பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

598

இந்தியா

சுமார் 250 இலட்சமாகும். அந்த ஆண்டுக்குப் பிறகு இந்திய மக்களுடைய தொகை 13 சதவிகிதம் கூடியிருக்கிறது. இப்படிக் கூடியதில் எவ்வளவு ஆதிக்குடிகளின் பெருக்கம் என்று தெரிவதற்கில்லை. 1941-1951 ஆகிய பத்து ஆண்டுகளில் அநேக ஆதிக்குடிமக்கள் இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆயிருக்கிறார்கள். இப்போது (1951) இவர்கள் தொகை 17 இலட்சம்.

பீகார், ஒரிஸ்ஸா இரண்டிலும் சேர்த்து 9 இலட்சம்; மேற்கு வங்காளத்தில் 1 இலட்சம் ; மணிப்பூரில் 1 இலட்சம் ; அஸ்ஸாமில் 51 இலட்சம் ஆதிக்குடிகள் இருக்கின்றனர்.

சில ஆதிக்குடிகளிடையே மக்கள்தொகை குறைந்து வந்திருக்கிறது; சில குடிகளிடையே பெருகியிருக்கிறது. அதனால் சிலர் இந்துக்களாக ஆகியிருந்த போதிலும், மொத்தத்தில் இந்திய மக்களுடைய தொகை பெருகியிருக்கும் விகிதத்திற்கேற்ற அளவு ஆதிக்குடி மக்களுடைய தொகை மாறுதலடையவில்லை என்று கூறலாம்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள தாருக்கள் (Tharus) 'சிங்' என்று அடைமொழி சேர்த்துக்கொண்டு தங்களை இராஜபுத்திரர் என்று கூறிக் கொள்கிறார்கள். அரசியலாரும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் இப்போது தாக்கூர்கள் என்றும், ரானா தாக்கூர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆதிக்குடிகள் அனைவரும் ஆதிக்குடி மதங்களைத் தழுவுவதாகக் கணக்கெடுப்போரிடம் கூறுவதில்லை. அதனால் அவர்களுடைய எண்ணிக்கை இது என்று நிச்சயிக்க முடிவதில்லை. பல ஆதிக்குடிகள் இரண்டு மொழிகள் பேசுகிறார்கள். பலர் தங்கள் தாய்மொழியை விட்டுவிட்டு, இப்போது தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மொழியைப் பேசுகிறார்கள்.

ஆதலால் ஆதிக்குடிகள் என்று நிச்சயிப்பதற்குப் பயன்படும் அமிசங்கள் அவர்கள் தங்கும் நிலப்பரப்பும், அவர்களுடைய சமூக அமைப்புமாகும்.. இந்தச் சமூக அமைப்பு, சாதியமைப்பில் உள்ளதுபோன்ற ஒன்றையொன்று சார்ந்துள்ள பல பொருளாதாரப் படிகள் இல்லாமல், தம்தம் தேவையைத் தாமே பூர்த்தி செய்து கொள்ளும் திறமையுடையது. சாதி என்பது ஒரு சமூகக் குழு. ஆதிக்குடி என்பது ஒரு பிரதேசக் குழு. ஒரு சாதியினர் பல பகுதிகளில் வசிப்பர். ஆனால் ஒரே ஆதிக்குடியைச் சேர்ந்தவர் ஒரே பகுதியில்தான் காணப்படுவர். அதனுடன் ஆதிக்குடிகள் அரசியல் அமைப்பு உடையவர்களாயுமிருப்பர். நாகர்கள் போன்ற அஸ்ஸாம் குடிகளிடையே தலைவர்கள் ஆட்சியும், பெரும்பாலான மற்றக் குடிகளிடையே ஜனநாயகமும் காணப்படும்.

பிரதேசவாரியாக ஆதிக்குடிகளை 1. வடமேற்கு எல்லைப்புற ஆதிக்குடிகள், 2. வடகிழக்கு எல்லைப்புற ஆதிக்குடிகள், 3. உள்நாட்டு ஆதிக்குடிகள் என முதல்வகைக் குடிகள் மூன்றுவகையாகப் பிரிக்கலாம். பாகிஸ்தானில் உளர். மற்ற இருவகையாரையும் அவர்கள் பண்பாட்டையும் பயிலும் மொழியையும் வைத்துப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடகிழக்கு எல்லைப் புறத்துக்குடிகள் தாய்வழி உரிமை, தந்தைவழி உரிமை இரண்டையும் தழுவுகின்றனர். காசிகளும், காரோக்களும் தாய்வழி உரிமையைப் பின்பற்றினும் பிரதானமாயிருப்பது தந்தைவழி உரிமையே. உள்நாட்டுக் குடிகள் ஆஸ்திரிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுவோர் எனவும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுவோர் எனவும் இரண்டு பகுதியினர் ஆவர். பில்லர் குடிகளுடைய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளையும், இமாலயக் குடிகளின் மொழிகள் ஆஸ்திரலாயிடு அல்லது திபெத்- சீன மொழிகளையும் சேர்ந்தவையாகும்.

