பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடு

351

ஆடு

ஆறாம் மாதம் என்பார்கள். ஓர் ஈற்றில் சாதாரணமாக இரண்டு குட்டிகள் பிறக்கும். அடிக்கடி மூன்றும், சில சமயங்களில் ஒன்றும், ஐந்தும் கூடப் பிறக்கும். குட்டி பிறக்கும்போதே உடம்பில் மயிர் மூடியிருக்கும். கண் திறந்திருக்கும். பிறந்து முன்று நாலு மணி நேரத்தில் குட்டி ஓடித் துள்ளிக் குதிக்க முடியும். குட்டி 3- 6 மாதம் தாய்ப்பால் குடிக்கும். இப்போது 10, 11 மாதம் குடிக்கும் நல்ல வகைகளை உண்டாக்கி யிருக்கிறார்கள். இதனால் மனிதன் பால் கறந்து கொள்ளும் காலம் நீடிக்கும். குட்டி ஆறு மாதத்தில் வயதுக்கு வரும். ஆயினும் நல்ல வகை ஆடுகளை ஓராண்டு நிறைவதற்கு முன் குட்டிபோட விடுவதில்லை. வெள்ளாடு 10-14 ஆண்டு உயிருடன் இருக்கும். ஓர் ஆடு சாமானியமாக 100-120 ராத்தல் நிறையுள்ளது.

வெள்ளாட்டுப் பால் வெண்மையாகவும் இனிப்பாகவும் இருக்கும். உடம்பை வளர்க்கும் சத்து இதில் மிகுதி. பசும்பாலில் இருப்பதைவிட இதில் கொழுப்பும் புரோடீனும் மிகுதி. இதில் ஆல்புமின், புரோட்டீன் சம்பந்தமில்லாத நைட்ரொஜென் அதிகமுண்டு. நயசின், தயாமின் என்னும் வைட்டமின் பீ கலப்புள்ள பொருள்கள் முறையே பெல்லாக்ரா, பெரி பெரி என்னும் நோயைத் தடுப்பவை இதில் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, பசும்பாலில் உள்ளதுபோலவே இருக்கின்றன. பசுவின்பாலைவிட இது எளிதில் செரிமானமாகும். நோயாளிகளுக்கு ஏற்றது. எலும்புருக்கி நோய், வயிற்று நோய், குடல் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உத்தமமான உணவு. இந்தப் பாலைக் குடித்துப் பழகினவர்கள் பசுவின்பாலைவிட இதையே விரும்புகின்றனர். ஆட்டு வெண்ணெய் அவ்வளவு நன்றாக இராது. பால்கட்டி நன்றாக இருக்கும். உலகத்திலே மாட்டுப் பாலைவிட ஆட்டுப்பாலையே மிகுதியாக மக்கள் உட்கொள்கின்றனர்.

வெள்ளாட்டிறைச்சி செம்மறியிறைச்சியைப் போல அவ்வளவு சுவையுடையதன்று. ஆயினும் பத்தியத்துக்கு இது நல்லதென்பர். வெள்ளாட்டுத் தோல் மிகவுயர்ந்தது. உலகப் புகழ் பெற்ற மொராக்கோ என்பது வெள்ளாட்டுத் தோலே. இளங்குட்டிகளின் தோலால் கைக்கு உறை, காற்செறி முதலியன செய்கிறார்கள். இது விலையுயர்ந்ததாகையால் எலித்தோல், நாய்த் தோல்களை இதற்குப் போலியாக உபயோகிக்கிறார்கள்.

வெள்ளாட்டை நாய், பூனை வளர்ப்பதுபோல வீட்டில் ஆசைக்காக வளர்ப்பதுண்டு. இது கூர்மையான அறிவுள்ளது. குறும்பு செய்வதில் விருப்பமுள்ளது. ஆதலால் கட்டிப்போட்டு வைப்பார்கள். குழந்தைகளுடைய வண்டிக்கு ஆட்டைக் கட்டுவதுண்டு. சில நாடுகளில் பொதி சுமக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளாடுகளெல்லாம் பாரசீகத்திலிருக்கும் காப்ரா பசாங்கு என்னும் காட்டாட்டிலிருந்து உண்டானவை. இதிலிருந்து ரோசனம் எடுக்கப்படுகிறது. வெள்ளாட்டில் மூன்று முக்கிய வகைகள் உண்டு. சுவிஸ் ஆடு கூரான வடிவுள்ள, நேராக நிமிர்ந்துள்ள காதுள்ளது. ஐரோப்பிய அமெரிக்க வெள்ளாடுகள் இதன் வழியின. நியூபியன் ஆட்டின் காது மடிந்து தொங்கும். இந்திய வெள்ளாடுகள் இதன் சந்ததியின. யமுனைக் கரையாடும், சூரத்தி என்னும் வகையும் உயர்ந்தவை. மூன்றாவது இந்த நியூபியன் வகை நல்ல பால் தரும். வகை நல்ல கம்பளிமயிர் தருவது. அங்கோரா, காச்மீர ஆடுகள் இந்தச் சாதியின. அங்கோரா (த. க.) உடம்பு முழுவதும் நீண்ட மயிருள்ளது. இதன் மயிர் மிகவுயர்ந்தது. இதிலிருந்து மொகேர் என்னும் உயர்ந்த துணிவகைகளும் போர்வைகளும் நெய்யப்படுகின்றன. வெள்ளாடு மிகுதியாக உள்ள நாடுகளில் இந்தியா முதன்மையானது. இங்கு ஐந்துகோடி ஆடுகள் இருக்கின்றன. துருக்கி, தென்னாப்பிரிக்க யூனியன், ஈரான், ரஷ்யா, கிரீசு, மொராக்கோ இதையடுத்தவை.

