பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

645

இந்தியா

சத்திய புத்திரர்கள் மெய்ம்மலிகோசர், ஒன்று மொழிக்கோசர் எனச் சங்க நூல்களில் புகழப் பெற்றவர்களாயின், இவர்கள் நாடு கொங்கு நாடு எனலாம். நாளடைவில் அக் கோசர்கள் துளுநாட்டையும் கைப்பற்றினார்கள். மகாராஷ்டிர நாட்டில் இக்காலத்தும் சாத்புதே என்னும் குலப் பெயர் வழங்கி வருகிறது. இப்பெயர் பூண்டவர்கள் அசோகன் காலத்துச் சத்திய புத்திரரின் சந்ததிகளாய் இருக்கலாம் என்பர் டீ. ஆர். பண்டாரகர்.

மௌரியர்கள் தென்னாட்டை நோக்கிப் படையெடுத்து வந்து, பொதியமலைவரை உள்ள நாடுகளைத் தாக்கினார்கள் என்று சிலர் கூறுவர். ஆயினும் அதற்குத் தக்க சான்று யாதொன்றும் கிடையாது. கௌடிலியனுடைய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் தென்னாட்டுக்கும் வட இந்தியாவிற்கும் வியாபாரம் மிகுதியாக நடந்து வந்ததாகக் காண்கிறோம். பாண்டிய சேரநாடுகளிலிருந்து முத்துக்களும், வைரம், வைடூரியம், சந்தனம் முதலிய அருமைச் சரக்குக்களும், வட நாட்டிற்கு ஏற்றுமதியாயின என்று தெரிகிறது.

தென்னிந்தியாவில் உள்ள சில மலைக்குகைகளில் முனிவர்கள் படுக்க வசதியான தளங்களும், அவைகளில் ஓர் ஓரத்தில் தலையணை போன்ற மேடையும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளின் அருகே பிராமி எழுத்தில் சுருக்கமான கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எழுத்தின் வடிவைக்கொண்டு, இக்கல் வெட்டுக்கள் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தன என்று ஊகிக்கலாம். இவைகளின் மொழி தமிழ்தான். இவற்றில் காணப்படும் பெயர்கள் குகைகளைச் செய்வித்தவர்களையோ அல்லது அவற்றில் வசித்த முனிவர்களையோ குறிக்கவேண்டும். இக்குகைகள் கழுகுமலையில் காணப்படுகின்றன. கழுகு மலை என்பது வடநாட்டில் புத்தருடன் நெருங்கின சம்பந்தம் கொண்ட மலையின் பெயரான கிருத்திர கூடத்திற்குச் சரியான மொழிபெயர்ப்பு. இதுபோன்ற காரணங்கள் பற்றி இம்மலைக்குகைகள் அனைத்தும் பௌத்த சன்னியாசிகளைச் சார்ந்தவைகளே என்று சிலர் கருதுவர். ஆனால் சமண மதமும் அக்காலத்தில் தென்னிந்தியாவில் பரவியிருந்ததாகச் சமண நூல்களில் கூறப்படுகிறது. இன்னும் புதிதாகக் குகைகளும் கல்வெட்டுக்களும் அங்கங்கே அகப்பட்டு வருகின்றன. ஆகையால் இக்குகைகளில் இருந்தவர்கள் பௌத்தரும் சமணரும் என்று கருத இடமுண்டு. இக்கல்வெட்டுக்களின் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் முழுவளர்ச்சியும் பெற்றிருக்கவில்லை. அந்தக்காலம் வடநாட்டுப் பிராமி எழுத்துக்களைத் தமிழுக்குத் தக்கவாறு மாற்றிவந்த காலம். தமிழ் மொழிக்குச் சிறப்பான ற, ழ, ள, ன முதலிய ஓசைகளுக்குத் தனிக்குறிகள் அமைந்துவிட்டன. ஆனால் உயிர் பெற்ற மெய்யெழுத்துக்களுக்கு வேண்டிய குறிகள் ஏற்படவில்லை. உதாரணமாக யு எழுதவேண்டிய இடத்தில் ய, உ என்று எழுதுவது வழக்கமாயிருந்தது. சமண மதமும் பௌத்த மதமுமே தமிழ்நாட்டில் இக்காலத்தில் ஓங்கி வளர்ந்தன என்று நினைப்பது சரியன்று. இதற்குச் சற்றுப் பின்வந்த சங்க காலத்தில் வைதிக மதம் நாடெங்கும் பரவியிருந்ததாகச் சங்க நூல்களிலிருந்து காண்கிறோம்.

சுமார் கி. மு. 165-ல் கலிங்க தேச அரசன் கார வேலன் தன்னாட்டுக்குப் பகையாக இருந்த தமிழ் நாட்டுக் கூட்டம் ஒன்றைப் போரில் வென்றதாகத் தன் சாசனத்தில் கூறிக்கொள்கிறான்.

