பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கெல்தாமா

6

அக்ரிகோலா


அக்கெல்தாமா : ரத்தக் களம் என்னும் பொருள்படும் இக்கிரேக்கச் சொல் எருசலேமிலுள்ள ஓர் இடுகாட்டு நிலத்தைக் குறிக்கும். ஏசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுப்பதற்கு யூதாசு இஸ்காரியத்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக் காசுகள் குற்றத் தொடர்பு உடையவை என்று கருதப்பட்டமையால் அப்பணத்தை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை. வெளிநாட்டார் வந்து எருசலெத்தில் இறந்துவிடின் அவ்வுடலங்களைப் புதைப்பதற்கு ஒரு பொது இடம் வேண்டுமென்று அம்முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அவ்வூர்க் கருமார்கள் ஒரு குயவனிடமிருந்து சிறிது நிலம் வாங்கினர். அதற்கே அக்கெல்தாமா என்பது பெயர். இப்பொழுது அங்கு எக்கொலைக் களத்தையும் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக வழங்குகிறது.

அக்டோபர்ப் புரட்சி : 1917-ல் ரஷ்யாவின் தலைநகராயிருந்த பெட்ரோகிராடில் நடந்த போல்ஷவிக் புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியோடு போரிட்டுச் சோர்ந்துபோன ரஷ்யப் படைகளும், அக்காலத்தில் ரஷ்யாவில் ஆட்சிப்புரிந்த வமிசத்தாரின் அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும் கொடுங்கோல் முறையாலும் பொறுமையிழந்த குடிமக்களும் இப்புரட்சிக்கு வழிதேடினர். அவ்வாண்டில் ரஷ்யப் பிரதமராயிருந்த கெரன்ஸ்கி புரட்சிக்காக அமைந்த சோவியக் கமிட்டிகளின் முழு நோக்கங்களையும் வலியையும் உணரவில்லை. ட்ரஸ்கி தலைமையில் பெட்ரோகிராடில் கூடிய சோவியத் கமிட்டியானது ராணுவப் புரட்சிக் கமிட்டி ஒன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முறியடித்தது. கெரென்ஸ்கி ஓடிவிட்டார். அதிகாரம் முழுவதும் லெனின், ட்ராட்ஸ்கி ஆகிய இருவரிடம் வந்தது. அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கிய புரட்சி நவம்பர் 7 ஆம் தேதி சோவியத்திற்கு வெற்றிகரமாக முடிந்து ரஷ்யா முழுவதும் பரவிற்று. அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பழைய கிரெக்கப் பஞ்சாங்கப்படி நவம்பர் ஏழாம் நாள் அக்டொபர் 25 ஆம் நாளாகையால் அப்புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். பார்க்க: சோவியத் ரஷ்யா வரலாறு.

