பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

641

இந்தியா

வந்து பலரோடு கலந்து நிலையை அறிந்தார். இதன் பயனாக 1919ஆம் ஆண்டுச் சட்டம் வெளிவந்தது.

இதன்படி மத்திய அரசாங்கத்தில் இரண்டு சட்டசபைகள் ஏற்பட்டன. மேற்சபை கவுன்சில் ஆப்ஸ்டேட் எனவும், கீழ்ச்சபை லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி எனவும் அழைக்கப்பட்டன. மேற்சபையில் 60 அங்கத்தினரும், கீழ்ச் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 100 பேர் உட்பட 140 அங்கத்தினரும் இருக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

மாகாணச் சபைகளில் அதிகப்படியான அங்கத்தினர் சேர்க்கப்பட்டனர். அவருள் 100க்கு 70 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். இப்பொழுது தான் வரி செலுத்தும் மக்களால் அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முதல் தடவையாகக் கிடைத்ததென்று கூறலாம். இச் சட்டத்தால் ஏற்பட்ட பெரு மாற்றம் மாகாணங்களில் ஒருவிதப் பொறுப்பாட்சி அமைக்கப்பட்டதேயாகும். அரசியல் நிருவாகத்தை இரண்டாக வகுத்து, ஒரு பகுதியிலடங்கிய அதிகாரங்கள் சட்ட சபையிலிருந்து அமைக்கப்பட்ட மந்திரி சபைக்கு அளிக்கப்பட்டன. இம் மந்திரிகளின் அதிகாரம் பலவகையிலும் குறைவாக இருந்த போதிலும் பொறுப்பாட்சியின் வளர்ச்சிக்கு இதுவே தொடக்கமாகும்.

காங்கிரஸ் கட்சியினர் 1919-ல் தோன்றிய அரசியல் அமைப்பை நிராகரித்துத் தேர்தலில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டனர். மிதவாதிகள் தாம் சட்ட சபை அங்கத்தினராயினர். காங்கிரசின் மனப்பான்மை அரசாங்கத்தாருக்கு வெறுப்பை உண்டுபண்ணிற்று. அரசியலை எதிர்த்து நின்றவர்கள் மீது அடக்குமுறை கையாளப்பட்டது. ‘ரௌலத்’ சட்டம் இயற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து ஜலியன்வாலாபாக் படுகொலையும் ஏற்பட்டது. ஐரோப்பாவில் ஒரே முகம்மதிய நாடாகிய துருக்கியை அக் கண்டத்திலுள்ள மற்றத் தேசங்கள் பங்கிட்டுக்கொள்வதற்கு முயன்றதால் முகம்மதியர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுக் ‘கிலாபத்து’ இயக்கமும் அப்பொழுது ஆரம்பித்தது. மேற்கூறிய பல காரணங்களால் மகாத்மா காந்தி, 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். ஆனால் அவரைப் பின்பற்றியவர்கள் அவர் எதிர்பார்த்ததுபோல் நடந்து கொள்ளாமையால் அவர் இயக்கத்தைச் சில காலத்திற்குப் பின் நிறுத்திவைத்தார். 1922-ல் காந்தியடிகளை அரசாங்கம் சிறைப்படுத்திற்று.

அரசாங்கத்தார் இந்திய அரசியல் வளர்ச்சியைப் பார்வையிட்டு, மேல் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றிப் பரிசீலனை செய்வதற்காக 1927-ல் சர் ஜான் சைமன் என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தனர். ஆனால், இந்தக் கமிஷனில் இந்தியரொருவரும் சேர்க்கப்படாமையால் நாட்டு மக்கள் கமிஷனோடு ஒத்துழைக்க மறுத்தனர்.

இதனிடையே இங்கிலாந்தில் 1929-ல் தொழிற்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. இந்திய மக்களின் விருப்பத்திற்கு ஆதரவு காட்டிவந்த அக்கட்சித் தலைவர் ஒரு வட்டமேஜை மாநாட்டைக் கூட்டி, அதில் ஒரு தீர்மானத்தை வகுக்க ஏற்பாடு செய்தார். ஆனால், இந்தியாவுக்கு டொமினியன் நிலைமை அளிப்பதாக உறுதி கூறப்படாமையால், காங்கிரசு ஒத்துழைக்க மறுத்ததுமன்றிச் சட்ட மறுப்பு இயக்கத்தையும் தொடங்கிற்று. அரசாங்கம் உடனே வழக்கம் போல அடக்குமுறையைக் கையாண்டது.

