பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

325

ஆங்கிலம்

ரும் இந்தத் துறையில் பாடியுள்ளனர். மில்ட்டன் எழுதிய லிசிடஸ் என்ற பாடல், இத்துறையில் உள்ள இரங்கற்பாவே. சிறந்த கவிஞர் தமது கவி வன்மையால், பழைய பாவிலும் புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கலாம் என்பதற்கு அது ஒரு சான்றாக விளங்குவதாகப் பின்வந்த கவிகள் பாராட்டினர்.

எனினும் 16ஆம் நூற்றாண்டுக்குப்பின் இத்துறை பெரும்பாலும் சிறப்பற்றிருந்தது. 18ஆம் நூற்றாண்டில், டாக்டர் ஜான்சன் இந்தத் துறை ஒழியவேண்டுமென்றும், ஆயர்பாட்டுக்கள் நகலுக்கு நகலாய் அமைவனவென்றும், இயற்கைக்கும் உண்மைக்கும் ஒவ்வாதனவென்றும் கூறினார். நாளடைவில், இரங்கற்பா என்ற ஒரு துறையில் தவிர, மற்ற உருக்களில் இது வழக்கற்று அழிந்து போவதாயிற்று. இத்துறை இரங்கற்பாவுக்கு ஏற்றதெனக்கொண்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டில், ஷெல்லியும் ஆர்னல்டும் முறையே அடனேய்ஸ், தர்சஸ் என்ற அரிய இரங்கற்பாக்களை இயற்றினர். உண்மையைச் சித்திரிக்க முயலும் தற்கால எழுத்தாளருக்கு ஆயர்பாட்டு மரபு (The Pastoral Convention) ஏற்காதது. எனினும் கதைகளிலும் கவிதையிலும், எளியவர் வாழ்க்கையும், இயற்கைக் காட்சிகளும், இனியவாகச் சித்திரிக்கப்படும்பொழுது, சில விடங்களில், இப்பாடலின் சாயல் தென்படுவதுண்டு. இதுவன்றி இம்மரபு அழிந்துபோனதேயாகும்.

தற்காலக் கவிதை : 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1892ஆம் ஆண்டில் டெனிசன் இறந்தார். எனவே தற்காலக் கவிதை, டெனிசனுக்குப் பிற்பட்ட கவிதை அல்லது 20ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கூறிக் காலவரையறையைக் குறிப்பது பொருந்தும். எனினும் தற்காலக் கவிதைகள் பல 19ஆம் நூற்றாண்டுக் கவிதை இனத்தைச் சார்ந்தவை. டெனிசன் கவிதைப் போக்கினின்றும் மாறுபட்டு விளங்குவது தற்காலக் கவிதையின் லட்சணங்களில் ஒன்று.

மெருகிட்டது. போன்ற சொல்நயத்தையும் இனிமையையும் டெனிசன் கவிதையிற் காணலாம். சொல்லை அளும் திறத்தாலும், கவிதைப்போக்கின் இனிமையாலும் அவர் ஆங்கிலக்கவிகளின் முன்னணியை அடைந்தார். எனினும் அவரிடம் புதிய ஆக்கவன்மை இல்லை. அவர் கவிதையின் உள்ளுறை அந்தக் காலத்தவர் ஏற்ற கொள்கைகளை வெளியிடுவதாயிருந்தது. சில பாடல்கள் வேறுவிதமாய் அமைந்திருந்தன. ஆனால், டெனிசன் புகழுக்குக் காரணமான நினைவின் பொருட்டு என்ற சரம கவியும், ஆர்தர் அரசனின் கதையைத் தழுவிய கவிதைகளும், விக்டோரியா காலத்து மக்களின் எண்ணங்களையும் கொள்கைகளையும் பிரதிபலித்தன. வாழ்க்கையின் முரண்பாடுகளை உள்ளபடி உணராமல் நீதிகளையும் உண்மைகளையும் பொதுப்படக் கூறும் மனப்பான்மையும், இதனால் நிலவும் மன அமைதியும், விக்டோரியா காலத்துச் சின்னங்களாக விளங்கின. டெனிசன் கவிதை இவற்றை ஓரளவு பிரதிபலிப்பது எனினும், வேறு விதங்களில் சிறந்து விளங்கியது. அந்தக் காலத்துக் கவிதைகள் சிலவற்றில் ஆழமற்ற தெளிவும் வேகமற்ற உணர்ச்சியும் தோன்றின. இவையும் அக்காலத்தவருக்கு ஏற்றனவாக இருந்தன. இந்தக் கவிதைப் போக்குக்கு மாறாக எழுதப்பட்ட பாடல்களிலேயே தற்காலக் கவிதையின் தோற்றத்தைக் காணலாம்.

