பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைத் தமிழ்

529

இசைத் தமிழ்

கும் முறையே 4,3,2,4,4,3,2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,2,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும்.

குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம்
குரையா உழையிளி நான்கு – விரையா
விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்

என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலியுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது.

குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும்.

மேற்செம்பாலை,செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்களாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப்படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனைகளும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபினால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந்திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யெனவும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீரசங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப்பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார்.

“இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்” என்பது வேனிற்காதை யுரையிற் கூறப்பட்டது. “பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க” என்பர் அரும்பதவுரையாசிரியர்.

“பண்ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம்,
கண்ணோட்ட மில்லாத கண்”

என்னுந் திருக்குறளுரையிலே, “பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று” என்றார் பரிமேலழகர். “ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்” என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர்.

வேனிற்காதையினுள்ளே, “அகநிலை மருதமும் புறநிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருதமும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி” என்புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பதவுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற்காதையுரையிலே, “மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண்” என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற்பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதையுரையிலும், ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ்நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஔடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும்.

நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப்பண்ணும், நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற்குரியன என்பது இசை நூன்மரபு.

“குழலினிது யாழினிது என்ப” என்பர் திருவள்ளுவர். எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக்கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெருவங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.

வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத்தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோடயாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக்கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய், மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண்பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிகவும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர்.

“கணை கொடிது” எனத் தொடங்கும் திருக்குறளுக்கு, “அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது” என வரும் பரிமேலழகர் உரையாலும், “யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண்-67