வடமேற்கு எல்லைப்புறக் குடிகள் ஆப்கன், பலோச்சு வகுப்பினரையும், வடகிழக்கு எல்லைப்புறக் குடிகள் மங்கலாயிடு வகுப்பினரையும் ஒத்திருக்கிறார்கள். உள்நாட்டுக்குடிகள் 1. பில்-கோலி குழுவினர், 2. கோண்ட்-கோயா குழுவினர், 3. முண்டா குழுவினர் என மூவகைப்படுவர். உள்நாட்டுக் குடிகளில் பெரும்பாலோர் ஆதி (Proto) ஆஸ்திரலாயிடு வமிசத்தைச் சேர்ந்தவர்கள். சில பகுதிகளில் ஆதி-மத்தியத் தரைக் கடல் வமிசமும் கலந்திருக்கலாம்.

ஆதிக்குடிகள் நிலப்பகுதிகளை வைத்துப் பிரிக்கப்படினும், அவர்கள் பரந்த நிலப்பகுதியில் காணப்படுகின்றனர். ஒரே ஆதிக்குடி பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். ஒரு பிரிவு ஒரு மாகாணத்தில் 'ஆதிக்குடி' என்றும், மற்றொரு மாகாணத்தில் 'சாதியினர்' என்றும் மக்கள் தொகைக்கணக்கில் சேர்க்கப்படுகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் ஆதிக்குடி மக்கள் 'கூலி சாதியினர்' என்று அழைக்கப்படுகின்றனர். பஞ்சாரர் என்னும் குற்றப் பரம்பரைக் குடிகள் சென்னை ராச்சியத்தில் சுகலிகள் என்றும் மற்ற இராச்சியத்தில் கஞ்சார்கள் என்றும் அழைக்கப்பெறுகிறார்கள். சவரர்கள் ஒரிஸ்ஸாவில் ஆதிக்குடி மக்கள் ; ஆனால் அவர்கள் கிழக்கு இராச்சியங்களில் சகாலியர் என்னும் வேளாளர் ஆவர். கத்தியவாரிலுள்ள வாகர்களும் வட இந்தியாவிலுள்ள குற்றப்பரம்பரைக் குடிகள் பலரும் இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.

சென்ற 50 ஆண்டுகளில் ஆதிக்குடிகள் அடைந்துள்ள வளர்ச்சி வருமாறு :

1. சில ஆதிக்குடிகளின் தொகை குறைந்துகொண்டு வருகிறது. உதாரணம் : உத்தரப் பிரதேசத்திலுள்ள கோர்வாக்கள், பீகாரிலுள்ள பிரோர்கள்.

2. சில ஆதிக்குடிகள் நாகரிக மக்களுடன் சேர்ந்ததால் ஏற்பட்டுள்ள பண்பாட்டுச் சீர்குலைவால் அவர்களுடைய தொகை பெருகும் விகிதம் குறைந்துவருகிறது. உதாரணம்: நாகர்கள், ஒரிஸ்ஸாவிலுள்ள கோண்டுகள்.

3. பீகாரிலுள்ள ஹோக்கள், சந்தால்கள், முண்டாக்கள் போன்ற சில ஆதிக்குடிகள் நாகரிக மக்களுடன் இணைந்து போகக் கூடியவர்களாயிருப்பதால் அழிந்துபோகாமல் நிலைத்துநிற்கக் கூடிய வன்மை யுடையவர்களாயிருக்கிறார்கள்.

ஆதிக்குடிகள் மூன்றுதரமான பண்பாடு உடையவர்களாயிருக்கிறார்கள்: 1. இந்துமதத் தொடர்பு சிறிதும் இல்லாத ஆதிக்குடிகள். இவர்களே உண்மையான ஆதிக்குடிகள் எனப்படுகிறார்கள். இந்து மதமோ, நாகரிகமோ போய் எட்டாத இடங்களில் வசிப்பதே இவர்கள் இப்படி இருப்பதற்குக் காரணம். ஆதிக்குடிகள் இந்துக்களுடைய பழக்கவழக்கங்களைத் தழுவியும், தாழ்ந்த சாதி மக்களுடன் ஒன்றுசேர்ந்தும், ஓரளவு பண்பாடு அடைந்தும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் இந்துக்களுடைய சாதி முறையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 3. சில ஆதிக்குடிகள் இந்துக்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ பண்பாடு அடைந்து, தாழ்ந்த சாதி மக்களுடன் சேர்த்து எண்ணப்படுகிறார்கள். இவர்கள்தாம் இப்போது அரசியல் உணர்ச்சியுடைய ஆதிக்குடிகளாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

நாகரிக மக்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆதிக் குடிகள் நலிவு அடைவதுபோலவே பிழைப்புக்காக