பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

321

ஆங்கிலம்

வாழ்க்கை வாலாறு: ஆங்கில இலக்கியத்தில் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு ஒரு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதம்னான் (Adamnan 624-704) எழுதிய செயின்ட் கொலம்பாவின் வரலாறும், அஸ்ஸர் (Asser ? - 910) எழுதிய ஆல்பிரட் அரசனின் வரலாறும் ஆதி காவியங்களாகக் கருதப்படுகின்றன. பின்னர் ஆப்ரே (Aubry 1626-1697), ஐசக் வால்ட்டன் இவர்கள் எழுதிய சிறு வாழ்க்கை வரலாறுகள் பெயர் பெற்று விளங்கின. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கில இலக்கியப் பீடத்தில் அரியென அமர்ந்து ஆட்சிபுரிந்த டாக்டர் ஜான்சன் கவிகளின் வாழ்க்கைகள் என 52 வரலாறுகளைச் சுவைபட எழுதி வெளியிட்டார். அவருடைய நண்பர் ஜேம்ஸ் பாஸ் வெல், டாக்டர் ஜான்சனையும் அவருடைய நண்பர்களையும் பற்றிப் பல சுவையான வாழ்க்கைத் துணுக்குக்களை அமைத்து எழுதிய வரலாறு, வாழ்க்கை வரலாறுகளில் புகழ்பெற்று மிளிர்ந்து நிற்கிறது. வாழ்க்கை வரலாறென்பது 'நிழலும் ஒளியும்' சேர்ந்து இலங்க வேண்டுமென்பதும், வெறும் புகழ் மாலையாக இருக்கக்கூடாது என்பதும் பாஸ்வெலின் நோக்கமாயினும், ஜான்சனைப் பற்றி அவர் எழுதிய வரலாற்றில் அந்த நோக்கம் கைகூடவில்லை என்பது ஒரு சாராரின் துணிபு. பாஸ்வெலைப் பின்பற்றி லாக்கார்ட் (Lockhart) என்பவர் சர் வால்ட்டர் ஸ்காட் என்னும் கவியைப்பற்றியும், மூர் என்பவர் லார்டு பைரன் என்னும் கவியைப்பற்றியும் வரலாறுகள் எழுதினர். அதன்பின் இலக்கியம், வரலாறு இரண்டிலும் புகழ்பெற்று விளங்கிய கார்லைல், கிராம்வெல், பிரடரிக் {Frederick) முதலியோர்களைப்பற்றிய வரலாறுகளை எழுதினார். கார்லைல் எழுதின வாழ்க்கை வரலாறுகளில் சில சித்திரங்கள் நம் கண்முன் தோன்றுவனபோல அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன. புரூடு கார்லைலைப் பற்றி எழுதிய வரலாறும், லார்டு மார்லி, கிளாட்ஸ்டனைப் (Gladstone) பற்றி எழுதிய வரலாறும், டிரவல்யன் (Trevelyan) மெக்காலேயைப் பற்றி எழுதிய வரலாறும் புகழ்பெற்றவை. 20ஆம் நூற்றாண்டில் வாழ்க்கை வரலாறு எழுதும் விதத்தில் லிட்டன் ஸ்டிரேச்சி ஒரு புது முறையைக் கையாண்டார். எழுதப்படுபவரைப் போற்றி வணங்கும் நோக்கத்துடன் இருக்காமல் உள்ளதை உள்ளதுபோல் வெளிப்படையாகக் காட்டுவதாக இருக்கவேண்டுமென்னும் கொள்கையை இவர் பின்பற்றினார். இவர் விக்டோரியாவைப் பற்றி எழுதிய வரலாறு புகழ் பெற்றது. மனத்தில் எழும் எண்ணங்களை வேகமாகவும் அழகாகவும் அப்படியே எடுத்துக்காட்டும் நடை, சரித்திர ஆராய்ச்சியில் மிக்க கவனம், அவரவருக்குள்ள சிறப்பான இயல்புகளை நுட்பமாகக் கண்டு, அவற்றைக் காட்டுவதில் விருப்பம் ஆகியவை இவருடைய சிறப்பாகும். ஸ்டிரேச்சியைப் பின்பற்றிய சில எழுத்தாளர்களுள் முக்கியமாக ஆந்திரே மார்வாவையும் (Andre Maurois), பிலிப் கெடல்லாவையும் (Philip Guedella) சொல்லலாம்.

18ஆம் நூற்றாண்டில் எட்வர்டு கிப்பன் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் தம்முடைய சுயசரிதையை எழுதினார். மகாத்மா காந்தியினுடைய சுயசரிதையும், பண்டித ஜவஹர்லால் நேருவுடைய சுயசரிதையும் ஆங்கில உலகில் புகழ்பெற்றவை. எச். ஜி. வெல்ஸ், வின்ஸ்டன் சர்ச்சில், ஜான் கௌப்பர் பாயிஸ் (John Cowper Pows), லாயிடு ஜார்ஜ் முதலானவர்கள் தம் சுயசரிதைகளை எழுதி வெளியீட்டிருக்கின்றனர். சுயசரிதைகள் அந்தரங்க விஷயங்களை அழகாகத் தாங்கித் தற்புகழ்ச்சி யில்லாமல் வாழ்க்கை அனுபவங்களைப் புகைப்படம் பிடித்துக் காட்டுவதுபோல் இருத்தல் நலம். கோ. ரா. ஸ்ரீ.

