பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானம்

379

ஆப்பியன் பாதை

ஆயினும் ஆப்கானியர்கள் வெளி நாட்டாருடைய தலையீட்டை விரும்பாமல் கிளர்ச்சி செய்தபோது ஆங்கிலேயர்கள் படை கொண்டு தாக்கவே பெரும்போர் மூண்டது. ஆப்கானியர்களுடைய எதிர்த் தாக்குதலுக்கு ஆற்றாமல் ஆங்கிலேயர்கள், பல இடங்களில் தோல்வி கண்டனர்.

1891ஆம் ஆண்டிற்குள்ளாக அமீர் அப்துர் ரஹ்மான் என்னும் மன்னன் நாட்டை நல்ல முறையில் சீர்திருத்தி அமைத்தான். 1901-ல் ஹபீபுல்லா அவனுக்குப்பின் அமீரானபோது நாட்டின் நிருவாகம் நல்ல முறையில் அமைக்கப்பட்டிருந்தது. 1919-ல் ஹபீபுல்லா கொலையுண்டிறந்தான். அவனுக்குப்பின் பதவிக்கு வந்த அவன் சகோதரன் நசிருல்லாவை நீக்கிவிட்டு. ஹபீபுல்லாவின் மூன்றாம் மகனான அமானுல்லா பட்டமெய்தினான். 1919-ல் அமானுல்லாவிற்கும் பிரிட்டிஷாருக்கும் சிறு போர் ஒன்று மூண்டு, 1921-ல் சமாதானம் ஏற்பட்டது. இச்சமாதான வுடன்படிக்கைப்படி ஆப்கானிஸ்தானத்தின் பூரண சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர். அமானுல்லா அரசியலில் மிகுந்த திறமையோடு நடந்துகொண்டான். துருக்கி, பாரசீகம் ஆகிய நாடுகளோடு நேசவுடன்படிக்கை செய்துகொண்டான். அவன் காலத்தில் ஆப்கானியர்களுடைய பண்டைய பண்பாடு ஓரளவு மறைந்து, அவர்கள் நவீன ஐரோப்பிய வாழ்க்கை முறைகளைச் சிறிது சிறிதாக மேற்கொள்ளத் தொடங்கினர். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான கல்வி முதலிய உரிமைகளை யளிக்க அமானுல்லா அரசாங்கம் முற்பட்டபோது ஆப்கானிய மக்கள் அரசனை எதிர்த்துக் கலகம் செய்யத் தொடங்கினர். 1928-ல் நிலைமை மிக்க மோசமாயிற்று. 1929-ல் அமானுல்லா முடி துறந்தான். மறுபடியும் அரசனாகும் எண்ணம் அவனுக்கு இருந்ததாயினும் அது கை கூடவில்லை. நாதர்கான் என்பவன் அமானுல்லாவிற்குப் பிறகு ஆப்கானிய மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆயினும் 1933-ல் அவன் கொல்லப்பட்டு இறந்தான். அவனுக்குப்பின் பட்டத்திற்கு வந்த சாகிர்ஷாடு நாட்டில் அடிமை நிலையை யொழித்தான். கல்வியைக் கட்டாயமாக்கினான். மேற் படிப்புக்கும் மாணவர்களை ஜப்பானுக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று. 1934-ல் ஆப்கானிஸ்தானம் சர்வதேச சங்கத்தின் உறுப்பு நாடு ஆயிற்று; 1937-ல் ஈரான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளோடு ஒரு நேச ஒப்பந்தம் செய்துகொண்டது ; இதற்குச் சாதாபாத் உடன்படிக்கை என்று பெயர். 1946-ல் ஆப்கானிஸ்தானம் ஐ. நா. சங்கத்தின் உறுப்பு நாடாயிற்று. சை. அ. வா. பு.

அரசியல் அமைப்பு : இந்நாட்டின் ஆட்சிமுறை அரசியல் அமைப்பிற்குட்பட்ட முடியாட்சி. அரச பதவி வமிச பரம்பரையாக வருவது. அரசாங்க அமைப்பிற்கும், படைக்கும், சமய அமைப்பிற்கும் அரசனே தலைவன். அவசரச் சட்டங்கள் இயற்றவும், போர் தொடுக்கவும், சமாதானஞ் செய்துகொள்ளவும் அரசனுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் தேசிய சபை எனப்படும் கீழ்ச்சபை இவைகளைப் பின்னர் ஏற்றுக் கொள்ளவேண்டும். 1931ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி. இங்குச் சட்டமியற்றும் உயர்ந்த அதிகாரத்தை 1. மன்னன், 2. மேற்சபை, 3. கீழ்ச்சபை மூன்றும் சேர்ந்ததாகிய நாடாளும்மன்றம் பெற்றிருக்கிறது. மேற்சபை அரசனால் நியமிக்கப்பட்டுத் தம் ஆயுள் முழுதும் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களைக் கொண்டது. கீழ்ச்சபையில் பொதுமக்கள் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எந்த மசோதாவும் கீழ்ச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசனுடைய அங்கீகாரத்தையும் பெற்றே சட்டமாக வேண்டும். ஏறக்குறைய நான்காண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் பெரும் பிரச்சினைகளைப் பற்றி ஆலோசனை செய்ய அரசன் ஒரு பேரவை கூட்டுவான்.

