பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

582

இந்தியா

றில் காணப்படும் பிராணிகளுக்கும் இடையில் குறிப்பிடக்கூடிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மேல் கிரிட்டேஷஸ் காலத்தில் மற்றொரு பெரிய புவி இயக்கம் தோன்றிற்று. தென் பாரசீகக் கடலின் ஒரு கிளையாயிருந்த ஓமான் பகுதி, கடல் நெருங்கி மலைத் தொடராக எழும்பிற்று. மலையைத் தோற்றுவித்த இந்த இயக்கம் பலூச்சிஸ்தானத்தையும் கட்சையும் பாதித்தது. அங்கே வண்டல் படிவதில் தடை ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். இமயமலைப் பகுதியில் கடல் ஆழம் குறைந்தது. மணல் நிறைந்த வண்டல்கள் மிகுதியாகத் தோன்றத் தொடங்கின. ஆயினும் அஸ்ஸாம் பர்மாப் பகுதியில் மலைதோற்றுவிக்கும் இயக்கம் சிறிது பிற்பட்டே கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் தோன்றத் தொடங்கியதாகத் தெரிகிறது.

கோண்டுவானாலாந்து பெர்மியன் காலத்துக்குப் பின் பிளவுறத்தொடங்கியது. ஆனால் கிரிட்டேஷஸ் காலத்தின் தொடக்கம்வரை செடிகளும் விலங்குகளும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியவண்ணமிருந்தன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆர்ஜென்டீனா ஆகிய பகுதிகளில் இடைப்பிராணி யுகத்தின் மேல்பகுதியிலிருந்த ஊர்வனவற்றில் மிகுந்த ஒற்றுமை இருந்ததாகத் தெரிகிறது. கிரிட்டேஷஸ் நடுப்பகுதியில் இந்தியா மடகாகரிலிருந்து பிரிந்துகொண்டது என்றும், அன்டார்ட்டிக்காவும் ஆஸ்திரேலியாவும் அதற்கு முன்பே இப்போதுள்ள இடங்கட்குப் போய்விட்டன என்றும் கருதப்படுகின்றன.

தக்காணப் படிக்கட்டுக்கள் (Deccan Traps) : கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் மத்திய இந்தியாவிலும் மேற்கு இந்தியாவிலும் எரிமலைக்குழம்பு வழிந்தோடியது. அது கிழக்கே ராஞ்சிபீடபூமிமுதல் மேற்கே கட்சு வரையிலும், வடக்கே சித்தோர்கார் முதல் தெற்கே பெல்காம், ராஜமகேந்திரபுரம் வரையிலும் காணப்படுகிறது. கறுப்பு நிறமுள்ள எரிமலைக் குழம்பு அடுக்குக்கள் பல காணப்படுகின்றன. அவற்றுடன் சாம்பல் அடுக்குக்களும் சேர்ந்துள. எரிமலை எரிவது அடங்கிய சமயங்களில் ஏரிகளில் வண்டல் படுகைகள் உண்டாயின. எரிமலைக் குழம்பு பூமியின் புறணியிலிருந்து பல வெடிப்புக்கள் வழியாக மேலே கிளம்பிப் பரவியிருக்கவேண்டும். பம்பாய்க் கடற்கரை அடுக்கில் அது 6,000 அடி பருமனுடையதாக இருக்கிறது. அதன் பிறகு மடிப்புக்களும் பிளவுகளும் உண்டாயின. பம்பாய்க் கடற்கரையில் அத்தகைய பிளவு ஒன்று காணப்படுவதால், எரிமலைக்குழம்பு இப்போது அரபிக் கடலாக இருக்கும் இடம்வரை பரவியிருக்கவேண்டும்.

மூன்றாம் யுகம்: இந்த யுகத்தின் தொடக்கத்தில் முக்கியமான மாறுதல்கள் உண்டாயின. அநேக விலங்குத்தொகுதிகளும் தாவரப்பிரிவுகளும் மறைந்து போய்ப் புதிய வகைகள் தோன்றின. பிரமாண்டமான ஊர்வனவும், மிகுதியாகப் பல்கும் அம்மனைட்டு வகைகளும் அழிந்து, பாலூட்டிகளும், பூக்கும் தாவரங்களும் முதன்மை பெற்றன. கோண்டுவானாலாந்து சிதறிவிட்டது. இந்தியா வடகிழக்குத் திசையை நோக்கி நகர்ந்து சென்று, வடக்கே ஆசியாக் கண்டத்தால் தடுக்கப்படவே, அதன் காரணமாக இரண்டுக்குமிடையே வண்டல் படுகை இமயமலைத் தொடராகமேலே எழும்பியதாகத் தெரிகிறது. இந்த இயக்கங்கள் பல கட்டங்களாக நிகழ்ந்துள. முக்கியமான இயக்கங்கள் இயோசீன் கால இறுதியிலும் மெயொசீன் கால நடுப்பகுதியிலும், மேல் பிளையசீன் காலத்திலும், பிளீஸ்ட்டொசீன் காலத்திலும் உண்டாயின. இயோசீன் கால இறுதியில் கடல் ஆழம் குறைந்தது; மெயொசீன் கால நடுவில் கடல் சிறிய ஏரிகளாகப் பிரிந்தது. இப்போது சிந்து - கங்கைப் பள்ளத்தாக்கு இருக்குமிடத்தில் பெரும்பள்ளம் ஏற்பட்டது. வடமேற்குப் பஞ்சாபிலும் காச்மீரத்திலும் பிளீஸ்ட்டொசீன் அடுக்குக்கள் பீர்பஞ்சாப் என்ற இடத்தில் பல ஆயிர அடி உயரம் கிளம்பியதாகக் கூறுவதற்குச் சான்றுகள் உள.

