பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

644

இந்தியா

யதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி முறையை நன்கு அமைத்துப் போற்றுவதே இவரது பொறுப்பு.

கல்வி வளர்ச்சிக்காகச் செலவு செய்துவந்த பணத்தொகை அதிகரித்துக் கொண்டே வந்தது. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நாளுக்கு நாள் பெருகி வந்தன. 1926-ல் இந்தியாவில் 15 பல்கலைக்கழகங்களும் 303 கல்லூரிகளும் இருந்தன. உயர்தரப் பள்ளிகளும் ஆரம்பப் பாடசாலைகளும் பெருகி வந்தன. ஆனால், நாட்டிற்கு வேண்டிய ஆரம்பப் பாடசாலைகள் போதிய அளவு இல்லை. நகர சபைகளும் கிராம ஸ்தாபனங்களும் கல்வித் துறையில் எடுத்துக்கொண்ட முயற்சி போதவில்லை. மேலும் உயர் தரக் கல்விப் பயிற்சி அரசாங்க உத்தியோகஸ்தர்களைத் தயாரித்து உதவி வந்ததே யொழிய, மக்கள் வாழ்க்கைக்குப் பொருந்தியதாக இல்லை என்று குறை கூறப்பட்டது. பற்பல சீர் திருத்தங்களை அமைத்தாலும், அடிப்படையான மேற்கூறிய குறைகள் இன்னும் நீக்கப்பட்டன வென்று கூறமுடியாது.

கல்வி, போக்குவரவு வசதிகள், விவசாயம் முதலியவற்றின் பொருட்டு அரசாங்கம் ஆண்டுதோறும் மிகுதியான பொருட் செலவு செய்தது. நாடு முன்னிருந்ததை விட முன்னேற்றமடைந்துள்ளதென்பதற்கு ஐயமில்லை. எனினும் இன்னும் பற்பல குறைகள் இருந்தன. ஒவ்வொரு துறையிலும் பன்மடங்கு வளர்ச்சி மக்களின் முன்னேற்றத்துக்கு இன்றியமையாததாகக் காணப்பட்டது. நாடு விடுதலை பெற்றபின் இம் முன்னேற்றம் குன்றாது ஓங்கி வளருமென நம்பப்படகிறது. கே. க.

தென்னிந்திய வரலாறு : தென்னிந்திய வரலாறு பழமையானது. சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குமுன் கடற்கரையில் துறைமுகப்பட்டினங்களாயிருந்த கொற்கையும் காயல்பட்டினமும் இப்போது கரைக்குச் சில மைல் தூரத்திலுள்ள சிற்றூர்களாகி விட்டன. காவிரிப்பூம்பட்டினமும் மாமல்லபுரமும் பெரும்பாலும் கடலில் மூழ்கிவிட்டனபோலும். குமரிமுனைக்குத் தெற்கேயிருந்த நாடு கடலால் கொள்ளப்பட்டதென்று தமிழ் நூல்களில் கூறப்படுகிறது. ஆனால் இக்கடல் கோள் எக்காலத்து நிகழ்ந்ததென்று தெரியவில்லை. தமிழர்கள் மத்தியதரைக் கடலின் கீழ்ப்பாகத்தைச் சார்ந்த நாடுகளிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ இந்தியாவில் புகுந்தவரென்று சில காரணங்களால் ஊகிக்கலாமென்பர் சிலர், சிலர் அவர்கள் எக்காலத்தும் இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்பர். சிந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் சுமார் கி. மு. 3,000 முதல் கி.மு. 1,500 வரை ஓங்கி வளர்ந்த நாகரிகம் தமிழரைச் சார்ந்ததே என்பர் சிலர்.

இனித் தமிழர் சமூக நிலையைக் கீழ்க்கண்டவாறு குறிக்கலாம். அரசர்கள் தங்கள் கோட்டைகளிலிருந்து சிறு நாடுகளை ஆண்டுவந்தனர். விழாக்களிலும் மற்றக் கொண்டாட்டங்களிலும் பாடலையும் ஆடலையும் நிகழ்த்தும் பாணரும் விறலியரும் இருந்தனர். தமிழருக்குக் கடவுள் வழிபாடுண்டு. சட்டங்களும் ஒழுக்கங்களும் உண்டு. திருமணம் உண்டு. வேளாண்மை நன்றாக நடந்து வந்தது. அம்பு, வில், ஈட்டி, கத்தி முதலிய போர்க் கருவிகள் உண்டு. நூல் நூற்றல், நெய்தல், சாயம் போடுதல் முதலிய வாழ்க்கைக்கு முக்கியமான கைத்தொழில்கள் நடந்துவந்தன. மட்பாண்டங்கள் வனைதலில் தமிழர் கைதேர்ந்தவர்களென்பது பல இடங்களில் அகப்படும் ஈமத்தாழிகளால் விளங்குகிறது. பெரியனவாகவும் சிறியனவாகவும் பல வடிவங்களைக் கொண்ட தாழிகளும் பல சிறு மட்கலங்களும் ஆதிச்ச நல்லூர், பெரும்பேர் முதலிய இடங்களிலும், மலைச்சாரல்களில் உள்ள பாண்டவக் குழிகள் பலவற்றிலும் அகப்படுகின்றன.

சேர, சோழ, பாண்டிய அரசுகள் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வந்தவை என்பர் பரிமேலழகர் என்னும் உரையாசிரியர். பாண்டியருக்குக் கௌரியர், பஞ்சவர் என்ற பெயர்களும், அர்ச்சுனன் பாண்டிய வமிசத்துப் பெண்ணை மணந்தான் என்ற கதையும் இவர்களுக்கும் பாண்டவருக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன. கி. மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்க ஆசிரியர் பாண்டிய நாடு ‘ஹிரக்கிளிஸ்’ என்னும் சிவபெருமானது புத்திரியான ‘பண்டைய’ என்னும் பெண்ணரசியால் ஆளப்பட்டு வந்தது என்று கூறுவர். மேலும் அந்நாடு 360 கிராமங்கள் அடங்கியதென்றும், ஒவ்வொரு கிராமத்தாரும் ஆண்டுக்கொரு நாள் அரசனுடைய கோயிலுக்குக் கப்பம் செலுத்தினார்கள் என்றும் கூறுகிறார். சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களும், ‘சதியபுத’ என்னும் மற்றொரு நாடும் அசோகனுடைய சாம்ராச்சியத்திற்கு உள்ளடங்காமல் அவனுடன் நட்புப் பூண்டிருந்தன என்பது அவனுடைய சாசனங்களால் விளங்குகிறது.

சோழ நாடு, வடக்கே ஒரு வெள்ளாறு (பரங்கிப் பேட்டையில் சமுத்திரத்தில் கலப்பது), தெற்கே புதுக்கோட்டை, மேற்கே கோட்டைக் கரை வழியாய்ப் பாயும் மற்றொரு வெள்ளாறு (திருச்சிராப்பள்ளி ஜில்லா குளித்தலை தாலுகாவில் உள்ளது), கிழக்கே கடல் என்ற இந்நான்கு எல்லைகளுக்குள் அடங்கியது. இதைக் காவிரி நாடு என்றும் சொல்லுவதுண்டு. இது தற்காலத்துத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களும், தென்னார்க்காட்டிலும் புதுக்கோட்டையிலும் சில பகுதிகளும் அடங்கிய நாடு. இதற்குத் தெற்கே உள்ள இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களும், திருவிதாங்கூரின் தென்பாகமும் சேர்ந்து பாண்டிய நாடாகும். சேரநாடு தற்காலத்துத் திருவி தாங்கூரின் வடபாகமும், கொச்சியும், மலையாள மாவட்டமும் பாலக்காட்டுக் கணவாயை அடுத்த கோயம்புத்தூர் மாவட்டப் பகுதியும் உள்ளடங்கின நாடென்று கூறலாம். சோழருக்குத் தலைநகர் உறையூர். துறைமுகம் புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம். பாண்டியருக்குத் தலைநகர் மதுரை. அவர்களுக்குத் துறைமுகங்கள் கிழக்குக் கடலில் சாலியூரும் கொற்கையும். மேற்குச்சமுத்திரத்தில் கிரேக்கர்கள் ‘லெர் கிண்டா’ என்று அழைத்து வந்த ஒரு துறைமுகமும் இருந்தது. இது தற்காலத்துக் கோட்டையத்திற்கு அருகில் இருந்திருக்கவேண்டும். சேரர்கள் தலைநகர் வஞ்சிமா நகரம். இது சிலர் கருத்துப்படி கொச்சி நாட்டிலுள்ள திருவஞ்சைக்களம் ஆகும். ஆனால் வேறு சிலர் இது கரூரிலோ, அதன் சமீபத்தில் வேறிடத்திலோ இருந்ததென்பர். டாலமி என்னும் கிரேக்க ஆசிரியர் தமது பூகோள நூலில் சேரர் தலைநகர் கரூர் என்று கூறுவதும், கரூருக்கு அருகில் பல பழைய ரோமானிய நாணயங்கள் அகப்படுவதும், கரூரின் பெயர் வஞ்சிமா நகர் என்று ஒரு சாசனத்தில் காணப்படுவதும், உள்நாட்டுக் கரூரே சேரர் தலைநகராக இருந்திருக்கலாம் என்பதை வற்புறுத்துகின்றன. முசிரி, தொண்டி முதலிய துறைமுகங்கள் மேற்குக் கடற்கரையில் சேர நாட்டைச் சார்ந்தவை.