பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

604

இந்தியா

தொகை குறைந்திருந்ததால், பொதுவாக எல்லா இடங்களிலும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தன. கைத் தொழில்களும் வியாபாரமும் மிகுந்திருந்தன. கல்வித் துறைகளிலும் மேன்மையுற்றிருந்தது. இப்பொழுது இந்திய வாலிபர்கள் மேனாடுகளுக்கு உயர்தரக் கல்விக்காகச் செல்வதுபோல், அக் காலங்களில் அயல் நாட்டார் பலர் இந்தியாவுக்கு வருவது வழக்கமாக இருந்தது.

இந்தியருக்கு வரலாற்று உணர்ச்சி இல்லை என்று சொல்வது வழக்கம். உண்மையில், சரித்திர நிருமாணத்திற்கு வேண்டிய கருவிகளான கல்வெட்டுக்கள், செப்பேடுகள், புராண நூல்கள் முதலியன இந்தியாவில் உள்ள அளவு வேறு எங்கும் காணப்படவில்லை. இந்தியத் தொல்பொருள் இலாகா சென்ற எழுபது, எண்பது ஆண்டுகளாகக் கண்டு பிடித்திருக்கும் சாசனங்களும், சிற்பங்களும், நாணயங்களும், இந்திய நாட்டுப் பழைய வரலாற்றை நன்றாக விளக்கி யிருக்கின்றன. அது தவிர, ஹர்ஷ சரிதம், விக்கிரமாங்க தேவ சரிதம், ராமபால் சரிதம், ராஜதரங்கிணி, கலிங்கத்துப்பரணி, மூவருலா முதலிய வரலாறு செறிந்த நூல்களும் மிகவும் பயன்படுகின்றன. பிற்காலத்து வரலாற்றிற்கு வேண்டிய சாதனங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. முகம்மதிய ஆசிரியர்கள் பல வரலாற்று நூல்களை அவ்வக் காலத்துக்கு ஏற்றபடி இயற்றினார்கள். மகாராஷ்டிரத்திலும் பல வரலாற்று நூல்களும் கடிதங்களும் தினசரிக் குறிப்புக்கள், அறிக்கைகள் முதலியனவும் எஞ்சியிருக்கின்றன. ஆங்கில அரசாட்சி இந்தியாவில் நிறுவப்பட்டபின் உள்ள வரலாற்றுக்குச் சான்றுகள் பல பத்திர நிலையங்களில் (Record offices) அரசாங்கத்தாராலேயே சேகரித்துக் காக்கப்பட்டு வருகின்றன.

பண்டைக்காலத்துச் சுமேரியாவில் ஏற்பட்டிருந்த கோயில்களுக்கும் தென்னிந்தியக் கோயில்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கோயில் கட்டும் முறை, உற்சவங்கள் முதலியவற்றில் இவற்றைக் காணலாம். இம் மாதிரி ஆங்காங்குச் சிதறிக் கிடக்கின்ற சான்றுகளைக் கொண்டு நிச்சயமான முடிவு காணுதல் அரிது. பலூச்சிஸ்தானத்தில் பிரா ஹுயிகள் என்னும் மலைநாட்டார் ஈரானிய மொழியும் திராவிட மொழியும் கலந்த ஒரு மொழியை இப்பொழுதும் பேசி வருகிறார்கள். இதனால் சிலர் திராவிடம் பேசும் மக்கள் மேனாடுகளிலிருந்து தரை வழியே இந்தியாவில் பிரவேசித்தனர் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர் பிராஹுயிமொழி இக்காலத்தில் வழங்கும் இடம் இந்தியாவிலிருந்து திராவிட மக்கள் மேனாடுகளுக்குக் குடியேறின வழியைக் குறிக்கின்றது என்பர்.

சரித்திரக் காலங்களில் வெளி நாட்டார் பலர் இந்தியாவில் புகுந்து இந் நாட்டு மக்களுடன் கலந்துகொண்டார்கள் என்பதில் ஐயமில்லை ; பிற்காலத்திற் புகுந்த முகம்மதியர்களும் ஐரோப்பியர்களும் அவ்வாறு கலக்கவில்லை.

பிற நாடுகளிற்போலவே இந்தியாவிலும் மனிதர்கள் ஆதியில் நாகரிகமில்லாதவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் ஒரு சிறிது செதுக்கப்பெற்ற கற்களே. அவர்கள் வசித்து வந்தவை பொதுவாக மலைக் குகைகளே. அவர்கள் சுவர்களில் வரைந்த சித்திரங்களை இன்னும் சில குகைகளில் காணலாம். அவர்கள் பிராணிகளை உணவிற்காக வேட்டையாடினர். பருத்தியாலும் ஆட்டு மயிராலும் உடைகள் நெய்தனர். நாட்டியம் பயின்றனர். பிணங்களைத் தாழிகளிலோ, வேறு விதமாகவோ புதைத்து, அவ்விடங்களில் பலவிதமான அடையாளங்கள் இட்டு வந்தனர். ஆனால் கல் ஆயுதங்களை விட்டு உலோக ஆயுதங்களைச் செய்யத் தொடங்க வெகு காலம் ஆயிற்று, மிகப் பழைய உலோக ஆயுதங்கள் பெரும்பாலும் புதிய கற்கால ஆயுதங்களை ஒத்தே இருக்கின்றன. அக் காலத்து மக்கள் பிணங்களைப் புதைத்த கல்லறைகள் நூற்றுக் கணக்காகத் தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் தாமிரபருணி நதி யோரத்தில் ஆதிச்சநல்லூர் என்னும் கிராமத்தின் அருகே பல ஏக்கர்கள் கொண்ட இடத்தில் ஆயிரக் கணக்கான சவத்தாழிகள் காணப்படுகின்றன. அத்தாழிகளில் தங்கப் பட்டங்களும், தங்க வாய் மூடிகளும், இரும்புச் சூலங்களும் கிடைக்கின்றன. இவை இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனத்திலும் சைப்ரஸ் தீவிலும் இவைகளைப் போன்ற பொருள்கள் சுமார் கி. மு. ஆயிரத்து இருநூற்றைச் சார்ந்த காலத்தனவாகக் கிடைக்கின்றன. ஆகையால் கிழக்கு மத்தியதரைக் கடலைச் சார்ந்த நாடுகளுக்கும் தென்னிந்தியாவிற்கும் கடல் வழியாகத் தொடர்புகள் அக் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு.

வரலாற்றுக் காலத்திற்கு முன் ஏற்பட்ட இந்திய நாகரிகங்களில் மிகச் சிறந்தது சிந்து வெளி நாகரிகமே (த.க.). இதைக் குறித்து 1931ஆம் ஆண்டிற்கு முன் ஒன்றுமே தெரியாமல் இருந்தது. அதற்குப் பின் நடந்த ஆராய்ச்சிகள் பலவற்றால் இந்த இடத்தில் சுமார் கி.மு. 3000-1500 வரை ஓர் அரிய பெரிய நாகரிகம் செழித்து வளர்ந்ததாக அறிகிறோம். இதற்குத் தலை நகரங்கள் சிந்து நாட்டில் மொகஞ்சதாரோ என்னும் ஊரும், பஞ்சாபில் ரவி நதிக் கரையிலுள்ள ஹாரப்பா என்னும் ஊரும் ஆகும். இவ் விரண்டு ஊர்களுக்கும் இடையே சுமார் 400 மைல்கள் உண்டு. இதைத் தவிரச் சிந்துவிலும் பலூச்சிஸ்தானத்திலும் பல சிற்றூர்களில் சற்றேறக்குறைய இந்நாகரிகத்தைச் சார்ந்த சின்னங்கள் பல அகப்படுகின்றன. ஆகவே வட மேற்கிந்தியாவில் ஒரு பரந்த பிரதேசத்தில் இந் நாகரிகம் நிலவி இருந்ததாகச் சொல்லலாம். தொடக்கத்தில் சிறு சிறு கிராமங்களே ஏற்பட்டன. விவசாயமும் கால் நடைகளும் செழித்திருந்தன. வேட்டையாடுவதும் மீன் பிடிப்பதும் பழக்கத்திலிருந்தன. அக்காலத்தில் வீடுகள் கல்லாலோ, பச்சை வெட்டுக் கற்களாலோ கட்டப்பட்டன. நதிகளில் அணை போட்டுக் பெரிய கால்வாய்கள் வழியே நீர் பாய்ச்சினார்கள். மண் பாண்டங்களை விதம் விதமாகவும் பல நிறச் சித்திரங்கள் அமைந்தனவாகவும் செய்து வந்தார்கள். உலோகங்களில் செம்பு மட்டுமே உபயோகத்திலிருந்தது.

நாளடைவில் இந்த நாகரிகம் பெருகிப் பெரிய நகரங்கள் ஏற்பட்டன. மொகஞ்சதாரோவிலும் ஹாரப்பாவிலும் வலிய கோட்டைகளால் சூழப்பட்ட முக்கியமான பல கட்டடங்களும், செவ்வனே கட்டப்பட்ட வீடுகள் செறிந்த நீளமும் விசாலமும் உடைய தெருக்களும் இருந்தன. கோட்டைக்குள் உள்ள பெருங்கட்டடங்கள் அரசாங்கத்தையோ, மத ஸ்தாபனங்களையோ சார்ந்தனவாக இருக்கவேண்டும். மொகஞ்சதாரோக் கோட்டைக்குள் எட்டடி உயரமுள்ள சுவர்களால் சூழ்ந்ததும் 180 அடி நீளமும் 108 அடி அகலமும் கொண்டதுமான ஒரிடத்தின் நடுவே ஒரு நீந்தும் குளமும், அதைச் சுற்றிச் சிறுசிறு அறைகளும் கட்டப்பட்டிருந்தன. குளத்திலுள்ள பழைய தண்ணீரைப்

போக்கவும், புதுத் தண்ணீரை நிரப்பவும் நல்ல வசதிகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் சுகாதார வசதிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.