1. காச்மீர வெள்ளாடு: இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளில் இது மென்மையான பட்டுப்போன்ற மயிருக்குப் பேர்போனது. இதன் மயிர் காச்மீர சால்வையும் விலையுயர்ந்த மெதுவான ஆடையும் நெய்வதற்கும் உதவுகிறது. ஒரு சால்வை நெய்வதற்குக் குறைந்தது பத்து ஆடுகளின் மயிர் தேவையாகும். இந்த ஆடுகளைப் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் கூட வளர்க்கிறார்கள்.

2. நீலகிரி வரையாடு: இது நீலகிரியில் இருக்கும் காட்டு வெள்ளாடு. இதற்கு நீலகிரித் தகர் என்றும் பெயர்.

நீலகிரித் தகர்

இமயமலையில் ஒரு காட்டாடு இருக்கிறது. அதற்கு இமயத் தகர் என்று பெயர். நீலகிரி வரையாடு இமயவரை யாட்டைக் காட்டிலும் சற்றுப் பெரியது. தோளருகே இதன் உயரம் 39-42 அங்குலம். இதுவரையில் கிடைத்த கொம்புகளில் மிகப் பெரியது 17½ அங்குல நீளமும் 9⅛ அங்குலச் சுற்றளவும் உள்ளது. கொம்பின் வெளிப்புறம் நீலகிரித் தகர் ஏழு உருட்சியாக இருக்கும். மடியில் இரண்டே காம்புகள் உண்டு. இந்த ஆட்டின் நிறம் கருமையான மஞ்சட் பழுப்பு. அடிப்புறம் சற்று வெளுத்திருக்கும். வரையாடு நீலகிரியிலும், ஆனைமலையிலும், மேற்குத் தொடர்ச்சிமலையில் 4000-6000 அடி உயரத்திலும் காணப்படும். மற்ற வெள்ளாடுகளைப் போலவே ஆறு ஆடுகள் சேர்ந்து மந்தைகளாகக் காலையிலும் மாலையிலும் மேயும். வெயில் நேரத்தில் உயரமான இடத்தில் ஏறிப் படுத்து இளைப்பாறும். இப்படி இளைப்பாறும் போது இரண்டொரு பெண்ணாடுகள் கீழேயிருந்து இடர் உண்டாகாதபடி காவலாக நிற்கும். இது எல்லாக் காட்டாடுகளிலும் காணும் வழக்கம். இந்த ஆடுகளின் பார்வை மிகவும் விரைவும் கூர்மையுமானது. இவை நிரம்ப எச்சரிக்கையுள்ளவை. செங்குத்தான திறமையுடையவை. இடங்களிலும் செல்லக்கூடிய இவை இளைப்பாறும் இடத்துக்கு மேலே இருந்து ஏதாவது தீய விலங்கு வந்தால் அதை இவை அவ்வளவு எளிதாக அறிந்து கொள்வதில்லை. சிறுத்தை, புலி, காட்டு நாய்க்கூட்டம் முதலியவற்றால் இவை அழிவுறுகின்றன. வேட்டையாடுவோரும் இவற்றைப்பேரளவுக்கு அழித்துவிட்டனர். இப்போது சட்டம் ஏற்படுத்தி இவற்றைக் காத்து வருகின்றனர்.

முதிர்ந்த ஆண் ஆடுகள் கோடைக் காலத்தில் மந்தையைவிட்டுத் தனியே மேய்கின்றன. மந்தையில் சிறு குட்டிகள் ஆண்டின் எல்லா மாதங்களிலும் காணப்படுகின்றன. ஆயினும் இந்த ஆடுகள் பெரும்பாலாகக் கோடையின் தொடக்கத்தில்தான் குட்டி போடுகின்றன. சாதாரணமாக ஒரு ஈற்றுக்கு ஒரு குட்டி தான் போடும். சில சமயங்களில் இரண்டு குட்டிகளும் போடும்.