பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்கள்

455

ஆழ்வார்கள்

ஒருவர் ஆண்டாள் என்றும் ஆசாரியத் தலைவர்களிற் சிலர் ஆளவந்தார், ஆண்டான் என்றும் வழங்கப் பெறுவதை நோக்குமிடத்து, 'ஆள்' என்பதே இதன் பகுதியாக வேண்டுமென்று சங்கிக்க இடமுண்டு என்றும் கூறிச் சிலாசாசனப் பகுதிகளினின்றும் பலவற்றை மு. இராகவையங்கார் ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார்.

ஆழ்வார்கள் ஞானவீரர்கள் ; போர்வீரன் போரினைச் செய்து, நாட்டினை அரசனுக்கு உரிமையாக்குவான். இவர்கள் ஞானத்தை உபதேசித்து உலகத்தையே இறைவனுக்கு உரிமையாக்கினார்கள். “உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை ; ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும், இருக்கு, எசுர், சாமவேத நாண்மலர் கொண்டு உனபாதம் நண்ணாநாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே” என்பதும், “காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவல் இட்டு உழிதர்கின்றோம்“ என்பதும் இந்த வீரர்களுடைய திருவாக்குக்களாகும்.

இவர்கள் உடன்பட்டு அருளிச்செய்த தத்துவங்கள் மூன்று. அவையாவன : சித்து, அசித்து, ஈசுவரன். இவை பிரகார பிரகாரிகள் ஐக்கியத்தால் ஒன்று என்னலாய்ச் சொரூபபேதத்தாலே பல என்னலாயிருக்கும். இதனாலே, இது 'விசிஷ்டாத்வைதம்' எனப்பெறும். இவற்றுள், சித்தாவது உயிர். அசித்தாவது, மக்கள் விலங்கு முதலியவற்றின் உடம்பு முதலிய உலகப் பொருள்களெல்லாவற்றிற்கும் காரணமாய பிரகிருதி. இதனை மூலப்பகுதி என்பர் ஈசுவரன்- இறைவன். இவை மூன்றும் தனித் தனி இயல்பையுடைய வெவ்வேறு பொருள்கள்; என்றும் அழிவில்லாதவை. ஆயினும், இவை மூன்றும் எக்காலத்தும் சேர்ந்தே இருக்கின்றன. இவற்றுள், இறைவன் சித்து, அசித்து இரண்டனுள்ளும் அந்தர்யாமியாக உள்ளான். இதுவே இவற்றின் நுண்ணிய நிலை (சூக்கும நிலை). மூலப்பகுதி விரிவடைந்து, மக்கள், விலங்கு முதலியவற்றின் உடம்புகளாகவும், மற்றும் உள்ள பொருள்களாகவும் ஆகின்றது. உயிர் தன்னுடைய புண்ணிய பாவங்கட்கேற்ப ஒவ்வோர் உடம்பை அடைகின்றது; அதுவே உயிர்க்குப் பிறப்பாம். இறைவன் மூலப்பகுதியின் விகாரமாய எல்லாப் பொருள்களுள்ளும், எல்லா உயிர்களுள்ளும் அந்தர்யாமியாக மறைந்துள்ளான். இது, இவற்றின் பருநிலை (தூலநிலை). மூலப் பகுதியின் விகாரமாகிய உடம்பிற்கு வளர்தல், பருத்தல். குறைதல் முதலிய விகாரங்கள் உண்டு. உடம்பினுள் இருக்கும் உயிர்க்கு அத்தகைய விகாரம் ஒன்றுமில்லை. உயிர்க்கு உடம்பைப் பற்றிய இன்பதுன்ப உணர்ச்சிகள் உண்டு. இவ்வுடம்பினுள்ளும் உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள இறைவன் உடம்பினுடைய விகாரங்களையும், உயிரினுடைய இன்பதுன்ப உணர்ச்சிகளையும் அடைவதில்லை. உயிர் மூலப்பகுதியின் விகாரமாகிய உடம்பைத் தனக்குச் சரீரமாகக் கொண்டிருத்தல் போன்று, இறைவன், உயிர் உடம்பு இரண்டனையும் தனக்குச் சரீரமாகக் கொண்டிருக்கின்றான். இவ்வாறு இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல், எக்காலத்தும் தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன. இவை இவற்றின் தன்மை.

ஆக, இப்படிச் சித்து அசித்துக்களோடு கூடின சர்வேச்சுரன் தன்னுடைய பரம கிருபையாலே இந்த உலகைக் காத்து வருகின்றான். சரீரமும் உயிரும் சேர்ந்து வாழ்வது அன்பினாலே யல்லது வேறில்லை. சரீரத்தில் ஓரிடத்தில் ஒரு புண்பட்டால் அப்புண்ணினை ஆற்றுதற்கு வேண்டிய உபாயங்கள் செய்வதும் ஆன்மாவேயாம். அதுபோன்று, அநாதி கரும வாசனையின் பயனாக அநுபவிக்கும் துன்பங்களைப் பார்த்துச் சர்வேச்சுரன் வருந்தி, அதற்கு வேண்டிய மருந்துகள் கொடுக்கின்றான். அம் மருந்தில் முக்கியமான மருந்து சாஸ்திரங்கள். தானே அவதரித்துப் படாத பாடுபட்டதும், ஆழ்வார்களை அவதரிப்பித்ததும் அதற்காகவேயாம். இவ்வளவும் செய்வதற்குக் காரணம் கிருபையேயாம். இது பரமாத்மாவான இறைவன் செயல்.

