பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

670

இந்தியா

தமிழ்நாட்டுச் சிற்றரசுகள் : 1. மதுரை நாயக்கர் : தமிழ்நாட்டுச் சிற்றரசர்களுள் நாயக்க வமிசத்தார் மதுரையில் ஆட்சிபுரிந்தனர். விசுவநாத நாயக்கரால் மதுரைப்பாளையம் இணைக்கப்பட்டது. இவருக்குப் பின் ஆண்ட நாயக்க மன்னர்கள் விஜயநகர மன்னர்களின் அதிகாரத்தைப் பெயரளவுக்கு ஒப்புக்கொண்டனர். 1623-ல் பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கர் விஜயநகர மன்னராட்சிக்கு உட்படாமல் முஸ்லிம் மன்னருக்குத் துணை புரிந்தார். திருவிதாங்கூர்வரை படையெடுத்துச் சென்று, மறவ நாட்டின் அதிபதி இராமநாதபுரம் சேதுபதியை அடக்கினார். கண்டீரவ நரச உடையார் என்னும் மைசூர் மன்னர் மதுரைமீது படையெடுத்து வந்தபோது இராமநாதபுரம் இரகுநாத சேதுபதி மைசூர்ப்படையைப் புறங்காட்டியோடச் செய்தார். பின்னர் ஆண்ட I-ம் சொக்கநாத நாயக்கர் திருச்சிராப்பள்ளியைத் தலைநகராக்கிக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் தஞ்சையைக் கைப்பற்றி, அதற்குத் தம் தம்பி அழகிரியை முடிசூட்டினார். எனினும் 1675-ல் ஏகோஜி தஞ்சையை வென்று, அங்கு மகாராஷ்டிர இராச்சியத்தை ஏற்படுத்தினர். சொக்கநாதர் மைசூர் அரசரால் தோற்கடிக்கப்பட்டுச் சேலத்தையும் கோயம்புத்துரையும் இழந்தார், அவருக்குப்பின் ஆண்டவர் முத்து அழகாத்திரி (முத்துலிங்கன்). இவர் மகாராஷ்டிரரின் உதவியைப் பெற்று, மைசூர் மன்னர் முற்றுகையிலிருந்து தப்பினார். அவருக்குப்பின் ஆண்டவர் IV-ம் முத்து வீரப்பர். அவருக்குப்பின் ஆண்டவர் இராணி மங்கம்மாள். இவர் மொகலாயர் துன்பத்தினின்றும் தந்திரமாகத் தப்பினார். தமக்குப் பகைவராயிருந்த தஞ்சை மன்னர் ஷாஜியுடன் நட்புக்கொண்டு மைசூர் அரசரை எதிர்த்தார். திருவிதாங்கூருக்கு நாயக்கர் படை சென்று வெற்றிபெற்றது. சேதுபதி இராமநாதபுரத்தில் தனியரசு செலுத்தத் தொடங்கினார். மங்கம்மாளுக்குப் பின் ஆண்ட நாயக்க மன்னர், II-ம் சொக்கநாதர். அவர் மனைவி மீனாட்சி அவருக்குப்பின் ஆட்சிபுரிந்தார். சந்தா சாகேப் மதுரையைக் கைப்பற்றியதால், மீனாட்சி நஞ்சுண்டு 1739-ல் மரணமடைந்தார்.

2. தஞ்சை நாயக்கர் : தஞ்சையில் செல்வப்ப நாயக்கர் ஓர் இராச்சியத்தை ஏற்படுத்தினார். விஜய ராகவ நாயக்கர் (1633-73) காலத்தில் பிஜாப்பூர் சேனை தஞ்சையைச் சிலகாலம் கைப்பற்றி இருந்தது. மதுரைச் சொக்கநாத நாயக்கர் தஞ்சையின்மீது படையெடுத்த போது விஜயராகவர் உயிர் துறந்தார். ஏகோஜி (வேங்காஜி) தஞ்சையைக் கைப்பற்றினார்.

3. செஞ்சி நாயக்கர் : கிருஷ்ணதேவராயர் காலம் முதற்கொண்டே செஞ்சிநாடு நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. 1649-ல் பிஜாப்பூர் படையினர் இதைக் கைப்பற்றிக் கொண்டனர்.

4. இக்கேரி : இக்கேரி அல்லது கௌதி சமஸ்தானம் விஜயநகரின் சாமந்த மன்னர்களான நாயக்கரின் நேராட்சியிலிருந்து வந்தது. முதல் வேங்கடப்பா (1589-1629) தனியரசை ஏற்படுத்தி ஆளத்தொடங்கினார். அவர் பேரன் வீரபத்திரன் (1620-45) பெத்னூருக்குத் தம் தலைநகரை மாற்றிக்கொண்டார். அவர் மகன் சிவப்பா (1645-1660) விஜயநகர மன்னராகிய III-ம் ஸ்ரீரங்கனுக்கு உதவி புரிந்தார். முதல் சோம சேகரன் காலத்தில் (1663-1671) சிவாஜி இந்நாட்டைத் தாக்கினார். 1763-ல் ஐதர் அலி பெத்னூரைக் கைப்பற்றியபின் இவ்வமிசம் முடிவடைந்தது.

