பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

585

இந்தியா

சட்லெஜ்-யமுனை உயர்நிலங்கள் இவை இப்பகுதியில் அடங்கும். வடமேற்கு வறட்சிப்பகுதிகளில் குளிர் நாடுகளில் பயிராகும் கோதுமை, பார்லிபோன்ற தானியங்களும் பழங்களும் குளிர்காலப் பயிர்களாக விளைகின்றன. இங்குப் பயிர்த்தொழில் பெரும் பகுதியும் நீர்ப்பாசனத்திலேயே நடைபெறவேண்டும்.

இ. நாட்டின் பிறபகுதிகள் நடுத்தரத்தனவாம். இப்பகுதிகளில் சோளம், கம்பு, தினை போன்ற புன்செய்த் தானியங்களும், பருத்தியும் பயிராகின்றன. கால்நடைகள் மிகுதியாக உண்டு.

மலையூர்கள்: உடல்நலம் பேணி உறைவதற்குரிய மலையூர்களில் இருவகை உண்டு: 1. 7,000 அடிகட்கு மேலுள்ள இமயமலைத் தாழ்வரைப்பகுதிகள். 2. மேற்கு மலைத்தொடர்களில் தெற்குப்பகுதியிலுள்ள மலையுச்சிகள். இவற்றுட் சில ஐரோப்பியப் படைகள் தங்குவதற்காக ஏற்பட்டவை. சில ஐரோப்பியர் கோடை மாதங்களைக் கழிப்பதற்காக ஏற்பட்டவை. மற்றும் சில தேயிலை, காப்பித் தோட்டங்கள் பயிரிடும் ஐரோப்பியர் நிரந்தரமாக வசிப்பதற்காக ஏற்பட்டவை. இவையாவும் கடல் மட்டத்துக்குமேலே சுமார் 5,000-7,000 அடி உயரமான இடங்களில் உள்ளன. ஆகவே இவைகள் கோடைகாலங்களிலும் சமவெளிகளைக் காட்டிலும் குளிர்ச்சியாகவும் தூசின்றியும் இருக்கும். எனினும் மழைகாலங்களில் பலநாட்கள் அல்லது வாரங்கள் ஆகாயத்தில் மேகங்கள் மூடியிருக்கும்; சிலுசிலுப்பான காற்றும் வீசும்; பருவமழைகாலத்தில் பெருமழை பெய்து எங்கும் ஈரம் நிறைந்திருக்கும். ஆதலால் பருவக் காற்று முடிந்தவுடன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களே வாசத்துக்கேற்ற மாதங்கள். பீ. எம். தி.

தாவரங்கள்

உலகத்திலே மரஞ்செடிகொடிகளில் எண்ணிறந்த இனங்கள் உண்டு. அவை ஆயிரக்கணக்கான சாதிகளாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்களாகவும் வகுக்கப்பெற்றுள்ளன. இக்குடும்பங்களில் சற்றேறக்குறைய ஒவ்வொன்றையும் சேர்ந்த இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. உலகத்தின் பிற பகுதிகளுக்குரிய சாதிகள் இந்தியாவில் காணப்படுவனபோல, இந்தியாவுக்கு ஒத்த பரப்புடையனவாகவோ அல்லது மிகுந்த பரப்புடையனவாகவோ உள்ள வேறெந்த நாட்டிலும் காணப்படுவதில்லை. இந்திய எல்லைக்குள்ளிருக்கும் மரவடையில் 12-15 ஆயிரம் இனங்கள் இருக்கலாம். எனினும் இந்தியாவில் பெருங்காடுகள் இல்லை; புல்வெளிகள் எனச் சொல்லத்தக்கபகுதிகளும் பிற கண்டங்களில் இருப்பவைபோல இல்லை. இந்தியச் சமவெளிகளிலுள்ள இனங்களின் தொகை உண்மையில் மிகமிகக் குறைவே. இருக்கும் இனங்களிலும், நிரம்பப் பெருகி யிருப்பவை பெரும்பாலும் களைகளாகிய இனங்களே. கடலைச் சார்ந்த தாவரங்களும் இந்தியாவில் அருமையாகவே இருக்கின்றன. கடலிலிருந்து சில மைல் வரையிலும், உள்ளே சென்றுள்ள நெய்தல் நிலத்திலே சிறப்பியல்புடையதும், அப்பகுதியிலே எங்கும் பொதுவாகப் பரவியிருப்பதுமான ஒரு தாவரத் தொகுதி காணப்படுவது உண்மையே. ஆயினும் கடலுக்கு முற்றிலும் அண்மையிலுள்ள கடலோரத்திலே அப்படிப் பொதுவாகப் பரவியுள்ளதும், தெளிவாகப் பிரித்துணரத்தக்கதுமான கடலோர மரவடை இந்தியாவிலே இல்லை.

இந்தியத் தாவரங்களைக் கீழ்க்கண்ட தலைப்புக்களில் ஆராயலாம்: 1. இமயத் தாவரங்கள் (பொதுவாக உயர்ந்த இடங்களில் வளர்பவை இதில் சேரும்). 2. மேற்குக் கடற்கரைத் தாவரங்கள். 3. கிழக்குக் கடற்கரையில் காணப்படும் புதர்க்காடுகள். 4. சிந்து கங்கைத் தாவரங்கள்.5.விந்தியத் தாவரங்கள்.

