பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தி

561

இந்தி

யானது இந்தியாவின் அரசியல் மொழியாக இருக்கத் தக்கவாறு வளர்ச்சி பெற்று வருகிறது.

இலக்கியம் : சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் முதன்முதல் முஸ்லிம் படையெடுப்பு ஏற்பட்டபோது இந்தி இலக்கியம் தோன்றியது எனலாம். வடமொழியின் இரு திசைமொழிகளாக (Dialects) இருந்த பாலியும், அர்த்தமாகதியும் அக்காலத்தில் பெரு மாறுதல் அடைந்து இந்தி மொழியாக வளர்ந்தன.

இந்தி இலக்கியத்தின் வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வீரக்கதைக் காலம், 2. பக்திக் காலம், 3. ரீதிக் காலம், 4. தற்காலம்.

வீரக்கதைக் காலம் (993-1318): கஜினி சுல்தான்களின் படையெடுப்பு அக்காலத்தில் நிகழ்ந்தது. பிரிவினை மலிந்திருந்த அக்காலத்தில் ஒவ்வொரு சிற்றரச்னுடைய ஆஸ்தானக் கவிஞனும் அவனைப் புகழ்ந்தும், மற்றோரை இகழ்ந்தும் பாடி அப்பிரிவினை உணர்ச்சியை வளர்த்தான். வெளிநாட்டினர் படையெடுப்பை எதிர்த்துநின்ற பிருதிவிராஜனது அருஞ்செயல்களால் ஒருமை உணர்ச்சி தோன்றியது. இவனைப் புகழ்ந்து சந்தவரதாயி முதலிய புலவர்கள் கதைப்பாட்டுக்கள் பாடி இந்தி இலக்கியம் வளர உதவினர். நாட்டின் பெருமையையும், இந்து மதத்தின் உயர்வையும், இவற்றைக் காக்க முன்வந்த அரசர்களின் பெருமையையும் இப்பாட்டுக்கள் பொருளாகக்கொண்டன. பல திசை மொழிகளிலும் முதன்முதல் உருவாகிய இலக்கியம் இவ்வடிவினதே. இதன்பின்னர் இராமாயணத்தை மாதிரியாகக் கொண்ட காவியங்கள் இயற்றப்பட்டன. இவற்றுள் சந்தவரதாயி இயற்றிய பிருதிவிராஜ ராசோ, பட்டகேதார் இயற்றிய ஜயசந்திர பிரகாசம், ஐகனிகர் இயற்றிய அல்ஹா ஆகியவை முக்கியமானவை.

பக்திக் காலம் (1318-1643): துருக்கிச் சுல்தான்களைப் போலன்றி மொகலாயர்கள் நாட்டை வென்று இங்கேயே நிலையாக வசிக்கத் தொடங்கினார்கள். இவர்களது ஆட்சியில் நாட்டில் அமைதியும், திறமையான நிருவாகமும் ஏற்பட்டன. அக்காலத்தில் வாழ்ந்த சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகிய ஆசாரியர்களின் கருத்துக்களும், ஒருவகைச் சித்த மதமும், நாத சம்பந்தம் என்ற மதமும் நாட்டில் நிலவின. இஸ்லாம் சமயமும் இங்குப் பரவத் தொடங்கியது. பலவேறு சமயக் கருத்துக்களில் ஒருமை காணும் முயற்சியைக் கபீர் மேற்கொண்டார். இவரைப் பின்பற்றிப் பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் உள்ள கருத்துக்களைக் கொண்ட சர்வமத சம்மதமான சமயத்தைத் தோற்றுவிக்க முயற்சி நடைபெற்றது. இதன் விளைவாகச் சகுணம், நிர்க்குணம் என்னும் இரு சமயப்பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளுக்கேற்றவாறு இக்காலத்திய இலக்கியத்தையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். நிர்க்குணத் துறையின் முக்கியப் பிரதிநிதி கபீர். இவர் கல்வியில் தேர்ந்தவர் அல்லர் எனினும், அசாதாரணமான உள்ளுணர்வு கொண்ட இவர் சொற்கள் அனைத்தும் கவிதையாயின. இவர் காலத்தில் வாழ்ந்த ராமதாஸ், தர்மதாஸ், நானக், தாது போன்ற பலரும் இவருடைய கருத்துக்களையொத்த கருத்துக்களை வெளியிட்டனர்.

இதன் பின்னர் இராம இராச்சியம் என்ற இலட்சிய சமூகத்தைத் துளசிதாசர் விவரித்தார். இவருடைய பெருநூலான இராமசரிதமானஸ் அக்காலத்திய சமூக, மத, அறவியற் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது. இவரது நூலில் மானிட வாழ்க்கையின் ஆன்மார்த்த அமிசங்கள் இலௌகிக அமிசங்களுடன் அழகுபெற இழைந்துள்ளன. இத்தகைய ஒருமைப்பாட்டின் விளைவாக மக்களிடையே அருவமான சமயக் கருத்துக்கள் தெளிவாக உருப்பெற்றன.

