பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதயம்

556

இதயம்

படுத்தேயிருக்கும் நோயாளிக்கு முதுகிலும் இரு சந்துகளிலும் வீக்கம் அதிகமாகத் தோன்றும். அதாவது இதய நோய்களில் வீக்கம் ஏற்படும்பொழுது எந்தப் பக்கம் கீழே உள்ளதோ அங்கேயே வீக்கம் காணும். அதனாலேயே நடந்துகொண்டிருக்கும் நோயாளிக்குப் பாதங்களிலும், படுத்திருக்கும் நோயாளிக்கு முதுகிலும் வீக்கம் காணப்படுகிறது. உதட்டிலும், கை நகங்களிலும் இரத்த ஓட்டம் குறைந்து அவை கறுக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாகவும், கார்பன்டை ஆக்சைடு அதிகமாகவும் இருப்பதால் அவை இவ்வாறு தோன்றுகின்றன. மற்றும் சிலருக்குப் பலவீனம் அதிகமாகிச் சிரைகள் பருத்துக் காணப்படும். முக்கியமாகக் கழுத்திலுள்ள சிரைகள் இவ்வாறு தெரியும். மற்றும் சிலருக்கு வலி உண்டாகும்; மார்பு படபட வென்று அடிக்கும் ; இருமலும் உண்டாகும். காரனரி தமனி அடைத்துக் கொள்வதாலோ, இந்தக் குழாய்கள் கொஞ்சநேரம் சுருங்கியிருந்து இரத்தம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாலோ வலி ஏற்படுகிறது. இதனால் ஆஞ்சனா பெக்டரிஸ் (த. க.) என்னும் நோய் ஏற்படலாம். அல்லது இதய உறை கேடுற்றும் வலி ஏற்படும். தேகப் பயிற்சி செய்யும்பொழுது எல்லோருக்குமே மார்பு படபடவென்று அடிக்கும். ஆனால் இதய நோயுள்ளவர்களுக்குச் சும்மாவிருக்கும்பொழுதே இது ஏற்படும். வெறும் பயத்தினாலும் இது ஏற்படலாம். உதாரணமாக இருட்டிலோ அல்லது சரியான வெளிச்சம் இல்லாமல் இருக்கும்பொழுதோ ஒரு கயிற்றைப் பார்த்துப் பாம்பு என்று நினைத்து அஞ்சுவதால் எல்லோருக்குமே இதயம் படபடவென்று அடித்துக்கொள்ளும். சில சமயங்களில் மனக் கவலையாலும் இது ஏற்படலாம். அதனால் மார்பு படபடப்பு மட்டும் இருக்குமொருவனை இதய நோயுள்ளவன் என்று கருதலாகாது.

இதய நோய் உள்ளவர்களுக்கு நுரையீரலில் இரத்தம் தங்கி, இரத்தத்திலுள்ள நீர் பிரிந்து நுரையீரல் பைகளில் சேருவதால் இருமல் ஏற்படுகிறது. கொஞ்ச தூரம் நடந்தாலும், கொஞ்சம் பேசினாலும் சிறிது இருமல் ஏற்பட்டு அடங்கும். பழையபடி இதயத்திற்குப் பலம் வந்தவுடன் இந்த இருமல் மறைந்து விடும்.

இதய நோயினால் தூக்கமும் குறையலாம்; தூங்க முடியாமலும் போகலாம்.

இதய அறைகளில் இரத்தம் வந்து வெளியேறும் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் கதவுகள் பழுதடைந்து இதயநோய் தோன்றலாம். முக்கியமாகக் கீல்வாத சுரத்தினால் கதவுகள் பழுதாகின்றன. இப்போது கதவுகளைத் தவிர இதயத் தசைகளும் இதய உறையும் பழுதடையும்.

இதய நோய்கள் பிறவியிலேயே ஏற்படலாம். அல்லது பிறந்த பின்பு நோயினால் இதயத்திற்குக் கேடு ஏற்பட்டு உண்டாகலாம். பிறவியிலேயே இதயத்தின் அமைப்புச் சாதாரணமாக இல்லாவிடினும் அதனால் ஒருவகைக் கேடும் ஏற்படாமல் இருக்கலாம். உதாரணமாக இடப் புறம் இருக்கும் இதயம் மிகச் சிலருக்கு வலப் புறம் இருக்கலாம். அதனால் அவர்களுக்கு யாதொரு தொந்தரவும் ஏற்படாது. சில சமயங்களில் பிறவிக் கோளாற்றின் கடுமையால் பிறந்த குழந்தை உயிரோடு இருப்பதே இயலாது போய்விடும். உதாரணமாக இதயத்தில் இடது கீழறை இல்லாமலேயே இருக்கலாம். அல்லது வலது கீழறை இல்லாமலேயே இருக்கலாம். இவ்வாறு பிறக்கும் குழந்தை விரைவில் இறந்துவிடும். மற்றும் சில சமயங்களில் இதயத்தில் கோளாறு இருந்தும், குழந்தைப் பருவம் அல்லது வாலிபப் பருவம் வரை அது உயிரோடு இருக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கலாம்.

