பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

324

ஆங்கிலம்

வில்லை; நற்குணம் வாய்ந்த இளைஞன் ஒருவன் இறந்ததற்கே கவி வருந்துகிறார்.

2. அடனேய்ஸ் கீட்ஸின் சாவைக் குறித்து ஷெல்லி எழுதியது ; அழகும் வன்மையும் வாய்ந்த கவிதை. ஷெல்லியும் கீட்ஸும் ஒருவரையொருவர் நன்கு அறியார். சிறந்த இளங்கவி ஒருவனைப் பாராட்டாத உலகத்தைப் பழித்தும், சாவு, அழிவு என்பதைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை வெளியிட்டும் எழுதிய பாடல்.

3. கல்லறைத் தோட்ட இரங்கற்பா (Elegy in a Country Churchyard) கிரே எழுதியது. எளியவரின் வாழ்வையும் சாவையும் பற்றித் தோன்றிய சிந்தனைகளை வெளியிடுவது.

4. நினைவின் பொருட்டு (In Memoriam) டெனிசன் தம் நண்பன் இறந்ததைப்பற்றி இரங்கும் சோக உணர்ச்சி ததும்பும் பகுதிகளையும், தத்துவ ஆராய்ச்சி செய்யும் பகுதிகளையும் தன்னுட்கொண்ட நீண்ட கவிதை. அளவினால் எலிஜீ இனத்தைச் சார்ந்ததன்று என்று கூறக்கூடியவாறு நீண்டது. எனினும் உள்ளுறையின் சில பாகங்களில் தோன்றும் இரங்கலின் வன்மையால் இரங்கற்பா வகையையே சேர்ந்தது.

இவை போன்ற அரிய பேர்பெற்ற எலிஜிகள் ஆங்கிலத்தில் இன்னும் பல உள்ளன. ஆங்கிலக் கவிதையில் எலிஜி சிறப்பிடம் பெற்றுள்ளது. நாடகங்களிலும், கவிதை வடிவில் அமைந்த கதைகளிலும், சாவு சந்தர்ப்பங்களில் இரங்கற்பா பிறர் கூற்றாகவும் அமைவதுண்டு. இதுவன்றி உண்மையில் வாழ்ந்து இறந்தவரைக் குறித்த எலிஜிகள், கவிவன்மை பெற்ற பலராலும் எழுதப்பட்டன பல உள்ளன. பொதுவில் இரங்கலின் சாயை படர்ந்த சிந்தனைகளை வெளியிடும் பாடற் பகுதிகளிலிருந்து, உற்றவரை இழந்து சோகத்தின் உண்மை தெளிந்த இரங்கற் பாக்கள்வரை, பலவகையான எலிஜிகள் உள்ளன. தற்காலத்தில் எலிஜியின் சிறப்பிலக்கணம் அதன் பொருளைச் சார்ந்ததே.

லிரிக் (Lyric) என்பது லைர் (Lyre) என்ற இசைக் கருவியுடன் கூடிப் பாடத்தக்க கவிதை. ஆதி காலத்தில், எவ்வகையான கவிதையும் இசையுடன் சேர்ந்து பாடப்பட்டது எனினும், கிரேக்க மொழியில் வீரச் செய்கைகளைக் கூறும் ஹிரோயிக் கவிதை காவியங்களுக்கேற்றதாயும், லிரிக் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடுவதற்கேற்றதாயும் கருதப்பட்டன. உரைநடையிலிருந்து கவிதை வேறுபடும் இயல்புகளில் உணர்ச்சிகளை வெளியிடும் திறம் முக்கியமானது. எனவே, கவிதைச் சிறப்பு வாய்ந்த பாடற்பகுதிகள் எல்லாம் லிரிக் இனத்தைச் சார்ந்தவையே. எனினும், நாடகம், காவியங்களின் இடையில் நேரும் பாடற்பகுதிகள் மட்டுமின்றி, ஏதோ ஓர் உணர்ச்சியை அதற்கேற்ற குறுகிய வடிவில் வெளியிடும் பாடல்கள் லிரிக் பாடல்கள் என்று குறிப்பிடத்தக்கவை. இவை ஒரே வகையான சீர்,தளைக் கட்டுப்பாடுகள் உள்ளனவாயின்றிக் குறுகியவும், நீண்டனவாயுமுள்ள அடிகள் மாறி விரவப் பெற்றிருப்பதுண்டு. லிரிக் பாடலின் ஓசை இனியதாயிருக்கும். ஆனால் இப் பாடல்கள் கானத்துடன் இசைந்திருக்க வேண்டியதில்லை. காதல், அழகு, பக்தி, துன்பம் முதலான பல உணர்ச்சிகளும் லிரிக் பாடல்களின் உள்ளுறையாவன. நீண்ட சிந்தனைகளும், வருணனைகளும், கதைப்போக்கும் இதற்கு ஏலாதன.