இறுதியில் 1931 மார்ச்சு மாதம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டுக் காந்தியடிகளும் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்றார். இதற்குள் இங்கிலாந்தில் தேசியக் கட்சி பதவிக்கு வந்தது. இதன் நோக்கம் தொழிற் கட்சியின் கருத்துக்கு மாறுபட்டதாயிருந்ததால் இரண்டாவது வட்டமேஜை மாநாடும் சரியான முடிவுக்கு வாராமல் கலைந்தது.

காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பியதும் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிற்று. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பிரிட்டிஷ் பிரதம மந்திரி அளித்த வகுப்புவாரித் திட்டத்தை எதிர்த்துக் காந்தியடிகள் உண்ணாவிர்தம் இருந்தார். விரைவில் கூட்டு யோசனை நடந்ததன் பயனாகப் பூனா ஒப்பந்தம் தோன்றவே, சமரசம் நிலவியது. இறுதியாக 1932-ல் லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை 1935-ல் பிரிட்டிஷ் பார்லிமென்டு இந்திய அரசியல் திட்டமாக அங்கீகரித்தது.

1935ஆம் ஆண்டின் இந்திய அரசியல் சட்டத்தின் படி மாகாணங்களும் சுதேச சமஸ்தானங்களும் சேர்ந்த கூட்டாட்சி ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கத்தில் ஓர் அளவு பொறுப்பாட்சி அமைக்க, அதாவது சில பகுதிகளுக்கு மந்திரிகளை நியமிக்க இத் திட்டம் இடம் கொடுத்தது. மாகாணங்களில் மந்திரிகளின் கீழ் முழுப் பொறுப்பாட்சி அமைக்கப்படவும் ஏற்பாடாயிற்று. ஆயினும் மாகாணங்களில் கவர்னருக்கும், மத்திய அரசாங்கத்தில் கவர்னர் ஜெனரலுக்கும் தனிப்பட்ட சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தமை பொறுப்பாட்சி சரிவர நடைபெறு வதற்கு இடையூறாகவே இருந்து வந்தது.

கூட்டாட்சி ஏற்படுவதற்குச் சுதேச அரசர்களில் பலர் அதில் சேர இணங்குதல் அவசியம். அவர்கள் அதற்கு இணங்காமையால் அப்பொழுது கூட்டாட்சி ஏற்படுத்த இயலாது போயிற்று. மாகாணங்களில் மட்டும் 1937-ல் பொறுப்பாட்சி தொடங்கிற்று.

இரண்டாவது உலக யுத்தம் 1939-ல் தோன்றிற்று. இந்தியச் சட்ட சபைகளோடு கலக்காமலே பிரிட்டன் இந்தியாவையும் இப்போரில் இணைத்ததன் காரணமாக, மாகாணங்களிலுள்ள காங்கிரசு மந்திரி சபைகள் பதவியை ராஜிநாமா செய்தன. இதைத் தொடர்ந்து காந்தியடிகளின் தலைமையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கமும், வெள்ளையர்கள் நாட்டை விட்டு அகல வேண்டுமென்ற கிளர்ச்சியும் தொடங்கின. இவற்றிற்கு எதிராக வைசிராய் லின்லித்கோ பிரபு தீவிரமான அடக்குமுறையைக் கையாண்டார். 1942-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதியாக, சர் ஸ்டா போர்டு கிரிப்ஸ் என்பவர் இந்தியாவுக்கு வந்து, யுத்தத் துக்குப்பின் அமைக்கப்பட வேண்டிய அரசியல் திட்டத்தைப் பற்றி இந்தியரைக் கலந்தார். ஆனால், உடனடியாக மாறுதல் ஒன்றும் ஏற்படுத்த ஆங்கில அரசாங்கத்தினர் ஆயத்தமாயில்லாததால் அவர் முயற்சி பயன்படவில்லை.

1945-ல் போர் முடிந்தபின் பிரிட்டனில் தொழிற்கட்சி பதவிக்கு வந்தது. போரினால் ஏற்பட்ட பல கஷ்டங்களைப் பிரிட்டன் அனுபவித்துக் கொண்டிருந்தது. ஆகவே உலகப் போக்கை யொட்டி, இந்தியாவுக்கு விடுதலை அளிக்க வேண்டியது இன்றியமையாததெனக் கருதப்பட்டது.

இந்தியாவில் இதனிடையே பாகிஸ்தான் கிளர்ச்சி தீவிரமாகக் கிளம்பிற்று. காங்கிரசும் முஸ்லிம் லீகும் ஒற்றுமைப்பட்டு அரசியலை நடத்துவது சாத்தியமாகத் தோன்றவில்லை. 1946-ல் வந்த காபினெட் மிஷன்