பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

319

ஆங்கிலம்

பெருங் கலக்கம் விளைவித்தது. வைல்டின் டாரியன் கிரேயின் ஓவியம் (Picture of Darian Grey) என்ற நாவலில் மறக்க முடியாத குண அமைப்பைக் காண்கிறோம்.

ஆனால் நாடகக் கலைக்குப் புத்துயிரளித்து, நாடக அரங்கின் அமைப்பிலும், நாடக இலக்கியத்தின் நோக்கத்திலும் புரட்சிகரமான மாறுதலை விளைவித்த பெருமை பெர்னார்டுஷாவைச் சாரும். இவருடைய மேதாவிலாசமான அறிவுத்திறனும், திகைப்பையூட்டும் வகையில் இவர் வெளியிட்ட புதுமைக் கருத்துக்களும் இவரை நாடகத்துறையின் ஈடு இணையற்ற அரசராக்கின. பொருளாதாரப் பிரச்சினைகளையும், வரலாற்றுச் சம்பவங்களையும், அரசியல் கருத்துக்களையும் சமூக ஊழல்களையும் இவர் தம் நாடகங்களின் வாயிலாகத் தமக்கே உரிய நடையில் ஆராய்ந்தார். இவருடைய நாடகங்களைவிட அவற்றின் முன்னுரைகளே மிக விரிவாக விளங்குகின்றன. இதனால் இவர் நாடகங்கள் நடிப்பதைவிடப் படிப்பதற்கே ஏற்றவை எனக் கூறுவார் உண்டு.

ஜான் மில்லிங்க்டன் சிஞ்சு (John Millington Synge) கவிதையும், சோகமும், நகைக்சுவையும் இணைந்த நாடகங்களை எழுதினார். எட்வர்டு மார்ட்டினும், கிரெகரிசீமாட்டியும் (Lady Gregory) நகைச்சுவை நாடகங்கள் எழுதுவதிற் பேர்போனவர்கள். சீன் ஓ'கேசி (Sean O'Casey) புது முறையில் நாடகங்களை எழுத முயன்றார்.

கால்ஸ் வொர்தி சமூகப் பிரச்சினைகளை ஆராயப் புகுந்த நாடகாசிரியருள் ஒருவர். சர் ஜேம்ஸ் பாரி (Sir James Barrie) புராணக் கதைப் பாத்திரம் ஒன்றைப் புதிதாகப் படைத்த பெருமையை உடையவர். லாரன்ஸ் ஹவுஸ்மன் விக்டோரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்த சிறு நாடகத் தொடராக்கினார். கவிஞரான ஜான் ட்ரின்க்வாட்டர் ஆபிரகாம் லின்கனின் தீர வாழ்க்கையை நாடகமாகப் புனைந்தார். நோயல் கோவர்டு (Noel Coward) புது முறைகளைத் தம் நாடகங்களில் வெற்றியுடன் கையாண்டிருக்கிறார்.

சார்லஸ் லாம், ஹாஸ்லிட் முதலிய ஆசிரியர்கள் தோற்றுவித்த கட்டுரை இலக்கியப் பரம்பரை இன்றும் மங்காது போற்றப்பட்டு வருகிறது. இந்த இலக்கியத்தில் மக்களது நாட்டம் செல்லக் காரணமாக இருந்தவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். இவர் சாதுரியமும் நகைச்சுவையும் நிறைந்த கட்டுரைகளை எழுதினார். சர் மாக்ஸ் பீர்பாம் (Sir Max Beerbohm) வாழ்க்கையின் விந்தைகளை நேர்த்தியான முறையில் எழுதினார். எட்வர்டு வெரால் லூகாஸ் (Edward Verral Lucas) இலக்கியப்பண்பு நிறைந்த கட்டுரைகளைப் பத்திரிகைகளுக்கு எழுதிவந்தார். ராபர்ட் லிண்ட் என்பவருடைய சாதுரியமும், அழகும், நேர்மையும் நிறைந்த கட்டுரைகளை எத்தனை முறை படித்தாலும் மகிழ்ச்சி விளைகிறது. ஜே.பீ. பிரீஸ்ட்லி, சார்லஸ் மார்கன் (Charles Morgan), சர் ஆஸ்பர்ட் சிட்வெல் (Sir Osbert Sitwell) ஆகியோர் சிறந்த கட்டுரையாளராவர்.

லிட்டன் ஸ்ட்ரேச்சி (Lyton Strachey) போன்ற சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும், டபிள்யூ.எச். டேவிஸ் (W. H. Davies) போன்ற சுய சரிதை ஆசிரியரும் ,எச். ஏ. எல். பிஷர் (H. A. L. Fisher) போன்ற வரலாற்று ஆசிரியரும், சீ. எம். டவுட்டி (C.M. Doughty) போன்ற பிரயாண நூல் ஆசிரியரும், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற விஞ்ஞான நூலாசிரியரும் இந்நாளைய இலக்கியத்திற்கு அணி செய்கின்றனர்.