இனி, சரீரத்தின் தன்மையைப் பார்ப்போம். சரீரம் என்பது, ஒர் உயிரால் எல்லாவகையாலும் தன் பொருட்டாகவே தரிக்கப்படுகின்றதாயும், இன்பத்தினை அனுபவித்து நிலைபெறுதலாகிய தன்மையினைப் பெறுகின்றதாயும் இருப்பதாம். உயிரோடு கூடியிருக்கின்ற உடலுக்கே சரீரம் என்று பெயர். உயிர் நீங்கிய உடலுக்கு அப்பெயர் இன்று. உயிர் நீங்கிய அக்கணமே அது சத்தை இழந்து பிணமாகக் கருதப்படும். இதுவே நாம் உலகில் காணும் உண்மை. சித்தும் அசித்தும் இறைவனுக்குச் சரீரம் என்றதனால், இந்தச் சித்தும் அசித்தும் இறைவனால் தரிக்கப்பட்டும், ஆளப்பட்டு, பணி கொள்ளப்பட்டும் வருகின்றன என்பதும், இறைவன் இவற்றையெல்லாம் தரித்துக் கொண்டும், பாதுகாத்துக் கொண்டும், இவற்றின் பணியினைக் கொண்டும் விளங்குகின்றான் என்பதும் விளங்குவனவாம்.

மேலும், இந்தச் சரீரம் உயிருக்கு அடிமையாக இருக்கின்றது. தனக்குப் பயன் சிறிதுமின்றி உயிர் இன்புறத்தக்க காரியங்களையே செய்துகொண்டிருக்கின்றது. அவ்வாறு செய்வதனாலேயேதான் தரித்திருக்கின்றது. அதுபோன்று, இறைவனுக்குச் சரீரமாக இருக்கின்ற இவ்வுயிர்களெல்லாம் இயற்கையிலேயே இறைவனுக்கு அடிமை என்பதும், ஒரு சிறிய பயனையும் தனக்கென்றின்றி இறைவன் பொருட்டே எல்லாக் காரியங்களையும் செய்தல் வேண்டும் என்பதும், அவ்வாறு செய்வதனாலேயே இவை சத்தைப் பெற்று விளங்குகின்றன என்பதும், அவ்வாறு செய்யும் அடிமைத் தொழிலாலுண்டாகும் இன்பமே பேரின்பம் என்பதும் விளங்குகின்றன. ஆக, இவற்றால் இறைவனுக்கும் உலகுக்கும் உள்ள சம்பந்தம் சரீர ஆத்மசம்பந்தம் என்பதும், சரீரமாகிய இவ்வாத்மாக்கள் சரீரியாகிய இறைவனுக்கு எப்பொழு தும் அன்போடு கூடி அடிமை செய்துகொண்டிருத்தலாலேயே சத்தைப் பெறுவன என்பதும், அதுவே இவ்வாத்மாக்கட்குச் சொரூபம் என்பதும் விளங்குவனவாம்.

அங்ஙனம் அடிமைசெய்வது அவனளவில் நில்லாது, அவன் அடியார் அடியார் அடியார்வரையிலும் சேரல்வேண்டும். அவர்கள் எக்குலத்தினராயினும், எத்தொழிலினராயினும் அவற்றைக் கருதலாகாது. பகவத் பக்தி இல்லாதார் எக்குலத்தினராயினும் அவர்களே சண்டாளராவர். குறும்பறுத்த நம்பியைத் தொண்டைமான் சக்கரவர்த்தியும், திருக்கச்சிநம்பியைப் பிராமணோத்தமரான ஸ்ரீ பாஷ்யகாரரும். பாணர் குலத்திற் பிறந்த அழ்வாரை லோகசாரங்க மாமுனியும் அடைந்த விதங்களை ஈண்டு நினைவுகூர்க. இவ்வகையான அடிமை செய்வதற்குக் கால நியமயின்று; தேச நியமமின்று; சாதி நியமமின்று; அதிகாரி நியமமின்று; யானும் நீயே, என்னுடைமையும் நீயே என்னும் வைராக்கியமே வேண்டுவது.

உலகத் தோற்றத்திற்குக் காரணம் இறைவனேயாவன். ஒரு பொருள் உண்டாவதற்கு மூன்று காரணங்கள் வேண்டும். மண் குடமாகச் செய்யப்படுமிடத்து மண் முதற்காரணம்; அக்குடத்தைச் செய்பவன் நிமித்த காரணம் ; அவன் குடத்தைச் செய்வதற்-