பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

674

இந்தியா

மங்களூர் உடன்படிக்கையின்படி திப்பு நடந்து கொள்ளவில்லை என்று கவர்னர் ஜெனரல் மறுபடியும் போர் தொடுத்தார். திப்பு மலையாளத்தின் மீது படை யெடுத்து, திருவனந்தபுரம்வரை சென்று, அதைத் தாக்கத் தொடங்கினார். பிரெஞ்சுக்காரருடன் நட்புக் கொண்டார். இதைக்கண்டு நிஜாமும் ஆங்கிலேயரும் அச்சமடைந்தனர். 1790-ல் ஆங்கிலேயர் மகாராஷ்டிரருடனும் நிஜாமுடனும் கூட்டுடன்படிக்கை செய்து கொண்டு போரைத் துவக்கினார். காரன்வாலிஸ் பெங்களூரைக் கைப்பற்றிப்பின் ஸ்ரீரங்கபட்டணத்தை முற்றுகையிட்டார். திப்பு சாமாதானம் செய்து கொள்ள விரும்பித் தமது இராச்சியத்தில் பாதியைக் கொடுத்தார். அதை ஆங்கிலேயரும் அவர்களின் நண்பர்களும் பங்கிட்டுக்கொண்டனர். திப்பு தமது குமாரரை ஜாமீனாக ஆங்கிலேயரிடம் அனுப்பினார். திப்புவால் சிறைப்பட்ட குடகு அரசர் விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயருடைய பாதுகாப்புக்கு அவர் சம்மதித்தார். மலையாளம், திண்டுக்கல், பாராமகால் ஆங்கிலேயர்க்குக் கிடைத்தன.

அடுத்த மைசூர் யுத்தம் 1779-ல் வெல்லெஸ்லி காலத்தில் நடந்தது. சென்னை, பம்பாய், ஐதராபாத் ஆகிய இடங்களிலிருந்து சேனைகள் வந்து, மைசூரில் புகுந்து, ஸ்ரீரங்கபட்டணத்தைத் தாக்கின. திப்பு தீரத்துடன் போர் புரிந்து கடுங்காயமடைந்து உயிர் துறந்தார். கன்னடம் முதலிய நாடுகள் சென்னையுடன் இணைக்கப்பட்டன. எஞ்சியுள்ள மைசூர் நாட்டுக்குப் பழைய அரச வமிசத்தினரான கிருஷ்ணராஜ உடையார் அரசராக நியமிக்கப்பட்டார்.

ஐதர் எழுதப்படிக்க தெரியாதவர். ஆனால் புத்தி நுட்பமுடையவர். திறமையுள்ள அதிகாரிகளை நியமித்து நாட்டை நன்கு ஆட்சி புரிந்தார். எல்லா மதத்தினரையும் சமமாகப் பாராட்டினார். திப்பு தம் தகப்பனாரைப்போன்ற புத்தி நுட்பமுடையவர் அல்லர்; எனினும் திறமையும் விடாமுயற்சியும் உடையவர். இஸ்லாம் மதத்தில் அதிகப்பற்றுள்ளவர். இந்து மடங்களுக்கும் ஆலயங்களுக்கும் ஏராளமான பணம் வழங்கியுள்ளார். ஆனால் கடினமான சித்தமுடையவர். ஆங்கிலேயரை வெறுத்துப் பகைத்தார். இவர் காலத்தில் மைசூர் விவசாயத்தொழிலில் அபிவிருத்தியடைந்தது.

கருநாடகம் : முகம்மது அலியின் ஆட்சிக்குட்பட்டிருந்த மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரி வசூலிக்கவும், நாட்டின் நிருவாகத்தைக் கவனிக்கவும் மஹ்பஸ்கான் நியமிக்கப்பட்டார். அவர் நிருவாகம் நேர்முறையில் நடக்கவில்லையெனக் கண்டு, அவரை விலக்கி, அப்பதவிக்கு யூசுப்கான் என்னும் போர்வீரர் நியமிக்கப்பட்டார். யூசுப்கானும் நவாபின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. 1763-ல் கம்பெனியாரின் படை உதவியால் நவாபு மதுரையை முற்றுகையிட்டார். யூசுப்கான் கொல்லப்பட்டார். தஞ்சாவூர் மன்னர் துல்ஜாஜிமீது பல குற்றங்களைச் சாட்டி, நவாபு ஆங்கிலேயர் உதவிய படையைக்கொண்டு தஞ்சாவூரைப் பிடித்து, 1773-ல் மன்னரையும் அவருடைய உத்தியோகஸ்தரையும் சிறைப்படுத்தினார். இங்கிலாந்திலிருந்த கம்பெனியின் அதிகாரிகளுக்கு இது பிடிக்கவில்லை. துல்ஜாஜியிடமே அவர் இராச்சியத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி இங்கிலாந்திலிருந்து கண்டிப்பான உத்தரவு பிறந்தது. அப்போது சென்னையில் கவர்னராக இருந்த பீகோ (Pigot) 1776-ல் துல்ஜாஜியை மறுபடியும் தஞ்சாவூரின் மன்னராக ஆக்கினார். மைசூரில் யுத்தம் நடந்தபோது காரன்வாலிஸ் செய்து கொண்ட நிபந்தனையின்படி நவாபு கருநாடகத்தை ஆங்கிலேயரிடம் ஒப்புவித்துவிட்டார். நவாபின் கடன் மிகப் பெருகிவிட்டது. அதற்கு ஈடு செய்வதற்காக அவர் ஜில்லாக்களிற் கிடைத்துவந்த வருமானத்தைக் கொடுக்க நேர்ந்தது. ஸ்ரீரங்கபட்டணத்தைப் பிடிக்கும்போது திப்புவுக்கு நவாபு எழுதிய சில கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்தன. இது காரணமாக 1801-ல் வெல்லெஸ்லி கருநாடகத்தை ஆங்கில ஆட்சிக்குட்படுத்தினார்.