சகுணப் பிரிவில் இரு பக்தி மார்க்கங்கள் தோன்றி வளர்ந்தன. இவற்றுள் முதலாவதான இராமபக்திக்குத் துளசிதாசரும், இரண்டாவதான கிருஷ்ண பக்திக்கு வல்லபாசாரியரும் காரணமாவர். கிருஷ்ண பக்தி மார்க்கப் புலவருள் புகழ்பெற்றவர் சூர்தாசர். இவர் இராமாயணத்தை யொத்த காவியத்தை இயற்றவில்லை. இவர் தியாகராஜர், புரந்தரதாசர் ஆகியோரைப் போன்ற இசைப்பாட்டாசிரியர். இவர் ஓர் இலட்சம் பாக்களை இயற்றினார் எனக் கூறப்படுகிறது. அவற்றுள் 40,000 பாக்கள் சூரசாகரம் என்ற நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. துளசிதாசரையும் சூர்தாசரையும் தவிரச் சுமார் நூறு கவிஞர்கள் பக்திமார்க்கப் பாடல்களைப் பாடினார்கள்.

தத்துவமும் இலக்கியமும் ஒன்றாக இணைந்ததே பக்திக் காலத்தின் சிறப்பான அமிசமாகும்.

ரீதிக் காலம் (1643-1843): இக்காலத்தில் அலங்காரம், ரசம் போன்ற துறைகளில் பல வடமொழி நூல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. சொந்தக் கற்பனையான நூல்கள் இக்காலத்தில் அவ்வளவாகத் தோன்றவில்லை. வடமொழி நூல்களுக்கும், பழங்கால இந்தி நூல்களுக்கும் உரைகள் வெளியிடப்பெற்றன. கேசவதாசர், பிகாரிலால், மதிராம், பூஷணர், தேவர், அலி முகீப்கான், மகாராஜா ஜஸ்வந்த் சிங் ஆகியோர் இக்காலத்து இலக்கியக் கர்த்தாக்களுள் முக்கியமானவர்கள். சாகித்திய சாஸ்திரத்தின் நுணுக்கத்திலேயே திளைத்துவிட்ட இக்காலத்தவர் சொந்தமாக இலக்கியச் செல்வங்களை ஆக்க முயலவில்லை.

தற்காலம் (1843க்குப் பின்) : இந்தியக் கிளர்ச்சிக்குப்பின் நிகழ்ந்த அரசியல், சமூக மாறுதல்களால் பழங்காலத் தத்துவநூற் கருத்துக்கள் மறைந்தொழிந்தன. இதுவரை இங்கு இல்லாத சடக்கொள்கை உருப்பெற்றது. கிறிஸ்தவப் பாதிரிகள் நிகழ்த்திய மதமாற்றத்தால் இந்துக்கள் விழிப்படைந்தனர். இந்து சமூகச் சீர்திருத்தத்தின் தேவை உணரப்பட்டது. சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை நிறுவினார். இவரது கருத்துக்களை நாடெங்கும் பரப்பப் புதியதோர் உரைநடை தேவையாயிற்று. இவரும் பாரதேந்து என்ற அறிஞரும் இந்தி மொழிக்குப் புத்துயிர் அளித்தனர். வடமொழி நாடகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. கம்பெனியாரின் ஆதரவில் பள்ளிப்புத்தகங்கள் எழுதப்பெற்றன. ஆங்கிலம், வங்காளி, பாரசீகம் போன்ற மொழிகளிலிருந்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. இதுவரை எழுத்தாளர் கையாளத்தக்க நடையெதுவும் திட்டமான உருப்பெறவில்லை. ஆசார்ய பிரசாத துவிவேதி இக்குறையை நீக்கி இலக்கியச் சுவையை வளர்த்ததோடு விஞ்ஞானம் முதலிய அறிவியல் துறைகளிலும், திறனாய்வு, கட்டுரை முதலிய இலக்கியத் துறைகளிலும் நூல்கள் தோன்ற வழிகாட்டினார். அதுவரை வ்ரஜ பாஷையிலேயே கவிதை எழுதப்பெற்றது. உரைநடை எழுத்தாளர் பயன் படுத்திய புதுமொழியிலும் கவிதைகள் தோன்ற அவர் காரணமானார். இவ்வகையில் புது இலக்கிய வடிவங்கள் தோன்றின. பல மாத இதழ்கள் தோன்றி எழுத்தாளரை ஊக்குவித்தன.

தயானந்தரின் கருத்துக்களைப்போல ராஜா ராம் மோகன்ராயின் கருத்துக்களும் தற்கால இந்தி இலக்கியத்தின் வளர்ச்சியைச் சிறப்பான வகையில் பாதித்துள்ளன. சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட