பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்கா

380

ஆப்பிரிக்கா

சாலை. ஆப்பியஸ் என்னும் அதிகாரி அமைத்ததால் அப்பெயர் பெற்றது. அதில் சில பகுதிகள் இப்போதும் பயன்பட்டு வருகின்றன. அதன் அருகில் பூமிக்கு அடியில் கிறிஸ்தவர் அமைத்த கல்லறைகள் உள.

ஆப்பிரிக்கா : இது உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டம். இக்கண்டத்திலேயே உலகில் இரண்டாவது பெரிய ஆறும், இரண்டாவது பெரிய ஏரியும் இருக்கின்றன. சென்ற நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் ஐரோப்பியர்கள் இக்கண்டத்தை இருண்ட கண்டம் என்று கூறிவந்தனர். ஏனெனில் இக்கண்டத்தின் உட்பகுதியில் வாழ்ந்துவந்த மக்களினம், விலங்கினம் முதலியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள இயலாதவாறு ஆப்பிரிக்காவின் வடபகுதியில் சகாரா என்னும் பெரிய பாலைவனம் அமைந்து கிடப்பதால், அதைக்கடந்து தெற்கே வந்து, மத்திய, தென் ஆப்பிரிக்காப் பகுதிகளைப்பற்றி யறிந்துகொள்ளப் பண்டையர்களால் முடியவில்லை. இப்பெரிய கண்டத்தின் நெடிய கடற்கரையில் கப்பல்கள் வந்து தங்குவதற்கு வசதியான இடங்கள் அதிகமாக இல்லாமையும் இதற்கு ஒரு காரணமாகும்.

வடக்கே மத்தியதரைக் கடலும் ஐரோப்பாவும், தெற்கே இந்திய, அட்லான்டிக் சமுத்திரங்களும், மேற்கே அட்லான்டிக் சமுத்திரமும், கிழக்கே தென் ஆசியாவும் இந்திய சமுத்திரமும் சூழ அமைந்துள்ளது இக்கண்டம். பரப்பு : 1.17,10, 424 ச. மைல். மக்கள் சு.15 கோடி. ஆட்லெஸ், ருவன்சோரி, டிராக்கன்ஸ்பர்கு என்பவை முக்கிய மலைத்தொடர்களாம். கிலிமாஞ்சாரோ (19,320 அடி), கெனியா (17,040 அடி) என்பவை உயரமான சிகரங்கள். காங்கோ, நைல், நைஜர், ஆரஞ்சு, சாம்பசி முதலியவை முக்கியமான ஆறுகள். ஆல்பர்ட், சாடு, எட்வர்டு, நியாசா, டாங்கன்யீகா, விக்டோரியா என்பவை முக்கியமான ஏரிகள். சகாரா, கலகாரி என்பவை முக்கியமான பாலைவனங்கள். ஸ்டான்லி, விக்டோரியா என்பவை முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.

இக்கண்டத்தை யடுத்துள்ள முக்கியமான தீவுகள் மடகாஸ்கர், ரீயூனியன், மோரீசு, கனேரி, கேப்வர்டு, மடீரா என்பவை. இவற்றுள் முதல் மூன்றும் இந்திய சமுத்திரத்திலும், ஏனையவை அட்லான்டிக் சமுத்திரத்திலும் அமைந்திருப்பவை.

இக்கண்டத்தை மூன்று முக்கிய இயற்கைப் பிரதேசங்களாகப் பிரிக்கலாம் : பாலைவனம், புல்வெளிப் பிரதேசம், காடுகள். ஆப்பிரிக்கக் காடுகளில் அயன மண்டல மரவகைகளே மிகுதியாகவுள்ளன. அங்குப் பாம்பு, பறவை, பூச்சிகளைத் தவிர வேறு உயிர் இனங்கள் மிகுதியாக இல்லை. பூமத்தியரேகைப் பிரதேசத்திலிருந்து மத்திய ஆப்பிரிக்காவரை காடுகள் அடர்ந்துள்ளன.

இக்காட்டுப் பகுதிக்கு வடக்கேயும் தெற்கேயும் புல்வெளிப் பிரதேசங்கள் அடர்ந்துள்ளன. இப்பிரதேசங்களே மாடு மேய்ப்பதற்கும் சாகுபடி செய்வதற்கும் ஏற்ற இடங்கள். வட ஆப்பிரிக்காவில் 'சூடான்' என்றும், தென் ஆப்பிரிக்காவில் 'வெல்டு' என்றும் இவை பெயர் பெறும். சூடானுக்கு வடக்கேயும், வெல்டுக்குத் தெற்கேயும் பாலைவனங்கள் உள்ளன. வடக்கே சகாரா பாலைவனமும், தெற்கே கலகாரி பாலைவனமும் இருக்கின்றன. சகாரா பாலைவனம் ஆப்பிரிக்காவின் பரப்பில் ஐந்தில் ஒன்று உடையது. சகாராவிற்கு வடக்கேயுள்ள மத்தியதரைக் கடற்கரைப் பகுதியும், கலகாரிக்குத் தெற்கேயுள்ள இந்திய சமுத்திரக் கடற்கரைப் பகுதியும் செழிப்பான நிலப்பகுதிகளாம்.