அரசாங்கமானது உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள், மராமத்து, உழவு, வாணிபம், நீதி, சுரங்கங்கள், சுகாதாரம் போன்ற பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஓரமைச்சன் பொறுப்பில் இருக்கிறது. அமைச்சர்கள் நாடாளு மன்றத்தின் இரு சபைகளிலும் உறுப்பினர்களல்லராயினும் அச்சபைகளில் வந்திருந்து பேசலாம். அமைச்சர் குழுவில் மேற்சபை, கீழ்ச்சபைத் தலைவர்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். தனித்தனியாகவும் கூட்டாகவும் நாடாளுமன்றத்திற்கு அமைச்சர்கள் பொறுப்பாளிகள். அமைச்சர்களை விசாரிப்பதானால் அதற்கென்று ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றத்தில் அவர்களை விசாரிக்கலாம்.

நாட்டின் பல்வேறிடங்களில் கீழ் மேல் நீதிமன்றங்களும், தலைநகராகிய காபுலில் உயர்நீதிமன்றமும் இருக்கின்றன. அன்றாடச் சச்சரவுகளையும், வணிக சம்பந்தமான வழக்குக்களையும் தீர்த்துவைக்க மத்தியஸ்த நீதிமன்றங்களும் நிறுவப்பட்டுள்ளன. நாட்டை ஏழு பெரு மாகாணங்களாகவும், மூன்று சிறு மாகாணங்களாகவும் பிரித்துள்ளனர். சிறு மாகாணங்கள் மேலும் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காபுலில் ஒரு கவர்னரும், மற்றப் பெரிய மாகாணங்களில் உதவி கவர்னர்களும், சிறிய மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளும் ஆட்சி புரிகின்றனர். ஆங்காங்குள்ள இலாகாத் தலைவர்களும், மக்களின் பிரதிநிதிகளும் இவ்வதிகாரிகளுக்கு ஆட்சியில் உதவி புரிகின்றனர். எல்லாப் பெரிய பட்டணங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின்கீழ் நகர சபைகள் நகராட்சி நடத்துகின்றன.

இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 25 வயதிற்கு மேற்பட்டு 70 வயதிற்குட்பட்டவர்களே தேசிய சபைக்குத் தேர்ந்தெடுக்கப் படலாம். படையிலும் ஊர்ப்பாதுகாவலிலும் பணியாற்றுவோர் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. அவர்கள் பிறரைத் தேர்ந்தெடுக்கவும் கூடாது. 18 வயதிலிருந்து 40 வயதுவரையுள்ள மக்கள் போர்ப்பணி செய்ய வேண்டும். அவர்கள் ஈராண்டு கட்டாயமாய்ப் போர்ப் பயிற்சி பெறுகின்றனர். நாட்டில் ஆரம்பப் படிப்பும் இடைத்தரக் கல்வியும் இலவசமாய் அளிக்கப்படுகின்றன. ஆப்கானியர் பாரசீகம், புஷ்டு, துருக்கி முதலிய மொழிகளைப் பேசுகின்றனர். 1932-ல் காபுல் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தி. வை. சொ.

ஆப்டே, ஹரி நாராயண் (1864-1919) இக்காலத்து மராத்தி நாவலின் தந்தை எனப்பெறுவர். பெரும்பாலும் புனாவில் வாழ்ந்து வந்தார். 15 நாவல்கள் எழுதியுளர். சில வரலாறு பற்றியவை. சமூக நாவல்களே சிறந்தவை. சீர்திருத்த நோக்கத்துடன் எழுதப்பெற்றவை. 'கரமனுகம்' என்னும் இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி நடத்திப் பாமர மக்களுக்குங்கூட இலக்கியச்சுவை ஏற்படுமாறு செய்தார். பல சிறு கதைகளும் நாடகங்களும் எழுதியும் மொழி பெயர்த்துமுளர். சிறந்த திறனாய்வாளர். முதிர்ந்த வயதில் அரசியல் இயக்கங்களிலும் ஈடுபட்டிருந்தார். ஆர். எஸ். ஜோ.

ஆப்பியன் பாதை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் பண்டைய ரோமாபுரியிலிருந்த ஒரு புகழ்பெற்ற