மற்றத் தமிழ்நாட்டு இராச்சியங்கள்: சரபோஜி மன்னர் இராமநாதபுர சமஸ்தானத்தின் வார்சுரிமைப் போட்டியில் தலையிட்டு, இராமநாதபுரத்தைச் சிவகங்கை இராமநாதபுரம் என்னும் இரண்டு பாகங்களாகப் பிரித்தார். துக்கோஜிக்குப்பின்(1728-36) தளகர்த்தராகவிருந்த ஆனந்த ராவ், புதுக்கோட்டைமீது படையெடுத்தார். எனினும் அதனால் அவர் ஒரு பயனும் அடையவில்லை. 1773-ல் நவாபு ஆங்கிலேயரின் உதவியைக்கொண்டு துல்ஜாஜியைச் சிறைப்படுத்தி, தஞ்சையைத் தம் ஆட்சியில் சேர்த்துக் கொண்டதும், 1776-ல் கவர்னர் பீகோ மீண்டும் துல்ஜாஜியைத் தஞ்சைக்கு மன்னர் ஆக்கியதும் முன்னரே கூறப்பட்டுள்ளன. அமர் சிங் (1787-98) துல்ஜாஜிக்குப்பின் அரசாண்டார். அவருக்குப்பின் இரண்டாம் சரபோஜி அரசரானார். அவர் காலத்தில் தஞ்சை ஆங்கிலேய ஆட்சியில் சேர்க்கப்பட்டது.

இராமநாதபுரம், சிவகங்கை : சடையக்கர் என்பவர் முதலில் சேதுபதியாக மதுரை நாயக்கரால் நியமிக்கப்பட்டார். திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட வார்சுப்போர் தீர்ந்தவுடன், இரகுநாத சேதுபதி பட்டத்துக்கு வந்தார். அவர் திருமலை நாயக்கருக்குதவியாக மைசூர் கண்டீரவ மன்னரின் சேனையை முறியடித்தார். சரியான வார்சில்லாமையால் 1674-ல் மறவக் குடிகள் கிழவன் சேதுபதி என்று பிரசித்தி பெற்ற இரகுநாத தேவரை அரசராக்கினார்கள். கிழவன் சேதுபதி சமஸ்தானத்தை மதுரையின் பாதுகாப்பிலிருந்து விலக்கித் தனி இராச்சியமாக அமைத்தார். இரகுநாத தொண்டைமானின் தங்கையை மணம் புரிந்து புதுக்கோட்டையை அவருக்கு அளித்தார். புதுக்கோட்டை இராச்சியத்தின் ஆரம்பம் இதுதான். 1726-ல் வார்சுப் போர் மீண்டும் தொடங்கியது. தஞ்சை மன்னர் பவானிசங்கரை ஆதரித்தார். மதுரை நாயக்கரும் தொண்டைமானும் தண்டத்தேவரை ஆதரித்தார்கள். பவானிசங்கரரின் ஆட்சி சரிவர நடைபெறாமையால் சரபோஜி மன்னன் அவரை நீக்கிச் சில ஜில்லாக்களைத் தாமே கைப்பற்றிக்கொண்டார். எஞ்சியதை ஐந்து பாகங்களாகப் பிரித்து, மூன்றைக் காத்த தேவருக்கும், இரண்டைச் சசிவர்ண தேவருக்கும் கொடுத்தார். சசிவர்ணரின் பங்குதான் சிவகங்கை சமஸ்தானமாகும். பெரிய மறவர், சிறிய மறவர் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டபின் சேதுபதி சமஸ்தானம் தன் பெருமையை இழந்தது. தஞ்சை மன்னருக்கும் சேதுபதிகளுக்கும் ஓயாமல் சண்டை நடந்துகொண்டிருந்தது. நவாபுவின் தூண்டுதலின்பேரில் ஆங்கிலேயர் இராமநாதபுரத்தைப் பிடித்துக்கொண்டனர். 1773 முதல் 1781 வரை இது நவாபுவின் ஆட்சியின்கீழ் வைக்கப்பட்டிருந்தது. 1795-ல் சேதுபதியை விலக்கி, இராமநாதபுரத்தை ஆங்கிலேயர் தமது ஆட்சியில் சேர்த்துக் கொண்டு, 1803-ல் அரசை ஜமீன்தாரியாக மாற்றினர்.

1772-ல் ஆங்கிலேயர் சிவகங்கையையும் பிடித்துக் கொண்டனர். அரசர் கொல்லப்பட்டு நாடு 1780 வரை நவாபுவின் ஆட்சியின் கீழ் வைக்கப்பட்டது. மருது, பாண்டியர் என்ற இருவர் வசம் நிருவாகத்தை இராணி-