பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்லர், ஆல்பிரடு

347

ஆடி

செய்த கலகங்களை 978-ல்அடக்கினான். இவன் 982-இல் இத்தாலி மீது படையெடுத்தபோது சாரசன்களால் கலாபிரியாவில் முறியடிக்கப்பட்டான். இத்தோல்வியால் ஜெர்மனியில் இவனுக்கிருந்த அதிகாரமும் குலையத் தொடங்கிற்று. 983 டிசம்பர் 7-ல் இவன் ரோம் நகரத்தில் இறந்தான்.

ஆட்டோ III (980-1002) II-ம் ஆட்டோவின் மகன் ; இவன் தன் மூன்றாம் வயதிலேயே ஆக்கனில் முடிசூட்டப் பெற்றான். இவன் தாய் இவனுக்காக ஆட்சிபுரிந்தாள். 995-ல் இவன் ஆட்சியை மேற்கொண்டான். இவன் உறவினனான பிரூனோவைப் போப்பாக நியமித்தான். இவனுக்கு மதப்பற்று அதிகம் ; தன்னைக் ‘கிறிஸ்துவின் அடியவன்’ என்று கூறிக்கொண்டான். 1002-ல் இவன் சுரம்கண்டு இறந்தான். இவனோடு சாக்சன் வம்சம் முடிவுற்றது.

ஆட்டோ IV (சு.1175-1218) சாக்சன் டியூக் ஹென்ரியின் இரண்டாம் மகன். இவன் வளர்ந்ததெல்லாம் இங்கிலாந்திலேயே. 1198-ல் இவன் ஆக்கனில் ஜெர்மன் அரசனாக முடிசூட்டப்பெற்றான். இவனுக்கு ஜெர்மனியில் அதிக ஆதரவு கிடைக்கவில்லையாயினும், போப் III-ம் இன்னசன்டின் ஆதரவு இருந்தது ; இவன் உள்நாட்டுப் போரில் தோற்று, 1207-ல் இங்கிலாந்திற்குத் திரும்பினான். இவனுடைய எதிரியான பிலிப் அடுத்த ஆண்டே கொலையுண்டு இறந்து விட்டதால் இவன் மறுபடியும் ஜெர்மனியின் மன்னனானான். ஆனால் ஆங்கிலேயருடைய ஆதரவு இருந்தும், இவனால் ஜெர்மனியில் தன்னுடைய எதிரிகளை வெல்ல முடியவில்லை. 1218-ல் ஹார்ஸ்பர்க் என்னுமிடத்தில் இவன் இறந்தான்.

ஆட்லர், ஆல்பிரடு (Adler Alfred) (1870- 1937) ஆஸ்திரிய உளவியலார். முதலில் பிராய்டின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிறகு மனிதனுடைய நடத்தையை விளக்கப் பால் உணர்ச்சி (Sex Impulse)யைவிட அதிகார உணர்ச்சியே (Will to Power) பெரிதும் துணைசெய்யும் என்று கருதினார். மனக்கோளாறுகளை விளக்குவதற்குத் தாழ்வுணர்ச்சிக் கோட்டம் (Inferiority Complex) என்னும் கருத்தைப் பயன்படுத்தினார். அவர் பிராய்டு, யுங் ஆகியவர்களுடன் சேர்ந்து உளவியலை ஒரு புதிய படியில் ஏற்றி வைத்தார். பெ.

ஆட்லெஸ் (Atlas) கிரேக்கப் புராணம் கூறும் டைட்டன்கள் என்ற அசுரர்களுள் ஒருவன். இவன் அரக்கருடைய போரில் கலந்து கொண்டதற்காக விண்ணுலகத்தைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டிருக்குமாறு இவனுக்குக் கிரேக்கக் கடவுள் ஜூஸ் தண்டனை அளித்தார். இவனே இப்போது ஆப்பிரிக்காவிலுள்ள அட்லாஸ் மலையாக இருப்பதாகக்கூறுவர். இவன் பூமியைத் தாங்குவதான படத்தைப் பிளீமிஷ் பூகோள சாஸ்திரி மெர்க்காட்டர் தமது தேசப்படப் புத்தகத்தில் பொறித்தார். அன்று முதல் தேசப்படப் புத்தகம் ஆட்லெஸ் என்று பெயர் பெறுவதாயிற்று.

ஆட்லெஸ் மலைகள் வடமேற்கு ஆப்பிரிக்காவில் மத்தியதரைக் கடலுக்கும் சகாராப் பாலைவனத்திற்கும் இடையே உள்ள ஒரு மலைத்தொடர். இத்தொடர் மொராக்கோ, ஆல்ஜிரியா, டூனீஷ்யா வழியாக 1,500 மைல் நீண்டு கிடக்கிறது. இம்மலைகள், உயரம் குறைவான கரையோர மலைகளும், உயர்ந்து ஓங்கியுள்ள உள்நாட்டு மலைகளும் என இரு பகுதிகளாக இருக்கின்றன. உள்நாட்டு மலைகளில் மொராக்கோ மலைத் தொடர் மிகவும் முக்கியமானது. இதன் இடைப்பகுதியிலுள்ள டிசி மலையுச்சி, சு. 1,500 அடி உயரத்திலுள்ளது.

