பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றிப் பதனிடல்

464

ஆற்றுப்படை

வது பெரிதாகவும், நீர் குறைந்த இடத்தில் வளர்வது சிறுத்தும் இருக்கும். தண்டு 2-5 அடி உயரம், முதலில் சிறிது கிடை மட்டமாக வளர்ந்து பிறகு நேரே நிமிர்ந்து வளரும். கீழ்ப்பகுதிகள் சற்றுச் செந்நிறமாக இருக்கும். மேற் பாகம் சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். கணுவில் செம்பழுப்பான வளையம்போன்ற கோடு தெரியும். இலை 3-9 அங்குல நீளமும், சுமார் 1 அங்குல அகலமும் இருக்கும். ஈட்டி வடிவானது; நீள்கூர் முனையுள்ளது.இலையடிச் செதில் உறைபோலக் கணு விடையின் அடியைச் சுற்றி இருக்கும். பூ வெண்சிவப்பு நிறமுள்ளது. சிறு பூக்கள் வளர் நுனியுள்ள பல பிரிவுக் கொத்தாக இருக்கும். இதழ்கள் 4-5. புறவிதழ் அகவிதழ் என்ற இரண்டு வட்டங்கள் இல்லை. கேசம்6-8. சூலகம் ஓரறையுள்ளது. கனி கொட்டையென்னும் உலர்கனி. முக்கோண வடிவினது. ஒரே விதையுள்ளது. இதழ்கள் உதிராமல் நிலைத்து, உலர்ந்து, கனி பரவுதற்கு உதவும். இதன் விஞ்ஞானப் பெயர் பாலிகோனம் கிளாப்ரம். பாலிகொனேசி குடும்பம்.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டிகோனான் லெப்டோபஸ் என்னும் கொடியைத் தோட்டங்களில்வைக்கிறார்கள். பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ரோஜாப்பூ நிறமான வெண்சிவப்பாகவும், அல்லது மிகுந்த சிவப்பாகவும் அல்லது வெண்மையாவும் பூக்கும் வகைகளுண்டு. இலைக்காம்பு கணுவில் தண்டைத் தழுவியிருக்கும். இலைகள் இதயவடிவின ; நீண்ட முக்கோணமாக இருக்கும். கொடி ஏறுவதற்குப் பூக்கொத்தில் சில பூக்காம்புகள் பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கின்றன. ஆகஸ்டு முதல் நவம்பர் வரையும் பூக்கள் மிகுதியாக இருக்கும். இது தென் அமெரிக்காவுக்கு உரியது.

மூலன்பெக்கியா பிளாட்டிக்கிளாடோஸ் என்பது நியூகினிக்குக் கிழக்கேயுள்ள சாலமோன் தீவுகளுக்குரியது. இதையும் தோட்டங்களில் தொட்டிகளில் வைக்கிறார்கள். இதன் கிளைகள் மிகத் தட்டையாகி, மெல்லிய பச்சைத் தகடுபோல இருக்கும். அவற்றில் நுண்மையான வரிகள் காணும். அங்கங்கே கணுக்கள் இருக்கும். கணுக்களின் பக்கங்களில் சிறு பூக்கள் கொத்தாக இருக்கும். இந்தச் செடியும் ஆற்றலரியின் குடும்பத்தைச் சேர்ந்ததே.

ஆற்றிப் பதனிடல் (Annealing) : உலோகங்கள், கண்ணாடி முதலிய பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு வெப்ப நிலைக்குச் சூடேற்றிக் குளிர்விப்பதால் அப்பொருள்களின் இயல்புகள் மாறுபடுகின்றன. பொது வாய் இம் முறையால் பொருள்கள் மிருதுவாகவும், எளிதில் நொறுங்காத இயல்புடனும் ஆகும்படி செய்யலாம். கண்ணாடியைப் பதனிடவும் இதையொத்த முறையே வழங்குகிறது. புதிதாகச் செய்யப்பட்ட கண்ணாடிப் பொருள்கள் பெரிய இரும்புத் தட்டுக்களில் வைக்கப் பட்டு, குகை போன்ற அடுப்பின் வழியே மெதுவாக இழுக்கப்படும். அப்போது அவை நன்றாகச் சூடேறிச் சீராகவும் மெதுவாகவும் பதனாகின்றன.

