பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தியோப்பியா

552

இத்தியோப்பியா

இலக்கியமே காணக்கிடைக்கின்றது. அதுவும் கிரேக்க இலக்கியத்தைத் தழுவி உண்டானதாகும்.

கிறிஸ்தவக் குருமாரே இலக்கியக் கர்த்தராக இருந்தனர். அவர்கள் முதன்முதல் செய்த பெரிய இலக்கிய வேலை கிறிஸ்தவ வேதநூலை மொழி பெயர்த்ததாகும்.

14ஆம் நூற்றாண்டுக்குப் பின் முஸ்லிம்கள் நாட்டைத்தாக்கினர். அம்தா சையான் (1312-42) என்னும் அரசன் முகம்மதியரை நாட்டினுள் வரவொட்டாமல் தடுத்தபோதிலும், அராபியரும் இத்தியோப்பியரும் இலக்கியத் தொடர்பு கொள்ள வழிசெய்தான். அதனுடன் இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாத அமைதியையும் நாட்டில் உண்டாக்கினான். ஜாராயாகூப் (1434-68) அரசன் ஒரு சிறந்த எழுத்தாளனாக இருந்ததோடு புலவர்களை ஆதரித்தும் வந்தான். இக்காலத்தில் மொழிபெயர்க்கப் பெற்ற நூல்களுள் பெரும்பாலானவை அரபு நூல்களாம்.

இக் காலத்தைத் தோத்திரப் பாடற் காலம் எனலாம். இக் காலத்திற் பல பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டும் சுயமாக இயற்றப்பட்டும் வந்தன. மற்றும், கிறிஸ்தவச் சான்றோர் வரலாறுகளும் எழுதப்பட்டன. அவற்றுள் தெக்ளாவின் வாழ்க்கை வரலாறும், நக்கீட்டோலா ஆப்பின் வாழ்க்கை வரலாறும் சிறந்தவை.

இத்தியோப்பிய இலக்கியத்தில் மிகச் சிறந்த நூல்களுள் ஒன்று கெப்ரா நகாஸ்து (அரசன் புகழ்) என்பதாகும். ஜாரா யாக்கூபு மன்னன் இயற்றிய மஷாபா பெர்ஹான் (ஒளி தரும் நூல்) என்பது அக் காலத்து மூட வழக்கங்களையும் ஒழுக்கத் தவறுகளையும் அழகாகச் சித்திரித்துக் கண்டிப்பதாகும்.

இத்தியோப்பிய இலக்கியத்தின் சிகரமாக உள்ளது 17ஆம் நூற்றாண்டிலிருந்த ஜாரா யாக்கூபு இயற்றிய விசாரணை என்னும் நூலாகும். அதன் நடையே இத்தியோப்பிய மொழி நடையில் மிகச்சிறந்தது என்பர்.

13ஆம் நூற்றாண்டில் அரபு நூலை மொழிபெயர்த்து இயற்றிய பெதாநகாஸ்து (அரசர் சட்டங்கள்) என்னும் நூலே இப்போதும் இத்தியோப்பியாவின் மதச்சட்ட நூலாகவும் அரசாங்கச் சட்ட நூலாகவும் இருந்து வருகிறது.

இன்னும் இத்தியோப்பிய மொழியில் போற்றக்கூடிய சிறந்த எழுத்தாளன் ஒருவனுந் தோன்றவில்லை. ஆதிகால முதல் இத்தியோப்பிய மொழியில் பழமொழிகளும் பிதிர்களும் பாடல்களும் ஏராளமாக எழுதப்படாமலே இருந்து வந்துள்ளன." எழுந்து மறையும்; எப்போதும் மறவாது, அது யாது? ஞாயிறு" என்னும் பிதிர் மிக்க புகழ் பெற்றது.

இத்தியோப்பியாவில் இருபதாம் நூற்றாண்டில்தான் அச்சுப்பொறி ஏற்பட்டது. ஆதலால் ஏராளமான நூல்கள் இன்னும் அச்சாகாமல் இருந்து வருகின்றன.