டெனிசன் காலத்தின் பிற்பகுதியில், அவர் புகழுக்கு எதிரிடையாகப் புகழ்பெற்றவர் பிரௌனிங். முதலில் இவர் பாடல் மக்களின் மதிப்பைப் பெறவில்லை. அதற்கு ஒரு காரணம் அது படிப்பவருக்கு எளிதில் விளங்காததே. சரித்திரத்தின் இருண்ட மூலை முடுக்குகளில் கிடந்த விஷயங்கள் பலவற்றைப் பிரௌனிங் படித்திருந்தார். உள்ளும் புறமும் நிகழும் பல போராட்டங்களில் ஈடுபட்டு, ஒவ்வொருவனுடைய அந்தராத்மாவும் தனிப் பண்பாடு பெற்று விளங்குகிறது என்பதை வெளியிடுவது பிரௌனிங் எழுதிய கவிதையின் தனிச் சிறப்புக்களில் ஒன்று. மடாதிபதி, மாந்திரிகன், கொலையாளி, நீதிபதி போன்ற நூற்றுக்கணக்கானவர் தம் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் வளர்ச்சி பெற்றுத் தேறிய பிறவிக்குணங்களின் பண்பாட்டால் ஓர் அரிய சோதனையான சமயத்தில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், அவர்களது வாழ்க்கையும் செயல்களும் அவரவர் உள்ளத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்று காட்டும் பாடல்கள் பல பிரௌனிங் கவிதையில் முதன்மை வாய்ந்தன. இயற்கையையும் காதலையும் பற்றிய இனிய பாடல்களையும் அவர் எழுதினார். எனினும் அவர் கவிதையிற் பெரும்பான்மை, முற்கூறிய இனத்தைச் சேர்ந்தவை. இந்தப்பாடல்கள் சிக்கலான பொருளையும், கரடுமுரடான நடையையும் கொண்டவை. ஒருவனைப் பற்றி அவனுடைய பகைவன் மனத்தில் எழும் வெறுப்பையும் இகழ்ச்சியையும் வெளியிடும் பாடல் ஒன்றில் வசைமொழிகள் மட்டுமன்றிப் பொருளற்ற முரட்டு ஒலியும் அமைந்துள்ளன. சொல் நயத்தைக்காட்டிலும் சொல்லுக்கும் பொருளுக்கும் உடன்பாட்டைத் தேடுவது, படிப்போருக்கு விளங்க வைப்பதைவிடக் கவிஞன் தன் உணர்ச்சிகளை உள்ளபடி வெளியிடுவது ஆகிய இவ்விரண்டு சிறப்பியல்புகளையும் பிரௌனிங்கின் கவிதையில் காணலாம். இவை தற்காலக் கவிதையின் இலக்கணத்தில் சேர்ந்தனவே.

விக்டோரியா காலக் கவிகளுள், டெனிசனுக்கும் பிரௌனிங்கிற்கும் அடுத்த இடம் வகிப்பவர் மாத்தியு ஆர்னல்டு. அவர் கவிதையில் புதுமையில்லை. ஆனால் பல நயங்களுண்டு. முக்கியமாகக் கிரேக்கக் கவிதையின் பெருமையை ஓரளவேனும் பிரதிபலிக்கச் செய்ய வேண்டுமென்ற அவரது ஆர்வம் சில வேளை நிறைவேறுவதுண்டு. தம் இலட்சியம் நிறைவேறாத சலிப்பே அவர் பாடல்களில் அடிக்கடி தொனிக்கும். “கவிதையே மொழியின் கலை உருக்களிற் சிறந்தது. கலையழகிற் சிறந்த கவிதை, ஆழ்ந்த கருத்தையும் உள்ளுறையாகக் கொண்டு திகழ்வதைச் சில பாடல்களிற் காணலாம். இவை கவிதையிலக்கணத்துக்கு மேற்கோள்களாக விளங்குவன” என்று ஆர்னல்டு தம் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதினார். சமூக இலட்சியங்களும் மொழி வளர்ச்சியும் கவிஞனுக்கு இடையூறாக வின்றித் துணையாக வாய்க்கும் நற்காலத்தில் ஆக்கத் திறமையுள்ள கவி, அழியாச்சுடர்களாய் விளங்கும் கவிதை எழுதும் வாக்கு வன்மை பெறுகின்றான். ஹோமர், டான்டே, ஷேக்ஸ்பியர் என்னும் இவர்களது கவிதையின் ஒப்பற்ற பெருமைக்கு இவற்றையே காரணமாகக் கூறலாம். ”கவிதைக்கு மாறுபாடான சூழ்நிலையில் உற்பவிக்கும் பாடல்கள், சூழ்நிலையின் காரணமாகவோ, அதை மீறி எழுதும் வன்மையற்ற ஆசிரியனின் திறமைக் குறைவாலோ சிறுமையடைகின்றன” என்று ஆர்னல்டு கூறினார். தம் சூழ்நிலையின் குறைகளை அவர் விளக்கினார். அதற்கு முன்பே தாம் கவிதை எழுதுவதை யும் நிறுத்திவிட்டார்.

விஞ்ஞான அபிவிருத்தி, செல்வப் பெருக்கம், எந்திர

உற்பத்திப் பெருக்கம் இவற்றைச் சமூக இலட்சியங்களாகக்கொண்ட 19-ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் கலைஞன் வெறுக்கத்தக்கது என்று வேறு சிலரும் நினைத்தார்கள்.