1. இமயத் தாவரங்கள்: இமயம் என்பது வடமேற்கு எல்லை நாட்டிலுள்ள சிந்து நதியின் பகுதிக்கும் கிழக்கே பிரமபுத்திரா நதியின் பெரிய வளைவுக்கும் இடையேயுள்ள முழுப்பரப்பாகும். இமயத்தொடர் சிந்துவிலிருந்து பிரமபுத்திரா வரை நீளம் சுமார் 1,400 மைல். அகலம் 100-200 மைல்.

சிந்துவின் மேற்குப் பகுதிகளும், பிரமபுத்திராவின் கிழக்கிலுள்ள பகுதிகளும் இப்பிரதேசத்தைச் சேரா.

இமயத்தைக் கிழக்கு, மேற்கு என இரு பகுதிகளாகக் கருதலாம். மேற்கு இமயம், கிழக்கு இமயத்தைக் காட்டிலும் குறுகியது. மேற்குப் பகுதி பெரும்பாலும் இந்தியாவைச் சார்ந்தது; கிழக்குப் பகுதி பெரும்பாலும் திபெத்தைச் சார்ந்தது. இரு கோடிகளைத்தவிர, மற்றப் பாகங்களில் 16,500 அடிக்குக் குறைந்த உயரம் உள்ள இடம் இல்லை. ஆனால், குலுவிற்கும் லாஹுலிற்கும் நடுவே 13,000 அடியும், காச்மீரத்திற்கும் திராஸிற்கும் நடுவே 11,300 அடியும் உள்ள இரண்டு பள்ளமான பகுதிகள் இருக்கின்றன.

இப் பெரிய மலைத்தொடரானது கடல்மட்டம் முதல், என்றும் பனி மூடியிருக்கும் பகுதிவரை உயர்ந்திருக்கிறது. பலதரப்பட்ட தட்பவெப்ப நிலைகள் காணப்படுகின்றன. வெப்ப மண்டல அல்லது உப வெப்ப மண்டல வெப்பநிலை முதல் உச்சக் குளிர்நிலைவரை உடையது. எப்போதும் ஈரப்பதமாக உள்ள பாகங்கள் இருண்ட காடுகளால் நிரம்பியிருக்கின்றன. 12-13 ஆயிரம் அடி உயரம்வரை இந்தக் காடுகள் இருக்கின்றன. அதற்குமேல் பசும்புல்தரைகள் பனி மூடியபகுதியின் அடியாகிய பனிக்கோடு வரை பரவியிருக்கின்றன. எங்கு மழையில்லாத கோடைகாலமும் மிக்க மழையும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் காடுகள் காணப்படுகின்றன. எப்போதும் வறண்டுள்ள மேற்குக் கோடியில் பாழ்நிலமும் பாறையுமே உண்டு. எந்த உயரமான பகுதியிலும் மரங்களே இல்லை.

கிழக்கு இமயம் : சிக்கிம், பூட்டான் நாடுகளும், பிரமபுத்திரா வரையுள்ள பகுதிகளும் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. 6,000 அடிக்குமேல் உயரமான இடங்களில் ஊசியிலை மரக் காடுகள் உள்ளன. இவைகளில் முக்கியமான மரங்கள் பைனஸ் லான்ஜிபோலியா, எபியஸ் புரனோமினா, பைசியா வெபியானே, பைனஸ் எக்செல்ஸா, யூ மரம் என்பவை. யூ சாதியில் குப்பிரீசெஸ் பனாப்பிர்ஸ் மரம் 2,000 அடி உயரத்திலும் பயிரிடப்படுகிறது.

இம்மலைத் தொடர்களின் வெப்ப மண்டலங்களில் பெரிய அத்திச்சாதி மரங்களும், டெர்மினேலியா, வாட்டிக்கா, மிர்ட்டேசீ குடும்பத்தைச் சேர்ந்த மரங்களும், லாரெல்ஸ், யூபோர்பியேசி குடும்ப மரங்களும், மந்தாரைச்சாதியாகிய பாஹீனியா, முள்ளிலவுச்சாதியாகிய பாம்பாக்ஸ், அர்ட்டிகேசீ குடும்பத்தைச் சேர்ந்த மோரஸ் சாதியும், பலாமரச் சாதியாகிய ஆர்ட்டோகார் பஸும், பாமே லெகூமினோசீ, அக்கான்தேசீ, சைட்டாமினீ, ஆரேசீ குடும்பங்களைச் சேர்ந்த மரங்களும் செடிகளும் நிறைய வளர்கின்றன. இங்குள்ள மற்ற உறையிலாவிதைத் தாவரங்கள் சைக்கஸ் பெக்டினேட்டாவும், நீட்டம் ஸ்கான்டென்ஸும் ஆகும்.

கிழக்கு இமயப் பிரதேசத்தின் ஈரப்பதம் மேற்கு இமயத்தைவிடக் குறைவானது. இங்கு முக்கியமாக, நேபாளத்தைச் சார்ந்த பகுதிகளில் மழை மிகுதி. தீவிர வறட்சியும் அதிகம். இங்குள்ள காடுகளில் கீழ்க்கண்ட மரங்கள் காணப்படுகின்றன. முருங்கை, புத்ரஞ்சீவா,