இத்தியோப்பியா ஆப்பிரிக்காவில் வடகிழக்குப் பகுதியிலுள்ள நாடு. 1923 வரை அபிசீனியா என வழங்கி வந்தது. பரப்பு: 3,50,000 ச. மைல். சிற்சில இடங்கள் கடல் மட்டத்துக்கு மேல் 10,000 அடி உயரமுள்ளன. பூமத்தியரேகைக்கருகிலிருப்பினும் சம தட்ப வெப்ப நிலையையுடையது. மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை இங்கு நல்ல மழை பெய்கிறது; மற்ற மாதங்களிலும் சுமாரான மழை உண்டு. இந்நாட்டில் பிறந்து வடக்கு நோக்கியோடும் நைல் ஆற்றினை இத்தியோப்பியர் கடவுளாகக் கருதினர். இவ்யாற்றின் வெள்ளப் பெருக்கு இந்நாட்டு வேளாண்மைக்குப் பெரிதும் உதவுகிறது. பொதுவாக இத்தியோப்பிய நாடு வடக்கே சரிந்து இருப்பதாலேயே ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்கின்றன. இரும்பு மிகுதி. ரப்பர் சில இடங்களில் கிடைக்கிறது. போக்குவரத்துச் சாதனமின்மையால் வியாபாரம் மிக்ககுறைவு. யானை, சிங்கம், நீர்க் குதிரை, காண்டாமிருகம்,

இத்தியோப்பியா

முதலை, சிவிங்கி, கழுதைப் புலி, காட்டெருமை முதலிய விலங்குகள் காடுகளில் ஏராளமாய் வசிக்கின்றன. இத்தியோப்பிய மக்களிற் பெரும்பாலார் ஹாமிட்டிக் மரபினர். செமிட்டிக் மக்களும் ஹாமிட்டிக் மக்களும் இங்கு வாழ்ந்த நீக்ரோக்களைத் துரத்திவிட்டனர். இவர்களைத் தவிர அராபியர், கிரேக்கர், ஆர்மீனியர், ஐரோப்பியர் ஆகிய மக்களும் இங்கு உள்ளனர். நிலவரி அரசனுக்குச் செலுத்தப்படல் வேண்டும். நிலவரி மிகவும் அதிகம். ஆகவே உழவு முயற்சியில் மக்களுக்கு ஊக்கம் அதிகமில்லை. காப்பிச்செடி பயிரிடுவதில் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டுள்ளனர். பருத்தி, சர்க்கரை, கிச்சிலி, பேரீந்து முதலியன கிடைக்கின்றன. மேட்டு நிலங்களில் கோதுமை, பார்லி, புகையிலை பயிரிடப்படுகின்றன. அடிஸ் அபாபா (மக்: 3 இலட்சம்) இதன் தலைநகர். (த.க) அரசர் இரண்டு ஆலோசனைச் சபைகளின் உதவியால் ஆண்டு வருகிறார். மக்: சு.1,00,00,000 (1947).

வரலாறு: கலப்பினங்கள் வசிக்கும் நாடென்று அராபியர்கள் இந்நாட்டை இகழ்ந்து அபிசீனியா என அழைத்தனர். கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை எகிப்தின் ஆதிக்கத்திலிருந்தது. பின்பு அசீரியர்கள் இதைக் கைப்பற்றினர். கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தியோப்பிய மக்கள் சுதந்திர மக்களானார்கள். அக்காலத்திலிருந்து இத்தியோப்பியா ஒரு சுதந்திர நாடாக இருந்து வருகிறது. சாலமோன் மன்னன் மனைவியாகிய ஷீபா இந்நாட்டினள்.

கி.பி. நான்காவது நூற்றாண்டில் அலெக்சாந்திரியா நகரத்து அதனேஷியஸ் என்னும் கிறிஸ்தவ அறிஞர் இத்தியோப்பிய மக்களைக் கிறிஸ்தவராக்கினார். இப்பொழுதும் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவைப் பங்குபோட்டுக் கொண்டிருந்தபோது, இத்தாலி இத்தியோப்பியாவைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் அபிசீனிய மன்னராகிய II-ம் மெனலிக், இத்தாலியப்படையை அடோவாச் சண்டையில் முறியடித்து நாட்டின் சுதந்திரத்தைக் காப்பாற்றினார். ஆனால் 1935-ல்