உரைநடை : உலகத்தின் உதயகாலத்தில் பாட்டும் கூத்தும் தோன்றின. பல நூற்றாண்டுகள் சென்ற பிறகே உரைநடை நூல்கள் இலக்கிய உலகத்தில் எழுந்தன என்று கூறினால் மிகையாகாது. இப்பேருண்மை ஆங்கில இலக்கியத்திற்கும் பொருந்தும்.

பண்டைய ஆங்கில உரைநடையில் அப்பொழுது சொல்வளமில்லை. அது இயன்ற மொழி வடமொழியைப்போல ஓர் இணைப்பு மொழியாக (Synthetic language) இருந்தது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் உரைநடைபோலவே உரைநடைக்கும் செய்யுள் நடைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது; உரைநடை மோனை நிரம்பிய நடையாய்த் திகழ்ந்தது.

ஆங்கில உரைநடையை வளர்த்த பெருமை ஆல்பிரடைச் சேர்ந்தது (Alfred the Great, 849-901). லத்தீன் மொழியில் பீடு (Bede) எழுதிய சமய வரலாறு (Ecclesiastical History) என்பதையும், போத்தியஸ் எழுதிய ஆறுதல் (Consolation of Boethius) என்பதையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலோ- சாக்சன் சரித்திரக் குறிப்பும் உரைநடை வளர்ச்சியில் நோக்கத் தகுந்தது.

மத்திய காலத்தில் (1350-1400) உரைநடை விரிவடைந்தது. மத சம்பந்தமான பொருள்களை மட்டும் அது சுட்டாமல் உலக சம்பந்தப் பொருள்களையும் சித்திரிக்கிறது. உதாரணமாகச் சாசரின் வான நூலான ஆஸ்டரலோப் (Astrolobe) என்பதைக் குறிக்கலாம். ஆங்கில மொழி ஒரு பகுப்பு மொழியாய் மாறிக்கொண்டு வந்தது. மாண்டிவில் (Mandeville), விக்லிப் முதலியோர் பாமர மக்களுக்குப் புரியும் எளிய நடையில் எழுதத் தொடங்கினார்கள். விக்லிப் கிறிஸ்தவ வேத புத்தகத்தை எளிய நடையில் மொழிபெயர்த்தார். 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய மாலரியின் உரைநடை வியக்கத் தகுந்தது. கவிதை நயம் ததும்ப எழுதப்பட்ட அவருடைய ஆர்தரின் மரணம்(Morte d'Arthur) நம் உள்ளத்தைக் கவர்கிறது. சொல் நயத்தில் திளைக்கும் டெனிசன்கூட மாலரியின் வரிகளை அப்படியே தம்முடைய நூலில் இழைக்கிறார்.

மறுமலர்ச்சிக் காலத்தில் (1516-78) கிரேக்க மொழி, லத்தீன் மொழி இவைகளை மக்கள் மிக்க ஆர்வத்துடன் படிக்கலாயினர். அம் மொழிகளின் மீது வைத்த பேரன்பினால் தங்கள் தாய் மொழியைப் புறக்கணித்தனர். தாய் மொழியில் எழுதுவதுகூட ஓர் இழிவென்று கருதினர். ஆனால் லிலி (Lyly 1554-1606) ஆங்கில மொழியை வளமாக்க முயற்சி செய்தார். எதுகை மோனையெல்லாம் உரைநடையில் தோன்றின.

ஆஸ்கம் (Ascham 1515-68) லத்தீன் மொழியில் திளைத்தவர். ஆயினும் சாதாரண மக்களின் பொருட்டு ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றில் எதுகையும் மோனையும் மிளிர்கின்றன. ஹுக்கரின் (1554-1600) கிறிஸ்தவச் சமயச் சட்ட திட்டங்கள் (The Laws of Ecclesiastical Polity) மிகச் சிறந்த புத்தகமாகும். அதன் உரைநடையில் ஒரு காம்பீரியமிருக்கிறது.

அங்கீகரிக்கப்பெற்ற விவிலிய நூல் மொழிபெயர்ப்பு (1611) என்பதன் உரைநடை நயம் மிகச் சிறந்தது

பேக்கனின் (1561-1626) உரை நடை திருக்குறளின் கதியில் செல்லுகின்றது. செஞ்சொற்களை ஆள்கின்ற திறமை அவரிடத்தில் நன்கு அமைந்து கிடக்கின்றது. சொற்சிக்கனத்திற்கு இலக்கியமாக அவர் திகழ்கின்றார். 17ஆம் நூற்றாண்டில் ராபர்ட் பர்ட்டன் (1577-1640) போன்ற உரைநடை ஆசிரியர்கள் விரிந்த படிப்பைப் பெற்றவர். ஜெரிமி டெயிலர் (1613-67), மில்ட்டன்