பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சடித்தல்

27

அச்சிறுபாக்கம்

நின்று நின்று சுற்றும்; இன்னொன்றில் தொடர்ந்து சுற்றிகொண்டே இருக்கும். உருளை எந்திரத்தில் பெரியதாள்களில் அச்சடிக்கலாம்; 32 பக்கங்கள் கொண்ட பாரத்தை ஒரே முறையில் அச்சடிக்கலாம். இது பெரும்பாலும் மின்சார மோட்டாரினாலேயே இயங்கும். இது மணிக்குச் சுமார் 2000-3000 பிரதிகள் அச்சிடவல்லது.

சுழல் எந்திரம்
உதவி: ஹிந்து, சென்னை

சுழல் எந்திரங்கள் மணிக்குப் பதினாயிரக் கணக்கான பிரதிகள் அச்சிடவேண்டிய பத்திரிகாலயங்களில் அவசியமாகின்றன. இந்த எந்திரங்களில் அச்செழுத்துக்கள் உள்ள பாரம் சமதளமாக இல்லாமல் உருளை வடிவாக இருக்கும். இதன்மேல் இன்னொரு உருளை சுழன்று காகிதத்தை அச்சின்மேல் அழுத்தும். இந்த உறுளைகளிளிடையே காகிதம் செலுத்தப்படும். உருளைகள் வெகு வேகமாகச் சுழலும். இவ்வளவு வேகமாகக் காகிதத்தை எந்திரத்தில் அளிக்க ஏற்றாவாறு அது ஒரு பெரிய சுருளாக இருக்கும். இச்சுருளிலுள்ள காகிதம் 5 மைல் நீளமிருக்கும். அச்சு உருளைகள் காகிதத்தின் மேல் பக்கங்களை அச்சடிக்கும். எல்லாப் பக்கங்களும் அச்சடித்தானதும் எந்திரம் அவற்றை சரியாக ஒன்று சேர்த்து வெட்டி, மடித்துப் பிரதிகளை வெளியே தள்ளும். சுழல் எந்திரங்கள் மணிக்குச் சுமார் 40,000 பிரதிகள் வரை அச்சடிக்கும்.

அச்சுவேலைக் குறிப்புகள் : அச்சுவேலை சீராகவும், அழகாகவும் இருக்கவேண்டுமானால் பல விஷயங்களைக் கவனிக்கவேண்டும். அச்சுக் கோகும்போது வேலைக்கு ஏற்றவாறு அளவாக அச்சுக்களைக் கோக்க வேண்டும். தினசரிகளில் வரியின் நீளத்தைவிடப் புத்தகங்களில் வரியின் நீளம் அதிகமாக இருக்கும். சொற்களுக்கு இடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும், வரிகளுக்கிடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும் கவனித்து அச்சுக்களைக் கோத்து அமைக்க வேண்டும். நீண்ட வரிகளுக்குச் சிறிய எழுத்துக்களும், குறுகிய வரிகளுக்கு பெரிய எழுத்துகளும் ஏற்றவையல்ல. ஆகையால் வேலைக்கேற்ற எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அச்சுக்கள் ஏற்த்தாழ இல்லாமல் ஒரே உயரமாக இருக்கும்படி சரிப்படுத்த வேண்டும். இவ்வாறு இல்லாமல் எழுத்துக்கள் ஓரிடத்தில் அழுந்தியும், வேறொரு இடத்தில் மேலெழுந்தும் இருந்தால் அச்சு வேலை பார்வைக்கு அழகாக இருக்காது. அச்செழுத்துக்கள் ச்ரியாக பதியா. அச்சுச் சிதறி இராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அச்சடிக்கும் மையின் தன்மையையும் கவனிக்க வேண்டியது அவசியம். சாதாரண மட்டரகக் காகிதத்திற்கு ஒரு மையும், மழமழப்பான காகிதத்திற்கு ஒரு மையும், எழுத்துக்களுக்கு மட்டும் ஒரு மையும், சித்திரங்களுக்கு ஒரு மையும் உண்டு. ஆகையால் வேலைக்குத்தகுந்த மையை உபயோகித்தல் முக்கியமானது. மையை அச்சுக்களின் மேல் சீராகப் பரவுமாறு செய்வதும் அவசியம்.

இங்கு விவரிக்கப்பட்ட முறை எழுத்தச்சு (Letter press) முறை எனப்படும். இதைத் தவிர, லித்தோ முறை, ஒளி செதுக்குமுறை (Photogravure) (த. க.) முறை என்பவைகளும் வழக்கத்தில் உள்ளன. எழுத்தச்சு முறையில் அச்சிடவேண்டிய பகுதி மேடாகவும் மற்றது பள்ளமாகவும் இருக்கும். ஒளி செதுக்குமுறையில் அச்சிடவேண்டிய பகுதி பள்ளமாகவும் மற்றது மேடாகவும் இருக்கும். லித்தோ அச்சு முறையில் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே உயரமாக இருக்கும். பார்க்க; நிற அச்சிடுதல். டி. எஸ். த.

அட்சஸன், எட்வர்டு குட்ரிச் (Acheson, Edward Goodrich) (1856-1931) புதுப்பொருள் ஆக்கிய அமெரிக்க அறிஞர். வாஷிங்டன் நகரில் இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் வேலைக்குச் செல்ல நேர்ந்தது. ஓய்வு நேரத்தில் இவர் சோதனைகள் செய்து புதுப்பொருளைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தில் ஆர்வம் பிறந்து இவர் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். சில ஐரோப்பிய நாடுகளில் மின்சார விளக்குகளைப் போட இவர் உதவினார். கார்போரண்டம் (த.க) என்ற மெருகூட்டியை இவர் கண்டுபிடுத்தார். பென்சில் கரியை மிகத்தூய நிலையில் தயாரிக்க இவர் வகுத்த முறையினால் இவர் பணக்காரரானார். இப்பொருளைக் கொராயீடு நிலையிற்கொண்ட புதிய உயவுகளை இவர் கண்டுபிடித்தார்.

அச்சிறுபாக்கம் : செங்கற்பட்டு ஜில்லாலிலுள்ளது. சிவபெருமான் முப்புரம் எரித்தற்பொருட்டு தேவர்கள் அமைத்த தேரின்மேல் அடியிடலும் அச்சு முறிந்து போயிற்று. அச்சு இற்ற காரணத்தால் அது நிகழ்ந்தவிடம் அச்சிறுபாக்கம் எனப்பட்டது. தேவர்கள் விநாயகரை நினையாதலால் அச்சு முறிந்தது என்ப. கண்ணுவரும் கௌதமரும் இத்தலத்தில் பூசித்தனர். மூலத்தானத்தில் இருக்கும் சுவாமி ஆட்சிநாதர். தேவியார் இளங்கிளியம்மை சந்நிதி வடச்சுற்றில் இருக்கிறது. அச்சுற்றிலேயே தலவிருச்சமாகிய கொன்றை மரமும் தீர்தங்களில் ஒன்றாகிய சிம்மகூபமும் இருக்கின்றன. பாண்டியன் ஒருவன் நிறுவிய சிவலிங்கமும் அம்மனும் உண்டு. இத்தலம் திருஞானசம்பந்தருடைய பாடல் பெற்றது.