அக்பர் (1542-1605): ஜலாலுதீன் முகம்மது அக்பர் என்பதே இவனுடைய முழுப்பெயர். அக்பர் என்னும் சொல் மிகவும் பெருமையுடையவன் என்று பொருள்படும். ஷெர்ஷாவால் இவன் தந்தை ஹுமாயூன் இராச்சியத்தைவிட்டு விரட்டப்பட்டு சிந்துக்கதிக் கரையில் உள்ள அமரக்கோட்டை என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது இவன்பிறந்தான். இவனுக்கு சிறுவயதில் படிப்பில் மனம் செல்லவில்லை; என்றைக்குமே எழுத்துக் கற்றுக் கொள்ளவில்லை. விளையாட்டுகளிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் மனோவலியும் உடல்வலியும் ஒருங்கே பெற்றான். வீரத்தில் இவனை மகா அலெக்சாந்தருக்கு ஒப்பிடலாம். 1556-ல் ஹுமாயூன் இறந்த பிறகு இவன் அமிர்தசரசுக்கு அருகிலுள்ள கலனார் என்னுமிடத்தில் முடிசூடிக் கொண்டான். இவன் இளமையில் தனக்கு துணையாயிருந்த பைரம்கானின் உதவியைக்கொண்டு சிகந்தர்ஷாவின் மந்திரியாயிருந்த ஹேமூ என்னும் இந்துவைத் தோர்கடித்து தன் அரசின் நிலையை வலுப்படுத்திக்கொண்டான். 1560-ல் பைரம்கானை மக்காவிற்குப்போக ஏற்பாடு செய்துவிட்டு பிறர் தலையீடு இன்றி ஆட்சியை மேற்கொண்டான். இவன் தனது பலத்தாலும் அருந்திறமையாலும் வட இந்தியாவின் பெரும்பகுதியை வென்று மொகலாய சாம்ராஜ்சியத்தை ஏற்படுத்தினான். இவன் 1562-ல் ஆம்பரைச் சேர்ந்த இந்து இளவரசி யொருத்தியை மணந்துகொண்டான். அவன் மகனான சலீம் பிறகு ஜகாங்கீராக ஆட்சி புரிந்தான். அக்பர் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையுண்டாக்க முற்பட்டான். மான்சிங் முதலிய ராஜபுத்திர வீர்ர்களைத் தனது அரசில் அலுவலர்களாகச் சேர்த்துக்கொண்டான். இவன் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து தான் புதியதாக நிருமாணித்த பட்டேபூர் சிக்ரி என்னும் ஊருக்கு மாற்றிக்கொண்டான். இவனுக்குச் சிற்பம், இசை முதலிய அழகுக் கலைகளில் நல்ல பயிற்சி உண்டு. தான்சென் என்னும் சிறந்த இசைப் புலவன் இவன் அவையில் இருந்தான். அக்பர் ராஜா தோடர்மாலின் உதவியைக்கொண்டு அரசியல் நிருவாக முறையை முழுவதும் மாற்றியமைத்து செம்மைப்படுத்தினான். போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் இவன் வெற்றி கண்டான். சமய ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு மண்டபம் கட்டினான். எம்மத்த்தையும் இவன் வெறுக்கவில்லை. பிற மத்த்தவர்களைத் துன்புருத்தும் கொள்கையை இவன் ஆதரிக்கவில்லை. தின் இலாகி என்னும் ஒரு சமயத்தை நிறுவி அதில் தன் நண்பர்களை சேர்த்தான். ராஜா பீர்பால், அபுல்பசல், அபுல்பெய்சி, குர் தாஸ், முதலிய இலக்கியப் புலவர்களை யாதரித்தான். இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு வந்த ஜசியா என்னும் வரியை நீக்கினான். போர்க் கைதிகளை அடிமைகளாக்குவதை யொழித்தான். சதி என்னும் இந்து வழக்கத்தை யொழிக்க முதன்முதலில் ஏற்பாடு செய்தான். இவனுக்கு சிற்சில சமயங்களில் வெகுளி மிகுந்து விடுவதுண்டு ஆயினும் பொதுவாகக் கருணையுள்ளம் படைத்தவன். இறுதிக் காலத்தில் சலீமின் நடத்தையால் இவனுக்குச் சிறிது மனவருத்தம் உண்டாயிற்று. ஆயினும், கடைசியில் அவனையே முடி சூட்டிக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தன் 63-ஆம் வயதில், 1605-ல் இறந்தான். இந்திய வரலாறு கண்ட தலைசிறந்த மன்னர்களில் இவன் ஒருவன். தே. வெ. ம.

அக்பர் நாமா : இது அக்பரைக் குறித்து அபுல்பசல் தான் இறந்த 1602 வரையில் எழுதிய ஒரு வரலாற்று நூல். இது தைமூரிலிருந்து அக்பர்வரையிலுள்ள வமிசாவளியை எடுத்துரைக்கிறது. ஹுமாயூனையும் அக்பர் ஆட்சிக்கால வரலாற்றையும் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. இந்நூலில் அபுபசல் அக்பரை அளவிற்கு மிஞ்சி புகழ்ந்துள்ளான் என்று சிலர் கருதுவர். ஆயினும் அத்தகைய பகழ்ச்சிக்கு அக்பர் ஓர் அளவிற்கு பாத்திரமானவன் என்பது கருதத்தக்கது.

அக்பர்பூர் உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம். தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்கால கோட்டையொன்றின் சிதைவுகள் உள்ளன. இந்நகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன.

அக்யூமுலேட்டர் : பார்க்க; மின்கலங்கள்.

அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்(37-98) பிரிட்டனில் ரோமானியர்களுடைய கவர்னராக இருந்தவன். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சிபுரிந்தான். இவன் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே யிருந்த காலிடோனியர்களையும் வென்றான். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே