பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திய சமுத்திரம்

568

இந்தியச் சுதந்திரச் சட்டம்

விரிகுடாவில் இதன் மேற்பரப்பின் உப்புத்தன்மை குறைவு; அரபிக் கடலில் அதிகம்;மடகாஸ்கர், இலங்கை முதலியவை இச்சமுத்திரத்திலுள்ள தீவுகள்; அந்தமான், நக்கவாரம் (நிக்கோபார்), இலட்சத்தீவுகள் மால தீவுகள் (Maldives) முதலியவை முக்கியமான தீவுக் கூட்டங்கள். நீர்ப்பரப்பின் அடியில் நீளவாட்டில் இந்தியாவிலிருந்து அன்டார்டிகாவரையுள்ள மேடு ஒன்று உள்ளது. டாஸ்மேனியாவிற்கும் அன்டார்க்டிகாவிற்கும் இடையே இன்னொரு சிறு மேடும் உள்ளது. இந்த மேடுகளும் இவற்றினிடையே உள்ள பள்ளங்களும் இச்சமுத்திரத்தில் நிகழும் நீரோட்டங்களைப் பாதிக்கின்றன. இந்திய சமுத்திரத்தில் பூமத்திய ரேகைக்குத் தெற்கே ஓடும் தென் பூமத்திய நீரோட்டம் முதலில் கிழக்கு நோக்கிச் சென்று, பிறகு ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரமாக வடக்கே திரும்பி ஓடுகிறது. தென் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரமாக ஆகூல்யாஸ் (Agulhas) என்னும் நீரோட்டம் ஓடுகிறது. ஆண்டு முழுவதும் ஒரு பூமத்திய எதிர்-நீரோட்டம் பூமத்தியரேகைக்குத் தெற்கே, கிழக்குத்திக்கு நோக்கி யோடுகிறது. பூமத்தியரேகைக்கு வடக்கே உள்ள நீரோட்டங்கள் காலத்திற்கேற்றபடி பல திக்குக்களில் ஓடுகின்றன. இதன் தென்கோடியில் (அட்சம் 45° தெ. வரை) பனிக்கட்டிகளும் பனிப் பாறைகளும் எல்லாப் பருவங்களிலும் காணப்படும். சூயெஸைக் கடந்து ஏடன் வழியாகச் செல்லும் வியாபாரக் கப்பல்கள் இந்திய சமுத்திரத்தின் வழியே செல்ல வேண்டியிருப்பதால் ஐரோப்பாவிற்கும், இந்தியா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆசியா முதலிய இடங்களுக்கும் இடையே உள்ள வியாபார மார்க்கங்கள் முழுவதும் இந்திய சமுத்திரத்தில் அமைந்துள்ளன. சூயெஸ் கால்வாய், ஜலசந்தி, மோசம்பீக் ஜலசந்தி ஆகியவை ஐரோப்பாவிலிருந்து இந்திய சமுத்திரத்தை அடையும் வழியில் உள்ளன. தீவுக் கூட்டங்கள் ஏராளமாக இருப்பினும், கப்பல் போக்குவரத்திற்கு இச்சமுத்திரம் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள பம்பாயும், மலேயாத் தீபகற்பத்தின் தென்கோடியில் உள்ள சிங்கப்பூரும், இலங்கைத் தீவின் மேற்குக் கரையில் உள்ள கொழும்பும் வியாபார மார்க்கத்திலுள்ள முக்கியமான துறைமுகப்பட்டினங்கள்.


