பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடி

348

ஆடி

வாகவோ உள்ள ஓர் உலோகத் தட்டின் ஒரு புறத்தில் ஒளியைப் பிரதிபலிக்குமாறு நன்றாக மெருகேற்றி, அதைப் பழங்காலத்தில் ஆடியாகப் பயன்படுத்தி வந்தனர். கண்ணாடி ஆடிகள் பின்னரே வழக்கத்திற்கு வந்தன. முதலிற் பயனாகிய கண்ணாடி ஆடிகளில் ஒரு புறத்தில் வெள்ளியப் பூச்சுப் பூசி ஒளியைப் பிரதிபலிக்கச் செய்தனர். வெள்ளிப்பூச்சுக் கொண்ட ஆடிகள் பின்னர் வழக்கத்திற்கு வந்தன. ஒரு கண்ணாடித் தட்டின்மேல் இரசத்தைப் பரப்பி, அதை ஒரு தகரத் தட்டினால் அழுத்தி, இரசத்திலிருந்து ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து சிறந்த ஆடிகள் தயாரிக்கப்பட்டன. வெள்ளீயம் இரசத்துடன் கலவையாக இறுகிப் பளபளப்பான பரப்பைத் தருகிறது. ஆடிகளைச் செய்ய இம்முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. சமதள ஆடிகளுக்கு இம்முறை ஏற்றது. ஆனால் வளைந்த ஆடிகளை இம்முறையில் தயாரிக்க முடிவதில்லை.

கண்ணாடியாலான ஆடிகள் காற்றுப்பட வைக்கப்பட்டால் காலப்போக்கில் கறுத்துவிடுகின்றன. இக்குறை உலோக ஆடிகளில் இல்லை. ஆகையால் உலோக ஆடிகளே பழங்காலத்தில் அதிகமாக வழங்கி வந்தன. நன்றாக மெருகேற்றப்பட்ட வெள்ளிப் பரப்பு ஒன்று அதன்மேல் விழும் ஒளியில் சுமார் 60 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கவல்லது. வெள்ளியைத் தவிர எஃகு பரப்புக்களும் ஆடிகளாகப் பயனாகின்றன.

கண்ணாடிப் பரப்பின்மேல் இரசாயன முறையால் வெள்ளியைப் படிவிக்கும் முறை லீபிக் என்ற ஜெர்மானிய இரசாயன அறிஞரால் 1835ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. அம்மோனியா கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை ஓர் ஆல்டிஹைடினால் (த.க.) குறைத்து அவர் வெள்ளியைப் படிவித்தார். இன்றும் இதே தத்துவம் கையாளப்படுகிறது. வெள்ளியைக் கொண்ட கட்டிலிருந்து அதைப் படிவிக்க ராஷல் உப்பு, சர்க்கரை முதலிய குறைக்கும் பொருள்களும் பயனாகின்றன. இரசாயனக் கரைவில் கண்ணாடித்தட்டை முழுக்கி எடுத்தோ, கரைவை அதன்மேல் தெளித்தோ வெள்ளியைப் படிவிக்கலாம்.

கண்ணாடியின் பின்புறத்தில் வெள்ளிப் பூச்சுப் பூசப் பெற்ற ஆடிகளில் இப்பூச்சின்மேல் அரக்கு எண்ணெயும் அயச்செந்தூரமும் பூசப்பட்டு, வெள்ளிப் பூச்சுக் கெடாமற் பாதுகாக்கப்படுகிறது. வேறு முறைகளால் வெள்ளிப் பூச்சுப் பூசுவதும் உண்டு. துருவு விளக்குக்களில் உள்ள குழி ஆடிகள் கண்ணாடியால் ஆனவை. கண்ணாடிப் பரப்பின் மேல் வெள்ளியை மின் பகுப்பினால் படியச்செய்து, அதைப் பாதுகாக்க அதன்மேல் செம்பு படிவிக்கப்படுகிறது. எதிர்முனைக் கதிர்களைக் கொண்டும், உலோகத்தை ஒரு மின்னுலையில் சூடேற்றியும் வெள்ளிப்பூச்சைப் பெறுவதுண்டு.

