பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

589

இந்தியா

மரத்துக் குருத்திலைகளில் வசிக்கிறது. இதன் நிறமும் அழகாக இருக்கும்; குருத்திலையை ஒத்திருக்கும். சில இனங்களுக்கு முகத்தின் தோல் இலைகள்போல் மடிப்பாக (மூக்கு இலைகள் - Nose leaves) மூக்குக்கு இரு பக்கத்திலும் இருக்கும். சில இனங்கள் மாமிசத்தை உட்கொள்ளும்; தவளை, குருவி முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். ஒரு சிறிய இனம் வீடுகளில் சந்து பொந்துகளில் வசிக்கும்.

பூச்சிதின்னி (Insectivora) என்னும் ஒரு வரிசை பாலூட்டி வகுப்பில் உண்டு. அது சிறிய வரிசை. அதைச் சேர்ந்தவை இந்தியாவில் ஏழெட்டு இனங்கள் தான் இருக்கின்றன. மூஞ்சுறு, முள்ளெலி (Hedge - hog), மரமூஞ்சுறு (Tree-shrew) என்பவை இவ்வரிசையைச் சேர்ந்தவை. இவை சிறிய விலங்குகள்.

கொறிப்பன (Rodent)வற்றுள் அநேக இனங்கள் இருக்கின்றன. பல் இன அணில்கள், எலிகள், சுண்டெலிகள், பெருச்சாளிகள், முள்ளம்பன்றிகள், முயல்கள் இருக்கின்றன. மலையாளப் பிரதேசத்தில் பறக்கும் அணில்களில் இரண்டு இனங்கள் இருக்கின்றன. இவை தங்கள் இருபக்கத்திலும் முன் பின் கால்களுக்கு இடையிலுள்ள தோல் மடிப்புக்களாகிய இறக்கைகளால் ஒரு மரத்தினின்று எட்டவுள்ள மற்றொரு மரத்திற்குத் தாவிப் பறந்து செல்கின்றன. இவ்வகையான அணில்கள் இலங்கையிலும் வசிக்கின்றன. முதுகில் மூன்று வரிகள் அமைந்த அணில்களை வீட்டிலும் தோட்டங்களிலும் சாதாரணமாகக் காண்கிறோம். மலைப்பிரதேசங்களில் பெரிய அணில் இனங்கள் காணப்படுகின்றன. எலிகளில் இருபது இனங்கள் இருக்கின்றன. எலிவகைகளில் சிறியவற்றைச் சுண்டெலிகள் என்றும் பெரியவற்றைச் பெருச்சாளிகள் என்றும் கூறுகிறோம். எலிகளும் முள்ளம்பன்றிகளும் முயல்களும்கூட இரவில் இரை தேடுகின்றன.

புலாலுண்ணி (Carnivora) களில் பல வகைகள் இருக்கின்றன. சிங்கம் தென் இந்தியாவில் வசிப்பதில்லை. தற்காலத்தில் கத்தியவார் பிரதேசத்தில் காணப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் பஞ்சாப், ராஜபுதனம் முதலிய நாடுகளில் வசித்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிங்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. பாதுகாவா விட்டால் கம்பீரமான இந்த விலங்கினம் இந்தியாவில் இல்லாமலே போய்விடும்.

புலி இந்தியக் காடுகளில் சாதாரணமாக வாழ்கின்றது. உடலின் பக்கங்களில் அழகான வரிப்பட்டையுள்ளது. பார்வைக்கு அழகுடையது. இதன் நகங்கள் கூர்மையானவை. இது மரஞ் செடிகள் அடர்ந்த காடுகளில் மான், ஆடு, பன்றி இவைகளை அடித்துத் தின்று வாழ்கின்றது. செடிகளிடையே இருக்கும்பொழுது இதைக் கண்டுபிடிப்பது எளிதன்று. உடம்பின்மேல் இருக்கும் பட்டைகள் சூரிய வெளிச்சமும் மஞ்சளும் கறுப்புமான இலைக் கிளைகளின் நிழலும்போல் காணும். காடுகளில் மற்றப் பிராணிகளைத் தேடியோடிப் பிடித்துத் தின்ன முடியாத புலிகள், மக்கள் நடமாட்டமுள்ள கிராமங்களை அடைந்து, ஆடு மாடுகளையும் மனிதர்களையும் அடித்துக்கொண்டு போகும். இவை மனிதனுக்கு ஆபத்தானவை.

சிறுத்தைப்புலி புலியைவிட மிகவும் சாதாரணமாகக் காணப்படும். தோலில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். சில சமயங்களில் முழுவதுங் கருநிறமான சிறுத்தையையுங் காணலாம். சிலர் சிறுத்தையை மான் பிடிக்க வளர்ப்பதுண்டு. இரண்டு வகைப் புனுகுப் பூனைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவற்றின் பின்பாகத்தில் சில சுரப்பிகள் இருக்கின்றன. இச் சுரப்பிகளிலிருந்து புனுகு கொழுப்புப் போன்ற மஞ்சள் பொருளாக வெளிப்படும். இதைப் பூனை அடைக்கப்பட்டிருக்கும் கூண்டின் கம்பி முதலியவற்றில் தேய்க்கும். இதைச் சேர்த்து வியாபாரிகள் விற்பார்கள். மரநாய் தென்னிந்தியாவில் அகப்படுகிறது. இது நாய் வகையைச் சேர்ந்ததன்று; புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது.

கீரிப்பிள்ளைகளில் நான்கினங்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவைகளுக்கும் பாம்புக்கும் பகைமை என்பது யாவருக்கும் தெரிந்ததே. கழுதைப்புலிகளை ஓநாய்கள் இல்லாத இடங்களில் காணலாம். ஓநாயைப் போல இது ஆடுமாடுகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது. புலிப்பட்டைகள்போல் உடம்பில் இருப்பதால் இதற்குக் கழுதைப்புலி என்ற பெயர் வந்தது போலும். ஆனால் இது கழுதை வகையைச் சேர்ந்ததன்று. கழுதையும் குதிரையும் பயிருண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்தவை. புலிப்பட்டைகளுக்குப் பதிலாகப் புள்ளி போட்ட கழுதைப்புலி கர்நூல் ஜில்லாவில் சில குகைகளில் காணப்பட்ட கற்புதையல்களால் தென்னிந்தியாவில் முற்காலத்தில் இருந்திருக்கின்றது எனத்தெரியவருகிறது. புள்ளிக் கழுதைப் புலி (Spotted hyaena) இக்காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகின்றது. இதுபோன்ற பல குறிகளால் முன்னாளில் ஆப்பிரிக்காவும் இலங்கையும் தென்னிந்தியாவோடு நிலத்தொடர்புற்று இருந்திருக்கவேண்டும். எனவும் பின்னால் இத் தொடர்புப் பகுதிகள் கடலில் மூழ்கி ஆப்பிரிக்கா தனிக் கண்டமாகவும் இலங்கைதனி தீவாகவும் ஆயின எனவும் ஊகிக்கப்படுகிறது.

நாய் வகைகளில் ஓநாய், நரி, குள்ளநரி, செந்நாய் இவைகள் தென்னிந்தியாவில் உண்டு. புலாலுண்ணிகளில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலைகளில் மரங்களில் வசிக்கும் மார்ட்டென் (Marten)களும், பூமியில் பொந்துகளில் வசிக்கும் ராட்டெல் (Ratel)களும், ஆறுகளில் மீன்பிடித்துத் தின்னும் நீர்நாய் (Otter) களும் மற்றவைகளும் சேரும். தடித்த உடம்பும், நீண்ட வலிமை பொருந்திய வாலும், நீந்துவதற்கேற்ற சவ்வு பொதிந்த விரல்களும் உள்ள நீர்நாயைச் சென்னை மாகாணத்தில் பலவிடங்களில் காணலாம். ராட்டெலின் முதுகு, வெள்ளை மயிர்களால் மூடப்பட்டு இருக்கும். கரடிகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் காணும் கறுப்புக்கரடி இந்தியா முழுவதும் பாறை மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றது. இக்கரடியைப் பழக்கலாம். இது மனிதனுடன் வாழும். வடநாட்டிலே, பஞ்சாபிலிருந்து அஸ்ஸாம் வரையில் வேறொரு கரடி இனம் காணப்படுகிறது.

குளம்புள்ள பிராணிகளில் இரண்டுவித காட்டெருமைகள் இருக்கின்றன. ஒன்றுக்குக் கொம்பு குறுக்கு வெட்டில் முக்கோணமாக இருக்கும். அதை எருமை என்பார்கள். தெலுங்கு நாடுகளில் காணலாம். மற்றொன்றில் கொம்பு குறுக்குவெட்டில் வட்டமா யிருக்கும். இதைக் காட்டெருமை (Bison, Gaur) என்பார்கள். இது மேற்குத் தொடர்ச்சி சாதாரணமாக உண்டு. ஆடுகளில் வரையாட்டின் (Nilgiri Wild Goat, Hemitragus) கொம்புகள் முதுகு பக்கம் வளைந்திருக்கும். இந்தியாவில் காணும் ஐந்துவகைக் காட்டாடுகளில் இவ்வொன்றுதான் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கங்களில் இருக்கிறது. மற்றவை இமயமலையில் காணப்படுகின்றன.

இரலைகளை (Antelope) நாம் சாதாரணமாக மான்கள் எனக் கூறுகின்றோம். ஆனால் இவை உண்மையில்