கிழக்காப்பிரிக்காவில் உள்ள இத்தியோப்பியாப் பிரதேசம் ஒரு பெரிய பீடபூமி. ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஏரிகள் பல இப்பிரதேசத்தில் உள்ளன. மிக உயரமான மலையுச்சிகளும் கிழக்காப்பிரிக்காவிலேயே இருக்கின்றன.

ஆப்பிரிக்காவில் உள்ள ஆறுகளில் மிக நீளமானது நைல். ஆயினும் காங்கோவிலேயே மிக அதிகமான தண்ணீர் ஓடுகிறது. உலகில் உள்ள ஆறுகளில் ஆமெசானுக்கு அடுத்தபடியாகக் காங்கோவே அதிக நீரைக் கொண்டு செல்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள ஆறுகளில் நைல் மத்தியதரைக்கடலிலும், சாம்பசி இந்திய சமுத்திரத்திலும், ஏனைய முக்கியமான ஆறுகள் அட்லான்டிக் சமுத்திரத்திலும் சேர்கின்றன.

ஆப்பிரிக்காவில் மத்தியக் கிழக்கு ஆப்பிரிக்கா ஏனைய பகுதிகளைக் காட்டிலும் சிறிது வெப்பம் குறைவாக உள்ள பகுதி. இப்பகுதி பீடபூமியாக இருப்பதே இதற்குமுக்கியக்காரணம். பூமத்தியரேகைப் பிரதேசம் தவிர ஏனைய பிரதேசங்களில் மழை மிகக் குறைவு.

பாலைவனப் பகுதிகளில் மிகுதியாக வளர்வது பேரீச்ச மரமே. பாலைவனச் சோலைகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கியமான உணவு பேரீச்சம் பழம். ஆட்லெஸ் மலைத் தொடருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் ஒலிவ மரம், ஒக், தக்கை முதலிய மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. வடகோடியிலும் தென்கோடியிலும் கடற்கரையோரப் பகுதிகளில் கோதுமை, பார்லி முதலிய தானியங்களும், ஏனைய இடங்களில் கரும்பு, புகையிலை சோளம் முதலியவையும் பயிராகின்றன. பருத்தி எகிப்தில் ஏராளமாகப் பயிராகிறது. காடுகளில் மகாகனியும் எபனியும் மிகுதியும் வளர்கின்றன. தென் ஐரோப்பாவில் உள்ள விலங்கினங்கள் யாவையும் வட ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. சகாரா, சூடான் பிரதேசங்களில் ஒட்டகம் முக்கியமான விலங்கு. சூடானுக்குத் தெற்கே எண்ணிறந்த காட்டு விலங்குகள் வாழ்கின்றன. காட்டு எருமை,நீர்யானை, வரிக்குதிரை, கலைமான், ஒட்டைச் சிவிங்கி முதலிய சாகபட்சிணிகளும், சிங்கம், சிவிங்கி, சிறுத்தை,நரி,கழுதைப்புலி முதலிய கொடிய விலங்குகளும் திரிகின்றன. கரடியும் புலியும் ஆப்பிரிக்காவில் இல்லை. முன்பு மிக அதிகமாக இருந்த யானைகள் இப்பொழுது குறைந்துவிட்டன. அவற்றின் தந்தங்களை நாடி மக்கள் அவற்றை வேட்டையாடிக் கொன்று குறைத்தனர். மிக அடர்த்தியான காடுகளில் விலங்குகள் நுழைந்து வெளிவரவும் இடமின்றியிருப்பதால் இங்குப் பூச்சிகளும் பறவைகளும் வாழ்கின்றன. கொரில்லா, சிம்பன்சி முதலிய பெருங்குரங்குகள் இக்காடுகளில் வசிக்கின்றன. தென் ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் நெருப்புக்கோழி காணப்படுகிறது. ஆறுகளிலும் சதுப்பு நிலங்களிலும் நீர்க்குதிரை, காண்டாமிருகம், முதலை முதலியவை வாழ்கின்றன. பசுவும் ஆடும் தென் ஆப்பிரிக்கப் பிரதேசங்களில் மிகுந்துள்ளன.

வைரமும் தங்கமும் தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றன. வைரம் கிடைக்கும் பகுதிகளில் கிம்பர்லி முக்கியமானது. டிரான்ஸ்வால் பகுதியில் தங்கம் அதிகமாகக் கிடைக்கிறது. தென் ஆப்பிரிக்க ஐக்கியப் பிரதேசத்தில் கரியும் இரும்பும் சிறிது கிடைக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு இக்கண்டத்துக் கரி உற்பத்தி மிகுந்துள்ளது.

இக்கண்டத்தில் பல பெரிய நீர்வீழ்ச்சிகள் இருப்பினும், மின்சார சக்தி 1% மட்டும் பெறப்படுகிறது.