பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமம்

305

ஆகமம்

தொன்மையையும் பிரமாணத்தையும் நிலைநாட்டுவதற்கென்று ‘ஆகமப் பிரமாணியம்‘ என்னும் நூலை எழுதியிருக்கிறார். பாஞ்சராத்திரங்கள் வேதங்களுக்குப் புறம்பானவை என்று சில வைதிக மதவிசேஷங்கள் கூறிவந்ததை மறுப்பதற்காகவே அவர் அந்த நூலை எழுதினார். வேதாந்த தேசிகரும் அதே நோக்கத்துடன் தான்'பாஞ்சராத்திர ரட்சை' என்னும் பாண்டித்தியம் நிறைந்த நூலை இயற்றினார்.

ஆகமங்கட்குப் பாஞ்சராத்திரம் என்ற பெயர் ஏற்பட்டதன் காரணம் விளங்கவில்லை. பலர் பலவாறு கூறுவர். யோகம், சாங்கியம், பௌத்தம், ஆருகதம், பாசுபதம் ஆகிய ஐந்து சாஸ்திரங்களும் ஆகமங்களின் முன்னிலையில் இருள்போல் தோன்றுவதால் ஆகமங்ககளுக்குப் பாஞ்சராத்திரங்கள் என்னும் பெயர் உண்டாயிற்று என்று பாத்ம தந்திரம் கூறுகின்றது. பஞ்ச ஐந்து; ராத்திரம் - ஞானம். அதனால் பாஞ்சராத்திரம் என்பது ஐந்துவகை ஞானங்களைக் கூறுவதாகும் என்று நாரத பாஞ்சராத்திரம் கூறுகிறது. அவித்தையை ஒழிப்பதால் அதற்குப் பாஞ்சராத்திரம் என்னும் பெயர் உண்டானது என்று பிரம சங்கிதை கருதுகின்றது. பாஞ்சராத்திரிகர்கள் நாள்தோறும் ஐந்துவித கர்மங்கள் செய்வதால் அவர்களுக்கு அந்தப் பெயர் உண்டாயிற்று என்று சிலர் கூறுவர்.

நாராயணன் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச என்னும் ஐந்து உருவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறான் என்பதே வைணவ ஆகமங்களின் முக்கியமான கொள்கையாயிருப்பதால் அதுதான் பாஞ்சராத்திரம் என்னும் பெயர் வந்ததற்குக் காரணம் என்று டாக்டர் ஒட்டோ ஷ்ரேடர் என்பவர் அஹிர்புத்னிய சங்கிதையை ஆதாரமாகக்கொண்டு கூறுகிறார். அவர் கூறும் கொள்கைதான் பாஞ்சராத்திர தத்துவ சாஸ்திரத்தின் உயிர்நாடி. அதுவே கடவுள் சூக்குமத்தினின்றும் தூலமாக வெளிப்படுத்திக்கொள்ளும் அவதார முறையாகும். பர, வியூக, விபவ நிலைகள் அண்டத்தில் பரம்பொருள் என்றும் மறைந்து நிற்கும் நிலைகளாகும். அந்தர்யாமி நிலை ஆன்மாவிடம் கோவில்கொண்டிருப்பது. அர்ச்ச நிலைதான் அடியார்கள் எளிதில் கண்டு வணங்குதற்கு ஏற்ற தூல் நிலை. ஆதலால் அவதாரங்கள் அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் சம்பந்தமுடையவைகளே. கடவுள் பெரிதினும் பெரிதாயும், சிறிதினும் சிறிதாயுமிருக்கிறார்.

இந்தப் புராதனக்கொள்கையை அவ்வப்போது தோன்றி உபதேசித்த ஆசாரியார்கள் பலராவார். அவர்களுள் நம்மாழ்வார் என்னும் சடகோபரே தலையாயவர். அவரும் மற்றப் பக்த சிரேஷ்டர்களும் மக்கள் நலம் கருதித் தம் கருணையின் காரணமாக அவதாரம் செய்ததாகக் கூறுவர். பாஞ்சராத்திரக் கொள்கையை உபதேசித்தவராகச் சடகோபரைக் கூறுவதுபோலவே சனகர், சாண்டிலியர், பிரகலாதர், சுக்கிரீவர், அனுமார், விபீஷணர் ஆகியவரையும் கூறுவார்கள். பிருகத் பிரம சங்கிதை இந்த ஆசாரியார்களின் பட்டியில் இராமானுசரையும் சேர்த்திருக்கின்றது.