ஆயர்பாட்டு (Pastoral) என்பது மேனாட்டு இலக்கியத் துறைகளில் ஒன்று. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தியோகிரிட்டஸ் (Theocritus) கிரேக்க மொழியில் எழுதிய இடில்ஸ் (Idylls) என்ற பாடல்களிலேயே இந்தத் துறை முதலில் சிறப்படைந்தது. பையான் (Bion), மாஸ்கஸ் (Moschus) போன்ற கிரேக்கக் கவிகளும், ஆட்டிடையர் வாழ்க்கை எழிலிலும் எளிமையிலும் சிறந்ததாகக் பாவித்துப் பாடல்கள் எழுதினார்கள். இந்த முறையைப் பின்பற்றி, உலகக்கவிகளுள் ஹோமருக்கு அடுத்தவராகக் கருதப்படும் வர்ஜில் என்ற லத்தீன் கவியும், "இடையர் வாழ்க்கைச் சித்திரங்கள்" (Eclogues) என்ற பாடல்கள் எழுதினார்.

15ஆம் நூற்றாண்டில், இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் தோன்றிய புதிய மறுமலர்ச்சி இலக்கியத்தில் இத்துறையும் இடம்பெற்றது. தாசோ (Tasso), சனாசேரோ (Sannaz- zaro) ஆகிய இத்தாலிய ஆசிரியர்களே, முதலில் இந்தத் துறையை மறுபடியும் இலக்கிய வழக்கில் சிறந்து தோன்றும்படி எழுதினார்கள். பிறகு பல மொழி எழுத்தாளரும் ஆயர்பாட்டு முறையைக் கையாளுவது வழக்கமாய்விட்டது. 16ஆம் நூற்றாண்டில் இது ஐரோப்பிய இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றது.

இத் துறையின் இலக்கணம், அதன் உள்ளுறையைப் பற்றியதே. இந்த உள்ளுறை, இடையர் வாழ்க்கையை உள்ளபடி சித்திரிப்பதன்று : நாகரிக வாழ்க்கையைவிட ஆடு மேய்ப்பவர் வாழ்க்கை இனியதென்ற பாவனையைக் கற்பனையால் பலவாறு விவரிப்பதே. தமிழில் முல்லை, மருதம் முதலிய நிலத்துக்குரிய நிகழ்ச்சிகளுக்கும், வருணனைகளுக்கும் இலக்கணம் உள்ளதுபோல ஆயர்பாடலுக்கு ஓரிலக்கணம் உண்டு. இந்த வகையில் மேனாட்டு இலக்கியப் பகுதிகளில் இது ஒன்றே பலவகைக் கட்டுப்பாடுகளுக்குட்பட்ட உள்ளுறையைக்கொண்டு, தமிழில் உள்ள இலக்கியத் துறைகளை ஒத்துத் தோன்றுவது.

இது பாடலாகவும், கதையாகவும், நாடகமாகவும் இருக்கலாம். அதில் சித்திரிக்கப்படுவது ஒரு கற்பனை உலகம். அதில் தோன்றுவோரெல்லாரும் ஆடு மேய்ப்பவர். அந்த இடையர் ஆடுகளை மேயவிட்டு விட்டுக் கவலையின்றிக் குழல் ஊதுவாரென்பதும், குழல் ஊதுவதில் போட்டிகள் நிகழ்த்துவாரென்பதும், காதல் வயப்பட்டும், காதலியைப் பிரிந்தும் தோன்றும் உள்ளக் கிளர்ச்சிகளைப் பாடவல்லாரென்பதும், இறந்த ஓர் இளைஞனைப்பற்றி அவன் தோழர் அவனுடைய நற்குணங்களையும் இசை வன்மையையும் போற்றி யிரங்குவார் என்பதும், இன்னும் இவைபோன்ற பலவும், ஆயர் பாட்டிற்குரிய உள்ளுறை யாகும். ஆங்கிலத்தில் 16ஆம் நூற்றாண்டில் பல அழகிய ஆயர்பாட்டுக்கள் வெளிவந்தன. இவற்றுள் முக்கியமானவை சிட்னி எழுதிய ஆர்க்கேடியா என்ற நீண்ட உரைநடைப் பாவனைக் கதை.இது சனாசேரோவின் இத்தாலியக் கதையை முன் மாதிரியாகக் கொண்டதெனினும், தனி அழகு வாய்ந்தது. எளிமை, இனிமையாகத் தோற்றும் பாவனையுள்ளது என்ற பொருளுடைய ஆர்க்கேடியம் என்னும் சொல் இதிலிருந்தே வழக்கில் வந்தது.

பீல் (Peele) எழுதிய பாரிஸ் குற்றச்சாட்டும் (The Arraignment of Paris), லிலி எழுதிய காலதியாவும் (Galathea) நாடகங்கள். லாட்ஜ் எழுதிய ரோசலிண்ட் என்ற கதையே ஷேக்ஸ்பியரின் நீ விரும்பிய வண்ணம் (As You Like it) என்ற நாடகத்துக்கு முதல் நூலாகும். ஸ்பென்சர் எழுதிய ஆயர் பஞ்சாங்கம் (The Shepherd's Calendar) இனிய பாடல்களை உடையது. பென்ஜான்சன், பிளெச்சர், டிரைடன், ஹெரிக் முதலியோ-