பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

323

ஆங்கிலம்

இப்பிரிவுகளின் நுணுக்கம் பிற்காலப் புலவர்கட்கு விளங்கவில்லை.

பிண்டர் இவ்வகையில் இயற்றிய பாக்கள் பல இறந்துபட்டன. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெற்றிபெற்றவர்களின் புகழைப் பாடிய சில பாக்களே இப்பொழுது கிடைத்துள்ளன. பிண்டரின் செய்யுட்கள் இப்பாவினத்திற்கே எடுத்துக்காட்டுக்களாக விளங்கின. இவருடைய யாப்பு நுட்பமும், உள்ளுக்கமும் (Inspiration), கற்பனைத்திறனும் செய்யுளுக்குத் தகுதியற்ற பொருளையும் அழகுசெய்யும் வன்மை வாய்ந்தவை.

ஆங்கில இலக்கியத்தில் இசைப்பா மூவகையாக வளர்ந்தது. அவை பிண்டர் இசைப்பா, போலி இசைப்பா, எளிமையான உருவமும் கட்டமைப்புங்கொண்ட இசைப்பா என்பன. ஆங்கிலத்தில் முதன் முதல் பிண்டர் இசைப்பாவை இயற்றியவர் பென் ஜான்சன். காங்க்ரீவ் தமது 35ஆம் ஆண்டில் பிழையற்ற அமைப்புடன் இசைப்பாவை இயற்றத் தொடங்கினார். 1749-ல் வெஸ்ட் என்பவர் பிண்டரின் செய்யுட்களை மொழி பெயர்த்து, இப்பாவினத்திற்குப் புத்துயிர் அளித்தார். இசைப்பா அமைப்பில் மிகவும் புகழ்பெற்ற செய்யுட்கள் கிரே இயற்றியவை. 1754-ல் இவர் கவிதையின் முன்னேற்றம் (Progress of Poesy) என்ற பாவையும், 1756-ல் பாணன் (The Bard) என்ற பாவையும் பாடினார். 1747-ல் காலின்ஸ் என்பவர் விடுதலை (Liberty) என்னும் பாவை வெளியிட்டார். இதுகாறும் கூறப்பட்ட புலவர்கள் தோன்றியிராவிடில், ஆங்கில இலக்கியத்தில் இசைப்பா இடம் பெற்றிராது. இது 18ஆம் நூற்றாண்டுவரை நிலவியது. 19ஆம் நூற்றாண்டில் இஃது அருகியே காணப்படுகிறது. கவிஞர்கள் கிரேக்கச் செய்யுள் விதிகளையும் உருவையும் அறவே மறந்தனர். உட்பிரிவுகளின் பெயர்கள் மட்டுமே நின்றன. அவற்றின் பொருள் மறைந்துவிட்டது.

இசைப்பாவின் யாப்பு நுட்பம் பலருக்கு எளிதில் விளங்காததனால் ஒரு போலிப்பா எழுந்து நிலவியது. 17ஆம் நூற்றாண்டில் கௌலி (Cowley), பிண்டரின் யாப்பமைப்பை அறியாமல் இப்பாவைக் கையாண்டார். இவர் செய்யுட்கள் பல அளவுள்ள அடிகளையும், பல அடிகளுள்ள பாக்களையும் கொண்டவை. விரிந்த கட்டமைப்பும், பிண்டர் இசைப்பாவின் வெளித்தோற்றமும் இவற்றுள் இருந்தன. யாப்பமைப்புத்தான் இல்லை.

இவ்விரண்டு வகைகளுடன் மூன்றாவது வகையாக எளிய அமைப்புடன் ஒரு பாவினம் கையாளப்பட்டு வந்தது. இதன் முதல் எடுத்துக்காட்டுக்கள் ஸ்பென்சர் என்பவர் இயற்றிய இரண்டு திருமணப்பாக்கள். அவை பெருமித நடையையும் மடக்கிப் பாடவேண்டிய எடுப்பு அடிகளையும் கொண்டவை. இவற்றின் இசை தாலாட்டுப் பாட்டின் இயல்பை உடையது.

19ஆம் நூற்றாண்டில் இசைப்பாவின் எளிய உருவம் ஆக்கச் சிறப்பை அடைந்தது. வர்ட்ஸ்வர்த் எழுதிய கடமை (Duty) என்னும் பாடலில் உணர்ச்சி ஆழத்தையும் கம்பீர நடையையும் காணலாம். அமரத்துவம் (Immortality) என்ற இவரது செய்யுள் ஆங்கில இலக்கியத்திலேயே தலைசிறந்ததாகப் பலரால் கருதப்படுவது. குழவிப் பருவத்திலும் இளமையிலும் இயற்கை அழகை வியந்து நோக்கிய புலவர், ஆண்டுகள் முதிரவும், வாழ்க்கை நுகர்ச்சி அதிகரிக்கவும், அவ்வுணர்ச்சியை இழந்துவிட்டமைபற்றி ஏங்குகிறார் ; தனிப்பட்ட நுகர்ச்சியைப் பொது நுகர்ச்சியாகக் கற்பித்துப் பாடுகிறார். கீட்ஸ் இயற்றிய இசைப்பாக்களில் கருத்தும், கற்பனைத் திறனும், உணர்ச்சியும் ஒருங்கே கலந்து திகழ்கின்றன. ஷெல்லியின் வானம்பாடி (Skylark) ஆங்கிலச் செய்யுட்களிலேயே அழகு வாய்ந்தது. ஓசை நயம், பலதிறப்பட்ட இயக்கம், நெஞ்சத்தை அள்ளும் இசை, எழில் வாய்ந்த அணிகள் ஆகியவை அப்பாவிற்குச் சிறப்பை அளிக்கின்றன. வெலிங்ட்டன் பிரபுவின் மறைவுபற்றி டெனிசன் இயற்றிய பா கையறுநிலைத் துறையில் உள்ளது. போர் முரசு உள்ளத்தை ஊக்குவது போன்று, இப்பா ஆங்கிலரின் உணர்ச்சியைத் துள்ள வைக்கின்றது; நாட்டுப்பற்றும் கற்பனைத்திறனும் நிறைந்தது. இருபதாம் நூற்றாண்டில் இசைப்பா இதுவரை கையாளப்படவில்லை. பொது நோக்காகப் பார்க்குமிடத்து, ஆங்கில இலக்கியத்திலேயே இசைப்பா ஒரு தனிச் சிறப்புப் பெற்றுள்ளது. சு.ப.