பிரதிபலிப்பு என்னும் ஒளியியல் விளைவு இரு விதிகளையொட்டி நிகழ்கிறது: 1. ஆடியின்மேல் படும் கதிரும், பிரதிபலிக்கப்படும் கதிரும், இவ்விரண்டும் ஆடியைச் சந்திக்குமிடத்தில் வரையறுக்கப்படும் செங்குத்துக்கோடும் ஒரே தளத்தில் இருக்கும். 2. படுகோணமும், பிரதிபலிப்புக் கோணமும் சமமாகவிருக்கும். இவ்விதிகளையொட்டி வெவ்வேறு வகையான ஆடிகளில் பலவேறு ஒளியியல் விளைவுகளைக் காண்கிறோம்.

சமதள ஆடி : விகாரமோ, பிறழ்ச்சியோ இல்லாத பிம்பத்தைச் சமதள ஆடிகளில் பெறலாம். பிம்பத்தின் அளவு பொருளின் அளவிற்குச் சமமாகவும், ஆடியிலிருந்து பொருளின் தொலைவிற்குச் சமதூரத்தில் ஆடியின் பின்புறமும் இருக்கும். பிம்பத்தில் இட வல மாற்றம் இருக்கும். இதைத் திரையில் பெற இயலாது. ஆகையால் இது ஒரு பிம்பம். யொன்று சுழன்றால் அது சுழலும் கோணத்தைப் போல் பிரதிபலிப்புக் கதிரானது இருமடங்கு சுழலுகிறது. இத்தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு கோணமானி (Sextant) என்ற கருவி அமைக்கப்படுகிறது. சிறு கோணங்களை அளவிட ஓர் ஆடியையும் அளவையையும் பயனாக்குவதிலும் இத் தத்துவம் பயனாகிறது.

சமதள ஆடி

கோள ஆடிகள் : குவி ஆடிகளையும், குழி ஆடிகளையும் கோளப்பரப்பின் பகுதிகள் எனக் கொள்ளலாம். இக்கோளத்தின் மையம் ஆடியின் வளைவு மையம் எனப்படும். ஆடியின் மையத்தையும், ஆடியின் வளைவு மையத்தையும் இணைக்கும் கோடு ஆடியின் பிரதம அச்சு எனப்படும். ஒரு குழி ஆடியின் மையத்திற்கருகே

பிரதம அச்சிற்கு இணையாக ஓர் ஒளிக்கதிர் விழுந்தால், அது பிரதிபலிப்பிற்குப் பின் அச்சின் மேலுள்ளதொரு புள்ளியில் குவியும். இப்புள்ளி குழி ஆடியின் குவியம் எனப்படும். இதைப் போலவே குவி ஆடியின் மேல் விழும் இணைக்கதிர் அதன் பின்னாலுள்ளதொரு புள்ளியிலிருந்து விரிந்து வருவதுபோல் தோன்றும். இப்புள்ளி குவி ஆடியின் குவியம் எனப்படும். குவியத்திற்குமுள்ள தொலைவு, ஆடியின் குவியத் தூரம் எனப்படும். ஒரு குழி ஆடியிலிருந்து ஒரு பொருளின் தொலைவு குவியத் தூரத்திற்கும் குறைவாயின் ஆடியில் மாயபிம்பம் தோன்றும். இத்தொலைவு அதிகமாயின் நிஜ பிம்பம் கிடைக்கும். இப்போது பிம்பம் பொருளின் தலைகீழாக இருக்கும். தொலைவைப் பொறுத்துப் பிம்பத்தின் அளவு பொருளைவிடப் பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கும். குவி ஆடியில் தோன்றும் பிம்பம் எப்போதும் மாய பிம்பமாகவும், நேராகவும் பொருளைவிடச் சிறியதாகவும் இருக்கும்.