பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்க்கிடு

404

ஆர்க்கிடு

ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த மலட்டுச் சூல் முடியானது ஒரு தடுக்குப்போல முன்னுக்கு நீட்டிக் கொண்டு, மகரந்தத்திரள் இருக்கும் மேல்பாகத்தையும், பக்குவமாகக்கூடிய இரண்டு சூல்மூடிகள் இருக்கும் கீழ்ப்பாகத்தையும் நன்றாகப் பிரித்து நிற்கின்றது. இதற்கு ராஸ்டெல்லம் என்று பெயர்.

சூலகமானது மூன்று சூலிலைகள் கூடி உண்டானது. ஒரு சாதி ஆர்க்கிடு தவிர மற்ற எல்லாச் சாதி ஆர்க்கிடுகளிலும் உள்ளே ஒரே அறைதான் உண்டு. சூல்கள் மூன்று நெடுவரிசையாகச் சுவரொட்டுச் சூலடுக்க முறையில் அமைந்திருக்கின்றன. மகரந்தச் சேர்க்கையும் கருவுறலும் ஆன பிறகே சூல் வளரத் தொடங்கும்.

கனி உலர்கனி. நுண்ணிய இலேசான பெருந்தொகையான விதைகளுள்ளது. விதையில் முளைசூழ்தசை இல்லை. அதன் கருவில், முளையோ, முளைக்குருத்து, விதையிலை என்னும் வேறுபாடுகளோ தோன்றுவதில்லை.

மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடக்கிறது. தேன் சுரந்து குழாயில் நிற்பதில்லை. பூச்சி அந்தக் குழாயின் திசுவைக் குத்தித் தேனை உறிஞ்சவேண்டும். இந்தச் சேர்க்கைக்காக இருக்கும் ஏற்பாடுகள் பலவிதமானவை, அசாதாரணமானவை. ஆர்க்கிஸ் சாதிப் பூவில் நடப்பதை ஓர் உதாரணமாகப் பார்க்கலாம். பூச்சி உதட்டிதழில் வந்து உட்காருகிறது. அதன் பூந்தேன் குழாயில் தேனுக்காகத் தேடுகிறது. அப்போது பூச்சியின் தலை மலட்டுச் சூல்முடியில் படுகிறது. அப்போது அங்குள்ள மகரந்தத்திரட் காம்பையும் வில்லையையும் மூடிக்கொண்டிருக்கின்ற மெல்லிய படலத்தை ஒரு புறம் தள்ளிவிடுகிறது. பூச்சி அந்தக் காம்பு வில்லைகளை அழுத்துகிறது. அவை அதன் தலையில் ஒட்டிக் கொள்கின்றன. பூச்சி பூந்தேன் குழாயைத் தொளைத்துக்கொண்டிருக்கும் நேரத்திற்குள், வில்லையின் பிசு பிசுப்புக் காய்ந்து, திரள்கள் பூச்சியின் தலையில் நன்றாகப் பிடித்துக்கொள்கின்றன. பூவிலிருந்து பூச்சி வெளியே வரும்போது மகரந்தத் திரள்கள் அறைகளிலிருந்து உருவிக்கொண்டு பூச்சியோடு வந்துவிடுகின்றன. முதலில் அவை பூச்சியின் தலைமேலே நேராக நிமிர்ந்து நிற்கின்றன. பிறகு காம்பிலுள்ள ஈரம் காயக் காய அவை மெல்ல மெல்ல முன்னுக்கு வளைகின்றன. அப்போது இந்தப் பூச்சி இன்னொரு பூவில் நுழையுமானால் அந்த இரண்டு திரள்களும் நேராகச் சென்று, பக்குவமடைந்து ஈரமாக இருக்கும் சூல்முடிகளில் படுகின்றன. இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கின்றது. தன் மகரந்தச் சேர்க்கை நடப்பதேயில்லை. ஆர்க்கிடுகளில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையைப்பற்றிச் சார்லஸ் டார்வின் ஆராய்ந்து, ஆர்க்கிடு கருவுறல் (The Fertilisation of Orchids) என்னும் அரிய நூலை எழுதியிருக்கிறார்.