தமிழ்நாட்டின் வரலாற்றைத் தெளிவாக நாம் முதன் முதல் அறிந்து கொள்வது சங்க இலக்கியங்களின் மூலமாகத்தான். ஒரு சங்கம் தமிழ் நூல்களை ஆராய்வதற்கு மதுரையில் பாண்டியரால் நிறுவப்பட்டது என்பது வரலாற்று நிகழ்ச்சி. இது சின்னமனூர்ச் செப்பேடுகளில் கூறப்பட்டிருக்கிறது. சேர வேந்தர்களில் ஒருவன் மகாபாரத யுத்தத்தில் இரு திறத்துப் படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்தது புறநானூற்றில் சொல்லப்படுகிறது. மேலும் புறநானூற்றுப் பாடல்களில் தமிழ் அரசரும் பிறரும் வேத வேள்விகள் நடத்தியதாகக் காண்கிறோம். ஆரியமும் - தமிழும் நன்றாகக் கலந்தபின் தமிழ் நாட்டில் உண்டானதே வரலாற்றுக் காலத்து நாகரிகம் என்பர்.

சங்க காலம் கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகள் அடங்கினது என்று கொள்ளலாம். யவனர்களுடன் தமிழர் செய்து வந்த வியாபாரத்தைக் குறித்த செய்திகள் சங்க நூல்களில் பல இடங்களில் காண்கிறோம். அதற்கேற்பத் தமிழ் நாட்டில் பல ஊர்களில் பழைய ரோமானிய நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தவிரவும் சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் ஆனபோதிலும், அதில் குறிப்பிட்ட பிரகாரம் சேரன் செங்குட்டுவன், கரிகாற்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், இலங்கை வேந்தன் கயவாகு இந் நால்வரும் ஒரே காலத்தவராக இருந்திருக்கலாம். கண்ணகி சரித்திரம் ஒரு பழங்கதையாயினும், அதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்புகுந்த ஆசிரியர் வரலாற்று உண்மையைத் தொடர்ந்து ஒரே காலத்தில் ஆண்ட அரசர்களைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்க இடமுண்டு. இலங்கையில் கயவாகு ஆண்ட காலம் கி. பி. 173 முதல் 195 வரை. புதுச்சேரிக்கு அருகில் அரிக்கமேடு என்னும் இடத்தில் கி. பி. முதல் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த ஒரு யவன பண்ட சாலை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் சங்க நூல்களில் கூறப்பட்டிருக்கும் வியாபாரச் செய்திகளை ஒத்திருத்தலால், சங்க நூல்களுக்கு நாம் குறிப்பிட்டிருக்கும் காலத்தை வலியுறுத்துகிறது.

உதியஞ்சேரல் (கி. பி. 130) குருக்ஷேத்திரத்தில் படைகளுக்குப் பெருஞ்சோறு கொடுத்தவனாகப் புகழப்படுகிறான். இது இவன் முன்னோர் செய்ததை இவன் மேல் ஏற்றிக் கூறப்பட்டதாகக் கொள்ளவேண்டும். இவன் மகன் நெடுஞ்சேரலாதன் உள்நாட்டுச் சத்துருக்கள் சிலரைக் கடற்போரில் வென்றதோடு அவரிடமிருந்தே அரிய கலங்களையும் வைரத்தையும் பெற்று அவர்களை விடுவித்தான். இவனுக்கு இமய வரம்பன் என்ற பெயரும் உண்டு. இவன் ஆண்ட ஆண்டுகள் 58. இவனுக்குப்பின் ஆண்ட இவன் தம்பி பல்யானைச் செல்கெழுதட்டுவன் சேர ஆட்சியைப் பரப்பினான். நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரிடம் இரண்டு மக்களிருந்தனர். அவர்களில் ஒருவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவன் பூழிநாட்டு மன்னனைப் போரில் வென்றான். ஆதனுடைய மற்றொரு மகன் செங்குட்டுவன் (கி. பி. 180) பரணரால் புகழப்பட்டவன். இவனைக் ‘கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ என்பர்.

ஆக உதியஞ்சேரல் வமிசத்து அரசர் ஆட்சிசெய்த ஆண்டுகள் மொத்தம் 201. மற்றொரு கிளை அரசர்கள் மூவர். மொத்தம் 58 ஆண்டுகள் ஆண்டனர். இவர்களெல்லாம் முறையே ஒருவருக்குப்பின் ஒருவர் ஆண்டதாகக் கொள்ள இடமில்லை. பெரும்பாலும் ஒரே காலத்தில் பலர், நாட்டின் பல பகுதிகளில் ஆண்டிருக்கவேண்டும். இதே மாதிரி கொண்டால்தான் 9 சோழ மன்னர்கள் ஒரு காலத்தில் செங்குட்டுவனால் நேர்வாயில் போரில் வீழ்த்தப்பட்டனர் என்பது விளங்கும்.