ஐரோப்பியர்கள் : 1. போர்ச்சுக்கேசியர் : இந்தியாவுடன் வாணிகத்தொடர்பு வைத்துக்கொண்டிருந்த போர்ச்சுக்கேசியர்களுக்குப் போட்டியாக 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்ற ஐரோப்பிய நாட்டினர் கிளம்பினர். 1602-ல் ஹாலந்து நாட்டினர் கீழ்த்தேசங்களில் வியாபாரஞ்செய்ய விரும்பி டச்சுச் சங்கங்களை இணைத்தனர். அவர்கள் போர்ச்சுக்கேசியரிடமிருந்து நன்னம்பிக்கை முனையையும், மற்ற ஆப்பிரிக்கத் தீவுகளையும் கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையிலிருந்தும் போர்ச்சுக்கேசியரை விரட்டிவிட்டு, மோலக்கஸ், ஜாவா தீவுகளைப் பிடித்துக் கொண்டனர். இந்தியாவில் கீழ்க்கரையில் மசூலிப்பட்டினம், பெத்தபொலி, பழவேரி, சான்தோம் (மயிலாப்பூர்), நாகப்பட்டினம் முதலிய துறைமுகங்களில் வியாபார ஸ்தலங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். 1620லிருந்து மேற்குக்கரையில் சூரத், புரோச்சு, காம்பே, அகமதாபாத் முதலிய இடங்களில் வியாபார ஸ்தலங்களை ஏற்படுத்திக் கொண்டனர். 1661-63-ல் கொல்லம், கொடுங்களூர், கொச்சி, கண்ணனூர் முதலிய துறைமுகங்களிலிருந்து போர்ச்சுக்கேசியரை விரட்டிவிட்டு, அவ்விடங்களில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கினார்கள்.

பிரெஞ்சுக்காரர் : 1664-ல் பிரெஞ்சு இந்திய சங்கம் நிறுவப்பட்டது. மடகாஸ்கர் முதலிய தீவுகளை இச் சங்கத்தார் பிரெஞ்சு அரசாங்கத்தினிடமிருந்து பெற்றனர். 1669-ல் தெலாஹேயின் தலைமையின்கீழ்க்கப்பற் படை ஒன்று சென்று சான்தோமை முற்றுகையிட்டது. எனினும் வெற்றிபெறாது மீண்டது. பின் பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் ஒரு வியாபார ஸ்தலத்தை ஏற்படுத்திக்கொண்டனர். 1674-ல் பிரான்சுவா மார்த்தான் என்பவர் புதுச்சேரியில் கோட்டை ஒன்றைக் கட்டினார். 1693-ல் டச்சுக்காரர் புதுச்சேரியைக் கைப்பற்றினர். பிரெஞ்சுக்காரர் அவரோடு பொருது அதனை மீட்டனர். மார்த்தான் அதை அழகிய நகராகப் புதுப்பித்துப் பிரெஞ்சுக்காரரின் முக்கிய நகரமாக்கினார். மசூலிப்பட்டினமும் பிரெஞ்சுக்காரரின் முக்கிய வியாபாரஸ்தலமாக விளங்கியது.

1600-ல் ஆங்கிலக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனியார் பட்டயம் பெற்றனர். 1612-ல் கட்டப்பட்ட சூரத்து பண்டகசாலை செழித்தது. அதை ஓர் ஆட்சித் தலமாக (Presidency) ஆக்கினர். அங்கு ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டார். 1657-ல் கிராம்வெல் அந்த அரச பட்டயத்தை உறுதி செய்து, கிழக்கிந்தியக் கம்பெனிக்கே வியாபார உரிமையை அளித்தனர். வியாபாரம் செழித்து இலாபம் வரத்தொடங்கியது. வேறு சில ஆங்கில வர்த்தகர்களும் இந்திய வியாபாரத்தில் முனைந்தார்கள். 1668-ல் போர்ச்சுக்கேசியரிடமிருந்து தமக்குச் சீதனமாகக் கிடைத்த பம்பாயைச் சார்லஸ் மன்னர் வர்த்தகக் கம்பெனிக்கு அளித்தனர். அந் நகரம் விரைவில் பெரிய நகரமாக வளரத் தொடங்கியது. 1688-ல் போட்டிக் கம்பெனி ஒன்று தோன்றியது. 1708-ல் இரண்டு கம்பெனிகளும் இணைக்கப்பட்டன.

கோல்கொண்டா அரசரின் உத்தரவு பெற்றுக் கம்பெனியார் அங்கும் ஒரு பண்டகசாலையை ஏற்படுத்திக் கொண்டனர். எனினும், அங்கு முன்னரே இருந்த டச்சுக்காரரும் போர்ச்சுக்கேசியரும் ஆங்கிலேயரின் வியாபாரத்துக்குத் தடை செய்தார்கள். 1639-ல் ஆங்கிலக் கம்பெனியின் அங்கத்தினரில் ஒருவரான பிரான்ஸிஸ் டே (Francis Day) சந்திரகிரி அரசரிடமிருந்து சென்னையைப் பெற்றார். இங்கு ஆங்கில வர்த்தகக் கம்பெனியார் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிக்கொண்டனர். கீழ்க்கரையிலுள்ள ஆங்கில வர்த்தகசாலைகட்குச் சென்னை 1652-ல் தலைநகரமாகச்