இரங்கற்பா (Elegy) : அறுசீர் அடியும் ஐஞ்சீர் அடியும் கொண்டுவரும் ஈரடிச் செய்யுளைக் கிரேக்கர்கள் எலிஜி என்று அழைத்தனர். எலிகாஸ் என்னும் கிரேக்கச் சொல் சோகம் என்று பொருள்படும். ஆயினும் பொருள் சோகமாக இருப்பினும் இல்லாதிருப்பினும் இப் பாடல்கள் அனைத்தும் எலிஜி என்றே அழைக்கப்பெற்றன. இரங்கற்பாக்கள் வேறு உருக்கொண்டிருந்தால் கிரேக்க மொழியில் எலிஜி என்ற பெயர் பெறவில்லை. ஆகவே எலிஜிக்குரிய வடிவம் பெற்ற பாடல்கள் இறந்தவரை நினைந்து இரங்குவதாயிருந்தால் சாவை ஒட்டிய எலிஜிகள் என்றும், வேறு பொருள் உடையவனவாக இருந்தால் சாதாரண எலிஜிகள் என்றும் கூறப்பட்டன. கிரேக்க, லத்தீன் பாஷைக் கவிதைகளிலும் அவைகளை இம்மாதிரியாகக் கொண்ட ஐரோப்பியக் கவிதைகளிலும் எலிஜி என்பது தனி இலக்கணம்பெற்ற சிறந்த இலக்கிய வகையாக ஆயிற்று.

எலிஜியின் இலக்கணம், நாளடைவில் வடிவைப் பற்றியதாகவின்றிப் பொருளைப் பொறுத்ததாய் மாறிற்று. இறந்தவரை நினைத்து இரங்குவதே எலிஜிக்குரிய பொருள். அது உணர்ச்சிக்கேற்ற விதத்தில், இன்னிசைப் பாக்களுக்குரிய எவ்வித வடிவிலும் அமைந்திருக்கலாம். எனினும் அந்தப் பாடல் நீண்ட கவிதையாய் வளராமல், குறுகியதாயிருப்பதும் எலிஜிக்கு இன்றியமையாத இலக்கணம் என்று கூறுவதுண்டு.

எலிஜியில் ஒரு தனி வகை ஆயர்பாட்டு (Pastoral elegy) என்பது. இறந்தவனையும், சாவைக்குறித்து இரங்குபவனையும் ஆட்டிடையர்களாகப் பாவித்துக் கவிதையில் வரும் குறிப்புக்களையும், வருணனைகளையும் இடையர் வாழ்க்கைக்குப் பொருந்துவனவாக அமைத்து, ஆயர் மரபை ஒட்டிப் பாடுவதே ஆயர் பாட்டு. ஆங்கில எலிஜிகளில் பேர்போன சில பாடல்கள் இம் மரபைத் தழுவி எழுதப்பட்டவை. மில்ட்டன் எழுதிய லிசிடஸ், ஷெல்லி எழுதிய அடனேய்ஸ் (Adonais), ஆர்னல்டு எழுதிய தர்சஸ் (Thyrsis) இவ்வகைப் பாடல்களே. முதலில் ஆற்றாமையும், நடுவில் வருணனையும் இரங்குதலும், கடையில் ஆறுதலும் தோன்றும்படி எலிஜி அமைந்திருக்க வேண்டுமென்று சொல்வதுண்டு. இந்த இலக்கணப்படி எலிஜியின் உள்ளுறை தீராத் துயரமன்று. எனினும் தற்கால எலிஜிகளில் இரங்கும் நினைவுகளே பெரும்பாலும் பாராட்டப்படுகின்றன.

ஆங்கிலக் கவிதையில் பேர்பெற்ற சில எலிஜிகளாவன:

1. லிசிடஸ் மில்ட்டன் ஆயர் பாட்டு மரபைத் தழுவி எழுதியது; சொல் நயத்தாலும், ஓசை நயத்தாலும் ஒப்பற்ற அழகு வாய்ந்தது; கிங் என்றவரின் சாவுக்கு வருந்தும் தருணத்தில் கவி, தம்மைப்பற்றிய சிந்தனைகளையும் வெளியிடும் பாடல். இதில் தாபம் குறைவே ; மில்ட்டன் கிங்குடன் தோழமை பாராட்ட-