பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைத் தமிழ்

530

இசைத் தமிழ்

ணுக்கு இன்னாதாகலின் அதனிடைப் பிறவாத இசையே யென்பேனோ” என அடியார்க்கு நல்லார் கூறிய உரையாலும் யாழின் உருவம் வளைவுடையதென்பது நன்கு துணியப்படும். இத்தகைய யாழ்க்கருவி சேக்கிழார் காலத்திற்குப் பின் அடியோடு மறைந்து போயிற்று.

பண்டைத் தமிழர் வாசித்த யாழும் இக் காலத்தில் வழங்கும் வீணையும் ஒன்றே யென்பர் சிலர். ஒவ்வொரு சுரத்திற்கும் தனித் தனி நரம்பு கட்டப் பெற்றது பழைய யாழ்க்கருவியாம். ஒரு நரம்பிலே பல சுரங்களையும் வாசித்தற்கமைந்தது பிற்காலத்து வீணைக் கருவியாகும். வீணை யென்னும் கருவி சங்கத் தொகை நூல்களிற் கூறப்பட்டிலது. ”இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்” என வரும் திருவாசகப் பாடலில் வீணையும் யாழும் இருவேறு இசைக் கருவிகளாகக் கூறப்பட்டுள்ளன. யாழும் வீணையும் இருவேறு இசைக் கருவிகளென்பதனைச் சேக்கிழார் பெருமான் இனிது விளக்கியுள்ளார்.

முற்காலத்தில் யாழிற் கட்டப்பட்டிருந்த நரம்புகள் மாட்டு நரம்புகளே. அந் நரம்புகள் வெயில், மழை முதலிய கால வேற்றுமையால் நெகிழ்ந்தும் இறுகியும் இசை வேறுபடும் தன்மையன. பண்டைத் தமிழர் குழலோசையின் துணை கொண்டே யாழ்நரம்புக்கு இசை கூட்டினரெனத் தெரிகிறது.

யாழின்கண் அமைந்த பத்தர் என்னும் உறுப்பு, குமிழ், முருக்கு, தணக்கு என்னும் மரங்களாற் செய்யப்பட்டது. அதனது வளைந்த கோடு கொன்றை, கருங்காலி மரங்களாற் செய்யப்பட்டது. இன்பமில்லாத இசையாகிய செம்பகையும், மழுங்கி யிசைத்தலாகிய கூடமும், சிதறியொலித்தலாகிய அதிர்வும் இசைக் குற்றங்கள். முறுக்கப்பட்ட நரம்பினுள்ளே மயிர், தூசு, துரும்பு முதலியன இருத்தலும் அது கொடும்புரியாகவோ ஏறிய முறுக்காகவோ இருத்தலும் நரம்பின் குற்றங்களாம்.

குற்றம் நீங்கிய யாழ் நரம்புகளிலே அமைத்து வாசித்தற்குரிய சுரவரிசைகளாகிய பாலைநிலைகள் ஆயப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை என நால்வகைப்படும். ”ஆயப்பாலையாய் நின்ற பதினான்கு கோவை பொலிந்து செப்பமுடைத்தாய்ப் பாடவியல்பு ஒத்தமைந்த சிறப்புடைத்தாதலினால் அதிலே ஏழு பாலையினையும் இணை நரம்பாகத் தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் காரணமாக” என வரும் அரும்பதவுரையினை நோக்குங்கால், ஒரு பண்ணிற்குரிய இசை நரம்புகள் மாத்திரை வேறுபாட்டினாலே இரு நிரல்களாக இணைந்து நீன்றிசைப்பது ஆயப்பாலை யென்பது புலப்படும். இவ்வாறே ஒரு பண்ணிற்குரிய நரம்புகள் மாத்திரை வேறுபட்டு மூன்று நிரல்களாக ஒத்திசைப்பின் திரிகோணப்பாலை யெனவும், நான்கு நிரல்களாக ஒத்திசைப்பின் சதுரப்பாலை யெனவும் கூறப்படும். நரம்பு முறைப்படி யமைந்த இசைச் சுரக்கோவையாகிய ஒரு பாலையை முதலில் நிறுத்திக்கொண்டு, தாரத்தாக்கத்தினாலே பதினொரு முறை திரித்துப் பின்னுள்ள பதினொரு பாலைகளையும் பிறப்பித்துப் பன்னிரண்டாவது சுரக்கோவையின் இறுதி நரம்பின் இசை முதலில் நின்ற பாலையில் முதலில் தொடங்கிய இசை நரம்போடு அணைந்து ஒன்றும்படி வந்து வட்டமாய் முடிய வாசிக்கப்படுவதே வட்டப்பாலையாகும். இளங்கோவடிகள் கூறிய தாரத்தாக்கம் என்பது தார இசையினை ஆக்கிக் கொள்ளுதலாகும். இறுதியிலே தோன்றிய கைக்கிளை நரம்பு முதலில் தோன்றிய தாரநரம்பின் இசையோடு இயையாமையால், பிரமாண சுருதியினைத் தாரவிசையோடு சேர்த்து, அத்தாரம் கைக்கிளையோடு ஒன்றும்படி செய்தலே தாரத்தாக்கம் எனப்படும். இவ்வாறு தார இசையினை ஆக்கிக் கொள்ளுதல் வட்டப்பாலையின் இடமுறைத் திரிபாகும். வலமுறையிலே திரிக்க வேண்டுமாயின் பிரமாண சுருதியைக் கைக்கிளையோடு கூட்டி இசையும்படி செய்யவேண்டும்.

”ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி” என்பது. முதல் ”பொலியக் கோத்த புலமையோன்” என்பது ஈறாக யாழாசிரியன் இலக்கணங் கூறிய அரங்கேற்று காதைப் பகுதியிலே இளங்கோவடிகள் பண்டை இசைத்தமிழ் மரபுக்கு அடிப்படையான முடிபுகள் பலவற்றையும் சுருங்கிய சொற்களால் விளக்கியுள்ளார். இப் பகுதிக்கு அமைந்த விரிவுரையாக விளங்குவது விபுலாநந்த அடிகளார் இயற்றிய யாழ்நூலாகும். மேலெடுத்துக் காட்டிய இசைத்தமிழிலக்கணங்களை இந் நூலின் துணை கொண்டு தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

தோற்கருவிகளில் இசை வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுவது மத்தளமாகும். ”மத்து என்பது ஓசைப் பெயர். இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தளமாதலால் மத்தளமென்று பெயராயீற்று” என்பர் அடியார்க்கு நல்லார். அவர் கருத்துப்படி மத்து + தளம் என்னும் சொற்களே மத்தளம் என்றாயின என எண்ண வேண்டியுளது. பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை என்பன தோற்கருவிகள் எனவும், இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாள் முழவு, காலை முழவு என எழுவகைப் படுமெனவுங் கூறுவர் அடியார்க்கு நல்லார்.

பண்டை நாளில் வழங்கிய தாளவகையோத்து முதலிய தமிழ் நூல்களில் தாளவிலக்கணம் விரிவாகக் கூறப்பட்டது. தாளமென்பது கொட்டு, அசை, தூக்கு, அளவு என்பவற்றோடு கூடியது. கொட்டு அரை மாத்திரை. அசை ஒரு மாத்திரை. தூக்கு இரண்டு மாத்திரை. அளவு மூன்று மாத்திரை. இம்மாத்திரைகளை முறையே க, எ, உ, ஃ என்ற எழுத்துக்களாற் குறிப்பிடுவர். கொட்டு - அமுக்குதல். அசை - தாக்கி யெழுதல். தூக்கு-தாக்கித் தூக்குதல். அளவு-தாக்கின ஓசை மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். ஒரு தாளத்தின் முதல் எடுக்குங்காலம் பாணியென்றும், தாளத்தின் இடையே நிகழுங்காலம் தூக்கு என்றும், அத்தாளம் முடிந்து விடுங்காலம் சீர் என்றும் கூறப்படும். ”சச்சப்புட முதலான பஞ்ச தாளமும், அரைமாத்திரையுடைய ஏசுதாள முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளமும், ஆறன் மட்டம், எட்டன்மட்டம் என்பனவும், தாளவொரியல், தனிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண்கூத்துப் பாணி யீறாகக் கிடந்த பதினொருபாணி விகற்பங்களும், முதனடை, வாரம் முதலாயினவும் பண்டை நாளில் வழங்கிய தாளங்கள்” எனச்சிலப்பதிகார வுரையிற் குறுப்பிடப்பெற்றுள்ளன.

சிந்து, திரிபதை, சவலை, சமபாதவிருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என்னும் ஒன்பது வகையது இசைப்பாட்டு என்பது அறிவனார் இயற்றிய பஞ்சமரபு வெண்பாவினாற் பெறப்படும். எவ்வுயிர்க்கும் இன்பமுண்டாக்க