இம்மலைத்தொடருக்கு ஆட்லெஸ் என்று பெயரிட்டவர் ஐரோப்பியர்கள். ஆகாயத்தைத் தன் தோளிற் சுமந்துகொண்டிருக்கும்படி சபிக்கப்பட்ட ஆட்லெஸ் என்பவன் இம்மலைகளில் வசிப்பதாகக் கதை. அப்பெயரையே இம்மலைக்கும் இட்டனர். வட ஆப்பிரிக்கச் சுதேசிகளில் ஒருவகையினரான பர்பர்கள் இம்மலைப் பிரதேசத்தில் வசிக்கின்றனர். வெள்ளி, ஈயம், தாமிரம், இரும்பு முதலியன இங்குக் கிடைக்கும் தாதுப்பொருள்கள்.

ஆடபான், ஜான் ஜேம்ஸ் (Audubon, John James, 1785-1851) பறவைகளின் படம் எழுதுவதில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கர். அமெரிக்கக் கலை வரலாற்றில் இயற்கைத் தன்மை விளங்கும் ஓவிய முறையை வளர்த்தவர்களில் இவர் முதன்மையான ஒருவர்.

ஆடர் (Adder): இதற்கு ‘வைப்பர்’ என்றும் பெயர். ஒருவகை நச்சுப்பாம்பு. இது குட்டையானது. 15 அங்குலத்துக்கு மேலிராது. விரியன் கணம். கழுத்துப்பாகம் சிறுத்துத் தோன்றும். இதன் நிறம் பழுப்பு அல்லது சற்றுச் சிவப்பு. முதுகு நடுவே நெளிநெளியான கோடு அல்லது புள்ளித் தொடர் உண்டு. வயிறு கறுத்த சாம்பல் நிறம்; அல்லது கறுப்பாகவே இருக்கும். நிறத்தில் வேறுபாடுகள் உண்டு. பெரியனவாகவும் சற்றுச் சிவப்பாகவும் உள்ளவை பெண் பாம்புகள். ஐரோப்பாவில் நெடுகப் பரவியிருப்பது இந்தப் பாம்பு தான். பைன் மரக்காடுகளிலும், ஹெதர் செடி வெளிகளிலும் காணப்படும். இது ஒன்றுதான் பிரிட்டனில் உள்ள விஷப்பாம்பு. பல்லி போன்ற ஊர்வனவும், சுண்டெலி போன்ற சிறு விலங்குகளும் இதற்கு இரை. இது கடித்தால் சாமானியமாக மனிதர் சாவதில்லை; ஆடு, நாய் முதலியன செத்துப்போகும். ஆபத்துக் காலத்தில் இது தன் குட்டிகளைத் தன்னுள் வைத்துக் காப்பாற்றும் அல்லது அவற்றைத் தன் தொண்டைக்குள் நுழைந்துகொள்ளச் செய்யும் என்று சொல்லுவதுண்டு. இந்தச் செய்கை உண்மைதானா என்று தெரியவில்லை. பார்க்க: பாம்பு.

ஆடாதோடை புதராக வளரும் ஒரு சிறு செடி.

ஆடாதோடை

சாதாரணமாக வேலிச் செடியாக நட்டு வளர்ப்பதுண்டு. இந்தியச் சமவெளிகள் எங்கும் உண்டு. கடல் மட்டத்துக்கு மேல் 4,000 உயரம் வரையிலும், இமயமலையின் அடிச்சரிவுகளிலும் காணலாம். இதற்கு வாசகா என்று வடமொழியிற்பெயர். ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் மிகவும் சிறந்த மூலிகை. மார்ச் சளி, சுவாசகாசம், சுரம், காமாலை, க்ஷயம் முதலிய பல நோய்களுக்குப் பயன்படும். இலையும் வேரும் இருமலுக்கு நல்ல மருந்து. குடும்பம்: அக்காந்தேசீ (Acan- thaceae); இனம்: ஆடாதோடா வாசிகா (Adha ஆடாதோடை toda vasica).

ஆடி (Mirror): ஒளிப் பிரதிபலிப்பினால் பிம்பங்களைத் தோற்றுவிக்கும் அமைப்பு ஆடி எனப்படும். தொன்றுதொட்டே ஆடிகள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பயனாகி வந்துள்ளன. சமதளமாகவோ, வளை அடி-