பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகல்யாபாய் ஹோல்கார்

18

அகழ்தல்

பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்குரிய பொருளின் இலக்கணத்தையும் வரையறை செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கம் தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது; பரியாயச் சொல்லைக் கூறுவதே போதியதெனக் கருதப்பட்டது. தமிழ்-ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக்குறைகளெல்லாம் நீங்கவேண்டுவது அவசியமாயிற்று. ஐந்தாவது சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கருத்து செலுத்தியதேயில்லை. சில தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி மூலங்கள் தரப்பட்டிருந்தன. பிற திராவிடமொழிகளிலிருந்து பிறப்பொத்த சொற்கள் காட்டப் பெறவில்லை. ஆறாவது, மேற்கோள் காட்டுவதில் தகுதியான முறைகள் கையாளப் பெறவில்லை. தக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது.

மேற்குறித்த அம்சங்களிற் பெரும்பாலுங்கொண்டு திருத்த மெய்தியது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்-லெக்ஸிகன் ஆகும். இதுவும் அரசினர் ஆதரவில் சாண்ட்லர் என்ற அமெரிக்கன் மிஷன் பாதிரியாரால் தொடங்கப்பெற்று, தமிழ் வித்துவான்களின் உதவி கொண்டு, ஆங்கிலமும் தமிழுங் கற்ற ஆசிரியர்களால் முற்றுப்பெற்றது. இதிலும் பல குறைகள் உள்ளன. அகராதி வேலை மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்லவேண்டியது என்பதை மறக்கலாகாது.

மொழியின் வளர்ச்சி நமது வாழ்க்கையின் வளர்ச்சியைப் பொறுத்தது. இம்மொழி வளர்ச்சிக்குச் சொல்லின் வளர்ச்சி ஒரு சிறந்த அறிகுறியாயுள்ளது. நமது வாழ்க்கை வளமுறுவதானால், சொற்கள் பெருகிக்கொண்டுதான் செல்லும். அகராதி வேலைக்கு எல்லையே இல்லை. குறைபாடுகளைத் திருத்துவதும் சொற்களின் பிறப்பு வரலாற்றை மொழி நூல் முறையில் உணர்த்தி ஜாதகம் கணிப்பதுபோல் விவரங்கள் தருவதும், சொல்லின் வடிவங்களையும் பொருள்களையும் காலக்கிரமத்தில், வரலாற்று முறையில் நிறுவி, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன வடிவம் பெற்றது, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன பொருள் பெற்றது என்பன முதலிய விவரங்களை நூல்களின் ஆதாரங்கொண்டு தெளிந்து உணர்த்துவதும், புதுச்சொற்களைச் சேர்ப்பதும் கலைக் குறியீட்டு மொழி அகராதிகளையும், கொடுந்தமிழ், திசைச் சொல் பற்றிய அகராதிகளையும் சொற்பிறப்பு அகராதிகளையும் இயற்றுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத பெருஞ்செயல்களாகும். சுருங்கச்சொல்லின், ஆங்கிலத்திலுள்ள நூதன ஆங்கிலப் பேரகராதி (New English Dictionary)யின் முறைகளை முற்றும் தழுவி, ஒரு தமிழ்ப் பேரகராதி இயற்றுதல் தமிழ் அறிஞகர்களது கடமையாகும். எஸ். வை

அகல்யாபாய் ஹோல்கார் (1735-1795) மகாராஷ்டிர இராச்சியங்களுள் ஒன்றாகிய ஹோல்காரில் தலைநகரான இந்தூரை நிருமாணித்த அரசி. மலகரி ராவ் ஹோல்காரின் ஒரே மகனான காண்டேராவின் மனைவி. தன் மகனான மல்லேராவ் சில காலம் ஆண்டு இறந்துவிட்டபின் தானே ஆட்சி எற்றுக்கொன்டாள். 30 ஆண்டுகள் இவ்வரசி செங்கோல் நடாத்தி மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றாள். 60 ஆம் வயதில் இறந்தாள், தரும சிந்தனையுள்ளவள்; தற்பெருமை சிறிதும் இல்லாதவள். தே. வெ. ம.

அகலிகை கௌதம முனிவர் மனைவி, அவர் நீராடச் சென்ற வேளை பார்தது இந்திரன் அவர் உருவத்துடன் வந்து அவள் கற்பைக் குலைத்தான். முனிவர் இதை அறிந்து அவளைக் கல்லாகச் சபித்தார். அவள் வேண்டியபொழுது, அவர் இராமன் கால் பட்டால் சாபம் தீரும் என்று அருளினர். இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி. இவள் குமாரர் சதாநந்த முனிவர்.

அகவர் : 1. அழைத்துப் பாடுவோர். அகவல்-அழைத்தல். குலத்தோ ரெல்லோரையும் அழைத்துப் பாடுவோர் (மதுரை.223நச்.).
2.நாட்டில் வாழ்வோர் (பொருநர்.220நச்.).

அகழ்தல் (Excavation): ஆதியிலிருந்தே மனிதன் ஏதாவது ஒரு காரணத்திற்காக நிலத்தை அகழ்ந்து வந்திருக்கிறான். விதை விதைக்கவும், செடி நடவும், சாலை போடவும், வீடு கட்டவும், குளம் கால்வாய் அமைக்கவும் மண்வெட்டுவது அவசியம். கட்டபாரை, குந்தாலி,மண்வெட்டி முதலியவைகளால் மண்ணை வெட்டிக் கூடைகளில் நிரப்பித் தலையில் சுமந்து வேண்டிய இடங்களில் போடுவது இன்றும் வழங்கும் தொன்மையான முறையாகும். இம்முறையால் குளமோ, கால்வாயோ, அணையோ கட்ட அநேக ஆயிரம் சனங்கள் பல ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும்.

அகழ் எந்திரம்
உதவி : ஆஸ்டின் வெஸ்டர்ன் கம்பெனி, அ. ஐ. நா

ஆனால் தற்காலத்தில் இந்த வேலைகளைச் செய்ய எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் மிக்க விரைவாகவும், சிக்கனமாகவும் மேற்கூறிய வேலைகளைச் செய்யும் திறனுள்ளவை. இவை அகழும் எந்திரங்கள் எனப்படும். அகழும் எந்திரத்தில் முக்கியமாக ஓர் உறுதியான வண்டியின்மேல் நாற்புறமும் சுற்றக்கூடிய பீடம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதனுடைய கனம் சுமார் 20 டன் இருக்கும். இவ்வண்டியானது மண்வெட்டும்போது கீழே புதைந்து விடாமலிருக்கவும், எளிதில் நகர ஏற்றதாக இருக்கவும். இதன் சக்கரங்களைச் சுற்றி மரவட்டைக் கால்கள் போன்ற விளிம்புகள் கொண்ட எஃகுத் தட்டுக்களாலான சங்கிலி இருக்கும். இத்தட்டுக்கள் எந்திரத்தின் கனம் பூமியின்மேல் சீராகப் பரவி இருக்கு-