ஆற்றுக்குருவி (Tern) ஒரு நீர்ப் பறவை. கடலோரங்களிலும் முகத்துவாரங்களிலும் உள்நாட்டு நீர் நிலைகளிலும் இது காணப்படும். மெலிவான அழகியஉடலும், நீண்ட சிறகுகளுமுள்ள இந்தப் பறவைக்குக் கடல்தகைவிலான் குருவியென்றும், ஆலா என்றும் பெயர். அடிக்கடி தண்ணீருக்குள் மூழ்கி, முழுவதும் மறைந்துபோய்ப் பிறகு வெளியே வரும். மீன், நண்டு, நத்தை, பூச்சி முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். மனித சஞ்சாரமில்லாத சில தீவுகளில், ஆயிரக்கணக்காக இவை கத் திக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கால் வைக்க இடமில்லாமல் அவ்வளவு நெருக்கமாயிருக்கும்.

இந்தப் பறவைக்கு, நேரான மெலிந்து நீண்ட மஞ்சள் அலகு உண்டு. வால் பிளந்திருக்கும். கால்கள் குட்டையாகவும் சிவப்பாகவுமிருக்கும். தண்ணீருக்கு

ஆற்றுக்குருவி

மேல் இங்கும் அங்கும் பறந்து, அலகைக் கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, மீன் திரள்கள் வருவதைக் கவனித்துக் கொண்டேயிருந்து, திடீரென்று மூழ்கி மீன்பிடிக்கும். இது மரத்தில் தங்குவதில்லை; தண்ணீரில் இறங்குவதுமில்லை; கரையிவேதான் உட்கார்ந்திருக்கும். முட்டைகளைத் தரையிற் செய்த குழிகளிலிட்டு, நண் பகலில் சூரியவெப்பம் படும்படி விட்டுவிட்டு மீன்பிடிக்கப்போகும். பசுமை கலந்த சாம்பல் நிறமுள்ள, இரண்டு அல்லது மூன்று முட்டைகளிடும். அவைகளில் கருங்கபில நிறப் புள்ளிகள் காணப்படும். ஆற்றுக் குருவிகளில் அநேக வகைகளுண்டு. ஒருவகை ஆற்றுக்குருவி வட துருவத்திலிருந்து, குளிர் காலத்தில் 11,000 மைல் தூரம் தென்துருவஞ் சென்று, காலம் மாறும்போது மறுபடி யும் வடதுருவஞ் சேரும். இப்படி ஒவ்வோராண்டும் அநேக ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் வழக்கம் இந்தப் பறவையிடம் காணும் ஒரு சிறப்பு. பா. பா.

ஆற்றுப்படை : பாணர், கூத்தர் முதலியோர்களில் ஒருவர், தாம் ஒரு வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த புலவர், கூத்தர் முதலியோர்க்கு அறிவுறுத்தி, அவரும் அவ்வள்ளலிடஞ் சென்று, தாம் பெற்றவற்றையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படையாகும். இங்ஙனம் எல்லோருமே கூறலாமெனினும் கூத்தர், பொருநர்,பாணர், விறலியர் போன் றோரே கூறுவதாகச் செய்யுள் செய்தல் மரபு (தொல். புறம் 36). இங்ஙனம் கூறினும் திருமுருகாற்றுப்படை யைப் புலவராற்றுப் படையெனவும் வழங்குவதால் புலவரை ஆற்றுப்படுத்தலும் உண்டு எனக் கொள்ளலாம். 'புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே என்பதனால் பன்னிருபாட்டியல் என்னும் நூல் (204) மக்களுக்கும் தேவருக்கும் உரியதாகப் புலவராற்றுப் படையைக் கூறுவதை அறியலாம்.

இவ்வகை ஆற்றுப்படைகள் பத்துப்பாட்டிலே திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை யெனத் தனி நூல்களாக வந்துள்ளன. பதிற்றுப்பத்து, புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய புறப்பொருள் சார்பான நூல்களிலும் கலம்பகங்களிலும் தனிப்பாடல்களிலும் தனிச் செய்யுட்களாகவும் வந்துள்ளன. பிற்-