இந்திய சமுத்திரமும் வாணிபமும்: இந்திய சமுத்திரம் உலகிலுள்ள மிகப் பெரிய வியாபார வழிகளுள் ஒன்று. பண்டைக் காலமுதல் இக்கடல் வழியாக இந்தியாவுக்கு எகிப்து, மெசப்பொட்டேமியா,கிழக்கு மத்தியதரைக்கடல் நாடுகள் ஆகியவற்றுடன் வியாபாரம் நடந்து வந்ததாகத் தெரிகிறது. தமிழ் நாட்டிலிருந்து மயில் தோகை, அகில் முதலிய பொருள்கள் பாபிலோனியா சென்றன என்று கிறிஸ்தவ வேதத்தால் தெரியவருகிறது. தமிழ்நாட்டுத் தேக்குமரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த கல்தேயர் நகரமாகிய ஊர் (Ur) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்ட்டுள்ளது. தமிழ்கத்திலிருந்து பல பொருள்கள் ரோமபுரிக்குச் சென்றதாகத் தமிழ் நூல்களிலிருந்தும், ரோம ஆசிரியர் பிளினியின் நூல்களிலிருந்தும் தெரிகிறது. யவனர்களாகிய கிரேக்கர்கள் காவிரிப்பூம் பட்டினம் போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து வியாபாரம் செய்தனரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு இந்திய சமுத்திரத்தின் மேற்குப் பகுதி வியாபார வழியாக இருந்ததுபோலவே, கிழக்குப் பகுதியும் இருந்து வந்திருக்கிறது. தென்னிந்தியாவுக்கும் கடாரம் என்னும் பர்மாவுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகிறது. கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் மேனாட்டுக் கப்பல்கள் இந் திய சமுத்திரத்தின் வழியாகச் சீனாவுக்குச் சென்றன. சீனக் கப்பல்கள் அரேபியாவுக்குச் சென்றன. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் சீனாவுக்கும் அரேபியாவுக்கும் வியாபாரம் சிறப்பாக நடந்துவந்தது. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனக்கடற்படை அதிபர் செங்-ஹோஸ் என்பவருடன் கீழ்நாடுகட்குப் புறப்பட்டு வந்த கப்பற் கூட்டம் மிகப் பெரியதாகும். அவர் இந்தியாவிலும் அரேபியா போன்ற நாடுகளிலும் தம் அரசர்க்காக நவரத்தினங்கள் வாங்கவே புறப்பட்டு வந்தார். அவருக்குப் பின்னர், போர்ச்சுக்கேசியர் முதலிய மேனாட்டாரும் வியாபாரம் செய்வதற்காக இந்திய சமுத்திரம் வழியாக இந்தியாவிற்கு வந்தனர். இப்போது இந்திய சமுத்திரம் மிகப்பெரும் கடற்பிரயாண வழியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் அதன் அருகிலுள்ள நாடுகளிலும் மிகப்பெரிய துறைமுகங்கள் உண்டாகியிருக்கின்றன.

இந்திய சமுத்திரத்தைச் சார்ந்த நாடுகளின் மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள். அதனால் இந்தியா தவிர மற்ற நாடுகளின் ஏற்றுமதிப் பொருள்கள் பெரும்பாலும் தாதுப்பொருள்களும், காட்டுவிளை பொருள்களும், மலைத்தோட்டப் பொருள்களுமேயாகும். இந்தியாவில் பலவிதமான இயற்கைச் செல்வங்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவிலிருந்து தானியங்கள், மலைத்தோட்ட விளைபொருள்கள், தாதுப்பொருள்கள், பருத்தி சணல்போன்ற கச்சாப் பொருள்கள் ஏற்றுமதியாவதோடு, பருத்தித் துணி, சணற் கோணி போன்ற எந்திரசாலை உற்பத்திப் பொருள்களும் ஏற்றுமதியாகின்றன. இந்திய மக்கள் சமுத்திரத்தை அடுத்த நாடுகளில் குடியேறி யிருப்பதால் இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்து வருகிறது. இது நாளுக்கு நாள் மிகும் என்று எண்ண இடமிருக்கிறது. பீ. எம். தி.


இந்தியச் சிற்பிகள் நிலையம் (Indian Institute of Architects): 1917-ல் சிற்ப மாணவர் சங்கமாகத் தொடங்கி, 1922-ல் பம்பாய்ச் சிற்பிகள் சங்கமாக மாறி, 1929-ல் இந்தியச் சிற்பிகள் நிலையமாக ஆகியது. அதே ஆண்டில் ராயல் பிரிட்டிஷ் சிற்பிகள் சங்கத்துடன் இணைக்கப்பட்டது. இதன் நோக்கம்சிற்பக் கல்வியை வளர்ப்பதும், பாரதத்தில் உள்ள சிற்பிகளின் நலத்தைக் காப்பதுமாகும். இது 'இந்தியச் சிற்பி நிலையத்தின் சஞ்சிகை' என்ற காலாண்டுப் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறது. 1927-28-ல் சங்கத்தின் தலைவராயிருந்த சோரப் எப். பரூச்சாவின் பெயரால் ஒரு சிற்பநூல் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சிற்பக் கலையில் உற்சாகம் ஊட்டுவதற்காகப் பணப் பரிசுகளும் விருதுகளும் அமைத்திருக்கின்றது; அடிக்கடி சிற்பக்கலை பற்றிச் சொற்பொழிவுகளும் விவாதங்களும் நடத்துகின்றது. இந்நிலையத்தின் ஆதரவில் ராயல் பிரிட்டிஷ் சிற்பிகள் சங்கத்தின் பரீட்சைகள் நடந்து வருகின்றன. இந்நிலையத்தின் சந்தாதாரர்கள் மூன்று வகைப்படுவர். அவர்கள் உலகில் பல இடங்களிலும் இருக்கிறார்கள். இதன் அலுவலகம் பம்பாய் நகரத்தில் இருக்கிறது.


இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947: 1942-ல் கிரிப்ஸ் திட்டம் வெளியிட்டதுமுதல் சுமார் ஐந்தாண்டுகளாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும் இந்தியத் தலைவர்களும் ஒருமனமாக இந்தியாவில் எதிர்கால