பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

639

இந்தியா

களின் தலைவர் சிலர் சரணடைந்தனர். சிலர் கொல்லப்பட்டனர்.

நேபாளிகள் பிரிட்டிஷ் இந்திய இராச்சியத்தை அடிக்கடி தாக்கியதால் அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் மூண்டது (1814-16). தளபதி ஆக்டர்லோனி நேபாளத்துக்குள் நுழைந்து பல வெற்றிகள் பெற்றான். அதனால் நேபாள அரசாங்கம் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி கைனீ தால், அல்மோரா, கர்வால் பகுதிகளும் சிம்லாப் பகுதியும் ஆங்கிலேயருக்குக் கிடைத்தன. நேபாளமும் ஆங்கிலேய அரசாங்கமும் நட்புரிமை பூண்டன. நேபாளத் தலைநகரில் ஆங்கிலப் பிரதிநிதியொருவன் நியமிக்கப்பட்டான்.

ராஜபுதனத்து மன்னர்கள் பல வேற்றுமைகள் காரணமாக வெளியார் படையெடுப்பினின்றும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் திறனற்றிருந்தார்கள். ஹேஸ்டிங்ஸ் பிரபு அவர்களோடு உடன்படிக்கைகள் செய்து கொண்டு ராஜபுதனத்தில் கம்பெனியின் ஆதிக்கத்தை ஏற்படுத்தினான்.

ஆட்சிமுறையில் பல சீர்திருத்தங்களையும் ஹேஸ்டிங்ஸ் செய்து முடித்தான். எல்பின்ஸ்டன், மன்ரோ, மெட்காப்பைப் போன்ற கவர்னர் ஜெனரல்கள் இத்துறையில் பல திருத்தங்கள் புரிந்தார்கள்.

ஆம் ஹரீஸ்ட் பிரபு (ப. கா. 1823-28) காலத்தில் முதல் பர்மியப் போர் (1824-26) நிகழ்ந்தது. பர்மியர் அஸ்ஸாமைக் கைப்பற்றி, அங்கே கொடுங்கோலாட்சி நடத்தினர். அதோடு நிற்காமல் வங்காளத்தின் சில பகுதிகளைக் தமக்குத் தரவேண்டுமென்று கல்கத்தா ஆட்சியினரைக் கேட்டனர். அக்கோரிக்கை மறுக்கப்படவே வங்காளத்தின் மேலும் படையெடுத்தனர். தங்கள் வலிமையை அதிகமாகவும், இந்திய ஆங்கிலேயப் படைகளின் வலிமையைக் குறைவாகவும் மதிப்பிட்ட அவர்கள் விரைவில் அதன் பயனை அனுபவிக்க நேர்ந்தது. ரங்கூன், மணிப்பூர் ஆகியவை ஆங்கிலத் தளபதி வசமாயின. பர்மியத் தளபதி மகாபாண்டுலா போரில் தோற்று இறந்தான். பின்னர் 1826-ல் யாண்டபோ (Yandabo) என்னுமிடத்தில் ஏற்பட்ட சமாதானத்தின்படி அஸ்ஸாம், அரக்கான், டென்னாசரிம் என்னும் பகுதிகளைப் பர்மியர் ஆங்கிலேயருக்கு அளித்தனர். ஆங்கில வர்த்தகர்களுக்குப் பர்மாவில் வர்த்தகம் செய்யவும் வசதி கிடைத்தது.

பென்டிங்க் பிரபு (ப. கா. 1828-35) காலத்தில் பல முக்கியமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. நன்முறையில் ஆட்சி நடத்த வேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந்திருந்த அவன் அரசியல் துறையிலும் சமுதாயத்துறையிலும் பல சீர்திருத்தங்கள் செய்தான். அதிகாரிகளின் அதிகச் சம்பளத்தை அவன் குறைத்தான். சில அவசியமற்ற பதவிகள் நீக்கப்பட்டன. வரி வசூலிப்பதிலும் நீதித்துறையிலும் அவன் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் செய்தான். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் புதிய கோர்ட்டுக்களை ஏற்படுத்தினான். சுலபமாகவும் விரைவாகவும் எல்லோருக்கும் நீதி கிடைக்கும்படி செய்தான். இந்தியர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி, அவர்களுடைய சம்பளத்தையும் அந்தஸ்தையும் உயர்த்தினான். இந்தியர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

இந்துக்களிடையே வழங்கிவந்த சதி என்னும் கொடிய வழக்கத்தை 1828ஆம் வருடத்திய பதினேழாவது ஒழுங்குமுறையின் மூலம் சட்டவிரோதமானதென்றும், குற்றவாளிகள் கடுந்தண்டனைக்குள்ளாவரென்றும் திட்டம் செய்து அவ்வழக்கத்தை ஒழித்தான். இதைப்போலவே இந்தியா முழுமையும் பரவியிருந்த தக்கர்கள் என்னும் கொலைக்குழுவினரையும் அழித்தொழித்தான். இத்துறையில் சிறந்த தொண்டு புரிந்த சிலீமன் (Sleeman) என்பார் தக்சிலீமன் (Thuggee Sleeman) என வழங்கப்பட்டார்.

