பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆந்தைகள்

377

ஆப்கானிய யுத்தங்கள்


ஆந்தைகள் : இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தைகள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வதற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரையைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப்பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தைகளின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப்பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம்.

நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தைகளின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு.

உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப்பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற்போதிலும் கம்பங்கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட்டினதும் கூக்குரலிடும்.

ஆந்தை

இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார்பும் வயிறும் உடையதும், கரும்புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட்டான் (Barn or Screech Owl) எனப்படும் மற்றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டைகளிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது.

குகைகளில் வாழும் பெருங்கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறைகள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளையும் இருளில் கொன்று வாழும். இதன் ஆழ்ந்த குரல் அந்திப் பொழுதில் நீண்டு தொனிக்கும்.

ஆந்தை
(ஊமன்)

கூகையைப் போலவேயுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந்தையின் கொம்புகள் குத்தாய் நிற்காது சிறிது படிந்திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர்வை அற்றிருக்கும். இது தண்ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலிகளையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா. கி.

ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பயணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்துமாகில் நன்மை உண்டாகும் என்பர்.

ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன.

ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக்கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாயிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல்வதாக ஆங்கிலேயர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ்தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன்பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப்கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந்தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற்றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878–1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்தமும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வியுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா-