பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசிரியா

32

அசீரணம்

நாட்டுக்குத் தெற்கேயிருந்த பாபிலோனியா மிகச் செழிப்புள்ளதாக இருந்தபடியால் அதன்மீது படையெடுத்து அதில் பெரும் பகுதியைப் பிடித்துக்கொண்டனர்.

ஆறாயிரம் ஆண்டுகட்கு முன்னர் பாபிலோனியா தோன்றுவதற்கு முன்பே புதுக் கற்காலத்தில் அசிரியா ஏற்பட்டதாகும். அதன்பின் செமிட்டிக் மக்களும், சுமேரிய மக்களும் இந்நாட்டில் குடியேறியபடியால் அசிரிய மக்கள் பல இனம் சேர்ந்த ஓர் இனமாவர். இவர்களுடைய மொழி செமிட்டிக் ஆதலால் செமிட்டிக்கர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இம்மக்களிடையே அரசினர், தொழிலாளர், பொது மக்கள், அடிமைகள் என நான்கு பிரிவினர் காணப்பட்டனர். அடிமைகள் என்போர் அயல் நாட்டிலிருந்து சிறைபிடித்துக் கொணரப்பட்டவர். கவர்னர்களும், புரோகிதர்களும், தளபதிகளும் அரசினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். குழந்தைகள் பொதுவாகப் பெற்றோர் தொழிலையே செய்தனர்.

பெண்கள் தாழ்வாகக் கருதப் பெற்றனர். அரசினர் வகுப்பார் எத்தனை மனைவியர் வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம். மற்றவர்கள் ஒரு மனைவியை மட்டுமே மணக்கவேண்டும்.

இவர்கள் பேசிய மொழி செமிட்டிக். இவர்கள் கி.மு.3000க்கு முன்னரே எழுதக் கற்றுக்கொண்டிருந்தனர். இம்முறையைப் பாபிலோனியரிடமிருந்து பெற்றதாகக் கூறுவர். ஆயினும் இவர்கள் சிறப்பான இலக்கியத்தைத் தோற்றுவித்தனர். இவர்கள் களிமண் பலகை செய்து அதில் நூல்களை எழுதினர். இவர்களுடைய அரசன் ஆசூர் பானிபல் என்பவனுடைய நூல் நிலையம் 19ஆம் நூற்றாண்டில் நினிவேயில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 20-30ஆயிரம் பலகைகள் இருந்தன. அவை மதம், இலக்கியம், மருந்து, வரலாறு முதலிய பல பொருள்களைப் பற்றியனவாகும். இவற்றை அசிரிய மக்கள் அகர வரிசைப்படுத்தி அலமாரிகளில் அடுக்கி வைத்தனர். இவை பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றன.

அசிரியர்களுடைய சட்டத்தொகுப்பு நூல் கி.மு.1400-ல் எழுதப்பெற்றதாம். கி.மு.700-ல் இவர்கள் அரிச்சுவடி எழுத்து முறையில் அராபிக் மொழியில் எழுதலாயினர். பழங்கால ஆப்புவடிவ எழுத்துக்களும் இவைகளும் ஒருங்கே வழக்கத்தில் இருந்தன.

இவர்களுடைய மதம் சுமேரியர், பாபிலோனியர் ஆகியவர்களின் மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆயினும் தலையாய வேறுபாடு ஆசிரியர் தங்கள் கடவுளை ஆசர் என்று அழைத்ததாகும். ஆசர் என்பதே அவர்களுடைய நாட்டுக்கும் தலைநகரத்துக்கும் பெயராகும். நாபு என்னும் அறிவுக் கடவுளும், இஷ்டார் என்னும் காதல் தேவதையும் பாபிலோனியர் மதத்திலிருந்து பெற்றவைகளாம். அசிரியர்கள் வழிபாடு செய்தும், பலிகொடுத்தும் கடவுள் அருளைப் பெற முயன்றனர்.

கலைத்துறையில் இவர்கள் பாபிலோனியக் கலைகளையும் மேற்கு மெசப்பொட்டேமிய, சிரியக் கலைகளையும் பின்பற்றினர். ஆயினும் கி.மு.2000-1000-ல் தனி அசிரியக் கலைமுறை ஒன்று எழுந்தது. இவர்கள் வெண்கல்லிலும் சுண்ணாம்புக் கல்லிலும் புடைப்புச் சித்திரம் (Relief) செதுக்கினார்கள். ஆனால் இவர்களுக்கு இயலுருத் தோற்றம் (Perspective) தெரியாது. ஆயினும் இவர்கள் செதுக்கியுள்ள சிங்கவேட்டைக் காட்சிகள் காயமடைந்த விலங்குகளை மிக அழகாகச் சித்திரிக்கின்றன. இவர்களுடைய சித்திரங்களுள் சிறந்தவை ஆசூர் பானிபல் காலத்தவை.