பல ஆர்க்கிடுகளில் பூக்கள் மிகவும் சிறப்பான அமைப்புடையனவாய் ஏதோ குறித்த ஒருவகைப் பூச்சி வருவதற்கும், தேனைப் பருகுவதற்கும், மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துவதற்கும் தக்கவையாக இருக்கின்றன. மடகாஸ்கார் தீவில் ஆங்கிரீக்கம் செஸ்குபிடேல் (Angraecum sesquipedale) என்னும் அழகிய ஒருவகை ஆர்க்கிடு இருக்கிறது. இதன் பூந்தேன் குழாய் சுமார் பதினொன்றரை அங்குல நீளமிருக்கிறது. தேன் கடைசி 1½ அங்குலத்தில் மட்டும் இருக்கும். இந்தப் பூவைப் பார்த்த டார்வின் 10-11 அங்குல நீளம் உறிஞ்சுகுழலுள்ள ஒரு பூச்சி இதில் மகரந்தச் சேர்க்கை யுண்டாக்குவது அந்தத்தீவில் இருக்கலாம் என்று 1862-ல் தமது நூலில் எழுதினார். அப்படிப்பட்ட ஆர்க்கிடு பூச்சியைப் போர்ப்ஸ் என்பவர் கண்டுபிடித்து 1873-ல் அதைப்பற்றி எழுதினார்.

ஆர்க்கிடு வாழ்க்கையில் மற்றோர் உயிரியற் சிறப்பும் உண்டு. ஆர்க்கிடுகளின் வேரைச் சுற்றிலும் காளான் இழைகள் பொருந்தியிருக்கும். இந்த இழைகள் ஆர்க்கிடு வேரின் புறணிக்குள்ளே புகுந்து, அங்குள்ள உயிரணுக்குள்ளேயும் வாழும். இந்தக் காளானுக்கும் ஆர்க்கிடுக்கும் கூட்டுயிர் வாழ்க்கை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காளானுக்கும் வேருக்கும் உள்ள சம்பந்தத்தைக்

நியோட்டியா ஆர்க்கிடு வேர்
(மேலே) வேரின் குறுக்குவெட்டு. 1. காளான் வேர் அகவலயம். 2.நடுவுருளை.
(கீழே) காளான்வேர் அகவலயத்தின் ஒரு சிறு பாகம் பெரிதாகக் காட்டியிருக்கிறது. 1. நலத்துடன் இருக்கும் காளான் இழைகள். 2. செரிமானமாய்விட்ட காளான் இழையின் சிதைவு. 3. ஸ்டார்ச்சு மணிகள் உள்ள அணு.

காளான் வேர் அல்லது மைக்கோரைசா என்பர். காளான் நிலத்திலுள்ள மட்கைச் சிதைத்துக் கரிமப் பொருள்களாக மாற்றி, அவற்றையும், நிலத்திலுள்ள தாது உப்புக்களையும், நீரையும் உறிஞ்சி, அவற்றை ஆர்க்கிடுக்கு உதவுகின்றதென்றும், ஆர்க்கிடின் உடலிலிருந்து காளான் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுகிறதென்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் ஆர்க்கிடின் புறணியணுக்களிலே காளான் இரண்டுவகையாக இருக்கிறது. சில அணுக்களிலே இருப்பது உயிருள்ள காளான்; உடல் நலத்துடன் இருக்கிறது; சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்துகிறது. இழைகள் நன்றாகக் காணும். சிக்கலான நூல்போலத் தோன்றும். மற்றுஞ் சில அணுக்களில் காளான் சிதைந்து, அதன் சத்தெல்லாம் செரிமானமாகிவிட்டு, எஞ்சியிருக்கும் பாகம் மட்டும் கிடக்கும். செரிமானமான பொருள்கள் ஆர்க்கிடுக்கு உணவாகிவிடுகின்றன என்று எண்ணவேண்டும். இன்னும் காளான் வேர் காற்றிலுள்ள நைட்டிரஜனையும் உறிஞ்சி, அது சம்பந்தமான உப்பாகச் சமைத்து, அந்த உப்பையும் ஆர்க்கிடுக்கு உதவுகிறது என்றும் நினைக்கின்றார்கள். மற்றும் காளான் இல்லாமல் ஆர்க்கிடு விதை முளைப்பதில்லை. நாற்று வளர்வதுமில்லை.