பென்டிங்க் பிரபு இந்தியர்களைப் பதவிகளில் அமர்த்துவதற்காக அவர்களிடையே ஆங்கிலத்தைப் பரப்ப வேண்டியிருந்தது. சட்டமந்திரியாயிருந்த மெக்காலே பிரபு ஆங்கிலத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தான். ஆங்கிலமும் மேனாட்டுக் கலைகளும் கற்பிக்கும் கல்லூரிகளுக்கே அரசாங்கம் உதவிப்பணம் அளிப்பதென்று முடிவாயிற்று.

மெட்காப் (ப. கா. 1835-36), ஆக்லந்து (ப. கா. 1836-42), எல்லன்பரோ (ப.கா. 1842-44) என்பவர்கள் பென்டிங்குக்குப் பின் கவர்னர் ஜெனரல்களாக இருந்தனர். ஆக்லந்தின் பதவிக் காலத்தில் முதல் ஆப்கானியச் சண்டை (1838-42-ல்) நடந்தது. பின்னர் சிந்து ஆங்கிலேயர் வசமாயிற்று(1843). அங்கே ஆண்ட அமீர்கள் தோல்வியுற்று நாடிழந்தனர். இக்காலத்தில் சீக்கியர்கள் ரணசித்சிங்கின் தலைமையில் பஞ்சாபை வென்று தங்கள் இராச்சியத்தை நிறுவிக் கொண்டனர்.

இதன் பிறகு முக்கியமான கவர்னர் ஜெனரலாயிருந்த டால்ஹௌசி பிரபு (ப. கா. 1848-56) சீர்கேடான ஆட்சிமுறை நிலவும் நாடுகளைக் கைப்பற்றிப் பொதுமக்கள் சிறந்த ஆட்சியின் பயன்களைப் பெறுமாறு செய்வது தன் கடமையெனக் கருதினான். அயோத்தி நவாபின் ஆட்சி மிகவும் சீர்கெட்டிருந்தால் 1856-ல் அதைக் கைப்பற்றிக் கம்பெனி ஆளுகையின் கீழ்க் கொண்டுவந்தான். சந்ததியில்லாத அரசர்கள் சுவீகாரம் செய்து கொள்ளுவதை அவன் அங்கீகரிக்கவில்லை. அந்த மன்னர்கள் கம்பெனிக்குக் கீழ்ப்பட்டவர்களாகையால் அவர்கள் நாடுகள் கம்பெனியைச் சேர வேண்டும் என்று தீர்மானித்தான். ஜயப்பூர், ஜான்சி, நாகபுரி இவற்றின் மன்னர்கள் எடுத்துக் கொண்ட சுவீகாரத்தை அங்கீகரிக்காமல் அவர்கள் ஆண்ட நாடுகளைக் கம்பெனி நாடுகளோடு சேர்த்துவிட்டான். இது மிகுந்த மனக்கொதிப்பை உண்டாக்கிற்று. ஜான்சி ராணி லட்சுமிபாயும் அவ்விதமே மனக்கொதிப்புற்றுப் பின்னர் நிகழ்ந்த இந்தியக் கிளர்ச்சியில் சேர்ந்து போரிட்டாள். நாடிழந்த மன்னர்களின் சந்ததியினருக்குக் கொடுத்துவந்த உபகாரச் சம்பளத்தை டால்ஹௌசி நிறுத்திவிட்டுச் சிலருடைய பட்டங்களையும் பறிமுதல் செய்தான். II-ம் பாஜிராவுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உபகாரச் சம்பளம் அவனுடைய சுவீகார புத்திரன் நானா சாகிபுக்கு மறுக்கப்பட்டது.

டால்ஹௌசி, இருப்புப் பாதைகளைப் போட்டு ரெயில் பிரயாணத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தான். தந்தி முறை, குறைந்த செலவுள்ள தபால் முறை முதலியவற்றையும் ஏற்படுத்தினான்.

கானிங் பிரபு (ப. கா. 1856-58) காலத்தில் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் செல்ல உடன்பட்டவர்களே சேனையில் சேர்க்கப்பட்டனர். இந்து விதவைகளின் மறுமணம் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கட்கும் அவர்கள் சந்ததியினர்க்கும் சொத்துரிமை போன்றவை வழங்கப்பட்டன. மேற்கூறியவை வைதிக மனப்பான்மை கொண்டவர்களிடையே வெறுப்பையும் சினத்தையும் உண்டாக்கின.

1857-58-ல் ஏற்பட்ட இந்தியக் கிளர்ச்சியின் காரணங்கள் டால்ஹௌசி கையாண்ட முறைகளும் செய்து முடித்த சீர்திருத்தங்களுமேயாம். நாடிழந்த மன்னர்-