறிதுநேரம் பஞ்சாட்சர ஜபம் செய்து, கோபுர வாயிற்படியில் அமர்ந்து, தம்மைத் தொடர்ந்து வந்த மகாபலி முதலியவர்களை அனுப்பி விட்டு வீடு செல்ல வேண்டும்.

சிவதீட்சை பெற்று ஆசாரிய அபிடேகம் ஆனவரே லிங்கத்தைத் தொட்டு அபிடேகம், அலங்காரம், அருச்சனை முதலியவற்றைச் செய்யத் தக்கவர் ஆவர்.

சக்தி உள்ளவர்கள் மண்டபம் கட்டுதல், கோபுரம் அமைத்தல், தடாகம் உத்தியானம் அமைத்தல், வாகனங்களைச் செய்து அளித்தல்,பிரதோஷம் சுக்கிரவாரம் முதலிய விழாச் செய்வித்தல், ஆலயத்தைப் பெருக்கி மெழுகிக் கோலமிடல்முதலிய தொண்டுகள் செய்யலாம்.

பஞ்ச பர்வ உற்சவம், பிரமோற்சவம், வாகனம், இரதத்தின் அமைப்பு, சிற்பம் முதலியவற்றைப் பற்றியும் ஆகமங்கள் கூறுகின்றன. சோ. ச.

வைணவ ஆகமங்கள் கோயில்களிலும் வீடுகளிலும் வைத்து வணங்கும் விஷ்ணு விக்கிரகத்தின் தத்துவத்தைப்பற்றியும் வழிபாட்டு முறைகளைப்பற்றியும் கூறும் சமஸ்கிருத நூல்களாகும். அவை விக்கிரக ஆராதனையின் தத்துவார்த்தத்தை விளக்குவதோடு கோயில்களையும் விஷ்ணு விக்கிரகத்தையும் நிர்மாணிக்க வேண்டிய முறைகள், விச்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகள், நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகள், விழாக்காலங்களில் வழிபடுவோரிடம் காணப்படவேண்டிய தகுதிகள், பக்தி சிரத்தையோடு வழிபடுவோர் அடையும் புண்ணிய பலன்கன் ஆகியவற்றை விரிவாகக் கூறுகின்றன. இந்நூல்களின் எண் நூற்றெட்டு என்பர். அவைகள் சங்கிதைகள் என்றும், தந்திரங்கள் என்றும் கூறப்பெறும். சங்கிதை என்பது தொகுதியென்றும், தந்திரம் என்பது முறை என்றும் பொருள்படும். இவை ஸ்ரீ வைணவர்களுடைய வேதநூல்களில் ஒரு பாகமாகும்.

இவை அனைத்தையும் மொத்தமாகப் பாஞ்சராத்திரங்கள் என்றும், பாகவத சாஸ்திரம் என்றும் கூறுவார்கள். பாகவதர்கள், சாத்வர்கள், ஏகாந்திகர்கள் என்று பலவாறு கூறப்பெறும் ஒருநெறிய சித்தத்துடன் பகவானிடம் பக்தி செய்யும் அடியார்களைப் பாத்ம தந்திரமானது பாஞ்சராத்திரிகர் என்று அழைக்கின்றது. பாஞ்சராத்திர வணக்க முறை ஏகயானம் அதாவது ஒரேவழி என்று கூறப்படும். இது பாகவதர்கள் ஒரே கடவுள் வாதிகள் என்பதைக் குறிக்கும். ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு கல்யாண குணங்களுக்கும் பகம் என்று பெயர். அவைகளை உடையவர் பகவான். பகவானே அவர்களுடைய வழிபடு தெய்வமாவர். ஆதலால் பகவானை வழிபடும் விஞ்ஞானம் பாகவத சாஸ்திரம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. பகவானை, வழிபடும் சமயம் பாகவத தருமம்.

இந்தச் சாஸ்திரம் பண்டைக்காலத்திலேயே தோன்றியதாகக் கூறுவர். இதை வேதங்களின் முடி என்று ஸ்ரீ பிரசன்ன சங்கிதையும், இப்பொழுது பதரிகாச்சிரமம் என்று வழங்கும் நரநாராயண ஆச்சிரமத்தில் நாராயணனே இதை நாரதருக்கு உபதேசித்தான் என்று ஈசுவர சங்கிதையும் கூறுகின்றன. பாஞ்சராத்திரமானது வேதம்போல் தொன்மையானது என்று ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் கருதுகிறார்கள். ஆளவந்தார் என்ற யாமுனாசாரியார் பாஞ்சராத்திர ஆகமத்தின்