முக்கியமாகக் காணப்படும் பிறவிக் கோளாறுகள்:

திறந்த குழாய்த் தமனி (Patent Ductus Arteriosus): பெருந் தமனியையும், நுரையீரல் தமனியையும் இணைக்கும் குழாய் ஒன்றுள்ளது. இது குழந்தை பிறந்த சிறிது காலத்திற்குள் மூடிப்போய்விடுகிறது. இப்படி மூடிக்கொள்ளாவிட்டால், இதய உள் அறை நுண்மங்களால் தாக்கப் பெற்று, இதய உள்ளுறை நுண்ம அழற்சி (Bacterial endocarditis) என்ற நோய் தோன்றும். இந்த நோயுள்ளவர்கள் நாளடைவில் பலம் குன்றிச் சோர்வடைகிறார்கள். இதனால் இடது கீழறை மிகுதியாக வேலை செய்ய நேர்கிறது. இக்காரணத்தினால் நாளடைவில் இதயம் பலவீனமடைந்து ஆயுள் குறைகிறது. இந்த நோயுள்ளவர்களைப் பரீட்சை செய்து பார்க்கும்போது, இடப் பக்கத்தில் மார்பெலும்பிற்கு அருகில் இரண்டாவது விலா எலும்பு, மார்பெலும்போடு சேருமிடத்தில் இதய ஓட்டத்தின் ஒலி கேட்காமல் எந்திரம் ஓடுவதுபோன்ற ஒலி கேட்கும். இந்த ஒலி இதயம் சுருங்கும்போது பலமாகவும், தளரும் போது குறைவாகவும் இருக்கும். இந்த ஒலி எந்திர முணுமுணுப்பு (Machinery murmur), குடைவில் ஓடும் ரெயிலின் முணுமுணுப்பு (Train in the tunne1 murmur), சுழலும் பம்பர முணுமுணுப்பு (Humming top murmur) என்று பலவகைகளாக அழைக்கப்படும். சாதாரண இதய ஒலியைப்போலன்றி, இது தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் இருக்கும். அதாவது சாதாரண இதயச் சத்தங்களைப் போல் இல்லாமல், ஓயாமலும் அதிகச் சத்தத்தோடும் ஒரு சத்தம் உண்டாகிறது என்பதே.

ஆப்பரேஷன் செய்வதால் இந்த நோய் பூரணமாகக் குணமாகலாம். இந்த நோயோடு இதய உள்ளுறை நுண்ம அழற்சியும் ஏற்பட்டால், ஆப்பரேஷன் செய்தே ஆகவேண்டும். இந்த நோயினால் இடது கீழறை பலவீனமடைந்து, அது தன் வேலையைச் சரிவரச் செய்யாவிட்டாலும் ஆப்பரேஷன் செய்யவேண்டும்.

நுரையீரற் சுருக்கம் (Pulmonary spenosis) : இந்த நோயினால் நுரையீரலுக்கு இரத்தத்தைச் செலுத்தும் தமனிகள் குறுகித் தடைப்பட்டு விடும். அல்லது அவற்றின் கதவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு, சிறு துவாரம் இருந்தாலும் நுரையீரலுக்குச் செல்லும் இரத்தம் குறைந்துவிடும். இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து, உதடும் நகங்களும் கறுத்துவிடும். விரல்கள் பருக்கும். இந்த நோயின் விளைவாக நுரையீரலுக்குப் போதுமான அளவு இரத்தம் இல்லாததால் க்ஷயமும் உண்டாகலாம். சிறு குழந்தைக்கு இந்நோய் கண்டால் அது நெடுநாள் பிழைத்திராது; ஐந்து அல்லது பத்து வயதிற்குள்ளேயே இறந்துவிடும். இந்த நோயோடு மற்றும் சில நோய்கள் சேர்ந்து காணப்படுகின்றன. பெருந் தமனி வலப்பக்கமிருந்து புறப்படலாம். இதனால் அசுத்த இரத்தம் பெருந்தமனியின் வழியாக உடம்பின் பல பகுதிகளுக்குக் கொண்டுபோகப்பட்டு, அங்குக் கருநிறம் ஏற்படக் கூடும். வேறு சிலருக்கு இடது கீழறை பெரிதாக இல்லாமல் வலது கீழறை பெரிதாக இருக்கும். இரு கீழறைகளையும் பிரிக்கும் இடைச் சுவரில் பிளவுகள் இருப்பதும் உண்டு. ஆப்பரேஷன் செய்து, வேறு இடத்திலுள்ள முக்கியமான தமனியை நுரையீரலுக்குச் செல்லும்படி செய்-