இவ்வரசர்கள் பெரிய நகரங்களை அமைத்தனர். அவற்றுள் சிறந்தவை ஆசர், காலா, நினிவே. அவர்களுடைய அரண்மனைகளுக்குக்கூட மாடி கிடையாது. ஆனால் சில அரண்மனைகள் முற்றங்கள் முதலியவற்றுடன் 20ஏக்கருக்குக் குறையாத பரப்புடையன. இவர்கள் கட்டடச் சிற்பக்கலையை எகிப்தியரிடமிருந்தும் ஹிட்டைட்டுகளிடமிருந்தும் கற்றுக்கொண்டனர். அரண்மனையைச் சுற்றி அகழிகள் வெட்டப்பட்டன. அசிரிய மக்கள் தச்சுவேலை, மண்வேலை, சித்திரத் தையல், நெசவு, உலோகவேலை ஆகியவற்றிலும் திறமையுடையவர்களாயிருந்தார்கள். இத்தொழில்களில் பாபிலோனியரைப் பின்பற்றினர்.

அசிரியா ராணுவ சாம்ராச்சியமாயிருந்தது. சக்கரவர்த்தியின் கீழ்க் கவர்னர்கள் இருந்தார்கள். பெரும் படை இருந்தது. போரிடாமல் பணியும் நாடுகள் கப்பம் கட்டினால் போதும். போரிடும் நாடுகள் அழிக்கப்பட்டன. அந்நாட்டு மக்கள் குரூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

அசீரணம் என்பது சீரணப் பாதையில் ஏற்படும் நோய்களுள், இதனால் ஏற்பட்டதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி, உண்ட உணவைச் சீரணிக்க ஏற்படும் கஷ்டத்தைக் குறிப்பதாகும். அசீரணமுண்டாவது (1) உணவையும், (2) உடல் நிலையையும் பொறுத்திருக்கிறது.

(1) உணவு: சீரணமாகாத உணவுப்பொருள்களை உட்கொள்வதாலும், அளவுக்கு மிஞ்சியோ, காலந்தவறியோ, அரைகுறையாக மென்றே உண்ணுவதாலும், பீர் முதலிய மது, தேநீர் ஆகியவற்றைப் பருகுவதாலும் அசீரண முண்டாகலாம். உணவு உண்ணும் சமயத்தில் நீரை மிகுதியாகக் குடித்தால் உணவுடன் உமிழ்நீர் கலவாமற் போவதோடு இரைப்பையில் சுரக்கும் சீரணநீர் நீர்த்தும் போகும். அப்போது சீரணம் மெதுவாக நடைபெறும். மதுபானப் பழக்கமுடையவர்களும் மிகுதியாகப் புகை பிடிக்கிறவர்களும் அசீரணமடைவர்.

(2) உடல்நிலை சம்பந்தமான காரணங்களுள் நரம்பு மண்டலக்கோளாறே முக்கியமானதாகும். துக்கச் செய்தி, மனக்கவலை போன்றவை சீரண சக்தியை அழித்துவிடும். சில சமயங்களில் வாந்தி உண்டாகும்படியும் செய்யும். பொதுவாக உடல் பலவீனமாக இருப்பின் அது இரைப்பையையும் பாதிக்கும். இரைப்பையின் தசைகள் தளர்ந்திருந்தால் அது கீழே இறங்கும், அப்பொழுது அசீரணம் உண்டாகும். சிறுநீரகத்தில் நோய் உண்டானாலும் அசீரணம் ஏற்படும். இரைப்பைப் புண்களும், முன் சிறுகுடல் (Duodenum) புண்களும் அசீரண முண்டாக்கும். உள்ளக்கிளர்ச்சிக் கோளாறுகளால் இரைப்பைக்கு இரத்தம் மிகுதியாக வந்து அதனால் சீரண உறுப்புக்களிலுள்ள கோழைச்சுரப்பிகளில் கோழைநீர் மிகுதியாகச் சுரந்து அசீரண முண்டாவதே அடிக்கடி காணப்படுவதாகும் என்பது அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளால் தெரியவருகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவராகவும் இதுவரை நல்ல சீரண முடையவராகவும் உள்ளவரிடம் அசீரணம் காணப்பட்டால் வைத்தியர்கள் அவருக்கு இரைப்பைப் புற்று நோய் உண்டாயிருப்பதாக ஐயுறுவர். மறிவினை நரம்புக் கோளாறுகளாலும் சீரண உறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் வந்து சேராமையாலும் அசீரணம் உண்டாவதுண்டு.