போலிநகை இலக்கியம் (Parody) ஆங்கிலத்தில் ஓர் இலக்கிய வகை. இஃது ஓர் இலக்கியப் புல்லும்ருவி ; முதனூல் ஒன்றைப் பின்பற்றியே இயங்குவது. ஒரு நூலின் கட்டமைப்பு, யாப்பு, நடை, அணிகள் ஆகியவற்றை இழிந்த பொருளுடன் புணர்த்தி,அந்நூலை எள்ளி நகையாடுவதே இதன் நோக்கம். இவ் இலக்கியம் முதற்கண் செய்யுட்களையே குறித்தாலும், நாளடைவில் ஆங்கில இலக்கிய வழக்கால் உரைநடை நூல், நாடகம், கதை முதலியவற்றையும் உணர்த்தலாயிற்று.

இப்பாவினை இயற்றுவதற்கு நுண்ணிய யாப்பறிவு, ஆக்கத்திறன், புலமை, திறனாயும் தன்மை, நன்மதிப்பு, நகைச்சுவை என்னும் பண்புகள் இன்றியமையாதவை. முதனூலின் மோனை, எதுகை நயத்தையொட்டிப் பாடவேண்டுவதால் யாப்புத் திறமையின் தேவை நன்கு விளங்கும். நடையும் அணிகளும் ஒரு நூலின் வெளித் தோற்றங்களே யாகும். நூலின் உயர்நிலை உட்கருத்தும், ஆக்கநோக்கமுமேயாம். ஆதலின், போலிநகை இலக்கியம் இயற்றுவோன் இக்கருத்தையும் நோக்கத்தையும் ஒட்டிப் பாடும் திறமையுடையனாதல் வேண்டும். இதனின்றும், இப்பாவின் நோக்கம் வெறும் இகழ்ச்சியன்று என்பது புலனாகும். தோற்றத்தையும் கருத்தையும் மிகைப்படுத்திக் காட்டுவது இதன் குறிக்கோள். திறனாயுந் தன்மை இப்பாவலனுக்கு ஒரு சிறந்த பண்பு. முதனூலை இகழ்வதால் இப்பாவலனுக்கு அந்நூலினிடம் மதிப்பில்லை என்று கருதுவது தவறு.

போலிநகை இலக்கியத்தின் வரலாறு இலக்கியச் சுவையின் வரலாற்றின் நிழல் ஆகும். ஒரு முதனூலை அந்நாளைய மக்கள் எப்படி மதித்தனர் என்பதை இப்பாவினின்றும் அறியலாம். இலக்கியத்திலும் அரசியலிலும் அளவுக்கு மீறிய மாறுதல்களையோ புரட்சியையோ சமூகம் விரும்பாது. அத்தகைய மாறுதல்கள் தோன்றும் பொழுது எதிரியக்கமாகப் போலிநகை இலக்கியம் எழும். போலியையும் இழிந்ததையும் இகழ்வதே பெரும்பாலும் இந்த இலக்கியவகையின் தொழில். ஆயினும், ஒரோவழிப் புதுமைப் பண்புள்ள சிறந்த நூல்களையும் இது தாக்கிக் கொன்றுவிடுகிறது. 18ஆம் நூற்றாண்டுப் புலவர் கிரே இத்தகைய இலக்கியத்திற்கு அஞ்சியே இசைப்பாக்கள் (Odes) இயற்றுவதை விட்டொழித்தார்.

14ஆம் நூற்றாண்டுக் கவிஞராகிய சாசரின் “சர் தோபஸீ" என்னுஞ் செய்யுள் இவ் இலக்கியத்தின் தோற்றுவாய் என்று கருதப்படுகிறது. சாசருக்குச் சிறந்த நகைத்திறன் உண்டு. இடைக்காலத்துப் பாலனைக் கவிதைகளின் (Mediaeval Romances) நடையையும் கருத்துக்களையும் இவர் ஏளனஞ் செய்கிறார். உயர்ந்த நடையின் நடுவே கொச்சையான தொடர்களும் எளிய பேச்சும் பரவி வந்துள்ளன.

17ஆம் நூற்றாண்டில் பட்லர் இயற்றிய ஹியூடிப் பாஸ் (Hudibras) பாவனைக் கதைகளின் உயர்வு நவிற்சியையும், காப்பியங்களையும், தொடர்நிலைகளையும் ஒருங்கே தாக்குகிறது. அடுத்த நூற்றாண்டில் பிலிப்ஸ் இயற்றிய நேர்த்தியான ஷில்லிங் நாணயம் (Splendid shilling), மில்ட்டனின் காப்பிய நடையையும் இயக்கத்தையும் எளிய பொருள்களுடன் சேர்த்து, எதுகை இல்லாத ஐந்து சீர்கள் கொண்ட அடிகளால் ஆக்கப்பட்டது. மில்ட்டனின் துறக்க நீக்கத்தின்