பாஞ்சராத்திர வைணவ ஆகமங்கள் ஸ்ரீ வைணவன் ஆவதற்கு அனுஷ்டிக்கவேண்டிய ஐந்து சம்ஸ்காரங்களை அல்லது சமயக்கடன்களைக் கூறுகின்றது. அவை சமயத்தின் இரகசியத்தை அறிவதற்கான தீட்சைகளாகும். 1. விஷ்ணுவின் சின்னங்களாகிய சங்கும் சக்கரமும் தோள்களில் முத்திரித்துக்கொள்ளும் தாபம், 2. நெற்றியிலும் நெஞ்சிலும் திருமண்ணும் ஸ்ரீ சூரணமும் கொண்டு நாமம் இட்டுக்கொள்ளும் புண்டரம், 3. கடவுளுடைய அடியான் என்பதைக் காட்டும் பொருட்டுக் கடவுளுடைய திருநாமங்களில் ஒன்றுடன் தாசன் என்னும் மொழியைச் சேர்த்துப் புதிதாகப் பெயர் கொள்ளும் நாமம், 4. தீட்சை பெறும்பொழுது ஆசாரியர் செவியில் கூறும் தெய்விக மந்திரம், 5. இந்த நான்குபுறக் கடன்களின் பலனாகத் தைலதாரைபோல் ஈசுவரனிடம் இடைவிடாமல் ஐக்கியப்பட்டு நிற்கும் யோகநிலை. எப்பொழுதும் ஈசுவர, சன்னிதானத்தில் இருப்பதாக எண்ணி வாழ்வதற்கான வழியை வகுப்பதே இச்சமயக் கடன்களின் நோக்கம்.

ஸ்ரீ வைணவ சமய தீட்சையைப் பெற்று முத்தி நெறியில் நிற்பதற்குச் சாதி, ஆசிரமம், வழக்கம், பால் முதலிய வேற்றுமைகளின்றி அனைவர்க்கும் உரிமை உண்டு என்று பாஞ்சராத்திர ஆகமங்கள் கூறுகின்றன. அதனால் முக்தி நாடி வருபவர் அனைவரும் ஐந்து சமயக் கடன்களையும் மேற்கொள்ளலாம். அவர்கள் எல்லோரும் சமமாகவே எண்ணப்படுவர் என்று ஈசுவர சங்கிதை கூறுகிறது.

பாகவதர்கள் நாள்தோறும் செய்யவேண்டிய ஐந்து. சரியைகளுக்குப் பஞ்சகலை என்று பெயர். அவை அபிகமனம், உபாதானம், இஜ்யம், சுவாத்தியாயம், யோகம் என்று பாத்ம தந்திரம் சரியை பாதம் என்னும் அத்தியாயத்தில் கூறுகின்றது. அபிகமனம் என்பதே நாள்தோறும் முதலில் செய்யவேண்டிய சரியை. நீராடலும் காலைப் பிரார்த்தனையமாகும். உபாதானம் என்பது பாகவத கைங்கரியத்துக்காக உடலைக் காப்பதற்கு வேண்டிய அளவு உணவோ, பொருளோ தேடும் தொழில் செய்தல். தேவைக்கு மிஞ்சிய பொருளைப் பெறவும் வைத்துக்கொள்ளவும் மறுத்தலாகிய அபரிக்கிரகமும் அதில் அடங்கும். இஜ்யம் என்பது வீட்டுக் கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ள விஷ்ணு விக்கிரகத்தை நாள்தோறும் சடங்குமுறை வழுவாது வணங்குதல். சுவாத்தியாயம் என்பது வைணவ வேத சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் ஆராய்தல். யோகம் என்பது எந்நேரமும் ஈசுவரனைத் தியானம் செய்தல். இந்தப் புண்ணிய கைங்கரியங்களுக்காக ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலைவரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஆகவே அபிகமனத்துடன் தொடங்கிய நாள் உறங்குமுன் தன்னை ஈசுவரனிடம் பரிபூரணமாக ஒப்புவிக்கும் தியானத்துடன் முடிவடைகின்றது.

இந்த வைணவ மதத்தைத் தமிழ்நாட்டில் பரவச் செய்தவர்கள் சடகோபர் முதலிய ஆழ்வார்களும், இராமானுசர் முதலிய ஆசாரியார்களும் ஆவர். “என் பக்தர்கள் என் பாதநீர் பருகி என் மதம் நடைபெறும் தமிழ் நாட்டில் அவதரிப்பர்” என்று பகவானே அருளிச் செய்திருப்பதாகப் பிருகத் பிரம சங்கிதை கூறுகிறது. பாகவதமும் ஆழ்வார்களைத் தமிழ் மக்களுடைய ஆன்ம லாபத்துக்காக அவதரித்த ஞானிகள் என்று கூறுகிறது. அவர்கள் அனைவரும் தாமிரபரணி, கிருத மாலை, பாலாறு, காவேரி ஆகிய நதி தீரங்களில் பிறந்தனர்.

சடகோபர் வைணவ மதத்தைத் தமிழில் செய்து தந்தபடியால், வேதம் தமிழ் செய்த மாறன் என்று பெயர் பெற்றார். நாலாயிரப் பிரபந்தங்கள் என்னும் தமிழ் வேதத்தைப் பகவான் சன்னிதானத்தில் வைணவ இன்னிசைப் பாடகர்கள் ஓதவேண்டும் என்று ஈசுவர சங்கிதை கூறுகிறது.

இராமானந்தர் என்பவர் பாகவத மதத்தை வடநாட்டில் பரவச் செய்ததுபற்றிப் பக்தமாலை என்னும் நூல் கூறுகிறது.

இவ்வாறு வைணவ ஆகமங்கள் பாகவத மதத்தை விளக்குவதோடு எவ்வாறு வடமொழியும் தென் மொழி