மூன்றாம் யுக அமைப்புக்கள் இந்தியாவின் வடக்கு எல்லை ஓரமாகவும், தீபகற்பத்தில் கடற்கரையோரமாகவும் நன்கு உருவாகி இருக்கின்றன. இயோசீன் அடுக்குக்கள் பலூச்சிஸ்தானம், இமயமலை, திபெத்து, பர்மா ஆகிய இடங்களில் அதிகமாகப் பரவியுள்ளன. அஸ்ஸாமிலும் ராஜஸ்தானத்திலும் பஞ்சாபிலும் நிலக்கரியும் பழுப்பு நிலக்கரியும் (லிக்னைட்டு) கிடைக்கின்றன. ஆலிகொசீன், மயொசீன் அடுக்குக்கள் பஞ்சாபில் மர்ரி அமைப்பு எனப்படும் படிவுகளாக இருக்கின்றன. மேல் மெயொசீன் காலத்திலிருந்து பிளையசீன் காலம்வரை உண்டான அடுக்குக்கள் தாம் சிவாலிக் அமைப்பு எனப்படுபவை. அவற்றில் இறந்துபட்ட பல பிராணிப் பிரிவுகள், இனங்களின் முதுகெலும்பு எச்சங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இது போன்ற அமைப்புத்தான் பர்மாவிலுள்ள ஐராவதி அமைப்பு என்பது. ராஜமகேந்திரம், கடலூர், வர்க்கலை மணற்பாறைகள் மயொசீன் அடுக்குக்களாம். இவற்றில் சில இடங்களில் பழுப்பு நிலக்கரி காணப்படும். இலங்கை மூன்றாம் யுகத்தின் நடுப்பகுதிவரை இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது. மூன்றாம் யுகப்படுகைகளில் பர்மா, அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய இடங்களில் பெட்ரோலியப் படிவுகள் உள. ஆனால் அந்த அடுக்குக்கள் இமயமலையின் தெற்கு விளிம்பு முழுவதும் அதிகமாகச் சீர்குலைந்திருப்பதால் அங்கே பெட்ரோலியம் கிடைக்கும் என்று துணிவதற்கில்லை. எம். எஸ். கி.

தட்ப வெப்ப நிலை: இந்தியா பெரும்பாலும் அயன மண்டலங்களுக்குள் அடங்கி யிருத்தலாலும், வடக்கில் ஆசியாக் கண்டத்தின் பெருநிலப் பகுதி இருத்தலாலும், தெற்கில் இந்து சமுத்திரம் இருத்தலாலும் ஒரு பெரிய பருவக்காற்றுப் பிரதேசமாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிசம்பர் முதல் மார்ச்சு வரையும் குளிர் காலத்தில் பொதுவாகக் காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகிறது. இது இந்துஸ்தான் சமவெளிகளில் வடமேற்குக் காற்றாகவும், நடுப்பகுதிகளில் வடக்குக் காற்றாகவும், தீபகற்பத்தின் தெற்கிலும் சுற்றிலுள்ள கடல்களிலும் வடகிழக்குக் காற்றாகவும் வீசுகிறது. வடகிழக்கு அல்லது குளிர்காலப் பருவக் காற்றுப் பெரும்பாலும் ஆசியாக் கண்டத்திலிருந்து உண்டாகிறது. ஆகவே குறைந்த ஈரத்தோடு கூடியுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையுள்ள கோடை மாதங்களில் கடலிலிருந்து நிலத்தை நோக்கிக் காற்று வீசும். அப்போது ஈரம் மிகுதியாக உள்ளது. அதனால் மேகமும் மழையும் மிகுதி. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் வீசும் காற்றுப் பெரும்பாலும் தென்மேற்குத் திசையிலிருந்து வருவதால் இந்தப் பருவத்துக்குத் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் என்று பெயர். இவ்விரண்டு பிரதானமான பருவங்களுக்கிடையே ஏப்ரல், மே மாதங்களாகிய வெப்பமுள்ள காலமும், அக்டோபர், நவம்பர் மாதங்களாகிய பின்னடையும் பருவக்காற்றுக் காலமுமாகும்.

பருவக் காற்றோட்டங்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆயினும் இந்திய சமுத்திரம், சீனக் கடல்களைக் காட்டிலும் இவைகளை அடுத்துள்ள ஆசிய நிலப்-